4
பெண் அவள் ஆடை கிழிபட்ட இடங்களில் தாவர வேர்களை கொண்டு நெய்திருந்தாள். காயங்களுக்கு பச்சிலை பத்து செய்து கட்டிகொண்டாள். வீர மங்கை இடையில் வாள் கூடவே சுழற்றி அடிக்கும் எரிவளை-தகடு வைத்திருந்தாள். புலி போல பதுங்கி நடந்தாள்.பறவைகள் சூழ்ந்த இடத்தில் அவைகளை போல சத்தமிட்டு அழைத்து பேசினாள். மிருங்கங்களிடம் கருணை காட்டினாள்.அவனிடம் கோபம் காட்டினாள். பேரிளம் அரசி! திரும்புவோம் சாம்ராஜ்யம்.அவன் கேட்க, என்னோடு மல்யுத்தம் செய்கிறாயா? நீ வென்றால் வருகிறேன் கிண்டல் பேசினாள் பெண். மதி மயங்கி காதல் கொண்ட உள்ளமோ அவள் மேனி தீண்ட ஆசை கொண்டது.மக்கள் நலம் விரும்பும் தளபதி அறிவோ இளவரசி அவள்,கண் தழைத்து பணிந்து போ என்றது. ஆண் மனம் அறியாத மங்கை ஒயில் நடை நடக்க, சுற்றி இருக்கும் பூக்கள் வதன சுந்தர இளவரசி வாழ்க என்றது அவன் உள்ளம் போலே.
அணிகலன் யாவும் இல்லாமலும் பேரழகி பளிங்கு போல மேனியின் பளபளப்புக்கு காரணம் என்னவோ கேட்டதாம் ரீங்கார வாண்டு; கேளடி தேன்சிட்டே பெண் அவள் அற்புத எழில் அத்துவமூர்த்தியின் சிறந்த படைப்பெனினும் நன்நெஞ்ச பெண்ணவள் மனசஞ்சலம் கொடியது. மதிமயங்கிய மாக்கியவல்லி நாட்டை விற்றுவிட்டானே பாவி,அவன் சூழ்ச்சியை வீரம் மட்டும்கொண்டு வெல்ல இயலாது.படைத்தோன் துணையும் வேண்டுமாம்.
சுலபமாக தன்னை ஏற்றுக்கொண்ட பால்கியிடம் சிறிதும் சஞ்சலமில்லா தோழமை பிறந்தது ஆராதனாவிற்கு.அவளை போலவே சும்மா இருத்தல் பிடிக்காமல் என்னவெல்லாம் செய்யலாம் என பேச்சை அவன் தொடக்க, அடுத்தடுத்த வேலை பட்டியல் இட்டனர் ஆருவும் பால்கியும்.அதில் முக்கியமான பணி,முதல் பணி மின்சார இணைப்பு கொடுப்பது.அதன்பின்தான் இயந்திரங்களை அமைத்து பணிக்கு ஆள் எடுத்து ஓட்ட முடியும்.
மின்சார இணைவு பற்றி பேசுகிறேன் என்று கைபேசியில் பேசபோன பால்கியை காணவில்லை,எங்கே போனானோ நினைத்தவள் அடுத்து என்ன செய்யலாம், அடுத்த கட்ட பணி என்னவாக இருக்க முடியும் என்பதை பட்டியலிட்டாள். நேரம் போனது.
புது யூனிட்டின் வாசல் வந்து இறங்கிய அருண் கண்களில்பட்டது மினி-கூப்பர் கார். எல்லா காரும் நம்ம கார் ஆகிடுமா நினைத்தவன், ஆபிஸ் அறை மேல் தளத்தில் உள்ளதை கண்டு வேகவேகமாக படி ஏறிசென்றான்.
இன்னமும் பால்கியை காணவில்லையே கதவு திறந்து காலடி எடுத்துவைத்தவள் சட்டென அதன் வாசற்படி தடுத்து கீழே விழ போனாள், பயத்தில் கண்களை மூடிக்கொண்டவள், போச்சு இன்னைக்கு நம்ம மண்ட காலி என நினைக்க; திம்மென்ற நெஞ்சின் மீது மோதி கண் திறந்து பார்க்கும் சமயம் அவன் இதழ்.அவள் இதழை தீண்டியது.வெறும் தீண்டல் என்று நினைத்த தருணம் அவள் அதரத்தை கவ்வியவன் ஆழ் முத்தம் பதித்தான்.
நிகழ்ந்ததை கிரகித்து சுயநினைவு வந்தும் மயக்கம் சூழ்ந்திருந்தது அவளுள். இந்நேரம் இந்த ஷணம் நிம்மதி வாழ்க்கை முழுவதும் வேண்டுவது போல இருந்தது.
வேகமாக மாடி ஏறி வந்தவன் மீது பாய்ந்து வந்தவளை கண்டவணுக்கு அதிர்ச்சியில் பேச்சு எழவில்லை. அவன் மீது விழுந்தவள் பளீச் முகமும் செவ்விதழும் அவன் கண்ணுக்கு தெரிய, மைக்ரோ செகண்டில் எழுந்த ஆசை அவனுக்கே ஆச்சரியம்தான். அதை அடுத்த கணமே செயல்படுத்தியதில் பேரதிர்ச்சி பிரளயம் அவனுக்குள்.
நீண்ட நெடு அமைதியை எழுந்து நின்று தன்னை சமநிலை செய்துகொண்டு ‘சாரி’ சொல்லி களைத்தான் அருண். அவனை போல பதற்றத்தை மறைக்க முடியாமல் வெளிப்படையாக நடுங்கும் பெண் அந்த படிகளிலே அமர அவளை உலுக்கி ‘ஆர் யூ ஆல் ரைட்,ஸ்பீக் அப்’ சொல்லிகொண்டிருந்தான்.
சத்தம் கேட்டு வந்த பால்கி “என்னாச்சு, ஆரு என்ன இப்படி உட்கார்ந்திருக்கே" பதறினான். "பச்...ஸ்டெப்ல கால் தடுக்கி விழுந்துட்டாங்க. அந்த அதிர்ச்சி இன்னும் போகல போல”தகவல் சொன்னவன் “ஆமா நீ எங்கடா போன " எரிச்சலாக கேட்டான்.
பால்கி,”ஐயோ மச்சி உன் கைமுட்டில இரத்தம் வருதேடா” அதிகமாக பதறினான்
அருண் “இருடா இவங்க இன்னும் நார்மல் ஆகல, ஹலோ, ஆர் யூ ஓகே. எதாச்சும் பேசுங்க”அழுத்தமாக அவளை உலுக்க
“ஆரூ எழுந்துறீங்க. உள்ள வந்து உட்காருங்க. டேய் நீயும் வா, உள்ள வந்து தண்ணி குடி, நான் வாட்ச்மேனை ஜுஸ் வாங்கிட்டு வர சொல்றேன்” நிலமை சீராக்க தன்னால் முடிந்தத செய்து ஆராதனாவை உள்ளே கூட்டி வந்து உட்கார வைத்தான் பால்கி.
சொல்வதை செய்தாலும் அவள் பார்வை எதையோ வெறித்து பார்த்து யோசனையில் நின்றது. “மச்சி ஆராதனா....” பால்கி தொடங்க சட்டென நினைவுக்கு வந்தவள் அவனை கைபிடித்து நிறுத்தி ‘நான் சொல்கிறேன்’ செய்கையில் சொல்லி அருணுக்கு எடுத்து வந்த லெட்டர் கொடுத்தாள். பால்கியிடமும் அப்படி லெட்டர் கொடுத்து தான் அறிமுகம் செய்திருந்தாள்.
“பிரிச்சு படி மச்சான்” பால்கி ஊக்க பிரித்துபார்த்தான்.
கவர் திறந்து படிக்க தொடங்கினான் அருண்.பெயர் ஆராதனா, ஆரு என்று அழைக்கலாம். இது என்ன வேலைக்கு வரவங்க இப்போல்லாம் ரெஸ்யுமில் செல்ல பெயர் எல்லாம் போட தொடங்கிவிட்டார்களா எண்ணி கொண்டவன் மேற்கொண்டு பார்த்தான். பிரிட்டிஷ் இந்தியன் என்று இருந்தது. அதாவது மேடம் இங்கிலாந்து வாழ் இந்திய பெண். அது சரி! படிப்பு எம்.பி.ஏ, படிப்பு கிடக்குது கழுத, அவங்களும் தான் எம்.பி.ஏ அதனால் என்ன?
அப்பா சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டார், அம்மா ரிச்மண்ட்டில் இருக்கிறார். இந்தியாவில் வக்கீல் விஸ்வநாதனை தெரியும். தமிழ் புரிந்துகொள்வாள், படிக்க தெரியாது.அவள் பதிமூன்று வயது வரை அவர்கள் டெல்லியில் இருந்தார்களாம். அதனால் ஹிந்தி தெரியும். கோபம் அதிகம் வரும்,கார் ஓட்ட பிடிக்கும், கோயம்புத்தூர் மாநகரம் மிகவும் பிடித்திருக்கிறது.அவளுக்கென்று நகரத்திற்கு வெளியே விச்சு அங்கிள் சகல பாதுகாப்பு வசதியுடன் வீடு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.மரகதம் பாட்டி அவள் போக்குவரத்திற்கு கார் கொடுத்திருக்கிறார்.அவளால் முடிந்த பெஸ்ட் முயற்சி செய்து இந்த யூனிட் தொடங்க உழைக்கலாம் என்றிருந்த லெட்டரில் அடுத்து வந்த எழுத்துக்கள் சிவப்பு மையில் இருந்தது.
ஆண்கள் இருவரும் ஒரே மாதிரி வாய் பிளந்தது அவள் முகத்தை அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியம் கலந்து நோக்க தவறவில்லை. அவள் ஒற்றை புருவம் உயர்த்தி தலை ஆட்டி ஆமாம் நீங்கள் படித்தது உண்மையே! எனக்கு வாய் பேச வராது, அதாவது சத்தம் எழுப்ப கூட முடியாது என்று செய்கையில் சொன்னாள்.
மேற்கொண்டு படித்ததில் அவள் பேசுவதை ஃபோனில் டைப் செய்வாள், அது அவளுக்காக பேசும் என்றும் இருந்தது. அதை படித்து அவள் முகம் பார்க்க அவள் கைபேசி எடுத்து எஸ் என்று வேகமாக டைப் செய்ய ‘எஸ்’என பெண் குரல் கேட்டது.ஆயிரம் கேள்வி சுழல் அவன் மனதில், குழப்பம் முகத்திலும் தெரிய சடசடவென டைப் அடித்தாள். திரும்பவும் தமிழ் பேசும் பெண் குரல் கேட்டது. இப்போது “என்னால் சமாளிக்க முடியும், நம்பிக்கை இருக்கிறது. என்னால் எந்த தொந்திரவு உங்களுக்கு இருக்காது” என்றது இயந்திர குரல்.
பால்கி முகம் நட்பாக புன்னகையுடன் மாற, திரும்ப லெட்டர் பார்த்தவன் அருண் முகம் மட்டும் இப்போது கோபத்தில் சிவந்தது.
அவள் நாக்கை வெளியே நீட்டி கண்களை சுருக்கி மன்னிப்பை கேட்க புரியாமல் பார்த்தான் பால்கி. அர்ஜுன் கோபம் கலந்த வருத்தத்தில் கையலாகாததனத்துடன் சிறு பிள்ளை போல "ஏய், ஏய், அது என் ஃபேவரட் கார்.நானே அதிகமா ஓட்டினது கிடையாது. அந்த கிழவிய....." பேசிக்கொண்டே வெளியே ஓடினான்.
அவள் “சாரி, இதவிட நல்ல கார், லேட்டஸ்ட் வெர்ஷன், ஆறு மாதம் கழிச்சு நான் வாங்கி தரேன் ப்ளீஸ் கொஞ்ச நாள்” கெஞ்சினாள். அவனோ அந்த நாளுக்கு போதும் போதுமென ஏற்கனவே நிறைய கண்டுவிட்ட சோர்வில் “புது கார் வாங்கி தர” கோபமாக ஆணையாக சொல்லிவிட்டு ஆபிஸ் அறைக்கு சென்று விட்டான்.
அவன் பின்னாலேயே பால்கி சமாதானம் செய்ய போக,தனியாக நின்றவள் மனதில் தனிமை உணர்வு குடிகொண்டது.
கை காயம் வலிக்க தண்ணீர் குடித்துவிட்டு “நான் ஹாஸ்பிடல் போறேன். ஜஸ்ட் சின்ன காயம் தான், ஷோல்டர் வலி இருக்கு,பாட்டிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத மச்சான்” அவசரமாக சொன்னவன் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த ஏரியா விட்டே வெளியே வந்திருந்தான்.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண் மூடி ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டான். அவனா? அவனா ஒரு பெண்ணை முத்தம் கொடுத்தான், அதுவும் வாய் பேசவராத பெண்..! கேள்வி எழ அவன் மீதே அவனுக்கு கோபமும் எழுந்தது.
பாட்டி எங்கே அவன் குடிகாரன் ஆகிவிடுவானோ என்று பயப்படுவது உண்டு.சிறுவயதிருந்தே ஒழுக்கமாக வளர்ந்தவன்,வீட்டைவிட்டு வெளியே போனதும் பீர் குடித்து பார்த்தது அதில் கிடைக்கும் த்ரில் அனுபவிக்க மட்டுமே. செய்யாதே என்று கட்டுப்படுத்தி வைத்து செய்ய சான்ஸ் கிடைக்கும் சமயம் மனதில் உண்டாகும் அல்ப ஆசை அது.ஒன்றிரண்டு முறை குடித்து பார்த்ததுமே சலித்துவிட்டது. இயல்பாக உள்ளுக்குள் வளர்ந்திருந்த நெறி தவறா பண்பு இது தப்பென உரைக்க குடிப்பதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டான். பிறரை ஏமாற்றுவது, பொய் சொல்வது, துரோகம் செய்வது எல்லாம் தப்பு என்று தெரிந்திருந்தவனுக்கு பெண்ணிடம் தவறாக அவள் அனுமதியின்றி அவளிடம் முறை தவறி நடப்பது தவறு என்ற நெறி தெரிந்தும் முத்தம் கொடுத்து அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் வந்து விட்டானே.
அது ஜஸ்ட் விபத்து என்று அவனால் சும்மா கூட காரணம் சொல்ல முடியவில்லை. நடந்ததை ஸ்லோ மோஷனில் நினைவில் கொண்டு வந்தால் அவள் கண்ணில் பட்ட நிமிடம் மூளை இந்த பெண்ணை தெரியும், மருத்துவமனையில் பார்த்த பெண், அன்றே முத்தம் கொடுக்க நினைத்த பெண், இதோ கிடைத்தது வாய்ப்பென்று எண்ணங்கள் அடுக்காக எழுந்து அவள் உதட்டை கவ்வியது வரை வந்து நின்றது.
என்ன சமாதானம் சொல்லுவான் இந்த பாழாய் போன மனதிற்கு. தலைபிடித்து அமர்ந்துக்கொண்டவன் ஃபோன் அடித்தது.“மச்சான் இந்த பொண்ணுக்கு வீசிங் வருதுடா”பால்கி பதற்றமாக சொல்ல திரும்பி விரைந்தவன் கை கால் முளைத்த காளான் போல இருந்தவளை தூக்கி கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.
மருத்துவமனையில் தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டு தெளிந்தவள் மருத்துவரிடம், “கால் தடுக்கி விழுந்ததும் ஷாக் ஆகிட்டேன். இப்போ நார்மலாக இருக்கிறேன்” வாய்ஸ் ஆப் மூலம் சொல்ல, அவள் மெடிகல் ஹிஸ்டரி கேட்டு தெரிந்துகொண்டவர் கவலைபடாதே வைட்டல்ஸ் எல்லாம் நார்மலாக இருக்கிறது. “நீ தேறி வருவது உன் கையில் தான் இருக்கிறது.நன்றாக சாப்பிடு, தூங்கு எதற்கும் பயப்படாதே” என்று அவரால் முடிந்த மோட்டிவேஷன் கொடுத்து தோளில் தட்டிவிட்டு சென்றார்.
மருத்துவர் பின்னாலேயே வேகமாக சென்றவன் அந்த பெண்ணுக்கு என்ன டாக்டர் கேட்க அவரோ “மனரீதியாக அதிர்ச்சி சந்தித்து, வாய்பேச முடியாமல் போயிருக்கு. என்ன முயற்சித்தும் அவளால் சத்தம் கொடுக்க முடியவில்லை. அதை நினைத்து வருந்துகிறாள்.தைரியம் கொடுங்க. அதுதான் தேவை இப்போது. குரல் சீக்கிரம் திரும்பும்” ஆறுதலாக சொன்னார்.
அறையில் வந்து பார்க்க பால்கி கைபிடித்து அமர்ந்திருந்தவள் அவனை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்து ஃபோன் எடுத்து வேகமாக டைப் செய்தாள்.
“உடம்பு காயம் எதுவும் இல்ல, பயப்படாதீங்க. ஆபிஸ் அறை வாசலில் தடுப்பு ஸ்டெப் இருக்கு,அதை முதலில் மாற்றி அமைக்க வேண்டும். சில நேரம் எதையும் செய்ய முடியாமல் உறைந்து நிற்பேன்.அது பிரச்சனை இல்லை.பிளீஸ் என்னை வேலை விட்டு மட்டும் போக சொல்லிடாதீங்க. பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” அவள் வாய்ஸ் ஆப் பேச இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் செய்யமாட்டோம் என்று தலையை ஆட்டியவன் அறை விட்டு வெளியே வந்து விட்டான்.
அந்த தடுப்பு மொட்டை மாடியிலிருந்து படிகளின் வழியாக வரும் மழை நீர் ஆபிஸ் அறைக்குள் நுழைய கூடாது என்று கட்டியிருப்பது. சிப்காட்டில் எந்த ஆபிஸ் சென்றாலும் அப்படித்தான் இருக்கும். கீழ் தளம் இயந்திரங்கள் இருக்க, மேல் தளம் ஆபிஸ் இருக்கும், மேலிருந்து பார்த்தால் கீழே வேலை செய்பவர்கள் தெரிவார்கள். இது அனைத்தும் அவன் அறிந்ததே..!