ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 27

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 27



கௌதம் எழுந்து நின்று, "இது..." என்று தடுமாற மித்ராவோ அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டு நின்றாள். உடனே சுதாரித்தவன், "இது உன் கிட்ட எப்படி?" என்று கேட்க, "மாமா இறந்தப்போ அவர் கையில் இருந்தது." என்றாள்.

அதை கேட்டு அதிர்ந்தவன், "என்ன சொல்ற?" என்று பதறினான். "சார், மாமா இறந்தப்போ ஒரு சந்தேகத்தில் யாரும் பார்க்காத வண்ணம் அவர் கைகளை செக் பண்ணினேன். அப்போது தான் அவர் கைக்குள் இது இருந்தது." என்று சாணக்கியனின் பிரேஸ்லட்டை சுட்டிக் காட்டியவள் மேலும், "இது அத்தானோடதுனு எனக்கு நல்லா தெரியும் என்னோட கல்யாணத்தன்று தான் அக்கா அவருக்கு கொடுத்தாங்க. அக்காவும் நானும் சேர்ந்து போய் தான் வாங்கினோம்" என்றவளை கூர்மையாக பார்த்தவனுக்கு மண்டபத்தில் அவன் கையில் பிரேஸ்லட்டை பார்த்து அவனை சீண்டியதும் அவன், "பொண்டாட்டி தந்ததுடா" என்று புன்னகையோடு பதிலளித்ததும் நினைவு வந்தது.

"சோ கடைசியா... என்ன சொல்ல வர்ற?" என்று கெளதம் கேட்க, "இது கொலையா இருக்குமோனு சந்தேகமா இருக்கு சார்." என்றாள்.

"பைன்... அப்போ ஏன் நீ ஏற்கனவே இதுக்கு ஆக்ஷன் எடுக்கல" என்று கேட்டபடி உட்கார்ந்தவன் அவளையும் உட்கார சொல்லி கதிரையை காட்டினான்.

அவன் வேண்டுகோளுக்கிணங்க இருந்தவள், "அது என் தப்பு தான் சார்... எனக்கு சந்தேகம் வந்தாலும் அக்காவின் வாழ்க்கையை நினைச்சு அத மறைக்க யோசிச்சேன். ஆனா என்னால் ஒழுங்கா தூங்க முடியல சார். கடமையை தவற விட்ட உணர்வு. நேற்று நிதானமாக யோசித்து உங்க கிட்ட பேசணும்னு வந்தேன்" என்றாள்.

'உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?' என்று மனதுக்குள் நினைத்தவனுக்கு ஏதோ இடிப்பது போல தோன்ற அவளிடமே அதை கேட்டான்.

"உங்க அப்பாவை விட நான் பெரிய ஆபிசர் இல்லையே" என்று சொல்ல விரக்தியாக சிரித்தவள், "அப்பா இன்னும் ஒரு மாசத்தில் ரிட்டயர் ஆகிடுவார். ஆனா நீங்க அப்படி இல்ல... நண்பனாக இருந்தாலும் உங்க கடமையை சரிவர செய்வீங்க. அதோட இது குடும்ப விஷயம் வெளியில ஆதாரமில்லாம சொல்லி பெரிய இஷ்யூ ஆக்க விரும்பல...நீங்க ஆராய்ந்து உண்மைய கண்டு பிடிப்பீங்கனு நம்பிக்கையில தான் உங்க கிட்ட வந்தேன்" என்றவளை கூர்ந்து பார்த்தவன் மனதுக்குள், 'எல்லாம் சரி... ஆனா நான் நண்பன் என்று கூட

பார்க்காம கடமையை செய்வேன்னு சொல்ற பாரு... எனக்கு நிஜமா புல்லரிக்குது. அவனை உன்ன வச்சு தான் அர்ரெஸ்ட் பண்ணி கேஸ் போடாம வெளிய விட்டேன். அதெலாம் மறந்துட்டியா? நீ நல்ல போலீஸ் தான்... திருடனுக்கே போலீஸ் வேலை' என்று கேலியாக நினைத்தவன்,

"ஓகே நான் பார்த்துக்கிறேன்" என்று அந்த பிரேஸ்லட்டை வாங்கி வைத்தான். அவள் சென்றதும் நாடியை தடவியபடி அடுத்த திட்டத்தை யோசித்தவன் வேலை முடிய சாணக்கியன் வீட்டுக்கு நேரேச் சென்றான். அவன் மகாலிங்கம் இறப்பு சம்பந்தமாக வந்ததாக மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் அவன் ஆழ் மனதுக்குள் கயலை பார்க்க ஆவல் பிறந்தது.

சீறி வந்த ஜீப்பில் இருந்து பாய்ந்து இறங்கிய கெளதம் அப்போது தான் வந்திறங்கிய சாணக்கியனை பார்த்தான். அவனருகில் வந்தவன், "கொஞ்சம் பேசணும்" என்று ஆளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றான். சாணக்கியனும் புருவ முடிச்சுடன் அவன் பின்னால் சென்றான்.

ஆளில்லாத மரத்தடிக்கு இருவரும் வந்ததும் கையிலிருந்த பிரேஸ்லட்டை காட்டி, "என்னடா இதெல்லாம்?" என்று கேட்க சாணக்கியனோ "இது உன் கிட்டயா இருக்கு?" என்று அதை வாங்க போனான். கௌதமோ அதை கொடுக்காமல் போக்கு காட்டி பாக்கெட்டில் போட்டவன் அவனை முறைத்தபடியே, "இது உன் அப்பா கையில இருந்துச்சுனு உன் கடமை தவறா மச்சினிச்சி என் கிட்ட வந்து கொடுக்கிறா" என்றதும் "ஓ" என்றான்.

"என்ன ஓ ? ஒரு எவிடென்ஸ் இல்லாம கொலை பண்ண தெரியல...போடா" என்று நக்கலாக திட்ட, "அங்க மட்டும் என்ன வாழுதாம் ?" என்றபடி விஷ்வா கொடுத்த ஊசி மூடியை பர்ஸிலிருந்து எடுத்து கட்டினான்.

"டேய் இது உன் கிட்டயா இருக்கு?" என்று கேட்க, "ம்ம்... உன் மேல சந்தேகம்னு உன் மச்சினன் தான் என் கிட்ட கொண்டு வந்து தந்தான்." என்றான்.

"பிரேஸ்லட்டுக்கு உன்ன சந்தேகப்படுறது நியாயம், ஆனா ஊசி மூடிக்கு ஏன் டா அந்த வசூல்ராஜா என்னை சந்தேகப் படுறான் ?" என்று கேட்க அதுக்கு சாணக்கியன், "நீ தான் வீட்டு பக்கம் வர்றதில்லேயே அதுதான் அந்த சந்தேகம்" என்றவனிடம், "ஓ அது தானா செய்தி...சரி இனி இங்கயே வந்து இருக்கிறேன்" என்று சிரித்தபடி சொன்னவனிடம், "நாளை மறுநாள் வசுவுக்கு வளை காப்பு நீ இங்கேயே தங்கிடு" என்றான் சாணக்கியன்.

சிறிது நேரம் யோசித்தவன், "சரி... அந்த புருஷன் பொண்டாட்டிய சமாளிக்கணும்னா இங்கே தங்க தானே வேணும்" என்றவன் அவன் கையில் பிரேஸ்லட்டை போட்டுவிட்டபடி இருவரும் வீட்டுக்குள் சென்றனர்.

கிருஷ்ணா இருந்த அறைக்கு வந்த கௌதமுக்கும் தன் அறைக்கு வந்த சாணக்கியனுக்கும் நடந்த விஷயங்கள் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தன.



****************************************************************

வரவேற்பு நேரத்தில் புகைப்படம் எடுத்து முடிய கல்யாண வீட்டில் வேணும் என்றே சாணக்கியன் ஆள் ஏற்பாடு பண்ணி ஜூஸை மகாலிங்கம் மேல் கொட்ட வைத்தான். மகாலிங்கத்தை ஆள் அரவமில்லாமல் கொலை பண்ண சரியான தருணம் இந்த கல்யாணம் தான் என்று அறிந்தவர்கள் அதற்கான ஏற்பாட்டை கச்சிதமாக செய்ய தொடங்கினார்கள்.

அவர் மேல் ஜூஸை கொட்டியவனுக்கு மகாலிங்கம் திட்ட அவன் பயத்தில் ஒடுங்கி போனான்.

அந்த சமயம் அவ்வழியால் வந்த கெளதம், "மாமா எதுக்கு டென்ஷன் ஆகிறீங்க? வீட்ல போய் மாற்றி விட்டு வாங்க" என்று தன்மையாக பேசியவன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அவரும் விரைவாக வரும் நம்பிக்கையில் யாரிடமும் சொல்லாமல் தனது காவல் படையினருடன் கிளம்ப குறுக்கு வழியால் சாணக்கியனும் கௌதமும் வீட்டை அடைந்து அவர் அறைக்குள் புகுந்துக் கொண்டனர்.

ஒரு மந்திரியை கொலை பண்ணுவது சாதாரண விஷயமல்ல என்று அறிந்தவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தினர்.

வெளியில் சிப்பாய்களை நிறுத்தி விட்டு அறைக்குள் வந்தவர் அங்கு இருந்தவர்களை பார்த்து அதிர சோபாவில் இருந்த சாணக்கியன் எழுந்துச் சென்று கதவை சாத்தினான்.

"இப்போ எதுக்கு கதவை சாத்துற?" என்று அவர் கேட்க சாணக்கியனோ, "உடை மாற்ற வேண்டாமா?" என்று கேட்டான்.

வீட்டில் அனைவரும் கல்யாணத்தில் இருப்பதால் வீட்டில் யாரும் இருக்க வில்லை. வெளியில் கத்தினாலும் கேட்காத தூரத்தில் அவர் காவலாளிகள் மட்டுமே இருந்தனர்.

உடனே அவர் சந்தேகமாக, "நீ எதுக்கு இங்கே வந்த?" என்று கேட்டார். அதை கேட்டு சத்தமாக சிரித்தவன், "சும்மா உங்கள கொலை பண்ணுறதுக்கு" என்று சாதாரணமாக சொல்ல அதிர்ந்தவர், "அப்போ அதெல்லாம் உன் வேலையா?" என்று கேட்க அவர் முன்னே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்றவன் ஆம் என்று தலை ஆட்டினான்.

இதெல்லாம் கேட்டுக் கொண்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு இருந்த கௌதமை பார்த்தவர், "அங்க ஏன் சும்மா பார்த்திட்டு இருக்கிற? இவனை அரெஸ்ட் பண்ணு... அவனே ஒத்துக்கிறான்... இப்போ என்ன காப்பாத்து" என்று பயத்தில் உளறினார்.

அவரை ஏளனமாக பார்த்தவன், "இதுவரை உங்கள காப்பாற்றுனதே உங்கள என் கையால் கொல்ல தான்." என்றான்.

அதை கேட்டு அவருக்கு பயம் ஏற்பட்டாலும் அதை மறைத்தவர், "என்னடா ஆளாளுக்கு கொல்ல போறேன் கொல்ல போறேன்னு மிரட்டுறீங்க? நான் யாரு தெரியுமா?" என்று கேட்க சாணக்கியனோ சினம் பொங்க, "நல்லாவே தெரியும் ஒரு கர்ப்பிணி பொண்ணு என்றும் பார்க்காம பலாத்காரம் பண்ண துணிஞ்சு அந்த பொண்ண கொலை பண்ணின ஒரு கேவலமான நாய்... சின்ன பையன அடிச்சு மண்ணுக்குள்ள புதைக்க போன இரக்கமில்லாத ஜென்மம்... இன்னும் நிறைய..." என்றவன் மேலும், "உன்ன அப்பா என்று சொல்லவே எனக்கு வெட்கமா இருக்குடா சீ..." என்று காறி அவர் முகத்திலேயே உமிழ்ந்தான்.

ஒரு பக்கம் அதிர்ச்சியும் அவமானமுமாக இருக்க முகத்தை துடைத்தபடி, "அந்த கிருஷ்ணா சொல்றத நம்பாத அது எதிர் கட்சி சதி" என்றார்.

அவரின் பொய்யை அருவருப்புடன் கேட்ட சாணக்கியன், "நானும் அரசியல் தான் செய்றேன்... அத மறந்துட்டு என் காதில நீ பூ சுத்த வெளிக்கிடாத... இனி உனக்கு அப்பா என்ற மரியாதை நான் தர்றதா இல்ல. நான் கிருஷ்ணா சொன்னதாகவே சொல்லலையே... நீயே உளறிட்டே" என்றான்.

உடனே பயந்தவர் கதவை திறக்க போக அவர் முன்னே கதவை மறித்தபடி கெளதம் கண நேரத்தில் வந்து நின்றான்.

அவருக்கு தப்ப வேறு வழி தெரியாமல் மகனை இனி ஏமாற்ற முடியாது என்று நினைத்தவர் கௌதமை தன் பக்கம் இழுக்க யோசித்தார்.

உடனே அவனை பார்த்து, "நீயும் கிருஷ்ணா சொல்றத நம்புறியா?இது நியாயமா?" என்று இளகிய குரலில் கேட்க கெளதம் அருகில் வந்த சாணக்கியன் அவன் தோளில் தன் முழங்கையை குற்றி மகாலிங்கத்தை பார்த்து, "உன் அடியாட்கள் ரெண்டு பேரை நான்கு மாசத்துக்கு முன்னாலேயே ரகசியமாக போட்டதே இவன் தான்... அவன் கிட்ட போய் நியாயம் கேக்கிறியேப்பா" என்றான்.

கெளதம் முகத்தில் கவலையையம் கோபத்தையும் தவிர எதுவும் இருக்கவில்லை. "என்ன சொல்ற நீயா கொலை பண்ணின?" என்று கேட்ட மகாலிங்கத்திடம் ஆம் என்று கை கட்டி தலையாட்டியவன், "வந்தவன் கிருஷ்ணா இல்ல நான் தான் கிருஷ்ணா... வந்தவன் யார் என்று எனக்கே தெரியல" என்றான் ஆக்ரோஷமான குரலில். அவன் குரலில் அவருக்கே நடுக்கம் ஏற்பட்டது.

உடனே சாணக்கியன், "டேய் அது என் ஆள் டா" என்று சிரிக்க கௌதமோ, "அட பாவி சொல்லவே இல்ல" என்றவனுக்கு கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது.

இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்த மகாலிங்கம் முன்னால் சொடக்கிட்ட கெளதம், "உன்ன என் கையால கொல்ல தான் காப்பாற்றினேன். என் குடும்பத்தையே அழிச்ச பாவி நீ. உனக்கு சாவு கொடூரமா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா உன்ன பழி வாங்க உன் அந்தரங்க போட்டோசை மீடியாவுக்கு அனுப்ப தான் முதலில் யோசிச்சேன், ஆனா நீ பண்ணின தவறுக்கு உன் குடும்பமும் தல குனியும், என் நண்பன் உட்பட" என்று சாணக்கியன் தோளில் கை போட்டு சொன்னவன் மேலும், "உன் ஆட்களை வச்சு எனக்கும் என் அம்மாக்கும் நீ பண்ணின எல்லாம் வாக்குமூலமா எடுத்து மீடியாவுக்கு அனுப்பி உன்ன பதவியை விட்டு இறக்க யோசிச்சேன். சாணக்கியனும் அதுக்கு உடன் பட்டான். ஆனா அப்போவும் என் கண் முன்னால் வந்தது என் நண்பனின் முகம் தான். உனக்கு மகனா பிறந்ததை தவிர அவன் எந்த கெட்ட செயலும் செய்யல... அவன் அரசியல் வாழ்க்கை உன்னால் முடிய கூடாது என்று நினைச்சேன்" என்றவனை சாணக்கியன் நெகிழ்ச்சியுடன் பார்த்தான்.

"நீ பண்ணின வேலைக்கு உன்ன கண்ட துண்டமா வெட்டி கொல்லணும்னு ஆத்திரம் வருது. ஆனா அப்படி கொலை பண்ணினா போலீஸ், கேஸ் என்று பிரச்சனை வந்து உன் குடும்பத்து நிம்மதி போயிரும்... உன்ன தவிர உன் குடும்பம் எல்லாரும் நல்லவங்க... அந்த ஒரு காரணத்துக்காக இப்போ நீயாவே சாக போற" என்றதும் அதிர்ச்சியுடன் மகாலிங்கம், "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று கத்த கண நேரத்தில் அவரை அடைந்த சாணக்கியம் பின்னால் நின்று அவர் வாயை பொத்தினான்.

திமிறியவருக்கு சாணக்கியனின் பலத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சாணக்கியனின் பொத்திய கையை எடுக்க வெகுவாக போராடினார்... கத்தி இன்றி ரத்தம் இன்றி அங்கு குருஷேத்திர யுத்தம் நடந்தது.

பாக்கெட்டிலிருந்து ஊசியை எடுத்த கெளதம் அதன் மூடியை கழட்டி குப்பை கூடைக்குள் போட்டான். அந்நேரத்தில் அவன் அதை பற்றி யோசிக்கவில்லை அதுவே ஒரு சாட்சியாக போகிறது என்று. ஊசியில் வாயுவை நிரப்பியவன் அவர் நரம்பை தேடி எடுத்து அவர் கண்ணீர் வழிந்த கண்ணை பார்த்தவாறே அதை அவருள் செலுத்தினான்.

போலீஸ் ட்ரைனிங்கில் இருந்தவனுக்கு நரம்பை தேடி ஊசி ஏற்றுவது பெரிய விஷயமாக இருக்கவில்லை. எல்லாம் செய்தவர்கள் தங்களுக்கு எதிரியாக போகும் விஷ்வாவையும் மித்ராவையும் மறந்து போனார்கள்.

சிறிது நேரத்தில் அவர் இதயம் தானாக செயல் படுவதை நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட உடல் அதிர்வால் அவர் சாணக்கியனின் கையிலிருந்த புதிய மெல்லிய பிரேஸ்லட்டை அறுத்து தனது கைகளுக்குள் பொத்தி இருந்தார்.

அதை இருவரும் கவனிக்கவில்லை. அப்போது தான் அணிந்தது என்பதனால் அது தனது கையில் இல்லாததை சாணக்கியனுக்கும் உணர முடியவில்லை. அப்படியே அவரை கட்டிலில் படுக்க வைத்தவர்கள், தடயங்களை அழித்து விட்டு ஊசி மூடியை தேட அது எங்கே போடப்பட்டது என்று அந்த பதட்டமான சூழலில் இருவருக்கும் நினைவு வராமல் போக அவரை கொன்ற திருப்தியிலேயே வீட்டின் பின் புற மதிலால் பாய்ந்து ஏறியவர்கள் கல்யாண வீட்டை அடைந்தனர்.

மகாலிங்கத்தின் காவலாளிகளுக்கு அவர் அறைக்குள்ளே செல்ல அனுமதி இல்லாததால் அவருக்காக காத்துக் கொண்டு வாசலிலே நின்றார்கள்.

சாணக்கியன் கொஞ்சம் கூட கவலை படாதது கௌதமுக்கு ஆச்சரியமாக இருந்தது. கௌதமுக்கு தெரியவில்லை அவன் மனதுக்குள் தன் தந்தைக்காக கண்ணீர் விட்ட விடயம்.

நீதிக்கும் பாசத்துக்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

கல்யாணம் முடிந்த பின் மகாலிங்கத்தின் இறுதி சடங்குகள் முடிந்ததும் கயலுடன் போலி வாழ்க்கை வாழ பிடிக்காமல் சாணக்கியனிடம் சொல்லி விட்டு கெளதம் தனது வேலையிலேயே கண்ணாக இருக்க தொடங்கினான். கயலுக்கு தெரியாமலே அவளை அடிக்கடி பார்த்து வந்தான். சாணக்கியன் கையில் பிரேஸ்லெட்டை காணாமல் வசுந்தரா கேட்க அப்போது தான் அவனுக்கே அதன் நினைவு வந்தது.

உள்ள இடமெல்லாம் தேடியவன் கடைசியில் அவள் பரிசை தொலைத்ததற்காக வசுந்தராவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானமாகிக் கொண்டான்.

*************************************************************************************

எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று நினைத்த சமயம் தான் ஆதாரத்துடன் வந்து நின்றார்கள் விஷ்வாவும் மித்ராவும். அனைத்தையும் யோசித்த இருவருக்கும் மித்ரா மற்றும் விஷ்வாவை சமாளிப்பது என்பது பெரிய தலைவலியாக இருந்தது. அப்படியே இருவரும் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்க இராப்போசன நேரமும் வந்தது.

அன்றிரவு ஒன்றாக சாப்பிட வேண்டும் என்று சாணக்கியனின் உத்தரவின் பெயரில் இரவானதும் சாப்பாட்டு மேசைக்கு வந்திருந்த கௌதமை சித்ரா ஆனந்தத்துடன் வரவேற்றார். அவருக்கு எப்படியாவது மகள் வாழ்வை சீர் படுத்த வேண்டிய தேவை இருந்தது. சாணக்கியனும் வசுந்தராவும் ஒன்றாக வர வசுந்தரா மெல்லிய புன்னகையுடன் கௌதமை வரவேற்றாள்.

அடுத்து வந்த விஷ்வா அவனை அதிர்ச்சியுடன் நோக்கினான். அவனுக்கு கெளதம் மேல் கோபம் மட்டுமே எஞ்சி இருந்தது. கயலுக்கு கௌதமை பார்த்து படபடப்பு உருவாக அவனோ அவளை கண்டும் காணாமல் இருந்தான்.

வேலை விட்டு மித்ரா வந்த சமயம் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து இருந்த கௌதமை ஆச்சரியமாகவும் பூரிப்புடனும் பார்த்து மனதுக்குள், 'கெளதம் சார் நான் சொன்ன வேலையை தொடங்கிட்டார் போல' என்று நினைத்தவள் விரைவாக உடை மாற்றி அங்கு வந்து சேர்ந்தாள். வந்ததும் கௌதமை பார்த்து நன்றாக அவள் சிரிக்க அதை விஷ்வா புருவம் சுருக்கி பார்த்தான். இருவரையும் கண்ட கௌதம், 'நமக்கு இவன் கையால அடி வாங்கி கொடுக்காம அடங்க மாட்டா போல' என்று மித்ராவை பற்றி நினைத்தவன் மெல்லிய புன்னகையை மட்டும் அவளை நோக்கி சிந்தினான்.

சாப்பிடும் போது யாரும் யாருடனும் பேசவில்லை. அப்போது தான் சாணக்கியன் கையில் தான் கௌதமிடம் கொடுத்த பிரேஸ்லெட் இருப்பதை கண்டு மித்ரா அதிர்ந்தாள்.

உடனே இருக்கும் இடம் மறந்து முன்னால் இருந்த கௌதமிடம், "ஸ்ஸ் ஸ்ஸ்" என்று கூப்பிட கௌதமை தவிர அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர். விஷ்வாவுக்கு கோபம் திகு திகு என பற்றி எரிந்தது. அனைவரும் தன்னை பார்க்க சங்கடப்பட்டவள் மீண்டும் குனிந்து சாப்பிட தொடங்கினாள்.

எப்போது கெளதம் பார்ப்பான் எப்போது பிரேஸ்லெட் பற்றி கேட்கலாம் என்று காத்திருந்தவள் அவனையே அடிக்கடி பார்க்க அதை கவனித்த விஷ்வா, 'எதுக்கு இவ அவனையே பார்த்திட்டு இருக்கா?' என்று எரிச்சலாக நினைக்க கயலுக்கும் மித்ராவின் செயல் சங்கடத்தை கொடுத்தது. எல்லாம் அறிந்த சாணக்கியனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

வசுந்தராவும் சித்ராவும் இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.

அந்நேரம் பார்த்து நிமிர்ந்த கெளதம் தன்னை மித்ரா பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து என்ன என்று கண்களால் வினவ அவளோ கை கழுவும் அறையை கண்களால் காட்டினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த கயலும் விஷ்வாவும் எரிச்சலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

விரைவாக சாப்பிட்டு முடித்த கெளதம் கை கழுவ எழும்பிச் செல்ல அரை குறையாக சாப்பிட்ட மித்ராவும் பின்னால் சென்றாள்.

விஷ்வாவோ கஷ்டப்பட்டு தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். அதே நிலையில் தான் கயலும் இருந்தாள். கயல் மனதுக்குள், 'அவ வர சொன்னா இவர் போயிருவாரா?' என்று இருவருக்கும் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

கெளதம் பின்னால் கை கழுவ நுழைந்த மித்ரா, "சார் எதுக்கு அந்த பிரேஸ்லெட்டை கொடுத்தீங்க?" என்று கேட்க அந்த கேள்வியை ஏற்கனவே எதிர் பார்த்த கெளதம், "கொடுக்கும் போது அவர் ரியாக்ஷன் நோட் பண்ண தான்" என்றதும் நிம்மதி அடைந்தவள், "நான் கூட பயந்துட்டேன் சார் நீங்க அவர் பக்கமோ என்று" என கூறியவளை கை கழுவியபடி பாவமாக பார்த்தான்.

மேலும் தொடர்ந்தவள், "அது சரி சார்...அவர் என்ன சொன்னார் நீங்க அதை கொடுத்ததும் ?" என்று கேட்டவளிடம் கெளதம், "அவர்..." என்று தொடங்க விஷ்வா அந்த சந்தர்ப்பத்தில் உள்ளே நுழைந்தான்.

உடனே மித்ரா, "ஷு ஷு" என்று வாயில் விரல் வைத்து சொல்ல வேண்டாம் என்று சொல்ல அது விஷ்வாவுக்கு தெளிவாகவே விளங்கியது.

அதை கவனித்தபடி கை கழுவி முடித்த கெளதம் மனதுக்குள், 'எனக்கு எப்போ அடி வாங்கி தர போறாளோ?' என்று நினைத்தபடி விஷ்வாவை பார்க்காமலே சென்றான். விஷ்வாவோ அவனை முறைத்துவிட்டு கைகழுவிக் கொண்டிருந்த மித்ராவையும் முறைத்தான்.


'இவன் எதுக்கு நம்மள முறைக்கிறான்?' என்று யோசித்தவள் அவனை கணக்கெடுக்காமல் கை கழுவி விட்டு வெளியேறினாள்.
 
Top