ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 1

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 1

"ரத்னம் என்டர்ப்ரைசஸ்" என்னும் வானுயர்ந்த அலுவலக கட்டிடத்தில் இருக்கும் மீட்டிங் அறையில், அவன் குரல் மட்டும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டு இருந்தது...

அவன் தான் தேவ் ஆதித்யா. ரத்னம் என்டர்ப்ரைஸஸின் ஒரே வாரிசு.

கம்பெனியை எடுத்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருப்பவன்.

கடுமையும் மென்மையும் சேர்ந்த கலவையான குணம் அவனுக்கு...

ஆறடி உயரத்தில் திடகாத்திரமான உருவத்தில் இருப்பவனோ, மீட்டிங் நடந்துக் கொண்டு இருக்கும் மேசையில் இரு கைகளையும் ஊன்றியபடி உடலை முன்னோக்கி வளைத்தவன், அங்கே அமர்ந்து இருந்த தனது மேனேஜரான ஜெகனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "ஹியர் லுக் ஜெகன், பேர்ஃபோர்மன்ஸ் கம்மியா இருக்கிறவங்க கிட்ட சரியான ரீசன் இருக்கணும்... நான் ஒன்னும் ஹிட்லர் இல்லை... அதே சமயம், நான் புத்தனும் இல்லை... என்னால மன்னிச்சுட்டு இருக்க முடியாது... புரியுதா?" என்று கேட்க, அவனும் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "பூர் பெர்ஃபோர்மன்ஸ் இருக்கிறவங்கள என்ன பண்ணலாம் சார்?" என்று அவன் கேட்க, "வார்னிங் லெட்டர் இஸ்ஸு பண்ணனும், அப்போ தான் கொஞ்சம் சின்சியர் ஆஹ் வேலை பார்ப்பாங்க" என்று சொல்லிக் கொண்டே இருந்த சமயம், அவன் அலைப்பேசி அலறியது...

மீட்டிங் நேரத்தில் அவன் அலைப்பேசியில் பேச மாட்டான்...

எடுத்துப் பார்த்தான், அழைத்து இருந்தது என்னவோ அவன் தந்தை ரத்னம் தான்...

வேறு யாரும் என்றால் அணைத்து இருப்பான்...

ரத்னம் அலுவலக நேரத்தில் அழைப்பது இல்லை...

இன்று அழைத்தது வினோதமாக இருந்தது...

"எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே, அலைப்பேசியை எடுத்துக் கொண்டே வெளியே வந்தான்.

அலைப்பேசியை காதில் வைத்தவனோ, "ஹெலோ சொல்லுங்க அப்பா" என்று சொல்ல, அவரோ, "மூர்த்தி இறந்துட்டார்ப்பா" என்றார்.

அவனிடம் ஒரு பெருமூச்சுடன் கூடிய மௌனம்.

"ம்ம்" என்றான்...

"போகணும்ல" என்றார்.

'நான் வரல' என்று சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, "ம்ம், போகலாம்" என்று சொல்ல, "நான் வெய்ட் பண்ணுறேன், வந்திடு" என்று சொல்லி விட்டு வைக்கப் போக, "அத்தை" என்றான் இழுவையாக...

"அவ தான் கால் பண்ணி சொன்னா, அழுதுட்டு இருக்கா, அவளும், நித்யாவும், நிரூபனும் கிளம்பிப் போக போறாங்க" என்று சொல்ல, "ம்ம், நம்ம அப்போ சீக்கிரம் போகலாம், அங்கே போய் கண்டிப்பா அத்தை ஏதும் பிரச்சனை பண்ணுவாங்க" என்று சொன்னவன் அலைப்பேசியை வைத்து விட்டு, உள்ளே வந்தான்.

அங்கே இருந்த தனது ஊழியர்களிடம், "சாரி கைஸ், என்னோட மாமா இறந்துட்டார், சோ நான் இப்போ போயாகணும், மீட்டிங்கை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்" என்று சொன்னவன், விறு விறுவென வெளியேறி காரை எடுத்துக் கொண்டே, வீட்டுக்குச் சென்றான்...

மனம் எல்லாம் மூர்த்தியின் எண்ணம்...

சின்ன வயதில் அவனுக்கு மூர்த்தியை மிகவும் பிடிக்கும்...

மூர்த்தி வேறு யாருமல்ல, அவனது தந்தை ரத்னத்தின் தங்கையான ஜெயாவின் கணவர் தான்...

அவர்களுக்கு இரு குழந்தைகள், மூத்தவன் நிரூபன், அடுத்தவள் நித்யா.

தேவ்வை விட இருவரும் வயதில் குறைந்தவர்கள்...

மூவரும் ஒன்றாக தான் விளையாடுவார்கள்.

தேவ்விற்கு ஆறு வயது இருக்கும் போதே, அவனது தாய் லக்ஷ்மி உடல் நிலை சரி இன்றி இறந்து விட்டார்...

ரத்னத்துக்கோ அலுவலக வேலை அதிகம்...

அதனால் அவனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஜெயாவிடம் வந்தது.

அதிலிருந்தே அவனுக்கு ஜெயா மேல் கொள்ளைப் பாசம்...

கிட்டத்தட்ட ஜெயா அவனுக்கு தாய் போல தான்...

மூர்த்தியும் தாய் இல்லாத பிள்ளை என்று அவன் மீது அதீத அக்கறையுடன் இருப்பார்... மூர்த்தி சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்திக் கொண்டு இருந்தவர், எப்போதும் அவனுக்கு ஏதாவது கடையில் இருந்து கொண்டு வந்து கொடுப்பார்.

ரத்னத்தின் வீடும், ஜெயாவின் வீடும் அடுத்த அடுத்த தெருக்களில் தான்... ஜெயா மூர்த்தியை காதலிப்பதாக சொன்னதும், அவருக்கே ஜெயாவை கல்யாணம் செய்துக் கொடுத்த ரத்னம், அவருக்கு சூப்பர் மார்க்கெட்டும் வைத்து கொடுத்து இருந்தார்.

தேவ்வுக்கு பத்து வயது வரும் போது தான் மொத்த குடும்பமும் சிதைந்து போன சம்பவம் அரங்கேறியது.

ஆம் ஒரு நாள் தனது வீட்டுக்கு வந்த மூர்த்தியின் கையை பற்றிக் கொண்டே வந்தவள் தான் பத்மா... அவளுக்கு அப்போது ஆறு வயது இருக்கும்.

உள்ளே வந்தவரிடம், "யாருங்க இந்த பொண்ணு?" என்று ஜெயா கேட்க, அவரோ தலையை குனிந்துக் கொண்டே, "ஜெயா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றார்.

அன்று தேவ்வும் அங்கே தான் நின்று இருந்தான்.

அவரும், "என்னங்க?" என்று கேட்க, குரலை செருமியவரோ, "இது என்னோட பொண்ணு பத்மா" என்று சொல்ல, ஜெயாவுக்கு இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை...

"என்ன சொல்றீங்க?" என்று கேட்க, அவரோ தயக்கத்துடன், "என்னை மன்னிச்சிடும்மா, நான் உனக்கு உண்மையா இருக்க முடியாம போயிடுச்சு... இவ அம்மா ராதிகா, சூப்பர் மார்க்கெட்ல வேலை பார்த்துட்டு இருந்தா, அப்போ" என்று ஆரம்பிக்க, ஒற்றைக் கையை நீட்டிய ஜெயாவோ, "தயவு செய்து வெளிய போங்க" என்றார்.

அவர் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது...

"ஜெயா, சொல்றத கேளு, ராதிகா இறந்துட்டா, என் பொண்ணு தனிச்சுட்டா" என்று அவர் கையை மூர்த்தி பிடிக்க, "என்னை தொடாதீங்க" என்று சொல்லி, அவர் கையை உதறி விட்டவரோ, "இதுக்கு மேல இந்த வீட்ல உங்களுக்கு இடம் இல்லை... இது என்னோட அண்ணா கொடுத்த வீடு, சூப்பர் மார்க்கெட் என் அண்ணா உங்களுக்கு வச்சு தந்தது... இங்க இருந்து வெளிய போங்க" என்று ஆக்ரோஷமாக கத்தினார்...

அவருக்கோ இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை பொய்த்து போன உணர்வு...

"ஜெயா" என்று அவர் கெஞ்சுதலாக அழைக்க, "வெளியே போங்க" என்று சொல்லிக் கொண்டே, அவரை பிடித்து தள்ளி விட, அவரோ தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, "நம்ம குழந்தைங்க" என்று ஆரம்பித்தார்...

"எனக்கு என்னோட அண்ணா இருக்கார்... உங்கள நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு... இந்த சனியனை கூட்டிட்டு வெளிய போங்க" என்று சீறினார்...

அவர் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் எட்டிப் பார்க்க, மூர்த்திக்கு அங்கே நிற்க முடியவில்லை...

"என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாரே" என்று சொல்லிக் கொண்டே, நெஞ்சில் அடித்துக் கொண்டே கதறியபடி கீழே ஜெயா அமர்ந்து விட, நித்யாவும் நிரூபனும் என்ன செய்வது என்று தெரியாமல் தாய் அழுவதை பார்த்து அழுதுக் கொண்டே நின்று இருக்க, தேவ் தான் ஜெயா அருகே ஓடிச் சென்று, "அத்தை அழாதீங்க" என்று சொன்னான்...

"இவரை வெளிய போக சொல்லுடா" என்று அவர் அழுதுக் கொண்டே சொல்ல, இப்போது அவனோ மூர்த்தியை பார்த்தவன், "மாமா வெளிய போங்க" என்றான் அழுத்தமாக...

அவன் விழிகளில் அப்படி ஒரு அனல்...

தனது அத்தையை அழ வைத்து விட்டார் என்கின்ற கோபம் அது.

"தேவ்" என்று மூர்த்தி அழைக்க, "மாமா வெளிய போங்க" என்று சொல்லிக் கொண்டே ஆத்திரத்துடன் எழுந்தவனோ, அவர் கையை பற்றிக் கொண்டே நின்று இருந்த பத்மாவைப் பார்த்து, "ஏய் வெளிய போ" என்றான்.

அவன் சொன்ன தோரணையையும் அவன் நீல நிற விழிகளை பார்த்ததும் அவளுக்கு ஒரு வித உதறல் எடுத்தது.

பெண்ணவள் சற்று மிரண்டு விட்டாள்...

அப்படியே மூர்த்தியைப் பார்க்க, அவருக்கும் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் போக, பத்மாவை அழைத்துக் கொண்டே கிளம்பி விட்டார்...

அன்று மாலையே, ரத்னம் வந்து பிரச்சனையை கேட்டு அதிர்ந்தவர், மூர்த்தியை தேடிச் சென்று சண்டையும் போட்டார்...

இதன் பிறகு என்ன பண்ணிவிட முடியும்?

மூர்த்தியிடம் இருந்து சூப்பர் மார்க்கெட்டும் பறிமுதல் செய்யப்பட, அவரோ, ஒரு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, சாதாரண வேலை செய்து பத்மாவை படிக்க வைத்தார்...

ராதிகா யாரும் இல்லாத அனாதைப் பெண்...

பரிதாபத்தில் வந்த அக்கறை, சபலமாக மாறி, இறுதியில் முறையற்ற உறவுக்கும் வழி வகுத்து இருக்க, அதன் விளைவாக பிறந்தவள் தான் பத்மா...

யாருக்கும் தெரியாமல் ராதிகாவை ரகசியமான இடத்தில் வைத்து சந்தித்து வந்த மூர்த்திக்கு, ராதிகாவின் திடீர் மரணம் பெரிய அடி தான்...

இப்போது அவர் கையில் பத்மா...

தனது குழந்தையை அவரால் தனியே விட முடியாத நிலை...

இறுதியில் இப்படி வந்து அவர் சிக்கி இருந்தார்...

அதன் பிறகு தினமும் அழும் ஜெயாவை பார்க்கும் தேவ்விற்கு மூர்த்தி மேல் கொலை வெறி தான்...

அவர் வீட்டை தாண்டி தான் அவன் ஸ்கூலுக்குச் செல்வான்...

அவரை அங்கே பார்க்கும் போதெல்லாம், ஒரு முறைப்புடன் தான் கடந்துச் செல்வான்...

பத்மாவுக்கு அவனை பார்த்தாலே பயம்...

தந்தையின் பின்னே ஒளிந்துக் கொள்வாள்...

பத்மாவும் வளர்ந்து கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்து இருந்தாள்.

அந்த வழியை கடந்து அடிக்கடி செல்லும் தேவ்விற்கு அவள் முகம் பரீட்சையம் ஆனது...

அவளுக்கும் தான்...

ஆனால் பேசிக் கொள்வது இல்லை...

அவன் முறைப்பான், அவள் பயந்து போய் ஒளிந்துக் கொள்வாள் அவ்வளவு தான்...

இதனிடையே மூர்த்தியும் உடல் நிலை சரி இல்லாமல் படுத்த படுக்கை ஆகி விட, அவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பத்மாவிடம் வந்தது...

வேலைக்குச் சென்று உழைக்க ஆரம்பித்து இருந்தாள். தேவ்வும் கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு பத்மாவை சந்தித்தது குறைவு...

தேவ் அதன் பிறகு பத்மாவுடன் பேசியது, ஆத்மனுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடச் சென்ற அன்று தான்...

அதுவும் தரம் குறைந்த வார்த்தைகளை தான் பேசி இருந்தான்.

அன்றில் இருந்தே பத்மாவுக்கு தேவ் மீது இருந்த பயத்துடன் வெறுப்பும் சேர்ந்துக் கொண்டது...

அவள் தாய் செய்த தவறுக்கு அவள் எல்லா இடமும் அவமானப்பட்டுக் கொண்டே இருக்கின்றாள்...

இன்று வரை அவள் அவமானத்தை சுமந்துக் கொண்டு தான் இருக்கின்றாள்.

தந்தை மேல் அதிருப்தி இருந்தாலும், அதனை எப்போதும் அவள் அவரிடம் காட்டியது இல்லை...

அவர் ஜெயாவுக்கு நல்ல கணவனாக இல்லாமல் இருக்கலாம், நித்யா மற்றும் நிரூபனுக்கு நல்ல தந்தையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவளுக்கு நல்ல அப்பா தான் எப்போதும்.

இன்று அவளுக்கென இருந்த ஒரே சொந்தத்தையும் இழந்தவள், மூர்த்தியின் பிரேதத்தின் தலைமாட்டில் அழுதழுது ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தாள்.

இதே சமயம், தேவ்வும் வீட்டுக்கு வந்து ரத்னத்தை ஏற்றிக் கொண்டே, மூர்த்தியின் வீட்டை நோக்கி காரை ஓட்டிச் சென்றவனோ, "அத்தை வேற எதுவும் சொல்லலையா?" என்று கேட்க, "கொன்னுட்டானு சொல்லி, அந்த பொண்ணு, அவர் பேர்" என்று அவர் இழுக்க, "பத்மா" என்றான் தேவ்...

"ஆஹ் அவளுக்கு தான் திட்டிட்டே இருந்தா" என்று சொன்னதுமே, அவனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே...

இதே சமயம் மூர்த்தியின் வீட்டில் அழுதுக் கொண்டே நுழைந்து இருந்தார் ஜெயா...

வந்ததும் வராததுமாக, "இப்போ உனக்கு நிம்மதியா? இப்படி கொன்னுட்டியே" என்று பத்மாவுக்கு திட்டிக் கொண்டே மூர்த்தி அருகே அமர்ந்து அழ ஆரம்பித்து விட, அவளுக்கு இன்னும் அழுகை தான் வந்தது...

அவளும் என்ன செய்வாள்?

இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் அவள் செய்ய நினைத்ததே இல்லை...

ஆனால் காரணமே இல்லாமல் இன்று வரை வலியை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றாள்...

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் சந்தோஷமாக இருப்பது போல தோன்றினாலும், அவளுக்குள் இருக்கும் வலிகள், அவளுக்கு மட்டுமே தெரியும்...

அவளுக்கென்று இன்று வரை உறுதுணையாக இருந்தது மூர்த்தி மட்டுமே...

இன்று அவரும் இல்லை...

ஜெயா பேசியதன் வலி அவளுக்கு புரிந்த காரணத்தினால் அவளிடம் மௌனம் மட்டுமே.

ஜெயாவோ மூர்த்தியை வருடி அழுதுக் கொண்டே, "உனக்காக அவர் எல்லாமே விட்டு வந்தாரே, அவரை உனக்கு ஒழுங்கா பார்த்துக்க தெரியலையா... மினுக்கி கிட்டு ஆஃபீஸுக்கு மட்டும் போனா போதுமா?" என்று திட்ட, அவளோ பதில் ஏதும் பேசாமல், தலையை குனிந்தபடி அழுதுக் கொண்டே இருக்க, நிரூபனோ, "அப்பாவை விரட்டி இருக்க கூடாதும்மா, அன்னைக்கே இவளை விரட்டி இருக்கணும்" என்று அவன் பங்குக்கு பேசினான்...

உயிருடன் இருக்கும் வரை துரோகியாக இருந்த மூர்த்தி, இப்போது நல்லவராகி விட்டார்.

ஆனால் அவள் மீது எல்லாப் பழியும்...

இது தானே உலகம்...

உயிருடன் இருக்கும் போது தூற்றியும், இறந்த பின்னர் போற்றியும் பழக்கப்பட்ட உலகம் இது.

இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

இப்படி இறந்த வீட்டில் கலவரம் இருக்க, தேவ் உடைய கார் அவர்கள் வீட்டை அடைந்து இருந்தது...

கோட்டை கழட்டி காரில் வைத்தவனோ, அணிந்து இருந்த வெண்ணிற ஷேர்ட்டை முட்டி வரை மடித்துக் கொண்டே, ஷேர்ட்டின் மேலிரு பட்டன்களை திறந்து விட்டவாறு காரில் இருந்து இறங்க, அவனுடன் ரத்னமும் இறங்கிக் கொண்டார்...

இறங்கியவர்களது காதுகளில் ஜெயா அழுதுக் கொண்டே திட்டும் ஓசை தான் கேட்டது...


தேவ்வோ, "எதிர்பார்த்தது தான்" என்று ரத்னத்திடம் சொல்ல, அவரும் பெருமூச்சுடன், வீட்டினுள் நுழைந்தார்.
 
Top