ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'விழி தீயிலொரு தவம்' - கதைத் திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 24








"லியோ..." என்று க்ரிஸ்டியின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "ஐ வோன்ட் டூ டோக் டூ யூ" என்று இறுகிய குரலில் சொன்னவன் அவளுடைய அனுமதியைக் கூட கேட்காது வீட்டிற்குற் நுழைந்தான்.



க்ரிஸ்டியும் யோசனையோடு கதவை சாற்றிக்கொள்ள, அடுத்த அரைமணி நேரம் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ!



அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவளின் இதழ்கள் புன்னகைத்தாலும் விழிகள் அத்தனை வலியை பிரதிபலித்தன.



"சீ யூ க்ரிஸ்டி" என்று தான் வந்த வேலை முடிந்ததென அவன் அங்கிருந்து சென்றுவிட, விழியோரம் கசிந்த விழிநீரை துடைத்தெறிந்து விட்டு போகும் தன் முன்னால் காதலனை ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் அவள்.



கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,



அன்று காலையில் எழுந்ததிலிருந்து வழமை போல் மற்ற பணிப்பெண்களின் குத்தல் பேச்சுகளோடே யாழ்மொழியின் நேரம் கடக்க, இருந்த மொத்த வேலைகளையும் முடித்துவிட்டு வெளியே செல்வதற்கு தயாரானாள் அவள்.



"உன் காதலன்தான் இங்கு இல்லையே, பிறகு எதற்கு வெளியே செல்கிறாய் யாழ்? ஓஹோ... ஒருவேளை இது வேற ஒரு ஆங்கிலேய அதிகாரியோ? கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதும் எதிர்காலத்துக்கு நல்லதுதானே" என்று ஒருத்தி நாக்கில் விஷத்தை தடவியது போல் சொல்ல, முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கியவாறு அவளை திரும்பிப் பார்த்தாள் யாழ்மொழி.



ராதாவும் மற்ற பணிப்பெண்களும் உள்ளுக்குள் சிரித்தவாறு நின்றுக்கொண்டிருக்க, "உங்களிடம் பேசி புரிய வைப்பதில் எந்த பயனுமில்லை" என்று விரக்தியாக சொன்னவள் கண்ணீரைத் துடைத்தவாறு அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.



ஆனால், அப்போதும் அந்த பெண்கள் விட்டார்களா என்ன!



தன் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டதை எண்ணி உடைந்துப் போய் தளர்ந்த நடையாக யாழ் சென்றுக்கொண்டிருக்க, திடீரென பின்னால் ஒரு ஹார்ன் சத்தம் கேட்டது.



அது காதில் விழுந்ததுமே, "வந்துவிட்டீர்களா.." என்று ஆனந்த அதிர்ச்சியோடு வாய்விட்டே சொன்னவள் குறையாத சந்தோஷத்தோடு வேகமாகத் திரும்பிப் பார்க்க, அடுத்தகணம் அவளுடைய மொத்த சந்தோஷமும் வடிந்துப் போயிற்று.



காரணம், அங்கு வந்து நின்றது அவளின் மனதைக் கொள்ளையடித்தவன் அல்ல

மாறாக வில்லியம்தான்.



காரிலிருந்து இறங்கியவன், "உனக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்ல, உனக்காக ஆஃபீசர் கடிதம் அனுப்பி இருக்காரு, ஆனா நீ..." என்று சலிப்பாக இரு பக்கமும் தலையாட்ட, வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டாள் யாழ்மொழி.



"கடிதத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை, கடவுளே..." என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டவள், "இப்போது கொடுங்கள்" என்று கரத்தை நீட்ட, விஷம சிரிப்போடு காருக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினான் வில்லியம்.



"சுற்றி பல பிரச்சனைகள், இதை பற்றி சுத்தமாக மறந்தே போய்விட்டேன். ஆனால், எனக்காக இதை கொண்டு வந்து கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி" என்று உணர்ச்சி பூர்வமாக சொன்னவள் வேகவேகமாக அந்த கடிதத்தைப் பிரித்து வாசிக்க, மறுகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.



வில்லியமோ அவளுடைய முகபாவனையை அமைதியாக கவனித்துக்கொண்டிருக்க, "அது... அதிகாரி இன்றிரவு தேசத்தில் இருப்பதாக எழுதியிருக்கிறாரே! அது எப்படி? இந்.. இந்த கடிதம் எப்போது எழுதப்பட்டது?" என்று பதற்றமாகக் கேட்டாள் அவள்.



"அது... அது வந்து யாழ்மொழி.. நேத்துதான் இந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்துச்சு. அப்படின்னா இந்நேரம் அவர் இங்க வந்துக்கிட்டு இருக்கலாம். மே பீ இன்னைக்கு ராத்திரி அரண்மனைக்கு வந்துடுவாரு. அங்க எங்க நாட்டு நேரமும் இந்த தேசத்து நேரத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. எங்களுக்கு எழுதின கடிதத்துல கூட ஆஃபீசர் வரதா சொல்லியிருக்காரு"



என்று ஏதேதோ சொல்லி அவள் மூளையை அவன் சலவை செய்ய, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.



"அவர் வந்த உடனே வந்து சந்திக்குமாறு சொல்லியிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று நெற்றியை நீவி விட்டவாறு அவள் குழம்பிப் போய் நிற்க, "இதுல என்ன குழப்பம்? ஆஃபீசர்தான் வராருல்ல, நான் சொல்ற இடத்துக்கு ராத்திரி நீ வந்து நில்லு. அவர நான் அழைச்சுட்டு வரேன். ஆங்... எப்படியும் உன்ன இந்த ஊர் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. அதனால எல்லாத்துக்கும் தயாராவே வா புரியுதா?" என்று சொல்லி அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் வில்லியம்.



இன்று தன் தோழிகள் பேசிய வார்த்தைகளையும் தன்னை சுற்றி நடப்பதையும் நினைத்துப் பார்த்தவளுக்கு ஏனோ அவன் சொல்வதே சரியென்று தோன்ற, மெல்ல சம்மதமென தலையாட்டினாள் யாழ்.



"இதற்குமேல் என்னாலும் அரண்மனையில் இருக்க முடியவில்லை. அதிகாரியே என்னை அழைத்துவிட்டார், இதன்பிறகு வேறெதுவும் வேண்டாம் எனக்கு" என்று அழுத்தமாக சொன்னவள் கடிதத்தை தன் நெஞ்சோடு அணைத்தபடி அரண்மனையை நோக்கிச் செல்ல, காமப் பார்வையோடு அவளைப் பார்த்து நின்றிருந்தவனுக்கு எல்லாமே கைக் கூடி வருவது போலிருந்தது.



இன்றிரவு தனக்கு கிடைக்கப் போகும் சுகத்தை எண்ணி சந்தோஷத்தோடு அவன் செல்ல, தன்னவனை காணப் போகும் சந்தோஷத்தோடு அரண்மனைக்கு வந்தவள் நேராக இந்திராவின் முன்னே சென்று நின்றாள்.



ஓவியம் வரைந்துக்கொண்டிருந்தவள் கைகளைப் பிசைந்தவாறு தயக்கத்தோடு நின்றிருந்தவளை புரியாமல் பார்க்க, யாழ்மொழியோ கையிலிருந்த கடிதத்தை நீட்டினாள்.



"என்ன இது?" என்று யோசனையோடு கேட்டவாறு அதை வாங்கிப் படித்த இந்திராவுக்கும் பேரதிர்ச்சியாக இருக்க, "யாழ், முடிவு செய்து விட்டாயா?" என்று கேட்டாள் குறையாத அதிர்ச்சியோடு.



"ஆம் இளவரசி, எனக்கு வேறு வழித் தெரியவில்லை. என் காதல் விவகாரம் தெரிந்தலிருந்து எல்லாரும் எனக்கு எதிராக திரும்பி விட்டனர். இத்தனைநாள் அவராக என்னை அழைக்கும் வரை காத்திருந்தேன், இப்போது நான் சென்றாக வேண்டும்" என்று அவள் கண்ணீரோடு சொல்லி முடிக்க, புருவ முடிச்சுகளோடு தோழியைப் பார்த்தாள் இந்திரா.



"உன்னவரோட நீ தாராளமாக செல்லலாம், அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இன்றிரவு நீ தனியாக செல்வதில் எனக்கு விருப்பமில்லை முதலில் விடியட்டும், காலையில் அரண்மனைக்கு வந்து உன்னை அவர் அழைத்துக்கொண்டு செல்லட்டும்" என்று இந்திரா முடிவாக சொல்ல, யாழ்மொழி இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



"ஆனால் இளவரசி.. அது..." என்று அவள் தயக்கமாக இழுக்க, "எதுவும் பேசாதே! உன் காதலுக்கு நான் தடை போடவில்லை, ஆனால் இதுதான் என் இறுதி முடிவு" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள் அவள்.



மீண்டும் ஏதோ பேச வந்தவள் அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, தன்னவனைப் பற்றிய யோசனையில் அன்றைய நாள் முழுக்க அவளால் எதிலும் முழுதாக ஈடுபட முடியவில்லை.



ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக அவளுக்குத் தோன்ற, அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தவளுக்கும் அதே யோசனைதான்.



'அய்யோ இப்போது நான் என்ன செய்வேன்? இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் என்னை சந்திப்பதற்காக வந்திருக்கிறார், எனக்காக அந்த இடத்தில் காத்திருக்கிறாரோ? ஆனால் இளவரசி வேறு செல்லக் கூடாதென்று எனக்கு கட்டளை இட்டிருக்கிறார்களே, அதையும் என்னால் மீற முடியவில்லை. என்னவரையும் காக்க வைக்க பிடிக்கவில்லை. எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது'



என்று விட்டத்தைப் பார்த்து தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தவள், "ஏய்..." என்ற அழைப்பில் உடனே திரும்பிப் பார்த்தாள்.



அங்கிருந்த சில பணிப்பெண்களோ தங்களுக்குள் கிசுகிசுக்க, "வா, அரசர் உன்னை அழைத்திருக்கிறார்" என்றாள் அவர்களில் ஒருத்தி.



"அரசரா..." என்று அதிந்து விழித்தவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அரசர் வேந்தனின் அறைக்குச் செல்ல, அங்கு மற்ற சில பெண்களும் கூடவே ராதாவும் நின்றிருக்க, யாழ்மொழிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.



உடலெல்லாம் பயத்தில் வியர்க்கத் தொடங்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு வேந்தனின் சிவந்த விழிகளையும் கோபப் பார்வையையும் பார்த்து வார்த்தைகள் வர மறுத்தது.



"நான் சொல்வது பொய் என்றால் யாழ்மொழியிடமே கேளுங்கள் அரசே" என்று ராதா சொல்ல, 'ஏன் இப்படி ஒரு துரோகத்தை செய்தாய் ராதா?' என்ற கேள்வியை தாங்கிய வண்ணம் வலி நிறைந்த பார்வைப் பார்த்த யாழ்மொழி வேந்தனின் முன்னே தலை குனிந்து நின்றிருந்தாள்.



சரியாக தகவலை அறிந்து அங்கு வேகமாக வந்த இந்திரா, நடப்பதைப் பார்த்து பதறி "தந்தையே, என்ன செய்கிறீர்கள், யாழ் மீது எந்த தவறும் இல்லை" என்று தோழிக்காகப் பேச, ஏளனமாக இதழை வளைத்தார் அவர்.



"அவள் மீது தவறில்லை என்று அவளே சொல்லட்டும்" என்று யாழ்மொழியை உறுத்து விழித்தவாறு வேந்தன் சொல்ல, "யாழ்..." என்று இந்திரா அவளுடைய கரத்தில் அழுத்தம் கொடுத்து வேண்டாம் என்பது போல சைகை செய்ய, "என்.. என்னை மன்னித்து விடுங்கள் அரசே" என விம்மி விம்மி அழுதவாறு தன் தவறை ஒப்புக்கொண்டாள் மற்றவள்.



"இதற்குமேல் நிரூபிக்க தேவையில்லை, நீ அந்த சாதாரண வியாபாரியை காதலிப்பதை கூட ஏற்றுக்கொண்ட என் மனம் ஒரு ஆங்கிலேயனை இவள் காதலிப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்திரா. நம்மை அடிமைப்படுத்தி நம் தேசத்தை சூரையாடியை அந்த ஆங்கிலேயனிடம் மனதை பறிகொடுத்த இவளைப் பார்க்க எனக்கே அருவருப்பாக இருக்கிறது.



நாட்டுக்கே துரோகம் செய்தவளுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் நிகராகாது. ஆனால் உன் தந்தை நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர். அவருக்காக உன்னை அரண்மனையை விட்டு ஒதுக்கி வைப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். உயிர் பிச்சை போட்டதாக நினைத்து இங்கேயிருந்து ஓடிவிடு! என் கண் எதிரிலும் வந்துவிடாதே!" என்று அவர் முடிவாக சொல்ல, மொத்தப் பேருமே அதிர்ந்துவிட்டனர்.



இது தான் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், தன்னை மீறிய அதிர்ச்சியில் "தந்தையே..." என்று இந்திரா கத்திவிட, "காவலர்களே..." என்று கத்தி அழைத்த வேந்தன் யாழ்மொழியைக் காட்டி அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்.



யாழ்மொழியோ ராதாவை விழிகளை மட்டும் உயர்த்தி ஒரு பார்வைப் பார்க்க, யாழ்மொழியின் மீதிருக்கும் கோபத்தில் இதை செய்திருந்தாலும் இப்போது 'அவசரப்பட்டு விட்டோமோ?' என நினைத்து அவளின் பார்வையில் குற்றவுணர்ச்சியில் கூனி குறுகிப்போய் நின்றாள் அவள்.



"வேண்டாம் தந்தையே, இது தவறு. காதலித்ததை குற்றமாக எண்ணி அவளை அரண்மனையை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டாம்" என்று இந்திரா தன் தந்தையின் கரத்தைப் பற்றி கெஞ்சி அழ, அவரோ கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.



அவளின் கரத்தை உதறிவிட்டவர் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றிருக்க, காவலர்களோ யாழ்மொழியின் இரு கரங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.



"யாழ்... யாழ்மொழி..." என்று கத்தியவாறு இந்திரா பின்னாலேயே செல்ல, அரண்மனை வாயில் வரை அமைதியாக சென்றவள் சட்டென நின்று இந்திராவை திரும்பிப் பார்த்தாள்.



"அவளை விடுங்கள், ஏதோ கைதி போல அவளை நடத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று இந்திரா காவலர்களை தள்ளி விட்டு கத்த, விரக்திப் புன்னகையோடு அவளைப் பார்த்த யாழ்மொழி, "நன்றி இளவரசி, அனைத்துக்கும்" என்றாள் தழுதழுத்த குரலில்.



தோழியை தாவி அணைத்துக்கொண்டவள், "என்னை மன்னித்துவிடு யாழ், என்னால் தந்தையை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால்.. ஆனால் நீ உன் காதலனோடு சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்று அழுதுக்கொண்டே சொன்னவள், உடனே தன் மோதிரமொன்றை அவளிடம் நீட்டினாள்.



"வேண்டாம் இளவரசி" என்று அவள் மறுக்க, வற்புறுத்தி அவளுடைய கரத்தில் திணித்தவள், "எதையும் மறுக்காதே! மீண்டும் உன்னை எப்போது சந்திப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் உனக்காக எப்போதும் காத்திருப்பேன் யாழ், சந்தோஷமாக இரு" என்று சொல்ல, வெடித்து அழுதுவிட்டாள் யாழ்மொழி.



இந்திராவை இறுக அணைத்துக்கொண்டவள், "நான் தங்களுக்கு எப்போதும் கடைமைப்பட்டிருக்கிறேன் இளவரசி" என்று அழுதுக்கொண்டே சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேற, போகும் அவளை வேதனையோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் இந்திரா.



பல முறை அரண்மனையிலிருந்து வெளியில் சென்றிருக்கிறாள். ஆனால் இப்போது...



இந்த நடு ராத்திரியில் கண்ணைக் கட்ட காட்டில் விட்டது போல இருந்தது. இத்தனை வருடங்கள் தாய் தந்தை இல்லாமல் வளர்ந்தும் உணராத தனிமையை இப்போது யாழ் உணர, அவளுடைய கால்கள் தானாக நகர்ந்து தன்னவனைத் தேடி ஆங்கிலேய அரண்மனையை நோக்கி நகர்ந்தன.



இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் அவளவன்தான்.



தளர்ந்த நடையாக அந்த இருளில் அவள் நடந்துச் செல்ல, இங்கு தன் திட்டத்தை நிறைவேற்ற எண்ணி தயாராகிக்கொண்டிருந்த வில்லியம் உள்ளுக்குள் அவளை நினைத்து பல கனவுகளோடு அரண்மனையிலிருந்து வெளியேறப் போக, சரியாக அவன் முன் வந்து நின்றான் ஜேம்ஸ்.



"சார், ஒரு முக்கியமான விஷயம். இப்போவே என் கூட ஆஃபீஸ்க்கு வாங்க" என்று அவசரமாக அவன் சொல்ல, "இப்.. இப்போவேவா? அது... அது வந்து ஜேம்ஸ் நான் ரொனேல்ட் சாரோட பேளஸ்க்கு போகணும். நாம அப்பறமா பேசலாமே" என்று ஏதேதோ சமாளிக்கப் பார்த்தான் மற்றவன்.



"நோ சார், இட்ஸ் அர்ஜென்ட். கொஞ்ச நேரம்தான். நம்மளோட வெபன்ஸ்ஸோட க்வாலிட்டிய கொஞ்சம் செக் பண்ணிட்டு நீங்க போங்க. அதுக்கப்பறம் ஐ வில் நொட் டிஸ்டர்ப் யூ" என்று சொல்லி ஜேம்ஸ் கையோடு இழுத்துக்கொண்டே போக, வேறு வழியில்லாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்ற வில்லியமுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது.



'எப்படியும் அவ நான் சொன்ன இடத்துல வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா, சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு போயிரணும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் ஜேம்ஸ்ஸோடு வேகமாக செல்ல, இங்கு ஆங்கிலேய அரண்மனைக்கு பக்கத்தில் மறைவாக நின்றிருந்த யாழ்மொழி உள்ளே செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என சுற்றி முற்றி தேட ஆரம்பித்தாள்.



அப்போது அவளிருந்த மனநிலைக்கு வில்லியம் காத்திருக்க சொன்னதெல்லாம் நினைவிலேயே இல்லை அவளுக்கு. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வந்துவிட்டாள், அவளுக்கு எப்படியாவது தன்னவனை சந்தித்து அவனிடம் தஞ்சம் புகுந்தாள் போதும்.



பயத்தில் கைக்கால்கள் நடுங்கினாலும் அந்த பெரிய மரத்திற்கு பின்னே இருந்து மறைந்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அங்கு பெரிய வாசற்கதவுகளுக்கு பக்கத்திலிருந்த சிறிய கதவு தென்பட, உடனே காவலர்களை கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.



அங்கு வாசலில் காவலுக்கு நின்றிருந்த ஒருவன் தன்னை மீறி அமர்ந்த நிலையிலேயே உறக்கத்திலிருக்க, மற்ற இருவரோ மதுவை வாயில் சரித்து முழு போதையில் நின்றிருந்தனர்.



'பாதுகாப்புக்கு இப்படி ஒருசிலர் இருந்தாலே போதும், திருடன் கூட முன் வாசல் வழியாக தைரியமாக நுழையலாம்' என்று தனக்குள்ளேயே சலிப்பாக நினைத்துக்கொண்ட யாழ்மொழி மரத்திற்கு கீழே இருந்த விறகுக் கட்டையை எடுத்து எதிர்திசைக்கு எறிந்து திசைதிருப்ப, உடனே போதையிலிருந்த காவலர்களின் கவனமும் அந்த திசைக்கு சென்றது.



"வூ இஸ் தட்.. ஒருவேள ப்ரொடெஸ்ட் பண்றவங்களா இருக்கும். இன்னைக்கு ஒருத்தரையும் விடாம கொல்லணும்" என்று அவர்கள் புலம்பிக்கொண்டே அந்த திசைக்கு ஓட, உடனே பதுங்கிச் சென்று அந்த சிறிய கதவு வழியே அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்துக்கொண்டாள் அவள்.



************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க.. 🙌

மையவிழிப் பார்வையிலே Is now available in kindle store >>>

INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC

USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC

 
அத்தியாயம் 25




அரண்மனை வளாகத்துக்குள் மறைந்திருந்தவள் அங்கிருந்த நீண்ட ஜன்னலின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து வேகமாக அதை நோக்கி ஓட, அங்கு சுற்றியிருந்த காவலர்களின் விழிகளுக்கு சிக்கிக்கொண்டாள் அவள்.



"ஹேய்.. வூ ஆர் யூ? ஸ்டாப்! கார்ட்ஸ்... கார்ட்ஸ்..." என்று அவன் எல்லோருக்கும் குரல் எழுப்பி கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வர, அதிர்ந்து விழித்தவள் உடனே சுதாகரித்து ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து ஜன்னல் கதவை வேகமாக மூடிக்கொண்டாள்.



சுற்றி பரபரப்பு நிலவ, ஜன்னல் கதவை அவர்கள் வேகமாக தட்ட ஆரம்பிக்கவும் இவளுக்கு ஏன்தான் இங்கு வந்தோம் என்று அந்த நொடி தோன்றியது.



வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவளுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்க, எதுவும் யோசிக்கக் கூட தோன்றவில்லை.



உடல் முழுவதும் பதற்றத்தில் வியர்க்க ஆரம்பிக்க, உடனே அந்த அறைக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தவள் எந்த பக்கம் செல்வதென்று கூட தெரியாமல் கால் போன திசைக்கு அந்த வராண்டாவில் ஓட ஆரம்பித்தவள்.



திடீரென சில அதிகாரிகளின் காலடி சத்தம் கேட்க, பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள் யாழ்மொழி.



'அய்யோ கடவுளே! இப்படி அநியாயமாக வந்து சிக்கி விட்டோமே, இது தேவைதானா யாழ் உனக்கு? இத்தனை பெரிய அரண்மனையில் என்னவரை நான் எங்கு சென்று தேடுவது?'



என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு வேக மூச்சுக்களை விட்டவாறு அவள் கதவில் சாய்ந்திருக்க, அப்போதுதான் அவளுடைய விழிகள் அந்த அறையை சுற்றி ஆராய்ந்தன.



சுற்றி ஏகப்பட்ட புத்தகங்களும் கோப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மெல்ல நடந்துச் சென்றவள் அனைத்தையும் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.



'என்ன அறை இது, இவ்வளவு நிறைய புத்தகங்களா?' என்று ஆச்சரியத்தோடு ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்தவள், மேசை மீதிருந்த தாள்களை கையிலெடுத்து அதை புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென கதவு வேகமாக திறக்கப்பட்டது.



கையில் துப்பாக்கியோடு வேகமாக உள்ளே வந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவளுடைய கையிலிருந்த தாள்களைப் பறித்து அவளை கோபமாக நோக்க, இதை எதிர்பார்க்காதவளாய் திகைத்துப் போய்விட்டாள் யாழ்மொழி.



"இவ அரசரோட ஸ்பைன்னு நினைக்கிறேன், நம்மளோட ரகசிய அறைக்குள்ள இருக்கா. அதுவும் இதை திருடியிருக்கா" என்று அந்த அதிகாரி ஏதேதோ பேச, அவர்களின் ஆங்கில மொழி இவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.



"என.. எனக்கு அதிகாரியை பார்க்க வேண்டும், அவர் எங்கு இருக்கிறார்?" என்று யாழ் பதற்றமாக சொல்லிக்கொண்டு சுற்றி முற்றி தேட, "வாட் த ஹெல் ஆர் யூ டோக்கிங், யூ ****..." என்று கத்திக்கொண்டு அந்த காவலாளியோ அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.



சரியாக ஜேம்ஸ்ஸோடு ஆஃபீஸ் அறையிலிருந்த வில்லியமிற்கு தகவல் கொடுக்கப்பட, "ஜெம்ஸ், யூ கேர்ரி ஆன். நான் என்னன்னு பார்க்குறேன்" என்றுவிட்டு வேகமாக சென்றான்.



தலையசைப்போடு ஜன்னல் வழியே எதேர்ச்சையாக பார்த்த ஜேம்ஸின் விழிகளுக்கு சிறு வெளிச்சம் தெரிய, அவனுடைய புருவங்களோ புரியாமல் முடிச்சிட்டன.



வில்லியயோ அந்த அறைக்கு வேகமாக வந்தவன், அங்கு யாழ்மொழியைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றாலும் இன்னொரு புறம் வன்மமாகப் புன்னகைத்துக்கொண்டான்.



அதே விஷம புன்னகையோடு அவன் அவளை நோக்கி நடந்து வர, அவனைப் பார்த்ததும்தான் பெண்ணவளுக்கு நிம்மதி பெருமூச்சே வெளியானது.



கண்ணீரைத் துடைத்தவள் வேகமாக வில்லியமை நோக்கிச் சென்று, "தங்களுக்கு என்னை தெரியும் அல்லவா! அதிகாரி தேசத்துக்கு வந்துவிட்டாரா, அவர் என்னை சந்திக்க காத்திருப்பதாக தாங்கள்தானே கூறினீர்கள், அவர் எங்கே? தயவு செய்து கூறுங்கள்" என அழுகையை அடக்கிய குரலில் கேள்விகளைத் தொடுக்க, அவனோ அவளை அந்நியப் பார்வைப் பார்த்து வைத்தான்.



"வூ இஸ் ஷீ? ஏதேதோ என்கிட்ட உளறிக்கிட்டு இருக்கா, சரியான பைத்தியமா இருப்பா போல ஹாஹாஹா..." என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தவன், "அதிகாரியா! எந்த அதிகாரி? ஒருவேள ஆஃபீசர் லியோவ சொல்றியா? அவர்தான் இன்னும் இங்க வரவே இல்லையே... அப்பறம் எதுக்கு நீ இங்க வந்திருக்க? அதுவும் இந்த அறையில இருக்கன்னா எங்க ரகசியங்கள திருடுறதுக்காக வந்திருக்கியா?"



என்று பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டவாறு அவளுடைய பின்னந்தலை முடியை கொத்தாகப் பற்ற, ஸ்தம்பித்துப் போய்விட்டாள் பெண்ணவள்.



இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.



"என்ன?" என்றவளின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "தெரியாத மாதிரி நல்லாவே நடிக்குற உன்ன..." என்று துப்பாக்கியால் அவளை அடிக்க கையை ஓங்கிய வில்லியமின் கரம் திடீரென பின்னாலிருந்து கேட்ட குரலில் அந்தரத்தில் நின்றது.



அங்கிருந்த மொத்த அதிகாரிகளும் திரும்பிப் பார்க்க, பயத்தில் விழிகளை மூடியிருந்தவளுக்கும் அந்த பழக்கப்பட்ட குரலில் பேரதிர்ச்சியாக இருந்தது.



மொத்தப் பேரின் பார்வையும் வாசல் புறம் திரும்ப, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நெற்றி நரம்புகள் புடைக்க நின்றிருந்தான் லியோ ஜார்ஜ்.



அவனைப் பார்த்ததுமே யாழ்மொழியின் இதழ்கள் புன்னகைக்க, இதை எதிர்பார்க்காத வில்லியமிற்கு அவனின் வருகை பேரிடியாக இருந்தது.



அவனின் கோபத்தைப் பற்றி தான் இவன் அறிவானே!



உடனே வில்லத்தனமாக யோசித்தவன், "சார், வந்துட்டீங்களா! இதோ இவ நம்ம ரகசியங்களயே திருட பார்த்திருக்கா. இது கண்டிப்பா அரசரோட வேலையாதான் இருக்கணும். வீ ஹேவ் டூ டேக் ஆக்ஷன்" என்று கதையை திசைத்திருப்ப, விழிகளை சுருக்கியவாறு தன்னவளைப் பார்த்தான் அவன்.



ஆனால், யாழ்மொழிக்கு தான் மொத்த உலகத்தையும் அடைந்த உணர்வு.



வில்லியமின் கரத்தை உதறிவிட்டு லியோவை நோக்கி ஓடியவள் கோழிக் குஞ்சு தன் அம்மாவிடத்தில் தஞ்சம் புகுவது போல் அவனுடைய பரந்த மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பிக்க, சிலையாகி நின்றுவிட்டான் ஆடவன்.



"இப்போதுதான் தங்களுக்கு என்னை நியாபகமே வந்ததா அதிகாரி? உங்களை காணாமல் நான் தவித்து போய்விட்டேன், இது ஒன்றும் கனவில்லையே, தாங்கள் சொன்னது போல நானே தங்களை காண வந்துவிட்டேன்" என்று சந்தோஷத்தில் ஏதேதோ பிதற்றிக்கொண்டு அவனுக்குள் மூழ்குவது போல் அவனை மேலும் மேலும் தன்னோடு நெருக்கிக்கொள்ள, லியோவோ ஒருகணம் திக்குமுக்காடி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.



மொத்த அதிகாரிகளும் நடப்பதை அதிர்ச்சியாகப் பார்க்க, வில்லியமிற்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.



"ஓஹோ... அப்போ இவ பண்ண காரியத்துக்கு உங்களுக்கும் சம்பந்தம் இருக்கா. சரியா நீங்க இங்க வரும் போது இவ வந்திருக்கான்னா அப்போ கண்டிப்பா இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நீங்க நம்ம அரசாங்கத்துக்கு துரோகம் பண்றீங்க" என்று வில்லியம் இப்போது மொத்த பழியையும் லியோவை நோக்கித் திருப்ப, அவனோ விழிகள் சிவக்க வில்லியமைப் பார்த்தான்.



அங்கிருந்த அதிகாரிகளும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பிக்க, யாழ்மொழிக்கு அவர்கள் பேசிக்கொள்வது சுத்தமாகப் புரியவில்லை.



ஆனால், ஒன்று மட்டும் அவளால் நன்கு உணர முடிந்தது, வில்லியம் அவளுக்கெதிராக ஏதொ சதி செய்கிறான் என்று.



லியோவோ தீவிரமாக யோசித்தவன் விழிகளை அழுந்த மூடித் திறந்து தன்னை அணைத்திருந்த பெண்ணவளின் கரங்களை உதறிவிட, சற்று தள்ளி நின்றவள் தன்னவனின் செய்கையை புரியாமல் பார்த்தாள்.



"என்.. என்ன நடந்தது, ஏன் என்னை விலக்குகிறீர்கள்?" என்று பதறியபடி யாழ்மொழி கேட்டுக்கொண்டே மீண்டும் அவனை நோக்கிச் செல்ல, பின்னால் நகர்ந்தவன், "பக்கத்துல வராத, மொதல்ல யார் நீ?" என்று இறுகிய குரலில் ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.



சில கணங்கள் அவனின் வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் சிலையாகி நின்றவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்க, "என்ன? நான் யாரா?" என்று கேட்டாள் வேதனை நிரம்பிய குரலில்.



வில்லியமோ இப்போது நடப்பதை புரியாமல் பார்க்க, "யார் வந்து என்ன சொன்னாலும் நம்பிடுறதா? இந்த சின்ன பொண்ண போய் அரசர் உழவாளியா வச்சிருப்பாருங்குறத என்னாலயே நம்ப முடியல. அப்படியே இவ உழவாளியா இருந்தாலும் இவகிட்ட நம்ம வீரத்தையும் கோபத்தையும் காமிச்சு என்ன ஆக போகுது. நாம அரசர் வேந்தன் கூட தான் நம்ம பேச்சு வார்த்தைய நடத்தணும். சோ... ஒரு ஹையர் ஆஃபீசரா சொல்றேன், இவள விட்டுருங்க. இதை பத்தி நான் நாளைக்கு பார்த்துக்குறேன்" என்று அழுத்தமாக சொன்னான் லியோ.



அதிகாரிகளோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு மறுபேச்சு பேச முடியாமல் சம்மதமாக தலையசைக்க, இரு அதிகாரிகளோ வேகமாக வந்து யாழ்மொழியை இருபுறமும் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.



முழு பலத்தையும் பயன்படுத்தி அவர்களை தள்ளிவிட்டு மீண்டும் லியோவிடமே ஓடி வந்தவள், அவனின் கன்னத்தை இரு கரங்களால் தாங்கி அவன் விழிகளை ஏக்கத்தோடு பார்த்தாள்.



"அதிகாரி.. நான் யாரென்றா கேட்கிறீர்கள்? அவ்வளவு இலகுவாக என்னை மறந்துவிட்டீர்களா என்ன? தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை இப்படி நிர்க்கதியாக்கி விட்டீர்களே! நிஜமாகவே தங்களுக்கு என் மேல் துளியும் காதல் இல்லையா" என்று கண்ணீரோடு யாழ் பேச, தன்னவளின் விழிகளைப் பார்த்தவனுக்கு இதயத்தை கசக்கிப் பிழியும் வலி.



ஆனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன், அவளின் தோள்களைப் பற்றி தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தி "இவள இங்கயிருந்து வெளியில துரத்தி விடுங்க" என உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் சொல்ல, ஸ்தம்பித்துப் போய் அவனைப் பார்த்தாள் அவள்.



லியோவோ அவளின் விழிகளைக் காண தயக்கப்பட்டு எங்கோ பார்வையைப் பதித்தபடி நின்றுக்கொண்டிருக்க, அதிகாரிகளோ மீண்டும் வந்து அவளை இழுத்துக்கொண்டே சென்றனர்.



பெண்ணவளின் பார்வை கொஞ்சமும் நகரவில்லை. கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே திரும்பி பார்த்தபடி அவள் செல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன் வேகமாக தனதறைக்குச் சென்றான்.



வில்லியமோ அந்த நொடி தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியிருக்க, கதவைக் கூட மூடாது இருந்த கோபத்தில் அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்தான் லியோ.



"ஏன்... ஏன் நான் இப்படி பண்ணேன், இப்போ கூட பதவி போயிருமேங்குற பயத்துல அவள விட்டுட்டியே! யூ ப்ளடி ****... அவளோட பார்வை.. என்னை அக்யூஸ்ட் பண்ற மாதிரி பார்க்குற அந்த கண்கள நேருக்கு நேரா பார்க்க முடியல. ச்சே! இப்படி பண்ணியிருக்க கூடாது, அவள இப்படி விட்டிருக்க கூடாது"



என்று தன்னை மீறிய ஆதங்கத்தில் ஏதேதோ புலம்பியவாறு பைத்தியம் பிடித்தவன் போல் அவன் நடந்துக்கொள்ள, "சார்..." என்ற ஜேம்ஸின் குரல் வாசலிலிருந்து கேட்டது.



மூச்சு வாங்கியவாறு லியோ திரும்பிப் பார்க்க, "யூ லவ் ஹெர் ரைட்?" என்று சட்டெனக் கேட்டான் மற்றவன்.



அவனோ பதிலெதுவும் சொல்லாமல் ஜேம்ஸ்ஸை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவன், விரல்களை அசைத்து அவனை உள்ளே வரும்படி சொன்னான்.



மற்றவனும் எச்சிலை விழுங்கியவாறு அவன் பக்கத்தில் வர, "யூ நோ வாட் ஜேம்ஸ், இப்போன்னு இல்ல. மார்கெட்ல நான் அவள துரத்திட்டு போனப்போ இல்லன்னா அவளோட முகத்த ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ.. அதுவும் இல்லன்னா மே பீ பேளஸ்ல நடந்த டான்ஸ் அப்போ கூட இருக்கலாம். சரியா தெரியல. சின்ஸ் தட் டைம், ஐ லவ் ஹெர். அவள காதலிச்சிருவேனோன்னு பயத்துலதான் இங்கயிருந்து போனேன். இப்போ கூட நான் அவளுக்காக தான் இங்க திரும்ப வந்தேன். அவளுக்காக மட்டும்தான் எல்லாமே... ஆனா நான்.. ஐ டோன்ட் டிசெர்வ் ஹெர் லவ்" என்றவனின் விழிகள் கலங்க குரல் அழுகையை அடக்கியிருந்தது.



முதல் முறை லியோவிடத்தில் இத்தகைய மாற்றத்தை காண்கிறான் ஜேம்ஸ்.



அவன் பேசுவதில் திகைத்துப்போய் அவன் சிலையாக நிற்க, லியோவோ அப்படியே முட்டி போட்டு தரையில் அமர்ந்தவன், "ஐ டோன்ட் டிசெர்வ், மத்த ஆஃபீசார்ஸ் முன்னாடி எனக்கு அவமானமாகிரும், என்னோட பதவி போயிருமேங்குற ஒரு பயத்துல அவ யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன். ச்சீ... எனக்கே என்னை நினைச்சா அருவருப்பா இருக்கு.



எதுவானாலும் ஃபேஸ் பண்ணலாம்னு ஒரு தைரியத்துல வந்தேன். பட் ஐ அம் நொட், நான் ஒரு கோழை ஜேம்ஸ். எனக்காக வந்தவள நான் விட்டுட்டேன். ஐ டிட் இட் அகைன். என்ன பண்றதுன்னு தெரியல" என்று விழிகளில் வலியோடு ஒரு பார்வைப் பார்த்தான்.



ஜேம்ஸிற்கு அவனின் நிலை நன்றாகவே புரிந்தது.



பதற்றமாக அவரை பார்த்துக்கொண்டு நின்றவன், தன்னைத்தானே நிதானப்படுத்தி மெல்ல லியோவின் அருகே அமர்ந்தான்.



அவனோ தலையைத் தாங்கிக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்திருக்க, "சார், நான் ஒன்னு சொல்லட்டுமா?" என்று ஜேம்ஸ் சிறு தயக்கத்தோடு கேட்க, அவனை கேள்வியாகப் பார்த்தான் மற்றவன்.



"நம்ம அரசாங்கத்த பொருத்த வரைக்கும் இவங்க நம்மளோட அடிமைங்க, யூஸ் என்ட் த்ரோவா தான் நாம இவங்கள நினைக்கணும். ஒருவேள அது காதல் கல்யாணம்னு போனா நம்ம அரசாங்கத்துல நடக்குற அவமானங்கள் உங்களுக்கு தெரியாம இருக்காது. நீங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணீங்கன்னா மே பீ உங்க பதவிய விட்டு விலக வேண்டியிருக்கும். இல்லன்னா பதவிக்காக அவள விடணும்.



இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னதான் உங்களால தேர்ந்தெடுக்க முடியும். அது என்னதா இருக்கணும்னு நீங்கதான் முடிவு பண்ணணும். ஒருவேள என்னை கேட்டீங்கன்னா நான் உங்க லவ்வ தான் சொல்லுவேன், பிகாஸ் ஷீ இஸ் யூவர் ஹேப்பினஸ், ஷீ இஸ் யூவர் ஸ்மைல். ஷீ இஸ் எவ்ரிதிங்"



என்று ஜேம்ஸ் அவனின் மொத்த குழப்பத்திற்கும் பதிலளிக்க, விழிகளில் கண்ணீரோடு சில கணங்கள் அவனை வெறித்துப் பார்த்தான் மற்றவன்.



அவளுடனான முதல் சந்திப்பிலிருந்து அவனுடனான முத்தம் வரை அவனுக்கு நினைவு வர, இதழில் புன்னகையோடு ஜேம்ஸை உடனே அணைத்துக்கொண்டான் லியோ.



"ஆமா.. ஆமா ஜேம்ஸ் என்ன வேணா நடக்கட்டும், ஐ லவ் ஹெர் தட்ஸ் இட். என.. எனக்கு இப்போவே அவள பார்க்கணும்" என்று சொன்னவனுக்கு அப்போதுதான் யாழ்மொழி சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.



'தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை இப்படி நிர்க்கதியாக்கி விட்டீர்களே!'



அவளின் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தமும் புரிய, அதிர்ந்துப் போய் விழி விரித்தவன் புயல் போல் தன்னவளை தேடி ஓட ஆரம்பித்தான்.



************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க.. 🙌
 
Status
Not open for further replies.
Top