திரை 6
''என்னடி இதெல்லாம்...குடும்ப மானத்தை வாங்குறதுக்குன்னே இப்படி பண்ணுறியா?'' என்றபடி விறு விறுவென அவள் அருகே சென்றவர் மேசை மீதிருந்த நாளிதழை தூக்கி காட்டினார்.
"எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க? இதெல்லாம் வெறும் ரூமெர்ஸ் அவ்வளவு தான்" என்றாள் சலிப்பாக.
"ரூமெர்ஸ்ன்னு நீ சொல்லுற. ஆனால், பத்திரிகை வேற சொல்லுதே" என்றார்.
சட்டெனெ சோபாவிலிருந்து எழுந்துக்கொண்ட துஷாரா "உண்மையா இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகமா?" என்றாள் அன்னையின் விழிகளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே.
"ம்பச், சந்தேகமில்லடி. உன்ன பத்தி எனக்கு தெரியும். ஆனால், ஊருக்கு தெரியாதே? சின்ன விஷயம் ஒன்னு கிடைச்சிட்டா போதும் மொட்டை மண்டைக்கு சடை பிண்ணி பூ வச்சு ஜோடிச்சிடுவாங்க. பேரு கெட்டு போயிடும் டி" என்றார் அன்புச்செல்வி.
"ஐ டோன்ட் கெயர். ஊருக்காக நான் வாழுறதில்லை" என்றாள் மகள் வெடுக்கென்று.
"என்ன பேச்சு டி பேசுற? எதுக்கெடுத்தாலும் எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசுறது. நேரங்காலம் இல்லாம ஊரை சுத்திட்டு வீட்டுக்கு வரது..." என்று அவர் சொல்லிக்கொண்டே போக அவரை சட்டென்று இடைமறைத்தவள் "ஊரை சுத்திட்டு இல்லை, வேலை பார்த்துட்டு..." என்று திருத்தினாள்.
அவளை முறைத்து பார்த்த அன்புச்செல்வியோ " எனக்கு ரெண்டும் ஒன்னு தான். நீ பண்ணுற வேலை எல்லாம் குடும்பத்து பொண்ணுங்க பண்ணுற வேலையா. இதுல கண்ட கண்ட வதந்தி எல்லாம் வேற வந்து தொலையுது" என்றார் ஆதங்கமாக.
அவரை அழுத்தமாக பார்த்தவள் "சொந்தக்காலில் நின்னு சாதிக்கணும்னு நினைக்குறதும் குடும்பத்து பொண்ணுங்க பண்ணுற வேலை தான்" என்றாள்.
"போதும் துஷாரா..." என்று முகம் சிவக்க மகளிடம் சீறிய அன்புச்செல்வியின் அருகே வந்த தீனதயாளனோ "சரி விடு, அவள் என்ன சின்ன பிள்ளையா? அவள் என்ன செய்யுறான்னு அவளுக்கு தெரியும். அவள் பார்த்துப்பா. நீ எதுக்கு டென்ஷனாகுற?" என்றார்.
"எல்லாம் நீங்க கொடுக்குற இடம் தான். அதுதான் இப்படி கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி கண்ட மேனிக்கு திரியுறா" என்று அதற்கும் பொறிந்து தான் தள்ளினார் அன்புச்செல்வி.
துஷாராவுக்கு நல்ல காலத்திலேயே ஓரளவுக்கு தான் பொறுமை இருக்கும். அதில் அன்புச்செல்வியின் பேச்சில் அது மொத்தமும் காற்றில் கரைந்து போயிற்று.
"நான் ஒன்னும் கண்டமேனிக்கு திரியல. வேலை பார்க்குறேன். எனக்கு பிடிச்ச வேலையை செய்யுறேன் அவ்வளவு தான். உங்களுக்கு பிடிகலங்குற ஒரே காரணத்துக்காக நான் செய்யிற வேலையை குறை சொல்லாதீங்கம்மா. இதுவே நான் ஒரு பையனா இருந்தா என்னை பார்த்து பெருமைப் பட்டிருப்பிங்க தானே. பொண்ணுனதும் எல்லாமே தப்பா தெரியுதா? அப்போ தப்பு என் மேல இல்லை. உங்க பார்வையில தான்" என்று பட்டாசாய் வெடித்தாள்.
"ம்ம்ம்...பேசு...நல்லா பேசு. உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தேன்ல நீ இப்படி தான் பேசுவ. பொம்பளை பிள்ளையா அடக்கமா இல்லாமல் இப்படியே திரிஞ்சிட்டிருந்தா உன்னை எவன் டி கட்டிப்பான்? அதுவும் உன்னை பத்தி வர வந்திக்கெல்லாம் எவனாவது கட்டிக்கிறேன்னு வந்தாலும் அவன் நல்லவனா இருப்பானா?" என்று வழக்கமான தாய்குலத்தின் புலம்பலில் வந்து நின்றார்.
துஷாராவிற்கு கடுப்பாகிவிட்டது.
அவளுக்கு தெரியும் அங்கே சுற்றி இங்கே சுற்றி இறுதியில் அன்புச்செல்வி இந்த விடயத்தில் தான் வந்து நிற்பார் என்று. அவரை பொறுத்தவரை பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் என்பது தான் வாழ்வின் இலக்கு.
இத்தனைக்கும் அன்புச்செல்வி நன்கு படித்து பட்டம் பெற்றவர்தான். ஆனால், திருமணத்திற்கு பின் குடும்பமே உலகமென்று இருந்துவிட்டதாலோ என்னவோ அவரின் எண்ணங்களும் அதை தாண்டி செல்வதில்லை.
"என்னை எவனாவது கட்டிக்குறது இருக்கட்டும், முதல்ல நானே எவனையும் கட்டிக்க போறதில்லை. அப்படியே எனக்கு கல்யாணம் பண்ணிக்க தோணுச்சுன்னா நல்லவன் கிடைக்கலன்னா ஒரு வில்லனை கட்டிக்குறேன் போதுமா" என்று சொன்னவள் "நான் கிளம்புறேன் ப்பா ஷூட்டிங் இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.
"திமிர் பிடிச்சவ...எப்படி பேசிட்டு போறா பாருங்க" என்று அன்புச்செல்வி வாய்விட்டே திட்டியிருக்க அது வாசல் வரை சென்று விட்ட துஷாராவின் காதிலும் விழுந்தது.
அவள் வாசலை அடைந்திருக்க அப்பொழுதுதான் உள்ளே நுழைந்திருந்தாள் அழகிய மங்கை ஒருத்தி.
துஷாராவிற்கு கொஞ்சமும் குறையாத அழகிய பாவை. இருவரிடையே ஒரே ஒரு வித்யாசம் மட்டும் தான். அவளிடம் துஷாராவை விட பெண்மையின் மென்மை சற்று அதிகமிருந்தது.
இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் கையில் அர்ச்சனை கூடையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் அனிஷா. துஷாராவின் தங்கை.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றாள். இன்று விடுமுறை தினமாதலால் காலையிலேயே கோவிலுக்கு சென்று திரும்பியிருந்தாள்.
அவள் நாகரீக மங்கை தான் என்றாலும் துஷாராவை போல் அழுத்தமானவள் அல்ல.
துஷாராவை பார்த்ததும் புன்னகைத்தவள் "ஹாய் அக்கா, எப்போ வந்த?" என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைய அவள் கேள்விக்கு பதில் கூட சொல்லாமல் சட்டென்று அவளின் இருத்தோள்களை பற்றி அவளை இழுத்து முன்னிறுத்தி அன்புச்செல்வியிடம் காட்டிய துஷாரா "நீங்க நினைக்குற போல தான் இவள் ஒருத்தி இருக்காளே. உங்க நல்ல மாப்பிள்ளையை தேடி பிடிச்சு இவளுக்கு வேணும்னா கட்டி வையுங்க" என்று சொல்லி விட்டு விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.
இப்பொழுது அங்கே நின்றிருந்த தாயை பார்த்த அனிஷா "வழக்கம் போல தானா? அவள் கிட்ட இப்படி சண்டை போடுறதை கொஞ்சம் நிறுத்துங்களேன் மா" என்று சொல்லிக்கொண்டே தாயின் அருகே செல்ல "உன் அக்காவை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்" என்றார் அவர்.
அவர் சொல்லிய தினுசில் அனிஷாவிற்கு சிரிப்பு வந்துவிட இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டே "சரி அக்காவை விடுங்க. இந்தாங்க பிரசாதம்" என்று கையிலிருந்த அர்ச்சனை கூடையை தாயிடம் கொடுத்தவள் "பசிக்குதும்மா" என்று இதழ்களை பிதுக்கினாள்.
அவ்வளவு தான், மூத்தவள் மீதிருந்த கோபம் இளையவளின் பசியில் கலைந்துப்போக அவளை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தவர் "அச்சோ, துஷாரா சாப்பிட்டாளான்னு தெரியலையே... அதை கூட கேட்காமல் விட்டுட்டேன்" என்று புலம்பிக்கொண்டார்.
அவரின் கோபமெல்லாம் அவ்வளவு தான். நொடியில் வந்து நொடியில் மறைந்துவிடும். பிள்ளைகள் என்றாலே உருகிவிடுவார்.
''அக்கா மேல தான் இவ்வளவு அக்கறை இருக்கே. பிறகு எதுக்கு அவள் கிட்ட சண்டைக்கு போறீங்க?" என்றாள் அவரின் புலம்பலை கேட்ட அனிஷா.
"எனக்கு மட்டும் என்ன அவக்கூட சண்டை போடணும்னு ஆசையா? கிளியை வளர்த்து பாம்பு புத்துக்குள்ள போட்ட மாதிரி ஃபீல் ஆகுது. எப்போ எந்த பாம்பு அவளை கொத்திடுமோன்னு வயித்துல நெருப்பை கட்டிட்டிருக்கேன்...." என்று பொறிந்தார்.
"அது கிளியை வளர்த்து குரங்கு கையில கொடுக்குறதுன்னு தானே சொல்லுவாங்க" அனிஷா யோசனையாக கேட்க "நக்கல் பண்ணாத..." என்று அவள் கையில் ஒரு அடி வைத்தவர் சற்று நிறுத்தி "பயமா இருக்குடி" என்றார் பாவமாக.
அவரின் மனம் அனிஷாவிற்கு புரியாமல் இல்லை. ஆனால், துஷாராவை நினைத்து அந்த கவலை அவருக்கு தேவையில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு.
"நீங்க தேவையில்லாமல் கவலை படுறிங்களோன்னு தான் எனக்கு தோணுது" என்றாள் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துக்கொண்டே.
"என்ன அனிஷா, நீயும் இப்படி பேசுற?" என்ற அன்புச்செல்வியின் குரல் ஆற்றாமையாக ஒலித்தது.
"யோசிச்சு பாருங்கம்மா...இன்னிக்கு வந்த நியூஸ் பத்தி அவள் கொஞ்சமாவது வருத்தப்பட்டாளா,இல்லை தானே. அது அவளை எந்த விதத்திலையும் பாதிக்கவேயில்லை. நிறுத்தி வைக்கவுமில்லை. இதுவே நானா இருந்திருந்தா இந்நேரம் மூலையில் உட்கார்ந்து அழுதிட்டிருக்க தான் வாய்ப்பு அதிகம். அக்கா ரொம்ப ஸ்ட்ரோங். அவளுக்கு அவளை ஹாண்டில் பண்ணிக்க தெரியும். அதோட அவள் ரொம்பவே கவனமாவும் இருக்குற ஆள். சோ, நீங்க ஒர்ரி பண்ணாதீங்கம்மா" என்றாள் ஆறுதலாக.
அன்புச்செல்விக்கும் அதுவெல்லாம் புரியாமல் ஒன்றுமில்லை. ஈன்ற தயிற்கே இயற்கையாய் தோன்றும் தவிப்பு அது அவ்வளவு தான்.
அதில் பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டவர் அனிஷாவிற்கு பரிமாறும் வேலையில் இறங்கிவிட்டார்.
***
அங்கே படப்பிடிப்பு தளத்தில் இருந்தான் அமரன். அந்த இடமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது, அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ஒளிப்பதிவு கருவிகள் ஆயுத்த நிலையில் இருந்தன.
அங்கே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன். கண்களில் கூர்மை, முகம் எப்பொழுதும் போல உணர்வற்றிருந்தது. கைகளில் ஸ்கிரிப்ட் இருக்க அதை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த தோரணையே என்னவோ அந்த இடமே அவனுடையது என்பது போல் கம்பீரமாக இருந்தது.
அவனருகே ஓடி வந்தான் விஜய் "சார் ஃபோன்" என்றான்.
அமர் விழிகளை மட்டும் உயர்த்தி பார்க்க "மீரா...காலையிலிருந்து ஓயாமல் கால் பண்ணுறாங்க" என்றான்.
"பேசு" என்றான்.
விஜயும் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட ''யூ அர்ரோகண்ட் பா****ட். என்னை படத்திலிருந்து தூக்க வச்சிட்டல்ல" என்று கெட்ட வார்த்தைகளில் சீறினாள்.
அவளின் சீற்றத்திற்கு கொஞ்சமும் சம்மந்தமேயில்லாமல் "குட் மோர்னிங் டு யூ டு" என்று மென்மையாக சொன்னான் விஜய்.
அமரன் இன்னமும் ஸ்க்ரிப்டில் கவனமாய் இருக்க விஜய் தான் பேசினான்.
அவள் அழைப்பை ஏற்றதும் முகமன்கள் ஏதும் இல்லாமல் நேரே பாய்ந்துக்கொண்டு வந்ததையும் நாசுக்காக குத்திக்காட்டியிருந்தான்.
அமரனுக்கு பதிலாக விஜய் பேசியது அவளுக்கு மேலும் ஆத்திரத்தை கொடுக்க "அமர் எங்க?" என்று கத்தினாள்.
விஜய் அமரனை பார்க்க அவனோ இரு விரல்களை மட்டும் நீட்டி அவனையே பேசும் படி சைகை செய்தான்.
அவனின் குறிப்புணர்ந்து "சார் பிசியா இருக்கார் மேடம். அவர் உங்களை போல ஃப்ரீயா இல்லை. அவருக்கு ஷூட்டிங் இருக்கு" என்றான் விஜய்.
அவன் குரலில் பவ்யத்துடன் கூடிய நக்கல் ஒன்று தொனித்தது.
அவமானப்படுத்தபடுகின்றாள் என்று நன்கு உணர்ந்த மீராவிற்கு இன்னமும் ஆத்திரம் மேலிட்டது.
''உங்க சார் கிட்ட சொல்லு, அவன் ஒரு கவர்ட். ஒரு கோழை மாதிரி என்னை படத்திலிருந்து தூக்க வச்சிருக்கான். என்னை சமாளிக்க தெம்பில்லாமல் இப்படி கேவலமா நடந்துக்குறான். ஒரு பொண்ணை கூட சமாளிக்க முடியாத வில்லன்" என்று அமருக்கு சரமாரியாக திட்டினாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அமரின் முகம் இறுக ஒரு ஆழ்ந்த மூச்சுடன் கையிலிருந்த ஸ்க்ரிப்டை மூடி வைத்தான்.
கண்களை அழுந்த மூடி திறந்தவன் விஜயை பார்த்தான்.
"அவக்கிட்ட சொல்லு, சமாளிக்க முடியாமல் படத்திலிருந்து தூக்கல, சமளிக்குற அளவுக்கு அவள் ஒர்த் இல்லை... அண்ட் என் கிட்ட பேசும் போது யோசிச்சு பேசணும். 'ஜஸ்ட் வில்லன் தானேன்னு’ சொன்னதுக்கே ஒரு படம் போயிடுச்சு. இன்னும் அதிகம் பேசுனா இண்டஸ்ட்ரியிலேயே இல்லாமல் போயிடுவான்னு சொல்லு" என்றவனின் குரல் பனிப்பாறையென இறுகி இருந்தது.
அலைபேசி ஸ்பீக்கரில் தான் இருந்தது அமர் சொல்லியதே அவளுக்கு கேட்டிருக்கும் இருந்தாலும் விஜய் மீண்டும் அவன் சொல்லியதை வார்த்தை பிசகாமல் ஒப்பித்தான்.
மீராவிற்கு அவமானத்தில் உள்ளுக்குள் கொதிக்க "என்னவோ நீதான் இந்த இண்டஸ்ட்ரிக்கே ஹீரோ மாதிரி பேசிட்டிருக்க அமர். நீ வெறும் வில்லன் மட்டும் தான் நியாபகம் வச்சுக்கோ. என்னை இந்த ஒரு படத்துல இருந்து தூக்கிட்டதுக்காக மொத்த இண்டஸ்ட்ரியும் உன் கையில இருக்கறதா நினைச்சிக்காத" என்றாள்.
அமரின் இதழ்கள் நக்கலாக வளைய இரு விரல்களால் நெற்றியை நீவி விட்டுக்கொண்டான்.
அவனின் தோரணையில் விஜயின் மனமோ 'இவள் வேற சும்மா இல்லாமல் சாத்தானுக்கு சங்கூதுறாளே'’என்று அடுத்து நடக்க போவதை நினைத்து உள்ளுக்குள் புலம்பிக்கொண்டது.
"குட், எனக்கு ஒரு பழக்கமிருக்கு. நான் எதையும் ஒருமுறை தான் சொல்லுவேன். ரிப்பீட் பண்ண எனக்கு பிடிக்காது. யூ வெயிட் அண்ட் வாட்ச்" என்று விட்டு அழைப்பை துண்டிக்க சொல்லி சைகை செய்ய விஜயும் அழைப்பை துண்டித்திருந்தான்.
அவனுக்கோ உள்ளுக்குள் மனம் பிசைந்தது. அமரனை பற்றி நன்கறிந்தவனாயிற்றே. அவன் வெறுமனே வாய் சவடால் விடும் ஆளில்லை என்று அவனுக்கு தெரியும்.
இத்துடன் மீராவின் சினமா வாழ்க்கை அஷ்டமிக்கப் போவதும் அவனுக்கு உணரக்கூடியதாக இருக்க "கொஞ்சம் யோசிக்கலாமே சார். நீங்க அவங்க கிட்ட கொஞ்சம் கடுமையா நடுந்துக்குற போல இருக்கு. பாவம் உங்களை பத்தி தெரியாமல் பேசிட்டாங்க" என்றான்.
அவனை அழுத்தமாக பார்த்த அமரோ "தெரியலன்னா பேசக்கூடாது. எப்பவும் உன் எதிர்ல இருக்குறது யாருன்னு தெரிஞ்சு பேசணும்" என்றான்.
அவன் கண்களின் கருவிழிகள் இன்னமும் கருமையடைவது போல் இருந்தது விஜயிற்கு.
அதற்குள் "ஷாட் ரெடி சார்" என்று வந்து சொன்னான் துணை இயக்குனர் ஒருவன்.
"வரேன்" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்த அமர் விஜயை பார்க்க "வில்லனா நடிச்சு நடிச்சு இந்த வில்லத்தனத்தை நீங்க ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு தோணுது சார்" என்றான் விஜய்.
அவனின் பார்வை அமரின் மீது அழுத்தமாக படிந்தது.
"ஆஹான்" என்று மெல்ல சிரித்தவனோ செட்டை நோக்கி நடந்தான்.
செல்லும் அவன் முதுகையே பார்த்திருந்த விஜயின் புருவங்களோ குழப்பத்தில் இடுங்கின.
***
அன்று இரவு நல்ல உறக்கத்தில் இருந்தார் தீனதயாளன். திடீரென அவரின் அலைபேசி அலறியது.
இரண்டு முறை அடித்து ஒய்ந்து மூன்றாம் முறை மணி அடிக்க "என்னங்க ஃபோன் அடிச்சிட்டே இருக்கு. பாருங்க" என்றார் உறக்கத்தில் புரண்டு படுத்த அன்புச்செல்வி.
அவரும் கையை நீட்டி மேசை மீதிருந்த அலைபேசியை தொட்டுத் துளாவி எடுத்து காதில் வைத்தார்.
"ஹலோ" என்ற அவரின் குரலில் தூக்க கலக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
"ஹெலோ மிஸ்டர் தீனதயாளன், பொண்டாட்டி புள்ளைங்களோட ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல. ராத்திரி ரொம்ப நிம்மதியா தூங்குற மாதிரி இருக்கே" என்றது அந்தக் குரல்.
அது ஒரு பெண்ணின் குரல்.
தீனதயாளனின் புருவங்கள் இடுங்க "யாரு?" என்று கேட்டார்.
"அது எப்படி சார் அடுத்தவங்க தூக்கத்தை கெடுத்த உங்களுக்கெல்லாம் நிம்மதியா தூங்க முடியுது" என்று அவர் கேள்விக்கு பதிலிருக்காமல் அந்த குரல் தொடர்ந்து பேச சட்டென்று எழுந்தமர்ந்துவிட்டார்.
"யாரு, யாருன்னு கேட்குறேன்ல?" என்று அவரின் குரல் சற்றே உயர "ஷ்ஷ்ஷ்...கத்தாதீங்க சார். உங்க பொண்டாட்டி முழிச்சுக்க போறாங்க" என்றது அந்த குரல்.
சட்டென்று அருகே திரும்பி பார்க்க "யாருங்க இந்த நேரத்துல?" என்று கேட்டுக்கொண்டே புரண்டு படுத்தார் அன்புச்செல்வி.
"சொன்னேன்ல...ஹாஹாஹா" என்று மறுமுனையில் இருந்த குரல் சத்தமாக சிரிக்க சட்டென்று அலைபேசியை காதிலிருந்து எடுத்து அதன் ஸ்பீக்கரை கைகளால் மூடிக்கொண்டே "நீ தூங்கும்மா...பேசிட்டு வந்திடுறேன்" என்றபடி அறையின் பால்கனிக்கு சென்று நின்றுக்கொண்டார்.
அலைபேசியை மீண்டும் காதில் வைத்தவர் "ஹேய் யாரு நீ? உனக்கு என்ன வேணும்?" என்று அவர் சீற "உன் நிம்மதி வேணும்" என்றது அந்த குரல்.
''ரொம்ப பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி வச்சியிருக்கல்ல... அந்த இரவுகள், அதில் புதைந்து போன அழுகைகளும் கதறல்களும்... இது எல்லாம் உனக்கு எப்போவாவது நியாபகம் வருமா? உன் காதில் கேட்டு தொந்தரவு பண்ணாதா? எப்படி நிம்மதியா தூங்க முடியுது உன்னால?" என்றது அந்த குரல்.
வெகு சாதாரணமாக நக்கல் தொனியில் வார்த்தைகள் உதிர்த்தாலும் அதனுள்ளே ஆழமான வன்மம் புதைந்திருந்தது.
"எனக்கொரு சந்தேகம்…அந்த முகங்கள் எல்லாம் உனக்கு இன்னமும் நியாபகம் இருக்கா? இல்லை மொத்தமா மறந்து போயிட்டியா?" என்றாள் அந்த மர்ம குரலின் சொந்தக்காரி.
தீனதயாளனுக்கு முகமெல்லாம் வியர்க்க தொடங்கிவிட "ஹேய் யாரு நீ? பணத்துக்காக கண்டதையும் சொல்லி என்னை ப்ளாக்மேயில் பண்ண பார்க்குறியா? நீ யாருன்னு மட்டும் நான் கண்டு பிடிச்சேன்னா பிறகு இந்த கால் பண்ணதுக்காக நீ ரொம்ப வருத்தப்பட வேண்டியது இருக்கும்" என்று மிரட்டினார்.
''ஹாஹாஹாஹா…ஹாஹா" என்று வாய் விட்டே சத்தமாக சிரித்த அந்த பெண்ணோ "ஓஹ் மிஸ்டர் தீனதயாளன், வருத்தப்படப் போறது நான் இல்லை... நீதான்" என்று சொன்ன அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
அலைபேசியை காதிலிருந்து எடுத்தவரின் கரங்கள் மெல்ல நடுங்கின. மூளைக்குள் என்னென்னவோ ஓடின. முதல்முறை அவரின் சொந்த வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பற்ற உணர்வு. யாரோ அவரை கவனிப்பது போன்ற பிரம்மை.
மீண்டும் அலைபேசியை எடுத்து பார்த்தார். அந்த எண்ணிற்கு மறு அழைப்பு விடுத்தார். ஆனால், அழைப்பு செல்லவேயில்லை.
அலைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு வந்து படுத்தவருக்கு நிம்மதியுடன் தூக்கமும் தொலைந்து தான் போயிருந்தது.
அடுத்த எபிசொட் புதனன்று வரும் மக்களே...
தக் லைஃப்- Thug life கருத்து திரி
அருமை வாசகர்களே உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நான்🥰
aadvikapommunovels.com
Last edited: