அத்தியாயம் 16
வெளியே வந்தவனோ தனது புகைப்படத்தின் அருகே நின்ற தேன்மொழியை புருவம் சுருக்கி பார்க்க, அவளோ அவனை பார்க்காமல், சட்டென்று ஷாலினால் புகைப்படத்தை துடைத்தாள்.அவன் எதுவும் பேசவில்லை, ஒரு ஆழ்ந்த பார்வையுடன் வெளியேறி விட்டான்.
அன்றைய நாள் அப்படியே கடந்து போக, அடுத்த நாள் காலையில் வம்சி கிருஷ்ணா வேலை விஷயமாக வெளியே சென்று விட, தேன்மொழி ஸ்கூலுக்கு புறப்பட்டு விட்டாள்.
யாதவ் கிருஷ்ணா காரில் தன்னுடன் வரும்படி அழைத்தும் மறுத்தவள் நடந்தே சென்றாள்.
இதே சமயம் கல்யாணி அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அவளைக் கண்டதும் தான் வேதவல்லிக்கு பூஸ்ட் குடித்த போல தெம்பு வந்தது...
"வாம்மா,வாம்மா" என்றார்...
அவர் தலை முடியை பார்த்த கல்யாணிக்கு சற்று குற்ற உணர்வு தான்...
"அன்னைக்கு கோபத்துல இப்படி பண்ணிட்டேன் பாட்டி" என்று சொல்லிக் கொண்டே, அவர் அருகே அமர, "அத விடு, என்னை கண்ணாடில பார்க்கும் போது அவ மேல அப்படியே வெறி ஏறுது" என்று வன்மம் நிறைந்த விழிகளால் எங்கோ வெறித்தபடி சொல்ல, கல்யாணியோ, "எங்க அவ?" என்று கேட்டாள்.
"வேலைக்கு போய் இருக்கா" என்று சொன்னார்...
"வேலைக்கா? கல்யாணம் பண்ணிட்டு என்ன வேலை?" என்று கேட்டாள் கல்யாணி...
"அத ஏன் கேக்கிற? இத நான் கேட்க போய் நேற்று என்னாச்சு தெரியுமா?" என்று ஆரம்பித்து நேற்று நடந்ததை சொல்ல, "ஓஹோ, மாமா அவ கிட்ட அவ்ளோ மயங்கி இருக்காரா?" என்று கேட்க, வேதவல்லியோ, "அத பத்தி பேசாதே, கடுப்பா இருக்கு... அவ பத்தி என்ன சொன்னாலும் அவன் நம்ப போறது இல்ல... எப்படி பிரிக்கிறதுன்னு தெரியாம தான் உன்னை கூப்பிட்டேன்... இந்த ஊமைச்சிக்கு வந்த வாழ்வை பார்த்தியா?" என்றார் எரிச்சலாக...
அதே எரிச்சல் தான் கல்யாணிக்கும்...
"பெரிய ப்லான் ஆஹ் போடணும் பாட்டி, எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு அவளை கொல்லணும் போல இருக்கு..." என்றாள்.
"கொன்னுட்டு ஜெயிலுக்கு போக போறியா? நாம வேற ப்லான் போடுவோம்" என்று சொல்லிக் கொண்டே, விதம் விதமாக திட்டங்களை யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்...
இதே சமயம் அன்று ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வந்த தேன்மொழியோ குளித்து விட்டு கீழிறங்கி சென்றாள்...
பசித்தாலும் அங்கே அமர்ந்து இருக்கும் வேதவல்லி மற்றும் கல்யாணி முன்னே அமர்ந்து சாப்பிட தயக்கம்...
முதல் நாள் இரவும் சரி, காலையிலும் சரி வம்சி கிருஷ்ணாவுடன் அமர்ந்து சாப்பிட்டாள்...
இப்போது அமர்ந்து சாப்பிட்டால் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.
அங்கே நின்று இருந்த பாக்கியாவோ, "சாப்பிடாம வர்றீங்க, பசிக்கலையாம்மா?" என்று கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டிய கணம், "பொய் சொல்லாம போய் சாப்பிடு" என்று அதட்டலாக வந்தது ஓரமாக வேலை செய்து கொண்டு இருந்த வசந்தியின் குரல்... சட்டென குரல் வந்த திசையை திரும்பி பார்க்க, அவரோ அவளை அழுத்தமாக பார்த்தவர், "பிரச்சனை ஒரு ஓரமாக இருக்கட்டும்... உன் மேல இன்னும் எனக்கு மனஸ்தாபம் இருக்கு தான்... போக போக அது சரி ஆய்டும்... ஆனா அவங்க இப்படி பேசுவாங்க, இவங்க இப்படி பேசுவாங்கன்னு சாப்பிடாம இருக்காதே... போய் சாப்பிடு" என்றார்.
அவளும் சரியென்ற ரீதியில் தலையாட்டியவள், மீண்டும் வெளியேறி சென்று சாப்பிட அமர்ந்தாள்.
அங்கே ஏற்கனவே யாதவ் கிருஷ்ணா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்...
அவள் எதிர்பார்த்த போலவே, "கொட்டிக்கிறதுன்னா மட்டும், முதல் ஆளா வந்து உட்கார்ந்துக்கிறது" என்று வேதவல்லி சொல்ல, அவளோ அவரை பார்க்காமலே சாப்பாட்டை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட்டாள்.
'யார் என்ன பேசுனாலும் என் உடம்பை நான் தானே கவனிச்சுக்கணும்' என்று நினைத்துக் கொண்டாள் பெண்ணவள்...
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த கல்யாணியின் மனதில் இன்னும் வன்மம் மேலோங்கி வளர ஆரம்பித்து இருந்தது...
இப்படி தான் அவள் நாட்கள் நகர ஆரம்பித்தன...
ஸ்கூலுக்கு செல்வாள், வீட்டுக்கு வந்து வசந்திக்கு ஒத்தாசையாக இருப்பாள்...
இரவில் வம்சி கிருஷ்ணா ஏதும் கேட்டால் பதில் சொல்வாள்...
அவன் பாடலை இப்போதும் தொலைபேசியில் கேட்டுக் கொண்டே நிம்மதியாக உறங்குவாள்...
அவன் அருகே இருந்தாலும் அவனாக ஏதாவது பாடல் முணு முணுத்தால் தான் அவளுக்கு கேட்க சந்தர்ப்பம் அமையும்...
அவன் பாடுவது எல்லாம் தனது ஸ்டூடியோவில் தான்...
இதுவரை அவள் உள்ளே சென்றது இல்லை...
ஆனால் உள்ளே சென்று அதனை கேட்க ஆசை இருந்தது...
இப்படியே கொஞ்ச நாட்களில் வசந்தியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அவளுடன் பேச ஆரம்பித்து விட்டார்...
நெருக்கமாக பேசவில்லை என்றாலும், இயல்பாக பேசினார்...
வேதவல்லியின் வசைவு வார்த்தைகள் அவளுக்கும் பழகி போய் விட்டன...
பாடசாலைக்கு சென்று விட்டு வரும் போது அடிக்கடி தாயை பார்த்து விட்டு வருவாள்...
இதுவே அவளது தினசரி வாடிக்கையாகி போனது...
இப்படியே நாட்கள் நகர, முதலாம் தேதி நெருங்கி இருந்தது...
இதுவரை கடிதம் எழுதுவதை பற்றி அவள் நினைக்கவில்லை...
இப்போது எழுதி விட வேண்டும் போல இருந்தது...
அவன் படிக்கின்றானோ இல்லையோ எழுதி விட தீர்மானித்து இருந்தாள்.
எழுதுவதற்காக தனிமையும் அவளுக்கு கிடைத்து இருக்க, அறைக்குள் பேனா மற்றும் காகிதத்துடன் உட்கார்ந்து விட்டாள்.
இதழ்களின் புன்னகை, கன்னங்களில் சிவப்பு, மனதில் சந்தோஷமுமாக கடிதத்தை எழுத ஆரம்பித்து விட்டாள்.
அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு (என் ஆசை கணவருக்கு),
நான் நலம் அது போல நீங்களும் நலமாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்...
என்னடா கடிதம் எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டு எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? அதுவும் கணவர் என்று அழைத்து இருக்கின்றேன் என்று வியந்து போய் விட்டீர்களா?
ஆம் இப்போது நீங்கள் என் கணவர் தானே...
கணவர் மட்டும் அல்ல, என்னை ரட்சித்த ரட்சகரும் கூட...
இப்படி என் வாழ்க்கையில் மாற்றம் நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்ததே இல்லை...
இத்தனை நாள் என்னை வெளிப்படுத்த தயக்கம்... இப்போது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டே வெளிப்படுத்துகிறேன் நான் தான் உங்கள் தென்றல்...
திருமதி.தேன்மொழி வம்சி கிருஷ்ணா என்று...
இப்போதும் இந்த கடிதத்தை படிப்பீர்களா என்று தெரியாது...
ஆனால் என் சந்தோஷத்துக்காக எழுதிக் கொண்டு இருக்கின்றேன்...
போன மடலில் நான் அழுத அழுகைக்கு ஈடுகட்டும் விதமாக புன்னகையுடனும் வெட்கத்துடனும் இந்த மடலை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்...
உங்களுக்கு காதல் தோல்வி என்று நீங்கள் உரைத்து இருந்தீர்கள்...
அதன் வலி நானும் போன மாதம் உணர்ந்தேன்...
உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்காக என் உயிர்மூச்சு வரை காத்துக் கொண்டு இருப்பேன்...
நான் ரசித்த நிலவிலேயே என்னை கொண்டு உட்கார வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு...
வாழ்க்கையில் என் குரலை கடவுள் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டாலும், உங்களை பொக்கிஷமாக என் கையில் கொடுத்து இருக்கின்றார்...
நான் கனவில் வாழ்ந்த வாழ்க்கையை நிஜத்தில் வாழ்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவே இல்லை...
கடவுளுக்கு எனது நன்றிகள்...
என்னை காப்பாற்றி என்னை உங்கள் சரிபாதியாக்கிய உங்களுக்கு எனது முத்தங்கள்...
நீங்கள் முதன் முதலாக பரிசளித்த குங்கும சிமிழ் எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது...
உடனே உங்களை இறுக அணைத்து விடலாமா? என்று தோன்றியது... கைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன்...
ஆஹ் இன்னும் ஒன்று சொல்ல மறந்தே போனேன்...
இது நாள் வரை உங்கள் இசையில் மயங்கி தான் உங்களை காதலிக்க ஆரம்பித்து இருந்தேன்... ஆனால் இப்போது உங்கள் ஆளுமை, உங்கள் தெளிவான சிந்தனை, பெண்களுக்கு உங்களிடம் இருக்கும் மதிப்பு, என்று எல்லாமே என்னை கவர்ந்து இழுக்கிறது...
உங்களை அருகே வைத்துக் கொண்டு என் காதலை எத்தனை நாட்கள் என்னால் மறைக்க முடியும் என்று தெரியவே இல்லை...
விரைவாக நேரில் வெளிப்பட்டு விடுமோ என்று தோன்றுகின்றது...
ஆனால் உங்களுக்கான இடைவெளி கொடுத்து விலகி நிற்கின்றேன்...
இது நாள் வரை உங்களை சுற்றி வரும் தென்றலாக இருந்த நான், இப்போது உங்கள் சுவாசத்தில் கலந்து உங்களுடன் இணைந்து விட்டேன்...
உங்களுடன் என் வாழ்க்கையை ஆரம்பிக்க காத்துக் கொண்டு இருக்கின்றேன்...
இப்படிக்கு
உங்கள் மனைவி
திருமதி. தேன்மொழி வம்சி கிருஷ்ணா (தென்றல்)
என்று எழுதி முடித்து அதனை மடித்து கைப்பையில் வைத்தவள் இதழ்கள் எல்லாம் புன்னகை...
மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி எழுதி விட்டாள்...
இதற்கு மேல் என்ன வேண்டும்?
அதே சந்தோஷத்துடன் அந்த நாளை கடத்தினாள் பெண்ணவள்...
அன்று வீட்டுக்கு வந்த வம்சி கிருஷ்ணாவின் விழிகளோ அங்கே இருந்த கேலண்டரில் படிந்தது...
முதலாம் திகதியை நெருங்கிக் கொண்டு இருந்தது...
அவன் நினைத்தும் கட்டுப்படுத்த முடியாமல் தென்றலின் நினைவுகள்...
திருமணமாகி விட்டது... இனி அவள் நினைவுகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தான்...
தேன்மொழிக்கு துரோகம் செய்ய கூடாது என்று அவன் உள் மனம் உறுத்திக் கொண்டே இருக்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே ஸ்டூடியோவினுள் நுழைந்து விட்டான்...
தேன்மொழியோ அடுத்த நாள் ஸ்கூலுக்கு செல்லும் வழியில் கடிதத்தையும் அனுப்பி விட்டாள்.
முதலாம் தேதி காலையில் எழுந்தான் வம்சி கிருஷ்ணா...
அன்று அவன் வீட்டில் இருக்கும் நாள் தான்...
தேன்மொழியோ புடவை அணிந்து ஸ்கூலுக்கு செல்ல ஆயத்தமாகி இருந்தாள்.
அவனோ கேலண்டரை தான் முதலில் பார்த்தான்...
அவள் கடிதம் வந்து இருக்கின்றதா? என்று பார்க்க அவன் மனம் துடித்தது...
கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டே குளிக்க சென்று விட்டான்...
வழக்கமாக அவன் முகத்தில் புன்னகை இருக்கும்...
இன்று இறுக்கமாக இருந்தது...
கண்ணாடியூடு அதனை பார்த்த தேன்மொழிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
அவன் விம்பம் போல தான் அவள்... அவன் சிரித்தால் அவளும் சிரிப்பாள்...
அவன் சோகமாக இருந்தால் அவளால் சிரிக்கவே முடியாது...
யோசனையுடன் கீழே இறங்கி ஸ்கூலுக்கு கிளம்பி விட்டாள்.
வம்சி கிருஷ்ணா குளித்து விட்டு கீழே வந்தான்...
முதலாம் தேதி என்றால் வழமையாக அவனே சென்று கடிதங்களை எடுப்பான்...
இன்று கூர்க்கா கொண்டு வந்து கொடுத்து இருந்தான்...
ஒவ்வொரு கடிதங்களாக பார்த்தான்...
அவள் கடிதத்தை மனம் தேடியது...
அவனால் கட்டுப்படுத்த முடியவே இல்லை...
இருக்காது என்று நினைத்துக் கொண்டே தேடினான்...
ஆனால் அவன் கையில் அவள் கடிதம் வந்து சேர்ந்தது...
அதிர்ச்சி...
இனி எழுத மாட்டேன் என்று சொல்லி விட்டு எழுதி இருக்கிறாள்...
என்ன எழுதி இருக்கின்றாள் என்று அவன் மனம் தடுமாறியது...
வாசிப்பதா வேண்டாமா? என்று தடுமாற்றம்...
எடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.
கடிதத்தை மேசையில் வைத்துக் கொண்டே நீண்ட நேரம் யோசித்தான்...
வாசிப்பதற்காக கடித உறையையும் பிரித்து கடிதத்தையும் கையில் எடுத்து விட்டான்...
அதனை பிரிக்க முற்பட்ட நேரம், அவன் கண்ணில் பட்டது என்னவோ மேசையில் இருந்த குங்கும சிமிழ் தான்...
தேன்மொழியின் நினைவு அவனுக்கு வந்து போனது...
இந்த கடிதத்தை படித்து மனதை அலைபாய விட்டால் அவளுக்கு துரோகம் செய்த போல ஆகி விடுமோ என்கின்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது...
அவன் அவசரப்பட்டு விட்டான் தான்...
ஆனால் இனி எதனையும் மாற்ற முடியாது... தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு அவன் துரோகம் செய்ய தயார் இல்லை...
அந்த கடிதத்தை படித்தால் அவன் மனம் அலைபாயும் என்று அவனுக்கு உறுதியாக தெரியும்...
அடுத்த கணமே கடிதத்தை மடித்து கடித உறையில் போட்டவன், அதனை எடுத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றான்...
அதனை அங்கே இருக்கும் கழிவு கலத்தினுள் கிழித்து போட்டவன் அதனை நீரினால் ஃப்லாஷ் செய்தான்...
அது நீரினுள் உள்ளே இழுபட்டு செல்வதை பார்த்தவனுக்கு மனதில் அழுத்தமான வலி...
மறக்க நினைக்கின்றான்... முடியவில்லை...
இப்போது மறந்தாக வேண்டிய கட்டாயம்...
அவளது ஏனைய கடிதங்களும் தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது...
அவள் நினைவை அழிக்க முதல், அவளது நினைவு பொக்கிஷங்களை அழிக்க நினைத்தான்...
நினைத்ததை செய்ய துணிந்து விட்டான்...
தனது அலுமாரியை திறந்து அனைத்து கடிதங்களையும் எடுத்து வந்து குளியலறையின் கழிவு கலத்தினுள் கிழித்து போட்டவன் அனைத்தையும் நீரினால் ஃப்லாஷ் செய்தான்...
அனைத்தையும் அழித்து விட்டான்...
அவள் நினைவை அழிக்க முடியவில்லை...
தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது...
நேரில் பார்த்தது இல்லை, அணைத்தது இல்லை, முத்தமிட்டது இல்லை...
ஏன் அவள் உண்மையான பெயர் கூட தெரியாது...
யாரோ ஒரு ரசிகை என்று அவனால் கடந்து விட முடியவில்லை...
வலித்தன, அவள் நினைவுகள் வலித்தன, அவள் எழுத்துக்கள் வலித்தன...
தன்னிடம் அவள் வந்து சேர்ந்து விட்டாள் என்று அறியாமலே கவலை பட்டுக் கொண்டு இருந்தான்...
அவனுக்கு யார் இப்போது சொல்லி புரிய வைப்பார்கள்?
அதற்கு மேல் அவனால் அங்கே இருக்க முடியவில்லை...
தனது வலிக்கு மருந்து போட சென்று விட்டான்...
ஆம் அவன் இசை தானே அவன் வலிக்கு மருந்து...
ஸ்டூடியோவினுள் நுழைந்து விட்டான்...
பியானோவின் முன்னே அமர்ந்தவன், அதனை வாசித்துக் கொண்டே பாட ஆரம்பித்து விட்டான்...
தனது வலி தீர பாடினான்...
காலையில் இருந்து சாப்பிடவும் இல்லை...
நேரமும் பதினொரு மணியை நெருங்கி விட்டது...
'இவ்வளவு நேரம் எங்க அவன காணோம்... ஸ்டூடியோக்கு போய் கூப்பிட்டாலும் அவனுக்கு பிடிக்காது, இந்த கௌதமையும் காணோம்... எங்க போனானோ தெரியல... அவன் கிட்டயாவது வம்சி கொஞ்சம் பேசுவான்' என்று நினைத்துக் கொண்டே, வம்சி கிருஷ்ணாவை வேறு வழி இல்லாமல் தேடி சென்றார்...
அவன் பாடிக் கொண்டு இருந்தது அவர் காதில் விழுந்தது...
நிறுத்தாமல் பாடினான்...
பொறுத்து பொறுத்து பார்த்தார்...
அதற்கு மேல் பொறுமை இழந்து போக, கதவை தட்டினார்...
சட்டென அவன் பாடல் நின்றது...
"லீவ் மீ அலோன்" என்றான் கர்ஜிக்கும் குரலில்...