ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 10

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 10

மதுபாலாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தவளுக்கு துரோகம் என்றால் என்ன அதன் வலி எப்படி இருக்கும்? அதுவும் நம்மை சேர்ந்த உறவுகளுக்கு நாம் துரோகம் பண்ணும் போது நம் மீது நம்பிக்கை வைத்து இருந்தவர்களுக்கு எப்படியான உணர்வு இருக்கும் என்ற அனுபவம் நெற்றிப் பொட்டில் அறைந்தது. ஆனாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுவாளா என்ன? ஆக்ரோஷமாக எழுந்தவள் "என்னையே ஏமாத்திட்டே தானே.,. உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு....என் பவர் தெரியாம என் மேல கை வச்சுட்டே ஆதித்.. ரொம்ப தப்பு பண்ணிட்ட.. மகன்னு சொன்னா உருகி குழைய நான் ஒன்னும் மாதவி இல்ல.. மதுபாலா " என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் வெளியேறி செல்ல அவனோ அவள் முதுகைப் பார்த்து கேலியாக புன்னகைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

அவளோ உஷ்ண பெருமூச்சுகளை விட்டவாறு ஜீப்பில் ஏறியவள் ஜீப்பை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு புறப்பட, அவள் செல்வதை வாசலில் நின்று பார்த்த ஆதித் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து லைட்டரால் அதனை பற்ற வைத்த கணமே ஓடிக் கொண்டு இருந்த அவளது ஜீப் சற்று தொலைவில் பாரிய வெடிப்புடன் பற்றி எரிந்தது. யாருக்கும் சந்தேகம் வராத போல வயரிங்கை உள்ளே வரும் போதே மாற்றி அமைத்து விட்டு வந்தவனோ புகையை ஊதிக் கொண்டே "நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என்று சொன்னவன் அங்கிருந்த அவனது காரில் ஏறி புறப்பட்டான்.

போகும் வழியில் அவன் மனமோ நடந்த விடயங்களை அசை போட ஆரம்பித்து இருந்தது. மதுபாலா தாய் என்று அறியாமல் தான் அவன் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்ததே... அவன் மேயர் எலெக்ஷனில் நிற்க ஆரம்பித்ததுமே பத்திரிகைகளில் வந்த செய்தி அவன் தூக்கத்தை தொலைத்தது எனலாம்.. ஆராயமால் தாய் மகன் என்ற வதந்தி கூட வர வாய்ப்பில்லை என்று அறிந்தவன் நேரே சென்றது தருணின் தந்தையிடமே.. அவரும் தனக்கு தெரிந்த நடந்த விடயங்களை கூறிய போதும் அவனுக்கோ கரிகாலனுக்கும் மதுபாலாவுக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி போனான். அடுத்து அவன் அழைத்தது கரிகாலனுக்கு தான். மகன் அழைப்பான் என்று அறிந்தவனும் அவன் எதிர்பார்ப்பை அறிந்து எதையும் மறைக்காமல் நடந்ததை சொல்ல, எந்த மகனும் பெற்ற தாயை பற்றி கேட்க கூடாத செய்தியை கேட்டு அவன் அடைந்த வலி விபரிக்க முடியாது. அவள் மேல் பாசம் என்ற விடயம் எல்லாம் இல்லை. அவள் ரத்தம் தன் மீது ஓடுகின்றதே என்ற அருவருப்பு அது.. ஆனாலும் அந்த வேதனை அவன் குரலில் கொஞ்சமும் பிரதிபலிக்கவில்லை.

உடனே கரிகாலன் " ஆதித், கஷ்டமா இருக்கா?" என்று மகன் மௌனம் அறிந்து தொலைபேசி ஊடாக கேட்க, "ஆமாப்பா, ரொம்ப கஷ்டமா இருக்கு,, நான் ஏன் அம்மா வயித்துல பிறக்காம இந்த ராட்சசி வயித்துல பிறந்தேன்னு நினச்சு கஷ்டமா இருக்கு" என்று சொன்னதும் கரிகாலன் இதழ்கள் மகனை நினைத்து தாராளமாக விரிந்து கொள்ள, "இந்த அரசியல் எல்லாமே வேணாம். இங்க வந்திடுப்பா" என்று சொன்னார். அவனோ " இல்லப்பா, நீங்க விட்ட தப்பை நான் விடமாட்டேன்.. தப்பு செய்த எல்லாருக்கும் தண்டனை கிடைச்சாகணும்... தாய் குலத்துக்கே இந்த பிறவி கேவலமப்பா" என்றவன் தனது காய் நகர்த்தலை தருணின் தந்தையின் உதவியுடன் ஆரம்பித்து இருந்தான்.

வெளியில் எதிரிகளாக காட்டிக் கொண்டாலும் அவர்கள் உதவியால் தான் மதுபாலாவின் கோட்டைக்குள் அவன் நுழைந்தது மட்டும் இல்லாமல் கூட இருந்தே மிதுனை மொத்தமாக மேயர் எலெக்ஷனில் வீழ்த்தி நண்பனை அந்த இடத்தில் அமர்த்தி இருந்தான். அவன் கத்தி எடுத்து போர் புரியவில்லை. புத்தி கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தையே அழித்து இருந்தான்..அவன் போட்ட திட்டங்களில் அவன் எதிர்பார்க்காத வரவு தான் நதீகாவும் அவன் மீதான அவள் காதலும்... ஆரம்பத்தில் அவளை அவன் தவிர்த்தாலும் ஒரு கட்டத்தில் தன்னை இப்படி வெறித்தனமாக காதலிக்கும் பெண் மீது அவனுக்கு காதல் உருவாக தான் செய்தது. அவளை பிடிக்காத போல அவன் காட்டிக் கொண்டாலும் அவளை அவள் காதலை அவன் ரகசியமாக ரசித்தது என்னவோ உண்மை தான்.

ஒரு கட்டத்தில் தன்னிலை இழந்து அவளை முத்தமிட்ட போது இதற்கு மேல் அவளை பிரிந்து இருக்க முடியாது என்று நினைத்தவன் அவளை திருமணமும் செய்து கொண்டான். அதற்கு மதுபாலாவை அவமான படுத்த வேண்டும் என்ற மறை முக காரணமும் இருந்தது.

அதே சமயம் மாதவிக்கு, மதுபாலாவுடன் தான் இருக்கும் உண்மை தெரியாமல் பார்த்துக் கொண்டவனுக்கு அவளுக்கு தெரியாமல் தான் திருமணம் செய்த குற்ற உணர்ச்சி இருக்க தான் செய்தது. ஆனாலும் மாதவியுடன் பேசி சமாளித்த பின்னரே தனது உரிமையை நதீகா மீது நிலை நாட்டினான்.. திருமணம் முடிந்தும் அவர்கள் இணையாமல் இருக்க ஒரே காரணம் மாதவிக்கு தெரியாமல் அவன் திருமணம் செய்த அந்த குற்ற உணர்ச்சி தான். அந்த சந்தர்ப்பங்களில் நிலைமை சுமூகமாகட்டும் என்று நதீகாவிடம் சொல்லி சமாளித்து இருந்தான்.

அனைத்தையும் யோசித்தபடி நதீகாவை அடைத்து வைத்து இருந்த வீட்டை திறந்து கொண்டு நுழைய, அவளோ கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள்.

உள்ளே நுழைந்தவனோ "நதீகா" என்று அழைக்க, அவன் முன்னே போனை காட்டினாள் அவள். அதில் " மதுபாலாவுக்கும் வளர்ப்பு மகன் மிதுனுக்கும் இருந்த மனஸ்தாபம் காரணமாக, மிதுன் விஷம் அருந்தி தற்கொலை. மகனின் பிரேதத்தை பார்த்து விட்டு வரும் வழியில் ஜீப்பில் உண்டான கோளாறு காரணமாக மினிஸ்டர் மதுபாலா ஜீப் வெடித்து சம்பவ இடத்திலேயே மரணம்" என்று இருந்தது. ஆம் தருண் தனது பதவியின் அதிகாரத்தை பயன் படுத்தி அழகாக அந்த சம்பவத்தை கோர்த்து சாட்சி சொல்ல ஆட்களை கூட ஆயத்தப்படுத்தி இருந்தான். அவள் காட்டிய செய்தியை கண்ட ஆதித், " ஆமா நதி" என்று கரகரப்பான குரலில் சோகமாக சொல்ல ஆரம்பிக்க "நடிக்காதடா" என்று சத்தமாக கத்தினாள் அவள் . அவனோ அவளையே அழுத்தமாக பார்த்து இருக்க அவன் ஷேர்ட் காலரை எட்டி பிடித்தவள் கண்ணீருடன் "இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு தெரியும் .. ரெண்டு உயிர் போய் இருக்கு... கொலை பண்ணுற அளவுக்கு வந்துட்டியா ஆதித்" என்று கேட்க அவனோ "நதி நான் சொல்றத கொஞ்சம் கேளு ப்ளீஸ் " என்றான். அவளோ "மாட்டேன்.. உடனே நீ நடிக்க ஆரம்பிச்சுடுவ ..இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி உன் கூட இருந்த போல நானும் வெட்கமே இல்லாம உன் நடிப்பை நம்பி பின்னால வந்திடுவேன் ..ப்ளீஸ் பேசாதே" என்று கை நீட்டி தடுக்க, அவனோ " பேச விட்டா தானே நதி நடந்தது உனக்கு புரியும்?" என்று சற்றே கோபமாக கேட்டான்.

அவளும் "பேச போறியா? சரி பேசலாம்" என்று சொன்னபடி அவன் கையை எடுத்து தனது தலையில் வைத்தவள் "ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் என் மேல சத்தியம் பண்ணி பதில் சொல்லு" என்று சொல்ல அவனும் அமைதியாக அவளை பார்த்து இருந்தவன் "ம்ம் கேளு" என்றான்.

அடுத்த கணமே "இந்த சம்பவத்துக்கு யார் காரணம்" என்று கேட்க அவன் தான் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி போனான். பெருமூச்சுடன் அவள் கண்களை பார்த்து "நான் தான் காரணம் ஆனா " என்று ஆரம்பிக்க அவன் மார்பில் கை வைத்து கோபமாக தள்ளி விட்டவள் "இனாப் " என்று சீறினாள். அவனும் காலை ஊன்றி தன்னை சமநிலைப்படுத்தியவன் "என்னை பேச விடுடி " என்று சொல்ல "இதுக்கு மேல என்ன பேசணும்..?" என்று சீறியவள் " கொஞ்ச நேரம் உன் கூட இருந்ததை நினச்சா அருவருப்பா இருக்கு" என்று சொல்ல அவனோ அவளை அதிர்ந்து பார்த்தான். இப்படியான வார்த்தைகளை அவன் அவளிடம் எதிர்பார்க்கவே இல்லை. "நதி திஸ் இஸ் டூ மச் , வார்த்தையை விடாதே" என்று அழுத்தமாக விரல் நீட்டி எச்சரிக்க, "நீ ஒரு பொறுக்கி டா..ஒரு கொலைகாரன் கூட இருந்தது சந்தோஷமா இருக்குன்னு சொல்ல சொல்றியா? நிஜமா அருவருப்பா தான் இருக்கு" என்று கண்ணீருடன் கத்த அவளை கை நீட்டி தடுத்தவன் "கிளம்புடி" என்றான். அவளும் "இதுக்கு மேல நான் ஏன் இங்க இருக்க போறேன்...? நீ எல்லாம் மனிஷனே இல்ல, உன்னை கல்யாணம் பண்ணின பாவத்துக்கு நான் உன்னை காட்டி கொடுக்காம போறேன்.. ஐ ஹேட் யூ" என்று சீற அவனுக்கோ நெஞ்சில் ஒரு வலி உருவானது.

தன்னை துரத்தி துரத்தி காதலித்த பெண் வாயால் வெறுப்பை உமிழும் வார்த்தைகள்.. அவனால் தாங்க முடியுமா என்ன? சொல்ல வருவதை கூட அவள் கேட்க விரும்பவில்லை என்னும் போது அவனாலும் என்ன செய்திட முடியும்.. அவள் வார்த்தைகள் தன்னை மேலும் மேலும் வதைக்க கோபத்தில் அவள் மீது கை நீட்டி விடுவானோ என்று பயந்தவன் "பேசி முடிச்சாச்சா கிளம்பு" என்றான் எங்கோ பார்த்தபடி..

அவளும் அவனை முறைத்தபடி வெளியேற திரும்பி அவளது முதுகை வெறித்து பார்த்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கண் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான். அப்போது அவன் போன் அலற, அதனை எடுத்து காதில் வைத்தவன் "தருண், ப்ரீயா தாண்டா இருக்கேன்" என்று சொல்ல அவனைத் தேடி அடுத்த கணமே வந்து இறங்கினான் அவன் நண்பன்.

வந்தவனோ ஆதித்தை இறுக அணைத்துக் கொண்டவன் "எனக்கு வார்த்தையே வரலடா" என்று சொல்ல மெலிதாக சிரித்தவனும் "நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்புறேன்டா" என்றான். தருணோ அதிர்ச்சியுடன் "ஏண்டா? கொஞ்ச நாள் தங்கிட்டு போ, இங்கேயே செட்டில் ஆகிடு.. அப்பா கண்டிப்பா உனக்கு எம் எல் ஏ சீட் தருவார்டா " என்று சொல்ல விரக்தியாக சிரித்தவன் "அம்மா மடியில படுக்கணும் போல இருக்கு,, மனசு ரொம்ப பாரமா இருக்கு... இங்க இருந்தா மதுபாலா மகன் என்ற அடையாளம் எனக்கு எப்போவுமே இருக்கும்.. ஆனா அந்த அடையாளத்தை நான் வெறுக்கிறேன் தருண்..உனக்கு புரியும்னு நினைக்கிறன்.. நான் எப்போவுமே மாதவி பையன் தான்" என்று சொல்ல அவன் தழுதழுத்த குரலை கேட்டு நண்பனின் மன வலி அறிந்து அவனை இறுக அணைத்துக் கொண்டான் தருண். சிறிது நேரம் நண்பன் தோளில் தனது வலியை இறக்கி வைத்த தருண் "இப்போவே அங்கிள் ஐ பார்த்துட்டு கிளம்பிடுறேன்" என்று சொல்ல தருணோ "அப்போ நதீகா " என்றாள். அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன் "புரிஞ்சுக்கும் போது அவளா வரட்டும்" என்று சொல்லும் குரல் அவன் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் அப்பட்டமாக காட்டியது. அவனும் அன்றே தருணின் தந்தையை சந்தித்து விட்டு பிளைட் ஏறி இருக்க, வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்து அழுது கரைந்து கொண்டு இருந்தாள் அவள். இருவருக்கும் பிரிவு உயிரை உருக்கும் வலியை அளிக்க, கண் மூடி இருந்தவர்களுக்கு அன்று அவர்கள் நடத்திய காதல் நாடகம், தமது இணை தமக்கு அள்ளி வழங்கிய இதழ் முத்தங்கள் என அந்த நினைவுகள் இம்சித்தன..

வீட்டுக்கு அதே மன நிலையுடன் வந்தவனை ஓடி வந்து மாதவி அணைத்துக் கொள்ள, அவனோ அந்த அணைப்பிலேயே தனது வலி குறைவதை உணர்ந்தவன், அழுது கொண்டு இருந்த மாதவியின் தோளில் கை போட்டு அழைத்து வந்து சோபாவில் அமர்ந்தவன் அடுத்த கணமே மாதவியின் மடியில் தலை வைத்து படுக்க, அவன் ஏக்கத்தை உணர்ந்த அவரும் கேட்க பல கேள்விகள் இருந்தும் எதையுமே கேட்காமல் அவன் தலையை வருடினார்.. அங்கு வார்த்தைகள் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் அந்த ஸ்பரிசம் கண்ணீர் எல்லாம் அவர்கள் தாய் மகன் பிணைப்பை எடுத்து உரைத்தது.. இதுவரை மாதவி மேல் இருந்த பாசம் , அவர் கதையை கேட்ட பின் பன் மடங்காக மாறி இருக்க, அவனும் "உங்கள ரொம்ப மிஸ் பண்ணுனேன் அம்மா" என்றபடி கண் மூடி அப்படியே தூங்கிப் போனான்.
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
( Part - 2 அத்தியாயம் -10)


அய்யோ... அய்யோ... ! இதான் இந்த காலத்து லவ் போல. என்னை கேட்டா சட்டுன்னு வந்து, சட்டுன்னு மறையுறது எல்லாமே இன்பாக்சுவேஷன் தான்... என்னாத்தைச் சொல்ல..? நதீகாவுக்கும் கேட்குற அளவுக்கு பொறுமை இல்லை, ஆதித்துக்கும் விளக்கம் கொடுக்கிற அளவுக்கு நிதானம் இல்லை ... அம்புட்டுத்தான் சொல்வேன்.
ஒண்ணு எல்லாத்தையும் நதீகா கிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கணும், இல்லையா
செஞ்சிட்டு வந்தாவது சொல்லியிருக்கணும். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு ரெண்டும் இருந்தா ஒண்ணும் வேலைக்கு ஆகாது.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
நதிகா ஒரு அவசர புத்திக்காரி சொல்ல வர்றது கேக்கமா முடிவு எடுக்குறது தப்பு
 
Top