ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 6

இப்படியே நாட்கள் நகர, திருமண நாளும் நெருங்கி வந்தது. இப்படியான ஒரு நாளில் தான் அலுவலகத்தில் முக்கியமான வேலையை முடித்த நதீகா நேரத்தை பார்க்கும் போது அது மணி பத்தைக் காட்டியது. "ஊப் " என்றவள் பெருமூச்சுடன் வெளியே பார்க்க அங்கே மழை அடித்துப் பெய்து கொண்டு இருந்தது. ஆபீசில் அவளையும் காவல் காரர்களையும் தவிர யாருமே இல்லாமல் இருக்க "சரி இனி கிளம்பலாம்" என்று நினைத்தபடி வெளியே சென்றவள் காரை நோக்கி ஓடிச் சென்றாள்.

காரை திறந்து உள்ளே ஏறியவளுக்கு கார் ஸ்டார்ட் வந்தால் தானே. " என்ன கொடுமை இது" என்று நினைத்தபடி போனை எடுத்த கணம் அவள் பார்வை அவள் அருகே பார்க் பண்ணி இருந்த காரில் பதிய "ஓஹ் ஆதித் இங்க தான் இருக்காரா?" என்று நினைத்தபடி அவனுக்கு அழைத்தாள்.

அவனோ அப்போது தான் ஆபீசில் இருந்து வெளியே வந்தவன் போனை எடுத்து காதில் வைக்க "ஆதித் என்னை கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா? கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது" என்று சொன்னாள். அவனுக்கு அவள் கேட்டது எரிச்சலாக இருந்தாலும் உதவி கேட்பவளிடம் மறுப்பு தெரிவிக்க முடியாமல் "சரி வரேன்" என்று சொன்னபடி அவள் காரை நோக்கி ஓடிச் சென்றவன் ஜன்னலை தட்ட அவளோ கதவை திறந்து விட்டவள் சற்றே நகர்ந்து அடுத்த சீட்டில் இருந்தபடி "உங்க கார்ல போகலாமே இது தான் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதே" என்றாள்.

"எனக்கு கொஞ்சம் வேல இருக்கு.. என்னால ட்ரைவர் வேல எல்லாம் பார்க்க முடியாது.. உன் கார்ல என்ன பிரச்சனைன்னு பார்க்கிறேன்" என்றவன் ஸ்டார்ட் பண்ணி பார்த்தான்.

ஸ்டார்ட் வராமல் இருக்க கதவை திறந்து கீழே இறங்கியவன் காரின் பொனெட்டை திறந்தான். அவனோ மழையினை பொருட்படுத்தாமல் நனைந்தபடி நின்று இருக்க, அவளும் பதறியபடி கீழே இறங்கியவள் "இப்போ எதுக்கு நனஞ்சுட்டே இருக்கீங்க, கொண்டு போய் விட முடியாதுன்னு சொன்னா ஆட்டோவில போய் இருப்பேன்..இல்லன்னா அப்பாவை வர சொல்லி போய் இருப்பேன்" என்று சொல்ல அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "நான் நனைஞ்சா பரவாயில்லை, கல்யாண பொண்ணு நீ ஏன் நனையுற? அப்புறம் மிதுனுக்கு யார் பதில் சொல்றது?" என்று கேட்க அவனை உறுத்து விழித்தவள் "இப்படி பேசுனா கொன்னுடுவேன்" என்றபடி கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்து அருகே இருந்த சுவர் பக்கம் ஒதுங்கினாள். அங்கே இருளாக இருக்க, அவளையும் ஆதித்தையும் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இருக்கவில்லை. பார்க்கிங் ஏரியா என்பதனால் முன்னால் நின்ற காவல் காரர்களும் இந்த பக்கம் வர வாய்ப்பு இருக்கவில்லை. அவனோ "சரியான இம்சடி" என்று நினைத்தபடி அவளை நோக்கி சென்றவன் "சரி வா, உன்னை வீட்ட ட்ராப் பண்ணுறேன்" என்று சொல்ல அவளோ அவனை முறைத்துக் கொண்டே நின்று இருந்தாள்.

மழைக் குளிரில் அவள் கைகள் நடுங்கிக் கொண்டு இருக்க இதழ்கள் துடிக்க ஆரம்பிக்க கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அந்த சுவரில் ஒடுங்கி போய் நின்றாள் நதீகா. அப்போது தான் தலையை ஒற்றை கையால் துவைட்டி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்த ஆதித் பேசுவதை நிறுத்தி விட்டு அவள் நடுக்கத்தை அவதானித்துக் கொண்டே " ரொம்ப குளிருதா? " என்று மென்மையாக கேட்க அவளோ " ஆஅ ரொம்ப சூடா இருக்கு " என்று எரிச்சலாக பற்கள் நடுங்க பதிலளித்தாள்... அவள் மனமோ " ரொம்ப அக்கறை இருக்கிற போல ஆக்டிங் மட்டும் " என்று நினைக்க இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவன் .அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.

புடவை அணிந்து இருந்தவள் முகமோ மழை துளிகள் பட்டு ஜொலிக்க இதழ்களோ மேலும் கீழும் தந்தியடிக்க உடலோ குளிர் தாங்க முடியாமல் சிலிர்த்து போய் இருந்தது. அவளை சாதாரணமாக தான் பார்க்க ஆரம்பித்தவனின் பார்வை எப்போது மாறியது என்று அவனுக்கே தெரியவில்லை..

தன்னுணர்வு இழந்து அவள் நடுக்கத்தை போக்க நினைத்தப்படி அவளை நோக்கி சென்றவன் இரு கைகளையும் உரசி அவள் கன்னத்தில் வைக்க அவன் கைகளில் இருந்த கதகதப்பு அவளுக்கு இதமாக இருந்தாலும் அவன் செயல் விசித்திரமாகவே இருந்தது. அவளும் தன்னவன் ஸ்பரிசத்தில் கண்களை மூடிக் கொள்ள அவள் குளிரை தணிக்க வந்த அவன் கரங்களோ அவளது பட்டு கன்னங்களை வருடியது. அவளும் உணர்ச்சி பெருக்கில் அப்படியே சுவரில் மொத்தமாக சாய்ந்து கொள்ள அவள் அருகே நூலளவு இடைவெளியில் நின்றவன் விரல்களோ அவள் கன்னம் தீண்டி இதழ் நோக்கி நகர அவளோ கண்களை மூடியபடி இதழ்களை விரிக்க அவனுக்கோ நடுங்கி கொண்டு இருந்த அவள் இதழ்களின் நடுக்கத்தை போக்க வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

அனல் மட்டும் அல்ல அவன் இதழ் கூட அவள் இதழின் நடுக்கத்தை தணிக்கும் வல்லமை படைத்தது என்று அடுத்த கணமே நிரூபிக்க அவள் தனது பெரு விரலில் அவன் உயரத்தை ஈடு கட்ட எழுந்து நிற்க அவன் அணைப்பினுள் இவள் அடங்கி போனாள்...

அவனாக கொடுக்கும் முதல் இதழ் அணைப்பு, அவள் நடுக்கத்தை மட்டும் அல்ல, மனதின் சலனத்தையும் அகற்றி இருக்க, இவன் என்னவன் என்ற உரிமையில் அவள் கரங்கள் அவன் கழுத்தை மாலையாக கோர்த்துக் கொண்டன.. குளிர் நேரமதில் சூடாக ஒரு முத்தம் , கசக்குமா என்ன? எவ்வளவு நேரம் நீண்டதோ தெரியவில்லை, இடி சத்தம் கேட்டு முதலில் சுதாகரித்தது என்னவோ ஆதித் தான்.அப்போது தான் செய்து கொண்டு இருக்கும் செயலை உணர்ந்து பதறி விலகியவன் அவளை பார்க்க அவளோ அவன் முத்தத்தில் மொத்தமாக தொய்ந்து சுவரில் கண்களை மூடியபடி சாய்ந்து நின்றாள் அவனுக்கோ தன் மீதே கோபம் எல்லை இன்றி உருவாக "என்ன பண்ணி இருக்க ஆதித்" என்று தன்னை தானே கடிந்து கொண்டே அங்கிருந்து விறு விறுவென நகர்ந்து தனது காரில் ஏறி அமர்ந்தவன் தலையை கோதி தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு இருந்தான். அவன் சென்ற சத்தத்தில் தன்னுணர்வு அடைந்தவளுக்கு தன்னவன் செய்த செயல் இதழ்களில் மெல்லிய சிரிப்பை உண்டாக்க இது வரை இருந்த கலக்கம் நீங்கி இப்போது அவள் முகம் தெளிவாக இருந்தது. அடுத்த கணமே நடந்து சென்று அவன் காரில் ஏறிக் கொள்ள, அவனோ அவளை பார்க்காமல் காரை உயர் வேகத்தில் அங்கிருந்து கிளப்பினான். அவளோ "ஆதித் " என்று அழைத்த போதும் அவன் திரும்பி பார்க்காமல் காரை ஓட்ட அவன் இறுகிய முகத்தினை பார்த்தவள் பேசுவதற்கு கொஞ்சம் பயந்து தான் போனாள்.

யோசனையுடன் காரை ஓட்டியவன் ஒரு கட்டத்தில் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன் "கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்க அவளோ அவனை அடுத்த கணமே இறுக அணைத்து இருந்தாள்.

அடுத்த நாள் கழிந்து அதற்கு அடுத்த நாள் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது ஆதித் நதீகாவின் திருமண புகைப்படம். அவர்களுடனேயே இருந்த போதும் அவர்கள் திருமணம் செய்தது இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் இருக்க, வெகுண்டெழுந்து விட்டாள் மதுபாலா..பாண்டியனோ மகள் முடிவை நினைத்து பெருமூச்சு விட்டாலும் மதுபாலாவை நினைத்து கொஞ்சம் நடுங்க தான் ஆரம்பித்து இருந்தார்.

மேசையில் இருந்த போட்டோவை பார்த்து கொதித்துக் கொண்டு இருந்த அடுத்த ஜீவன் மிதுன். மதுபாலா முன்னே ஆக்ரோஷமாக வந்து நின்றவன் "அந்த நன்றி கெட்ட நாய நான் கொல்லாம விடமாட்டேன்" என்று சீற, மதுபாலாவோ "மிதுன்" என்று அவனை அடக்கியவள் "இது உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தான் அவமானம்" என்று சொன்னவள் மனம் உலையாக கொதித்துக் கொண்டு தான் இருந்தது..

மிதுனோ , கண்ணீருடன் "அது சரி, உங்களுக்கு நான் வளர்த்த பையன் தானே. அவன் மேல தானே பாசம் இருக்கும்.. நான் அனாதை தானே" என்று அனைத்து தோல்விகளையும் சந்தித்த வலியில் அழ ஆரம்பிக்க மதுபாலாவுக்கோ "இல்லடா நீயும் என் மகன் தான்" என்று சொல்ல வந்த வார்த்தைகள் வெளியே வராமல் தொண்டை குழியில் சிக்கி கொண்டன. அவன் அழுவதை பரிதாபமாக பார்த்த மதுபாலா "இங்க பாரு, உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்... " என்று ஆரம்பிக்க அவனோ "எனக்கு அவ தான் வேணும்" என்று சத்தமாக கத்தினான். ஆதித் இடத்தில் வேறு யாரும் என்றால் கொலை தான் விழுந்து இருக்கும்.. ஆனால் இப்போது ஆதித் மேல் உள்ள நம்பிக்கை, மற்றும் அவள் அரசியலுக்கு அவன் அயராது உழைக்கும் உழைப்பு எல்லாம் நினைத்து கோபத்தை விழுங்கி கொண்டு அமைதி காத்தாள்..பயன் இல்லாமல் சுண்டு விரலை கூட அசைக்க யோசிப்பவள் அவள். அரசியலில் ஆதி அந்தம் வரை பிரித்தெடுக்கும் திறமை உள்ள ஆதித்தை பகைக்க நினைப்பாளா என்ன?

அதே சமயம் முதல் நாள் திருமணத்தை ரகசியமாக முடித்து விட்டு தத்தமது வீட்டுக்கு வந்து சேர்ந்த இருவரும் அடுத்த நாள் எதுவுமே தெரியாத போல அலுவலகத்துக்கு வந்தது தான் அதிர்ச்சியின் உச்சக்கட்டம். அடுத்த கணமே ஆதித்தை உள்ளே அழைக்க, அவனும் சாதாரணமாக உள்ளே வந்த நேரம் அவன் ஷேர்ட்டை எட்டிப் பிடித்த மிதுன் அவன் மூக்கில் ஓங்கி குத்த போக அவன் கையை தன் மீது பட விடாமல் பிடித்த ஆதித் "கையை எடுடா" என்று சீறினான்.

மதுபாலாவோ "ஸ்டாப் இட்" என்று சீறியவள் கெந்தி கெந்தி நடந்து வந்து "கையை எடுடா மிதுன்" என்று சீற அவளை அனல் தெறிக்க பார்த்த மிதுன் "இந்த அவமானத்தை எப்போதுமே மறக்க மாட்டேன்.. உங்க பையன் உயிர் என் கையால தான் போகும் மதுபாலா" என்று சொல்லி விட்டு வெளியேறியவனை பார்த்த ஆதித், அதிர்ந்து நின்ற மதுபாலாவைப் பார்த்து "விடுங்கம்மா கோபத்துல பேசிட்டு போறான்" என்றான். மதுபாலாவும் அவனை பார்த்து "ஏன் ஆதித் இத என் கிட்ட சொல்லல? " என்று சற்றே கோபமாக கேட்க "ஐ அம் சாரிம்மா , நான் மாப்பிள்ளைன்னு நினச்சு தான் நதி ஓகே சொன்னா .,..ஆனா" என்று இழுக்க, இரு பக்கமும் தலையாட்டியவள் "இத வச்சே எதிர்க்கட்சி காரனுங்க அரசியல் பண்ணிடுவானுங்க" என்று சலித்துக் கொண்டாள். அவனோ "நான் இருக்க உங்களுக்கு என்னமா பயம்" என்று கேட்க மதுபாலாவும் வலுக்கட்டாயமாக சிரித்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாலும் ஒரு சின்ன வலி அவளுக்கு உண்டானது என்னவோ உண்மை தான்.

பெற்ற மகன் மிதுனிடம் அவள் தான் தாய் என்று சொல்லவும் முடியவில்லை. பல வருடங்களாக கூட இருந்தவன் இன்று பிரிந்து போய் விட்டான் வேறு...

அவள் அரக்கியாக இருந்தாலும் மிதுன் மீது பாசம் இருக்க தான் செய்தது.. மிதுனுக்கோ கோபம் எல்லை கடந்து போக அதை போக்கும் வழி தெரியாமல் கெஸ்ட் ஹவுஸுக்கு நண்பர்களுடன் சென்று குடியில் மூழ்கி விட்டான். அவனுக்கோ ஆதித் மீது கொலை வெறி ஆத்திரம் மட்டுமே எஞ்சி இருக்க, அவனை கொன்றால் என்ன என்று யோசித்தவனுக்கு நதீகாவை ஏதாவது பண்ண வேண்டும் என்ற வெறியும் சேர்ந்து எழுந்தது.

அதே சமயம் நதீகாவை தேடி வந்த ஆதித் " கொஞ்ச நாள் உன் அப்பா வீட்டிலேயே இரு" என்று சொல்ல அவளோ "ஏன் ஆதித்?" என்று கேட்டாள். அவனும் "அம்மா கொஞ்சம் கோபமா இருக்காங்க, இனி வேலைக்கும் வர வேணாம்" என்று நாசுக்காக சொல்லி அவள் மதுபாலாவை சந்திக்கவே அவகாசம் கொடுக்காமல் வீட்டுக்கு அனுப்பியவன் மதுபாலாவிடம் "அவளுக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்காம் அம்மா, ஷீ நீட் டைம்" என்று சொல்லி இருந்தான். அவன் ஒவ்வொரு அசைவுக்கும் நதீகா முட்டுக் கட்டையாக இருந்ததே அவளை அங்கிருந்து அகற்ற முக்கிய காரணமாகி போனது.

அதே சமயம் மதுபாலா அனைவரையும் விட இமாலய அளவுக்கு நம்பிக்கை வைத்து இருந்தாள் ஆதித் மீது.. அவன் சாதுரிய பேச்சே அதற்கு முக்கிய காரணமாகும்... திருமண போட்டோ வெளியானதில் இருந்து பல கிசு கிசுப்புகள் உருவாக, அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தன் மீதே பழியை போட்டுக் கொண்டாள் மதுபாலா.. "இவங்க காதலிக்கிறது எனக்கு தெரில.. தெரிஞ்சா நானே கல்யாணம் பண்ணி வச்சு இருப்பேன்" என்று சொல்ல "பெற்ற மகனின் மனம் புரியாதவளுக்கு ஊர் மக்களின் மனம் புரியுமா " என்று அதற்கும் சல சலப்பு கிளம்பியது.. அனைத்தையும் சரி செய்ய அவளுக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. அதே சமயம் மிதுன் கெஸ்ட் ஹவுசிலேயே தங்கி இருக்க, ஆதித்தோ அரசியலில் தீயாக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தான்.

இப்படியே நாட்கள் மெதுவாக நகர, மிதுன் என்ற பெயரை மொத்தமாக அரசியலில் ஆதித் கை பற்றி கொள்ள, அவனே அடுத்த அரசியல் வாரிசு என்று அனைவரும் பேச ஆரம்பித்தார்கள். மிதுனை விட அவன் மிகவும் சாமர்த்தியமானவன் என்பதால் அவனை யாரும் எதிர்க்கவும் இல்லை.



இப்படியான ஒரு நாளில் தான், கடைக்கு சென்று வந்த நதீகா கடத்தப்பட்டு இருந்தாள். இந்த செய்தி கேட்டு இடிந்து போன ஆதித் நேரே சென்றது மதுபாலாவிடம் தான் .."அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு, மிதுன் தான் இத பண்ணி இருப்பான்னு தோணுது" என்று பதட்டமாக பேச அவளோ "இருக்கிற பிரச்சனைல அவன் வேற" என்று சலித்தவன் "சரி நான் அவன் கிட்ட நேர்ல போய் பேசுறேன்" என்றபடி கெஸ்ட் ஹவுஸுக்கு நுழைந்தாள். அங்கே அரை போதையில் சோபாவில் மிதுன் படுத்து கிடக்க அவன் தோளில் தட்டி எழுப்பியவன் "என்னடா நதீகா?" என்று கேட்க அவனோ "எந்த நதீகா?" என்று தூக்க கலக்கத்தில் எழுந்து கேட்டாள்.

மதுபாலாவும் "கடைக்கு போய் வந்தவளை காணோம், நீ தான் கடத்தி இருக்கிறதா ஆதித் சொன்னான்" என்று சொல்ல அவளை உறுத்து விழித்த மிதுன் "அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா ? அது சரி.. பெத்த புள்ள ஆச்சே" என்றவன் "அவளை நான் ஒண்ணுமே கடத்தல.. அவ புது பீஸ்னு தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்.. அதான் அந்த எருமை கல்யாணம் பண்ணிட்டானே,, இனி எதுக்கு நான் அடுத்தவன் தட்டுல சாப்பிடணும்" என்று கேட்க அவனை யோசனையாக பார்த்த மதுபாலா வெளியே வர ஆயத்தமானாள். உடனே மிதுன் "அவன் சாவு என் கையால தான் சொல்லி வைங்க" என்று சொன்னவன் , "இப்போவும் ஒன்னும் கெட்டு போகல. என் பக்கம் வந்தா உங்கள நல்லா வச்சு பார்த்துப்பேன்" என்று சொல்ல அவளோ கேலியாக இதழை வளைத்தவள் "காமடி பண்ணாம தூங்கு" என்றபடி வெளியேறினாள்.
 
Top