அத்தியாயம் 5
வீட்டுக்கும் வந்து விட்டார்கள்.திலகவதியோ, "என்னம்மா ஆஃபீஸ் எப்படி இருந்திச்சு?" என்று கேட்க, "வழக்கம் போல தான் அத்தை" என்றாள்.
"என்னம்மா கழுத்தில தாலியை காணோம், குங்குமமும் காணோம், காலைல நான் கவனிக்கல" என்று கேட்க, "உங்க மகனுக்கு கல்யாணம் ஆனத சொல்ல வேணாமாம்" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லி விட்டு அவள் அறைக்குள் செல்ல, "அடிப்பாவி" என்று சொன்னவனோ திலகவதியை பார்த்து, "அம்மா, அவ பொய் சொல்லிட்டு போறாம்மா" என்றான்.
"இல்லடா நீ சொல்லி இருப்ப, இப்போ அவளை பொண்டாட்டின்னு சொல்றதுக்கு என்ன? வேற பொண்ணுங்க கூட பேசுறதுக்காகவே நீ சொல்லி இருப்ப, உன்னை பத்தி எனக்கு தெரியாதா?" என்று திட்டிக் கொண்டே நகர்ந்து விட, அவனோ கடுப்பாக அறைக்குள் நுழைந்தான்.
பெண்ணவள் கைப்பையை மேசையில் வைத்து விட்டு, களைப்புடன் கட்டிலில் அமர்ந்து கொண்டே, அலைபேசியை பார்க்க, "ஆஃபீஸ் ல சொல்ல வேணாம்னு நான் சொன்னேனா?" என்று கடுப்பாகவே கேட்டான்.
"இல்ல தான், ஆனா அத்தை திட்டுவாங்களே" என்றாள்.
"அதுக்குன்னு என்னை மாட்டி விடுவியா?" என்று வாய்க்குள் முணுமுணுக்க, "வாழ்க்கை முழுக்க வர்றேன்னு டயலாக் எல்லாம் பேசுனீங்க, எனக்காக ஒரு பழியை கூட ஏத்துக்க மாட்டேங்குறீங்களே" என்றவள் டவலை எடுத்துக் கொண்டே குளிக்க செல்ல, "ஆஹ் பழியை ஏத்துக்கிறேன், ஆனா நான் தான் குளிச்சிட்டு விடுவேன்" என்று சொன்னவன், டவலை எடுத்தபடி, அவளை தள்ளி விட்டு குளியலறைக்குள் நுழைய, "இதெல்லாம் எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?" என்று வெளியே நின்று அவள் திட்டினாள்.
"ஆஹ் உனக்காக பழியை ஏத்துக்கிட்டு இருக்கேன், அர்ஜஸ்ட் பண்ணிக்கோ, தப்பில்ல" என்று அவன் சொல்ல, "க்கும்" என்று சொல்லி விட்டு, மீண்டும் கட்டிலில் களைப்புடன் அமர்ந்து கொண்டாள்.
அவன் குளித்து விட்டு வந்ததும் தான் அவள் குளிக்க சென்றாள்.
"இங்கேயே வந்து ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிக்கோ, நான் வெளிய தான் இருப்பேன்" என்று சொல்லி விட்டு வெளியேற, அவன் முதுகை யோசனையுடன் பார்த்துக் கொண்டே, கதவை தாளிட்டவள், குளித்து விட்டு உடை மாற்றியபடி வெளியே வந்தாள்.
அப்போது அவள் அலைபேசி அலறியது...
எடுத்து காதில் வைத்தாள்.
ஜீவிதா தான்...
"அக்கா, பஸ் ஸ்டான்ட் ல நிக்கிறேன், வீட்டு அட்ரஸ் அனுப்பு" என்று சொல்ல, "நாளைக்கு தானே டி வர்றேன்னு சொன்ன?" என்று கேட்டாள் மாதுரி...
"நாளைக்கு காலேஜ் ல ஸ்பெஷல் க்ளாஸ், இன்னைக்கு காலைல தான் நியூஸ் கிடைச்சுது, அதான் கிளம்பிட்டேன்" என்று சொல்ல, "தனியாவா வர போற? இரு உன்னை பிக்கப் பண்ண யாரையும் அனுப்புறேன்" என்று சொல்லி விட்டு, அங்கே டி வி பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த ராவந்த்தை பார்த்தவள், "ஜீவிதா பஸ் ஸ்டான்ட் ல நிக்கிறா, பிக்கப் பண்ண முடியுமா?" என்று கேட்க, ராமசாமியோ, "அதென்ன முடியுமான்னு கேக்கிற? இந்தா இந்த வெட்டி பயல அனுப்பு" என்று அங்கே அமர்ந்து இருந்த அஸ்வந்த்தைக் காட்ட, "அப்பா" என்று கடுப்பாகி விட்டான் அவன்...
"அஸ்வந்த் பிக்கப் பண்ண முடியுமா?" என்று மாதுரியே கேட்டாள்.
"உங்களுக்காக போறேன் அண்ணி" என்றபடி எழுந்தவன், "கீயை கொடு டா" என்று கையை நீட்ட, ராவந்த்தும் கார் கீயை கொடுக்க, அதனை எடுத்துக் கொண்டே புறப்பட்டு விட்டான்.
திலகவதியும், "சாப்பிட வர்றீங்களா?" என்று கேட்க, "ஜீவிதாவும் வரட்டுமே, சேர்ந்து சாப்பிடலாம்" என்று சொன்னான் ராவந்த்.
இதே சமயம் பஸ் நிலையத்தை காரில் அடைந்து இருந்தான் அஸ்வந்த்.
அலைபேசியை எடுத்து, ஜீவிதாவின் எண்ணுக்கு அழைத்தான்.
கட் செய்யப்பட்டது...
"இவ்ளோ நாளைக்கு பிளாக் ல வச்சு இருக்கா" என்று வாய் விட்டு திட்டிக் கொண்டே இறங்கியவன், விழிகள் அவளை தேட, அவளோ பஸ் அருகே நின்று இருந்தாள்.
அவளை நோக்கி வந்தவன், "எத்தனை நாளைக்கு தான் என்னை பிளாக் ல வச்சு இருப்ப?" என்று திட்டிக் கொண்டே, அவள் அலைபேசியை பறித்து அவனது பிளாக்கை ரிமூவ் செய்ய, "என்ன இது அஸ்வந்த்?" என்று சீறினாள் அவள்...
"நான் தான் பிக்கப் பண்ண வந்திருக்கேன், வேற வழி இல்ல, என் கூட தான் வந்தாகணும்" என்றான்.
அவளும் அவனை முறைத்தபடி, "எல்லாம் என் தலையெழுத்து" என்று புலம்பிக் கொண்டே காரில் ஏறி இருந்தாள்.
இருவரிடையே மௌனம் மட்டும் அல்ல, உள்ளுக்குள்ள அனலும் இருந்தது...
ஆனால் பேசிக் கொள்ளவில்லை.
இருவருமே இறுதி ஆண்டில் தான் கல்வி கற்றுக் கொண்டு இருந்தார்கள்.
பேசியே இரு வருடங்கள் ஆகி விட்டன...
வேறு வழி இல்லாமல் இன்று அஸ்வந்த் பேசுகின்றான்.
எத்தனை நாட்களுக்கு முகத்தை திருப்பிக் கொண்டு திரிவது என்கின்ற எண்ணம் அவனுக்கு...
அவளால் சட்டென ஒன்றவே முடியவில்லை...
இருவரும் முதலாவது வருடத்தில் உருகி உருகி காதலித்தவர்கள் தான்...
மாதுரி கூடவே இருந்ததால் வெளியே எல்லாம் சுற்றி திரிய வாய்ப்பு கிடைக்கவில்லை...
கல்லூரியினுள்ளேயே காதல் வளர்ந்தது...
எந்த தைரியத்தில் காதல் வளர்த்தாளோ தெரியவில்லை, ஒரு கட்டத்தில் பயமும் வந்து விட்டது...
"இப்போ வேணாம் அஸ்வந்த்" என்றாள்.
"என்னடி விளையாடுறியா?" என்று அவனுக்கு கோபம்...
"எனக்கு பயமா இருக்கு" என்று சொன்னாள்.
போராடி பார்த்தான்.
பிடித்த பிடியிலேயே நின்றாள்.
"சரி தான் போடி" என்று விலகி விட்டான்...
அவளும் படித்து முடிய பார்க்கலாம் என்று நினைத்து இருக்க, அவனோ ரெண்டாம் வருடத்தில் ஒரு பெண்ணுடன் சுற்றினான்.
நொறுங்கி விட்டாள்.
நெருங்கவும் முடியவில்லை, விலகவும் முடியவில்லை...
ஆத்திரம், கோபம் என்று என்னென்னவோ உணர்வுகள்.
கேட்க உரிமையும் இல்லை... சம்பந்தமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போனாள்.
ஏதாவது ஒரு இடத்தில் ஒன்றாக இருந்தாலே சண்டை வரும் நிலை தான்.
மூன்றாவது வருடத்தில் அடுத்த பெண்ணை பிடித்து விட்டான்.
வெறி ஏறி விட்டது அவளுக்கு...
அவனை பிளாக் செய்து மொத்தமாக விலகி விடலாம் என்று நினைத்து இருக்க, மீண்டும் அவள் வாழ்வில் வந்து விட்டான்...
இப்படி நேரத்துக்கு ஒரு பெண்ணுடன் சுற்றிய கோபம் அவளுக்கு...
அவன் மனநிலை மொத்தமாக வித்தியாசம்...
அவன் உருகி உருகி காதலித்தது அவளை தான்...
விட்டு சென்றதுமே வலி அதீதமாக இருந்தது...
அவளை கடுப்பேற்றவே பெண்களுடன் சுற்றி திரிவான்.
காதல் என்று அவளை தவிர அவன் யாரிடமும் கொட்டியது இல்லை...
மேம்போக்காக பேசுவான், ஒன்றாக இருந்து சாப்பிடுவான்.
அதனை காதல் என்று கல்லூரி தான் பரப்பியது.
பழகும் பெண் காதல் என்று வந்து நின்றால், 'சாரிம்மா நான் ஃப்ரெண்டா தான் பழகுனேன்' என்று சொல்லி விலகி விடுவான்.
இப்போது கடைசியாக பேசிய பெண்ணை விட்டு விலகி தனியாக தான் இருக்கின்றான்...
ஜீவிதா விட்டு சென்ற கோபம் அவனுக்கு...
அவன் நேரத்துக்கு ஒரு பெண்ணுடன் திரியும் கோபம் அவளுக்கு...
அதனை பற்றி பேசிக் கொள்ளாமல் உள்ளுக்குள் அனலுடனேயே அமர்ந்து இருந்தார்கள்...
ஒரு வழியாக வீடும் வந்து விட்டது...
பெண்ணவள் இறங்கிக் கொள்ள, அவனோ உள்ளே சென்று விட்டான்.
அவளும் மெதுவாக பையுடன் உள்ளே வர, "லக்கேஜ்ஜை அந்த பொண்ண தூக்க விட்டு வந்திருக்க? தூக்கி வர்றதுக்கு என்னடா?" என்று திலகவதி திட்ட, "நான் என்ன போர்ட்டர் ஆஹ்?" என்று கேட்டு விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
மாதுரியோ, "வாடி, உனக்கு இந்த ரூம் தான்" என்று அவள் அறையை காட்டியவள், "குளிச்சிட்டு வா சாப்பிடலாம்" என்று சொல்ல, ஜீவிதாவும் குளித்து விட்டு வந்தாள்.
அஸ்வந்த் அறைக்குள் இருக்க, திலகவதி அவனை அழைத்து இருந்தார்...
அவனும் வந்து அமர்ந்து விட, எல்லாருக்கும் உணவு பரிமாறப்பட்டது...
ராவந்த்தோ சாப்பிட்டுக் கொண்டே, "ஒரே காலேஜ் தானே ரெண்டு பேரும்?" என்று கேட்க, "ஒரே க்ளாஸ் கூட" என்றான் அஸ்வந்த்.
"ஓஹ் அப்போ தெரியும்னு நீ சொல்லவே இல்லையே டா" என்று ராமசாமி கேட்க, "நீங்க யாரும் கேட்கவே இல்லையே" என்றான்.
"அப்போ அந்த பொண்ணு கூட டெய்லி பஸ் ல போயிட்டு வா" என்றார் ராமசாமி.
"அப்போ பைக்கை என்ன பண்ணுறது?" என்று அவன் கடுப்பாக, "சேஃப்ட்டிக்கு தானே சொல்றோம், கொஞ்ச நாள் போறதுல என்ன இருக்கு?" என்று ராவந்த் கேட்க, அவனோ பெருமூச்சுடன் ஜீவிதாவை பார்த்தான்.
அவளோ, "இல்ல மாமா, நான் தனியா போவேன்" என்று சொல்ல, "இல்லம்மா ஒரே காலேஜ் தானே, பாதுகாப்புக்கு அவனும் வரட்டும்" என்று சொல்லி விட்டார்கள்...
ஜீவிதாவுக்கு உறுதியாக மறுக்க முடியவில்லை...
என்ன நினைப்பார்கள் என்கின்ற எண்ணத்திலேயே மௌனமாகி விட்டாள்.
சாப்பிட்டு விட்டு எல்லாருமே தூங்க சென்று இருந்தார்கள்...
அடுத்த நாள் ஜீவிதாவும் அஸ்வந்த்தும் ஒரே பஸ்ஸில் சென்றாலும் பேசிக் கொள்ளவே இல்லை.
இப்படியே ஒரு வாரம் நகர்ந்து இருக்கும், அலுவலகத்தில் ராவந்த்தின் அறைக்குள் வந்த ரிதன்யாவோ, "ராவ்" என்றாள் ஒரு வெட்க புன்னகையுடன்.
அவனும், "சொல்லு ரித்து" என்று சொல்ல, "வீட்டுக்கு போய் படிச்சு பாருங்க" என்று ஒரு மடலை அவன் மேசையில் வைத்து விட்டு சென்று விட்டாள்.
யோசனையுடன் அதனை திறந்தவனுக்கு மயக்கம் வராத குறை தான்.
மூடி வைத்தவன், "என்ன இவ்ளோ டீப்பா எழுதி இருக்கா?" என்று யோசித்தபடி மாதுரியை தேட, அவளோ நேரத்துக்கே வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்.
"எனக்காக வெய்ட் பண்ணுனா தான் என்னவாம்?" என்று முணுமுணுத்தவன் வேலையை முடித்து விட்டு கிளம்பவே ஏழு மணியை கடந்து இருந்தது...
இதே சமயம், ஜீவிதா ஹாலில் அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டு இருக்க, அவள் அருகே வந்து அமர்ந்தான் அஸ்வந்த்.
சட்டென எழுந்து அடுத்த இருக்கையில் சென்று அமர, 'ரொம்ப தான் பண்ணுறா' என்று முணுமுணுத்தபடி டி வி ரிமோர்ட்டை எடுத்து கிரிக்கெட்டை மாற்றினான்.
"நான் படம் பார்த்துட்டு இருக்கேன் ல" என்றாள்.
"நான் கிரிக்கெட் பார்க்க போறேன்" என்றான் அவன்...
அவனை முறைத்தவளோ, "அத்தை" என்று அழைக்க, "என்ன? சொல்ல போறியா? சொல்லுடி" என்றான்.
அவனிடம் அவள் பேசவில்லை...
"என்னம்மா?" என்றபடி வந்த திலகவதியுடம், "உங்க சீரியல் பார்க்கலையா நீங்க?" என்று கேட்க, "அதானே, சீரியலை போடு டா, ஒருவன் அடிக்க, ஒருவன் எறிய அத பார்த்துட்டு இருக்க?" என்று திட்டிக் கொண்டே, அவனிடம் ரிமோர்ட்டை வாங்கி சீரியலை போட, அவளோ அவனை கேலியாக பார்த்து விட்டு அறைக்குள் செல்ல, 'எப்போவாச்சும் மாட்டுவ, அப்போ பார்த்துகிறேன் டி' என்றபடி அவனும் அறைக்குள் சென்றான்.