அத்தியாயம் 9
உள்ளே வந்து கதவை தாழிட்டவள், கட்டிலில் அமர்ந்து இருந்த ஜீவிதாவின் தலையில் நங்கென்று கொட்டினாள்."அக்கா" என்று அவள் சிணுங்கிக் கொண்டே தலையை தேய்க்க, "அக்காவா? என்னடி பண்ணி வச்சு இருக்க?" என்று சீறினாள்.
அவளோ, "அக்கா ப்ளீஸ் நான் சொல்றத கேளேன்" என்று ஆரம்பித்து எல்லாமே சொன்னவள், "இப்போ என்ன அக்கா பண்ணுறது?" என்று கேட்டாள்.
"என்ன பண்ணுறதா? இதெல்லாம் மறைக்கிற விஷயமா ஜீவி, உனக்கு படிப்பு முடிய மூணு மாசம் இருக்கு, அதுக்கப்புறம் அஸ்வந்த்துக்கு வேலை எடுத்து கல்யாணம் பண்ணவே எப்படியும் ஒரு வருஷம் ஆயிடும், அதுக்குள்ள குழந்தை பிறந்திடும் டி" என்றாள்.
"யக்கா" என்று அவள் சிணுங்க, "என்ன யக்கா?" என்று மாதுரி சீறினாள்.
"நீ தான் ஏதாவது பண்ணனும் ப்ளீஸ்" என்று அவள் கையினை பற்ற, "இப்போ என்ன பண்ணுறது?" என்று யோசித்துக் கொண்டே அமர்ந்தவளோ, "கல்யாண விஷயத்தை மெதுவா ஆரம்பிக்கின்றேன், விஷயம் தெரியாம கல்யாணம் பண்ண ட்ரை பண்ணுவோம், இல்லன்னா எப்படியும் விஷயத்தை சொல்லி தான் ஆகணும்" என்றாள்.
"உன்னை தான் மலை போல நம்பி இருக்கேன்" என்று ஜீவிதா சொல்ல, "உன்னை கொல்ல போறேன் பாரு, அவனுக்கும் இருக்கு" என்று திட்டிக் கொண்டே எழுந்தவள் கண்ணில் ஹாலில் நீர் அருந்திக் கொண்டு இருந்த அஸ்வந்த் தான் தென்பட்டான்.
ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு...
விறு விறுவென நடந்து வந்து, நீட்டி இருந்த அவன் காலில் ஏறி ஒரு மிதி மிதித்து விட்டு அவள் நடக்க, "ஐயோ அம்மா" என்றபடி அவன் காலை பற்றிக் கொள்ள, அவனை திரும்பி முறைத்தவள், "சாரி கொழுந்தனாரே" என்று சொல்ல, அவள் கோபத்தை பார்த்த அஸ்வந்தோ, 'தெரிஞ்சிடுச்சு போல' என்று நினைத்தபடி வலுக்கட்டாயமாக சிரித்துக் கொள்ள, அவளோ அவனை முறைத்தபடி நடந்து சென்று டி வி பார்த்துக் கொண்டு இருந்த திலகவதி அருகே அமர்ந்து கொண்டாள்.
"அத்தை" என்றாள் இழுவையாக.
"சொல்லும்மா" என்று அவர் சொல்ல, "அஸ்வந்த் காலேஜ் முடிக்க போறான் ல" என்றாள்.
"அதுக்கு மூணு மாசம் இருக்கே" என்ற திலகவதியிடம், "அதுக்கப்புறம் கல்யாணம் தானே" என்றாள்.
"என்னது கல்யாணமா? அவன் வேலை பார்க்கணும், உழைக்கணும், நாலைஞ்சு வருஷம் போகட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார்.
மாதுரி திரும்பி அஸ்வந்த்தை முறைக்க, அவன் கையை கூப்பி கெஞ்சினான்.
'இவனால' என்று வாய்க்குள் திட்டி விட்டு, "ஜீவிதாவுக்கும் அஸ்வத்துக்கும் கல்யாணம் பண்ணுனா என்ன?" என்று உடைத்து கேட்டு விட்டாள்.
அவர் திரும்பி அவளை புருவம் சுருக்கி பார்க்க, "ஐயோ அத்தை சும்மா யோசிச்சேன், முடிவு உங்களோடது தான்" என்றாள்.
அவருமே, "எனக்கு அது பிரச்சனை இல்லை, ஆனா ஒரே வீட்ல பொண்ணு எடுக்க கூடாதுன்னு சொல்வாங்களே" என்றார்.
'போச்சு போச்சு மொத்தமா போச்சு' என்று நினைத்துக் கொண்ட மாதுரியோ, "அதெல்லாம் நம்புறீங்களா என்ன? நிறைய பேர் அப்படி கல்யாணம் பண்ணி இருக்காங்க தானே" என்று கேட்க, "நம்பிக்கைன்னு இல்ல, அக்கா தங்கச்சிக்குள்ள சண்டை வருமேன்னு பேசிப்பாங்க" என்றார்.
"நானும் ஜீவிதாவும் சண்டை போட போறோமா என்ன?" என்று அவள் கேட்க, "ரெண்டு பேரும் படிச்சு முடிக்கட்டும், இத பத்தி பேசிக்கலாம், ஒரே வயசு வேற" என்றார்.
ஒரே வயது என்பதால் அவருக்கும் பெரிதாக ஆர்வம் இல்லை...
'அதுக்குள்ள பிள்ளையே பிறந்துடும்' என்று நினைத்துக் கொண்டே எழுந்தவள், போகும் போது அஸ்வந்த்தை முறைத்து விட்டு அறைக்குள் செல்ல, அவனோ கையை கூப்பி மன்னிப்பு கேட்பது போல மீண்டும் சைகை செய்ய, 'பண்ணுறதையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத போல இருக்கிறத பாரு' என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
அறைக்குள் வந்தவளுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது...
அங்கே லேப்டாப் முன்னே அமர்ந்து இருந்த ராவந்த்தோ, "என்ன டென்க்ஷனா இருக்க?" என்று கேட்டான்.
"ஒன்னும் இல்ல, சும்மா தான்" என்று சொல்லிக் கொண்டே, வேலையை பார்த்தவளுக்கு எப்படியும் வீட்டினர் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்கள் என்று தெரிந்தது...
ஜீவிதா கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொன்னால் கல்யாணம் நடக்கும் தான், ஆனால் அதற்கு முதல் ஒரு பிரளயமே நடக்கும்.
அதுவும் ராவந்த் அஸ்வத்துக்கு அடித்தாலும் அடிப்பான்.
நீண்ட நேரம் யோசித்தவளோ, 'கல்யாணத்தை முடிச்சிட்டு மேட்டர சொன்னா என்ன? அதுக்கப்புறம் என்ன பண்ணிட முடியும்?' என்று சற்று சாதுரியமாக யோசித்தாள்.
அதனை விட வேறு வழியும் அவளுக்கு தெரியவில்லை...
'இத விட பெஸ்ட் ஐடியா இல்லை, இதையே பண்ணிடலாம்' என்று நினைத்துக் கொண்டே, இருந்தவளோ அன்று மாலை அஸ்வந்த் மற்றும் ஜீவிதாவை மொட்டை மாடிக்கு வர சொல்லி இருந்தாள்.
ஜீவிதாவை அவள் கையோடு அழைத்து வந்திருக்க, அஸ்வந்த்துக்காக இருவரும் காத்துக் கொண்டு இருந்தார்கள்...
அவனும் சற்று நேரத்தில் வந்து சேர, அவனை முறைத்துக் கொண்டே நின்று இருந்தாள் மாதுரி...
"அண்ணி முறைச்சுட்டே இருந்தா என்ன அர்த்தம்?" என்று அவன் கேட்க, "கொஞ்சம் குனி" என்றாள்.
அவனும் அவள் உயரத்துக்கு குனிய, எட்டி கொட்டியவள், "என்ன வேலை இது?" என்று சீறினாள்.
"அண்ணி" என்றான் அவன் தலையை தேய்த்துக் கொண்டே.
"அக்கா பாவம்" என்று அவள் சொல்ல, "வாயை மூடு, இப்போ நான் தனியா இத டீல் பண்ண வேண்டி இருக்கு" என்று புலம்பியவளோ, "பேசாம திருட்டு தனமா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கலாம், அப்புறம் எல்லாம் சொல்லிக்கலாம்" என்றாள்.
"ஓகே சொல்லுவாங்களா?" என்று ஜீவிதா கேட்க, "எப்படியும் இப்போ கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க, அதையும் மீறி இந்த விஷயத்தை சொன்னா, பெரிய புயல் அடிச்சு ஓய்ஞ்சு தான் கல்யாணம் நடக்கும், பேசாம கல்யாணத்தை பண்ணிட்டு சொன்னா, பிரச்சனை கம்மியா இருக்கும்" என்றாள்.
"அக்கா நீ பிரில்லியண்ட்" என்று ஜீவிதா சொல்ல, "ஐஸ் வைக்காதடி" என்று அவளுக்கு திட்டிய மாதுரியோ, "நாளைக்கே கல்யாணம் பண்ணிடலாம், எதுக்கு தள்ளி போடணும்?" என்று கேட்டாள்.
"நாளைக்கேவா?" என்று அஸ்வந்த் அதிர, ஒரு முறைப்பு தான் முறைத்தாள் மாதுரி.
சட்டென வாயை கப்பென்று மூடியவன், "ஓகே" என்று சொன்னான்.
"நாளைக்கு நானும் லீவு போட்டு நிக்கிறேன், நீங்க காலேஜுக்கு போற போல கிளம்புங்க, கோவில் ல மீட் பண்ணலாம்" என்று சொன்னாள்.
ஜீவிதாவும், "ஓகே" என்று சொல்லி இருக்க, அவர்கள் திட்டத்தை போட்டு விட்டு தத்தமது அறைக்குள் புகுந்து கொண்டார்கள்...
அடுத்த நாள் காலையில், ராவந்த் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான்.
மாதுரி இன்னுமே படுத்துக் கொண்டு இருக்க, "மாதுரி" என்றான்.
"ம்ம்" என்றாள் முனகலுடன்...
"இன்னைக்கு ஆஃபீஸ் வரலையா?" என்று கேட்க, "உடம்பு சரி இல்ல" என்றாள்.
"என்னாச்சு?" என்று கேட்டுக் கொண்டே அருகே வந்து விட்டான்.
அவளுக்கு நெற்றில் இருந்தே அவன் விஷயத்தில் குற்ற உணர்வு தான்...
இன்றும் அவனுக்கு தெரியாமல் திருட்டு கல்யாணம் செய்து வைக்க போகின்றாள்...
மனம் பிசைந்தது...
சேர்த்து வைத்து மன்னிப்பு கேட்டு வாழ ஆரம்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே, எழுந்து அமர்ந்தவளோ, "கொஞ்சம் தலையிடியா இருக்கு" என்றாள்.
"மசாஜ் பண்ணி விடட்டுமா?" என்று கேட்டபடி அவள் தலையை பற்ற, "இல்ல தட்ஸ் ஓகே" என்றபடி விலகிக் கொண்டாள்.
"டாப்லெட்ஸ் போட்டியா?" என்று கேட்டான்.
"ம்ம்" என்றாள்.
"சரி தூங்கு" என்று அவள் கன்னம் தட்டி சொல்ல, ஏனோ கண்கள் கலங்கி விட்டன...
"ராவ்" என்றாள்.
அவளது கலங்கிய கண்களை பார்த்துக் கொண்டே, "ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டான்.
"இல்ல ஓகே தான்" என்று சொன்னவள் மெதுவாக நகர்ந்து அவன் ஷேர்ட்டை பற்றிக் கொள்ள, அவள் அவனை புரியாமல் பார்த்தான்.
அப்படியே எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை...
ஒரு மாதிரி நெகிழ்வான உணர்வு அவளுக்குள்...
அவள் மீது அவனுக்கு அளவு கடந்த நேசம் என்று புரிந்து விட்டது...
அதனை அவள் மொத்தமாக உணர்ந்து கொண்டாள்.
தோற்றம் எல்லாம் கடந்த ஒரு நேசம்...
முத்தமிட்டு விலகி அவன் விழிகளை பார்த்தாள்.
அவள் முகத்தை தாங்கிக் கொண்டே, கொஞ்சமும் தாமதிக்காமல் அவள் இதழ்களில் இதழ்களை பதித்து இருந்தான்.
அழுத்தமான முத்தம்.
அவள் இந்த முத்தத்தை எதிர்பார்க்கவே இல்லை.
சட்டென அவன் மார்பில் கையை வைத்துக் கொண்டே விலகி அமர்ந்தவள், "ப்ரஷ் பண்ணல" என்றபடி இதழ்களை துடைக்க, அவனோ, "அதுக்கென்ன?" என்றான்.
"ஹைஜீன் முக்கியம் இல்லையா?" என்று கேட்டாள்.
"காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே, அப்படினு கேள்விப்பட்டது இல்லையா?" என்று கேட்டான்.
"எனக்கு சங்கடமா இருக்கு" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு...
மென் சிரிப்புடன் நெற்றி முட்டியவன், "எனக்கு இன்னைக்கு மீட்டிங் இருக்கு, இல்லன்னா கூடவே இருந்திடுவேன்" என்றான்.
அவன் விழிகளை பார்த்தாள்.
ஏனோ மனம் ஒரு மாதிரியே இருந்தது...
அவனுக்கு தெரியாமல் திருமணம் செய்து வைக்க போகின்றாள் என்பதை தாண்டி ஒரு அழுத்தம்...
என்னவென்று அவளுக்கும் தெரியவில்லை...
அவனை அணைத்துக் கொண்டு அந்த நாள் முழுவதும் இருக்க வேண்டும் போல உணர்வு...
"என்னை பிடிக்கும் தானே உங்களுக்கு?" என்று கேட்டாள்.
"எனக்கு உன்னை எப்போவோ பிடிச்சுடுச்சு, உனக்கு தான் என்னை பிடிக்கவே இல்ல" என்றான் சிரித்துக் கொண்டே.
"பிடிச்சு இருக்கு" என்று சொன்னபடி முகத்தை திருப்பிக் கொள்ள, "கண்ணை பார்த்து சொல்லுடி" என்றான் அவள் முகத்தை பற்றி தன்னை நோக்கி திருப்பியபடி.
அவன் விழிகளை பார்த்தவள், "பிடிச்சு இருக்கு போதுமா?" என்று கேட்க, "அப்போ இன்னைக்கு" என்று ஆரம்பிக்க, அவளுக்கு சட்டென வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து விட, "ஓகே தான்" என்று சொன்னவள் மனமோ, 'நடக்க இருக்கிற கலவரத்தில இது நடக்க வாய்ப்பில்லை' என்று நினைத்துக் கொண்டாள்.
அவனோ, "மயங்கி விழுந்துட மாட்டியே" என்று கேட்க, அவளுக்கு அழுத்தம் மறைந்து சிரிப்பும் வந்து விட, "இல்ல" என்றாள் மென் புன்னகையுடன்.
"சரி அப்போ நான் வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்" என்று சொல்ல, "லன்ச்சுக்கு வர முடியுமா?" என்று கேட்டாள்.
அவளுக்கு நேரத்துக்கே ஜீவிதா மற்றும் அஸ்வந்த்தின் திருமணத்தை சொல்லி விட வேண்டும் என்று எண்ணம்.
அவனும், "ஓகே வந்திடுறேன்" என்று சொல்லி விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு செல்ல, அவளுக்கு இன்னுமே மனதில் பாரம் ஏற, கொஞ்ச நேரம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
ஒரு மாதிரி அழுத்தமாக இருந்தது...
நேரத்தைப் பார்த்தாள்.
எட்டு மணி தான்...
பத்து மணிக்கு கோவிலுக்கு வருவதாக சொல்லி இருந்தவள் ஆறுதலாகவே குளித்து விட்டு புடவை அணிந்து வெளியில் வர, ஹாலில் இருந்த ராமசாமியோ, "இன்னைக்கு உடம்பு சரி இல்லன்னு தானே சொன்ன?" என்று கேட்டார்.
"ஆமா மாமா, இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு, கோவிலுக்கு போயிட்டு வரேன்" என்று சொல்ல, "சரிம்மா" என்றார் அவர்.
அவளும் அதனை தொடர்ந்து கோவிலுக்கு ஆட்டோவில் புறப்பட்டு இருந்தாள்.
அங்கே நேரத்துக்கே அஸ்வந்த் மற்றும் ஜீவிதா நின்று இருக்க, மாலை மற்றும் தாலியை வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றாள் மாதுரி...
ஜீவிதாவோ, "அக்கா இன்னொரு குண்டு" என்றாள்.
"என்னடி?" என்று மாதுரி கேட்க, "அப்பாவும் அம்மாவும் நம்மள பார்க்க கிளம்பி இருக்காங்க" என்று சொன்னாள்.
"என்னடி சொல்ற? சொல்லவே இல்ல?" என்று கேட்க, "அம்மா இப்போ தான் எடுத்தாங்க, முக்கியமான விஷயம் ஒன்னு பேசணுமாம், நேர்ல வர்றோம்னு சொன்னாங்க" என்றாள்.
"என்ன விஷயமா இருக்கும்?" என்று மாதுரி கேட்க, "தெரியலையே" என்றாள் அவள்...
"சரி வந்ததும் பார்த்துக்கலாம், வர்றதுக்கு நல்லதுக்கு தான், சேர்த்தே விஷயத்தை சொல்லிடலாம்" என்று சொல்லிக் கொண்டே ஐயரிடம் தாலியை கொடுத்தாள்.
அவரும் பூஜை புனஸ்காரங்களை முடித்து விட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஆயத்தமானார்.
ஜீவிதாவும் அஸ்வந்த்தும் மாலையினை மாற்றிக் கொண்டார்கள்...
அவள் கழுத்தில் தாலியையும் கட்டி இருந்தான் அஸ்வந்த்.
மாதுரி அவர்களுக்கு வாழ்த்தரிசி தூவி இருக்க, அவள் காலில் விழுந்து எழும்பினார்கள்.
"ஐயோ என்ன இது?" என்று அவள் பதறிக் கொண்டே, அவர்களை தூக்கி விட்டாள்.
"எங்களை விட வயசு அதிகம் தானே, தப்பில்ல" என்றான் அஸ்வந்த்.
"இதெல்லாம் நல்லா பேசு, எனக்கு பதறிட்டே இருக்கு, உன் அண்ணாவை சமாளிக்கணுமே" என்று சொன்னாள்.
"சரி பார்த்துக்கலாம்" என்று அஸ்வந்த் சொல்ல, "ஆமா நீ அப்படியே பார்த்து கிழிச்சிடுவ பாரு" என்று திட்டி விட்டு, ஜீவிதாவிடம், "ரெண்டு பேரும் அமைதியா இருங்க, நான் பேசிக்கிறேன் ஓகே யா?" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, மாதுரியின் அலைபேசி அலறியது...
எடுத்து காதில் வைத்தாள்.
மறுமுனையில் அவள் தாய் பார்வதி தான்.
"எங்கம்மா இருக்க? சீக்கிரம் வா... உன் கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்" என்று சொல்ல, "கோவில் ல தான் மா இருக்கிறேன், வந்திடுறேன்" என்று சொல்லி விட்டு வைத்தவள், "அம்மா பதறிட்டே இருக்காங்க" என்று சொன்னபடி, அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.
நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது...
இதே சமயம், ராவந்த்தின் காரும் அவர்கள் வீட்டினுள் நுழைய, "எல்லாரும் ஒண்ணா தான் இருக்காங்க, சமாளிச்சிடலாம்" என்று சொன்ன மாதுரி ஆட்டோவில் இருந்து முதலில் இறங்கினாள்.
அப்போது தான் ராவந்த்தும் இறங்கிக் கொண்டே, "தலை வலிக்குதுன்னு சொன்ன, எங்க போய்ட்டு வர்ற?" என்று கேட்டபடி அவளை நோக்கி வரவும், மாதுரியை தொடர்ந்து ஜீவிதா மற்றும் அஸ்வந்த் மாலையும் கழுத்துமாக இறங்கவும் நேரம் சரியாக இருந்தது...