ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

திட்டும் பார்வை ... ஒட்டும் இதயம் ❤❤ - கதைத்திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 4

கிட்டத்தட்ட இரண்டு நாட்களாய் அவள் அந்த துத்தி தாவரத்தை தேடிக் கொண்டிருக்கிறாள்... அச்செடியின் புகைப்படத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கையில் வைத்துக் கொண்டவள் வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் தேடித் தேடிப் பார்த்தாள் எங்கும் கிடைக்கவில்லை...



மனம் நொந்து போன நறுமுகை வேறு வழி கிடையாது கவிதாவிடம் உதவி கேட்டாள்.. ஏனெனில் கவிதா சற்று கிராமம் போல இருக்கும் இடத்திலிருந்து தான் வருகிறாள்...




சொல்லப்போனால் நறுமுகை இருக்கும் இடமும் கிராமம் போன்ற இடம் தான் ..ஆனால் அவள் சாலைக்கு சற்று அருகிலேயே இருக்கிறாள்.. ஆனால் கவிதா அப்படி இல்லை சாலையில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி தூரம் உள்ளே நடக்க வேண்டும் ..அவ்வாறு அவள் வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் புதர்கள்தான் மண்டி கிடக்கும்..



அன்று கல்லூரியில் இருந்து சீக்கிரமே கிளம்பியவர்கள் முழுவதும் அந்த துத்தி தாவரத்தை தான் தேடி அலைந்தனர்...




கவர் முழுக்க
அந்த தாவரத்தை நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு வந்த மகளைக் கண்ட சுரதைக்கு சற்று கவலையாக இருந்தது...



" அப்படி என்ன தான் ப்ராஜெக்ட்டோ... இப்படி நொந்து நூலாகும் அளவுக்கு.. ம்ஹூம் போய் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள இந்த லட்சணம்.. இன்னும் ஆறு மாசத்தை நீ எப்படி தான் ஓட்ட போறியோ..?" என அவர் பங்கிற்கு வேறு பயமுறுத்தி விட்டு செல்லவும் அவ்வளவு தான் தலைசுற்றி விட்டது நறுமுகைக்கு ...



மறுநாள் தான் எடுத்து வைத்த துத்தி அடங்கிய கவரினை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக கல்லூரிக்கு விரைந்தாள் நறுமுகை...




நிச்சயம் இன்று விக்ரம் தன்னை பார்த்து இவ்வளவு கொண்டு வந்திருக்க? உனக்கு கிடைச்சிருச்சா பரவாயில்லையே..! என ஆச்சரியப்பட போறான் என எண்ணி எண்ணி மகிழ்ந்தவாறு சென்றாள் ...



அவள் உள்ளே செல்லும்போது விக்ரம் லேப்டாப்பில் எதையோ செய்து கொண்டிருந்தான்.. இவளை பார்த்ததும் தலையை மட்டும் அசைத்திட வேகமாக பையினை கூட கழட்டாது கவரினை எடுத்துக் கொண்டு அவனிடம் விரைந்தவள்,



" நீங்க சொன்ன மாதிரியே கொண்டு வந்துட்டேன் சார்.. பாருங்க இந்த கவர் புல்லா துத்தி மட்டும் தான்.." என்றதும் அவளை அமைதியாக பார்த்த விக்ரம் ,



"ம்ம்ம்...எடுத்து கீழே வை பார்ப்போம்..." என்றதும் வேகமாக எடுத்து கீழே வைக்க முற்படும் நேரம் அங்கு மேடையில் சில பல பொருட்கள் எல்லாம் இருந்தன ..



அதை கண்டதும் பல்லை கடித்த விக்ரம் ,



"ஏய்..இதை வச்சு தான் ப்ராஜெக்ட் பண்ண போறோம்.. இப்படி தான் அசால்ட்டா போடுவியா... ஒரு பேப்பரோ இல்லை ஏதாவது கவரோ வச்சு அதுக்கு மேல வை .." என கண்டிப்புடன் கேட்டதும் சட்டென முகம் சுருங்கிவிட்டது நறுமுகைக்கு ...



சரியென தலையசைத்தவள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு, பேப்பரை விரித்தவள் அதன் மீது தான் கொண்டு வந்த தாவரங்களை எல்லாம் பரப்பி வைத்தாள்..



வெளியே வைத்தால் வாடி விடுமோ என்கிற பயத்தில பிரிட்ஜுக்குள் வைத்து விட்டிருந்தாள் அந்த அறிவாளி..




தாவரங்களை தொட்டுப் பார்த்தவன் சட்டென விழிகள் சுருக்கி நறுமுகையே பார்த்து,



" என்ன ஜில்லுனு இருக்கு..?" என கேட்டதும் வாயெல்லாம் பல்லாக,



"அது ஈவ்னிங் பறிச்சது சார்.. இன்னைக்கு கொண்டு வர வரைக்கும் எப்படி இருக்கும்னு தெரியல.. அதான் ஃபிரஷ்ஷா இருக்கட்டும் பிரிட்ஜுக்குள்ள வச்சுட்டேன்.." என்றதும் அவ்வளவுதான் விக்ரமின் முகம் இறுகிப்போனது ..



கீழ் உதட்டை கடித்துக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்,



" நல்ல பிரெஷா தான் இருக்கு.. பேசாம ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரியா..? ஆளுக்கு ஒரு கிளாஸ் குடிப்போம்.." என்றதும் சட்டென நறுமுகையின் முகத்தில் இருந்த சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போல் ஆகிவிட்டது..



" சா...ர்..." என இழுக்கவும் , அவள் முன்பு கரத்தை நீட்டி தடுத்து,



" அறிவு இருக்கா உனக்கு..?? முட்டாள் ..முட்டாள்.. ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறோம் அந்த செடியை எப்படி எடுத்து பத்திரமா வைக்கணும்ங்கிற அறிவு கூட உனக்கு வேண்டாமா? நீ கண்ட நேரத்துக்கு போய் செடியை கலெக்ட் பண்ண கூடாது.. மார்னிங் தான் போய் கலெக்ட் பண்ணனும் ..அப்பதான் நல்லா இருக்கும்.. அது கூட உனக்கு தெரியாதா...?" என்றதும் நறுமுகைக்கு விழி பிதுங்கி விட்டது ...





"சார் ..இதுவே நான் கஷ்டப்பட்டு கொண்டு வந்தேன் ..திருப்பி மார்னிங் போனா அங்க எதுவுமே இருக்காது.." என்றதும் அவளை மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டியபடி தலை சாய்த்து பார்த்த விக்ரம்,



" ப்ராஜெக்ட் பண்ணனும்னு தெரியும்ல.. அப்ப இதெல்லாம் பண்ணி தான் ஆகணும்.. உனக்கு எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து கையில கொடுப்பாங்களா? ஒழுங்கா விடிய காலைல கலெக்ட் பண்ணி கொண்டு வா.." என்றதும் பாவமாக அவனை பார்த்த நறுமுகை விழிகளை மட்டும் திருப்பி தான் கொண்டு வந்த தாவரத்தை பார்த்தவள் பின்பு விக்ரமிடம் ,


"அப்போ இதெல்லாம் என்ன சார் பண்றது..?" என கேட்டவளிடம் மனசாட்சியே இன்றி,



" குப்பையில தூக்கி போடு.. இது ஒண்ணுத்துக்கும் ஆகாது.." என்று விட்டு லேப்டாப்பை தூக்கிக்கொண்டு சென்றவனை கண்ட நறுமுகையின் விழிகள் இரண்டும் கலங்கிவிட்டது ...



எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் செடிகளை கொண்டு வந்தாள் என்பது அவளுக்குத்தானே தெரியும் ..!



இதில் கவிதாவும் வேறு அவளுடன் சேர்ந்து சேகரித்து அல்லவா தந்தாள்.. இப்போது இருவரது உழைப்பும் வீணாகி விட்டதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..




எவ்வளவு உற்சாகமாய் காலையில் கிளம்பி வந்தாள்..! இப்போது அனைத்தும் வீணாகி போகவும் தொப்பென இருக்கையில் அமர்ந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது ..



தனக்கு ஓரளவேனும் அறிவு இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது விக்ரம் கூறுவது போல தனக்கு அறிவே இல்லை போல அதனால் தான் எப்போது எந்த நேரத்திற்கு தாவரத்தை சேகரிக்க வேண்டும் என முன்னமே அவனிடம் கேட்டு சென்றிருக்கலாமே என காலம் கடந்து ஞானோதயம் வந்தது...




அவளை கண்ட கவிதா சாமுவேல் அவளிடம் அவளுக்கான வேலையை சொல்லிவிட்டு சென்றுவிட, அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு நறுமுகையே பார்த்தவள் வேகமாக அவளிடம் வந்து,



" என்னடி ஒரு மாதிரி இருக்க..?? ஏதாவது பண்ணலாம் இல்ல உட்கார்ந்துட்டு இருக்க..?" என்றதும் கலங்கிய வழிகளால் அவளைப் பார்த்த நறுமுகை,



" எதுவும் பண்ணக்கூடாது கவிதா ..குப்பையில் போட சொல்லிட்டாரு .." என பேசும் போதே குரல் தளும்பியது...



அதைக் கேட்ட கவிதாவிற்கும் அதிர்ச்சியாகிவிட்டது,


"ஏன்டி...??? நிறைய தானே கலெக்ட் பண்ணோம் அப்புறம் என்னவாம் அவருக்கு..?"




"அது.. காலையில தான் கலெக்ட் பண்ணனுமாம்.. ஈவினிங் எல்லாம் கலெக்ட் பண்ண கூடாதாம்... நான் பிரெஷா இருக்கும்ன்னு பிரிட்ஜ்ல வேற வச்சுட்டேன் இப்ப அதுக்கும் சேர்த்து திட்றாரு .." என்றதும் அதை கேட்ட கவிதா,



"பிரிட்ஜில் வைச்சுட்டியா? லூசுடி நீ.. வெளியவே வச்சிருக்க வேண்டியது தானே ..?"




"வெளிய வெச்சாலும் அந்த ஆளு வேண்டாம்னு தான் சொல்லி இருப்பாரு... அவர் தான் சொல்றாரு விடிய காலைல தான் செடியை கலெக்ட் பண்ணனுமாமீ.. கண்ட நேரத்துக்கு எடுத்தா எதையும் பண்ண முடியாது அப்படின்னு திட்டிட்டு போறாரு ..கடுப்பா வருது.." என்றதும் பெருமூச்சுடன் அவளை பார்த்த கவிதா,



" பேசாம கைடை மாத்திடு." என அசால்ட்டாக கூறியதும் அவளை அதிர்ந்து போய் பார்த்த நறுமுகை,



"என்னடி சொல்ற ..?"






"சாமுவேல் அண்ணா தான் சொன்னாரு ..கைடு மாத்துறா தான் இருந்தா நம்ம நாகராஜன் சார் கிட்ட சொல்லலாம்னு.. பேசாம சொல்லிடு.. எனக்கு செட் ஆகல வேற யாராவது அரேஞ்ச் பண்ணுங்கன்னு.." என்றதும் அதில் குழப்பமான நறுமுகை,



" அது எப்படி கவிதா நல்லா இருக்கும்.. சார் ஆளுக்கு ஒருத்தரை போட்டு இருக்காரு.. நான் மட்டும் போய் இவர் கூட செட்டாகலைன்னு சொன்னா அது தப்பாயிடாதா..?" என்றதும் கவிதாவிற்கும் அதுதான் சரி எனப்பட்டது..



"ம்ம்ம்... அதுவும் கரெக்ட் தான்டி.. நம்ம இன்னும் என்ன மிஞ்சிப்போனா ஆறு மாசம் இருப்போம்.. அதுக்கப்புறம் இந்த காலேஜ் விட்டே போயிடுவோம் ..இப்போ போய் எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போடி .நம்மளுக்கு காரியம் ஆகணும் இல்ல .." என கவிதா நறுமுகைக்கு அறிவுரை வழங்கிவிட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டாள் ..



அந்த நாள் முழுவதும் நறுமுகைக்கு எந்த வேலையும் இல்லாததால் சிவனேவென கிடந்தாள்...அங்கு பிஎச்டி செய்யும் சிலர் அங்கு வந்து வேலை பார்த்து விடவும் அவர்களுடன் பேச்சு கொடுத்து சிரித்தவாறு இருந்தாள் நறுமுகை..



அச்சமயம் லேப்பை கடந்து சென்ற விக்ரமின் பார்வையில் அக்காட்சி விழுந்திட அவ்வளவுதான் தீ பார்வையினால் அவளை பொசுக்கி எறிந்து விட்டான் விக்ரம் ...



மதிய உணவு முடிந்ததும் எந்த வேலையும் இல்லாததால் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவளிடம் வந்து நின்று விக்ரம் ,



"நறுமுகை.." என்கிற அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து நின்றிட,



" வாங்க.." என்று விட்டு அவன் பாட்டிற்கு எங்கேயோ சென்றான்... வேக வேகமாக அவன் பின்னாடியே சென்றாள் நறுமுகை...



அவன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தாள் நறுமுகை..



அவன் ஏதேனும் கூறுவான் என அவனது வாயவே பார்த்துக் கொண்டிருந்தாள்.



விக்ரமோ லேப்டாப்பில் கவனம் பதித்தவாறு,



" என்ன பண்ணிட்டு இருக்கீங்க நறுமுகை ..?"



"அது.. நீங்க தானே சார் கூப்பிட்டீங்க ..." என்றதும் ஒரே ஒரு பார்வை அவளை பார்த்துவிட்டு மீண்டும் லேப்டாப்பில் கவனம் பதித்தவன்,



" லேப்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேட்கிறேன் ..?"




"செடி கொண்டு வந்த அப்புறம்தானே எல்லாம் பண்ணனும் ...அதுவரைக்கும் எதுவும் பண்ண முடியாது.. நீங்கதான் விடிய காலைல கொண்டு வர சொல்லிட்டீங்க..." என்ன நீண்ட விளக்கத்தை அவள் பாட்டிற்கு கொடுக்கவும் அவள்‌ முழுதாய் பேசி முடிக்கும் முன்னமே ஒற்றை கரம் நீட்டி,




" நிறுத்துங்களேன்.. நான் என்ன கேட்கிறேன் நீங்க என்ன பதில் சொல்றீங்க..?



முதல்ல ஒருத்தவங்க கேள்வி கேட்டா அதை முழுசா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுங்க.. உங்களை என்ன கேட்டேன்..?? லேப்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு.. அதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க..?"

என அவன் முகம் சாதாரணமாக இருந்தாலும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அத்தனை அழுத்தத்துடன் அவள் மீது வந்து பாய்ந்தன ...



அதில் வெலவெலத்து போன நறுமுகை,



" இ..இ.ல்லை.. சார் ... நீங்க செடி நாளைக்கு கொண்டு வர சொன்னதால் இப்ப நான் சும்மாதான் இருக்கேன்னு சொல்ல வந்தேன்.." என்றதும் உஷ்ண மூச்சை இழுத்து விட்டவன்,



" எதும் என்னனு கேட்டா தெரியாது... செடி எப்போ எடுக்கணும்னு தெரியாது ... எடுத்தச் செடியை எப்படி ஸ்டோர் பண்ணி வைக்கணும்னு தெரியாது.. ஒரு கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும்னு தெரியாது.. ஆனா மத்தவங்க கிட்ட நல்லா சிரிச்சு பேச மட்டும் தெரியும் அப்படித்தானே நறுமுகை..." என சிரித்த வாக்கில் கேட்டவனின் முகம் நொடியில் அவளை அனலாய் பார்த்து ,



"கொஞ்சம் கூட வெக்கமாவே இருக்காதா உங்களுக்கு? " என நேரடியா அவள் முகம் பார்த்து கேட்டிடவும் அவ்வளவுதான் நறுமுகைக்கு முகமே விழுந்து விட்டது,



" சா...சா..ர் ..."



"என்ன சார் எம்எஸ்சி ப்ராஜெக்ட் பண்ண போறோம் ஒரு நாலெட்ஜ் இருக்கா உனக்கு? நானும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு பார்க்கிறேன்.. இவ்வளவு நேரம் சும்மா தானே உட்கார்ந்திருந்த... லைப்ரரிக்கு போய் ஏதாவது புக் எடுத்து படிப்போம் ... இல்ல அட்லீஸ்ட் உன் போன்லையாவது நம்ம பண்ண போற ப்ராஜெக்ட் பத்தி ஏதாவது உருப்படியான விஷயத்தை பார்ப்போம்னுலாம் இல்லை..

அப்படியே வெட்டி முண்டம் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க..??



உன் கூட படிக்கிற பொண்ணு தானே அந்த கவிதா ..பார்க்கறல சாமுவேல் ஒன்னு ஒன்னையும் சொல்லிட்டு போயிட்டே இருக்கான்.... அது அவ்ளோ பக்காவா பண்ணுது.. அந்த பொண்ணுக்கு கற்பூர புத்தி.. நீயும் இருக்கியே ..?"



என அடிக்குரலில் சிறியவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நறுமுகையின் தன்னம்பிக்கையை மொத்தமாய் உடைத்து எரிந்தது...



தலை குனிந்து நின்றிருந்த அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் குளம் கட்டி விட்டது..



தன் முகத்தை அவனுக்கு காட்டாது அசையாது நின்றவளை அழுத்தமாய் பார்த்தவனுக்கு அவள் மீது அப்படி ஒரு வெறுப்பாய் போய்விட்டது..


" ஒரு வேலையையும் உருப்படியாய் செய்ய தெரியலை... இதுல நீ எல்லாம் எப்படித்தான் ப்ராஜெக்ட் முடிக்க போறியோ எனக்கு தெரியல.. உன்னை போய் என் தலையில கட்டி வச்சிருக்காங்க பாரு..ச்சை..." என மீண்டும் மீண்டும் அவள் மீது அமிலமாய் ஊற்றியவனது வார்த்தைகள் நறுமுகையே இன்னும் இன்னும் நிலைகுலையவே செய்தது ..



ஒரு பேப்பரில் எதையோ எழுதியவன் அவளிடம் நீட்டி,



" இதுல இருக்குற கொஸ்டின்ஸ்க்கு எல்லாம் ஆன்சர் தேடி எழுதிட்டு வாங்க.." என ஒரு ஐந்து கேள்விகளை எழுதி இருந்தான்..




அது என்னவென்று கூட பார்க்காதவள் சரியென தலையை மட்டும் அசைத்து விட்டு அந்த பேப்பரை வாங்கிக் கொண்டு வந்தவள் நீரே லேபுக்கு செல்லாது கழிப்பறைக்குள் புகுந்து அங்கு கதவை தாழ் போட்டுவிட்டு அழுதாள்... கதறி கதறி அழுது கரைந்தாள் நறுமுகை...
படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏 🙏



கருத்துத்திரி
 
அத்தியாயம் 5



நேரே லைப்ரரிக்கு தளர்ந்து போய் வந்து சேர்ந்திருந்தாள் நறுமுகை...அங்கு இருப்பதோ மூன்று நான்கு கணிணிகள் தான்..


அனைத்திலும் சீனியர்களும் ஜூனியர்களும் வேலை பார்த்துக் கொண்டிருக்க , அவள் திரும்பி செல்லலாம் எனும் நேரம் ஒருவர் எழுந்து வெளியேறி விட்டிருந்தார்.. சரியென அங்கு சென்று அமர்ந்தவள் கம்ப்யூட்டரில் தனக்குத் தேவையானதை தேடலானாள்...

அச்சமயம் ,



“என்னம்மா உங்க கைட் உன்னை தேட சொல்லிவிட்டாரா ?”
என்கிற குரலில் தலை திருப்பி பார்த்திட, சாமுவேல் தான் அமர்ந்திருந்தான்.



“ஆமாண்ணா அஞ்சு கொஸ்டின் எழுதிக் கொடுத்து ஆன்சர் தேடி எடுத்துட்டு வர சொல்லி இருக்காரு...” என சோர்வாக கூறியதும் சாமுவேலோ கணினியில் வேலை பார்த்தவாரு,



“அவன் அப்படித்தான்மா...சரியான நச புடிச்சவன் ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பான்...வேலை சொல்லிட்டே இருப்பான் பார்த்து கவனமா இருந்துக்கோ...”
என அவளுக்கு ஆதரவாய் பேசியதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.. கண்களை சிமிட்டி கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவள் தனக்குத் தேவையானதை தேட துவங்கிட, அவள் நேரத்திற்கு நெட்வொர்க் வேறு சரியாக கிடைக்கவில்லை..




தலையை தேய்ப்பதும், கைகளை பிசைவதுமாய் அமர்ந்திருந்தவளை பார்த்த சாமுவேல்,



“ கொஸ்டீன்ஸ் காட்டு என்னன்னு நான் பார்க்கிறேன்..” என்றதும் அவனிடம் நீட்டினாள். அதை முழுவதுமாய் பார்த்த சாமுவேல்,



“ இரு நானே தேடி தரேன்..” என அவளுக்கு எளிதாக இருப்பதை பார்த்து பார்த்து தந்திட, தனக்கு பதில் கிடைத்து விட்ட ஆர்வத்தில் நிரல்யாவும் திரையில் இருப்பதை பார்த்து எழுத துவங்கியிருந்தாள்.




அவள் ஒவ்வொன்றையும் அவசர அவசரமாக முடிக்கும்போது அடுத்தடுத்து தேடித்தந்த சாமுவேல் அவளை சற்று நெருங்கி அமர்ந்து விட்டிருந்தான்.. எதையோ ஒன்றை தேட சட்டென அவளைத் தாண்டி மவுசை தொடும் நேரம் நறுமுகையின் மீது அவனது பக்கவாட்டு கரம் பட்டு விட்டது..




அதில் திடுக்கிட்டு பின்வாங்கிய நறுமுகை அவனை அதிர்ந்து பார்த்திட, ஆனால் சாமுவேலோ விழிகளை சுருக்கி அத்தனை ஆர்வமாய் பதில் தேடுவதை பார்த்ததும் ஒரு வேலை தெரியாமல் கூட தன்னை தொட்டிருக்கலாமோ என்கிற எண்ணத்தில் சற்று கவனமாய் எழுத துவங்கினாள் ..


சாமுவேல் அவள் குனிந்து எழுதுவதை பார்த்தவன்,



“ எழுதிட்டியா?” என அவளது காதோரம் குனிந்து வந்து அத்தனை நெருக்கமாய் கேட்டதும் பதறிக் கொண்டு எழுந்தே விட்டிருந்தாள் நறுமுகை ..



அவனை அழுத்தமாய் பார்த்துவிட்டு விறு விறுவென வெளியேறி விட்டாள்..
முதல் முறை இதுபோல் நடப்பதால் கை காலெல்லாம் படபடவென நடுங்க துவங்கி விட்டது அவளுக்கு.




செல்பவளது முதுகை இதழ் வளைத்து பார்த்த சாமுவேல் பின்பு அந்த கணினியை க்ளோஸ் செய்து விட்டு தனக்கான வேலையை பார்க்கத் தொடங்கி விட்டான்..



ஏற்கனவே மனம் தளர்ந்து போய் இருந்தவளுக்கு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திடவும் இன்னும் அழுகை அதிகமானது தான் மிச்சம்..



அழுதபடி அவள் படியேறி வந்திட அச்சமயம் விக்ரமும் தனது கைச்சட்டையை மடித்தவாறு கீழே இறங்கி வந்தவன் தலைகுனிந்து வந்தவளை விழிகள் சுருக்கி பார்த்தவன்,



“ ஆன்சர் எழுதிட்டிங்களா ?” என்கிற கேள்வியில் பேய் அறைந்தது போல உடல் அதிர அவனைப் பார்த்த நறுமுகைக்கு தூக்கி வாரி போட்டது.. அவள்தான் எதுவும் செய்யவில்லையே



“சா.. ர்..” என்றவளை அழுத்தமாய் பார்த்தவன் பேண்ட் பாக்கெட்டில் இரு கரங்களையும் விட்ட படி,



“ கொடுத்த கொஸ்டின்ஸ் எல்லாத்துக்கும் ஆன்சர் எழுதிட்டீங்களானு கேட்டேன் ?” என்றதும் கைகளை பிசைந்தபடி இருந்த நறுமுகைக்கு அவனை தலை உயர்த்தி பார்க்கவே அத்தனை பயத்தை தந்தது..




அவனது ஒற்றைப் பார்வையிலேயே அவளது சர்வமும் அடங்கி ஒடுங்கி விட்டது போல உணர்ந்தவளுக்கு பதில் கூறுவதற்கு ஒரு வார்த்தையும் வெளியவே வரவில்லை. அவள் பேசாது இருப்பதை கண்டவன் தலை சாய்த்து,



“ உங்களை தான் கேட்கிறேன் நறுமுகை.. பதில் எழுதிட்டீங்களா?”

என்றதும்,



“ சார்.. அது எழுதலை “ என்றதும்,




“ சரி.. கொஸ்டின் பேப்பர் எ ங்க?” என் கேட்டதும் அவளுக்கு அய்யோடா என்றானது..

சாமுவேல் அவ்வாறு நடந்து கொண்டதும் சட்டென வந்து விட்டாள் அல்லவா!.. இதில் எங்கனம் அவன் தந்த பேப்பரை வேறு தேடிக்கொண்டிருப்பது ..



“அது சார் நான் லைப்ரரில வச்சிருக்கேன்’



“ அங்க வச்சுட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நறுமுகை?” எனக் கேட்டதும்,



“ அது ரெஸ்ட் ரூம்காக வந்தேன் சார்” என்றவளை புரியாது பார்த்தவன்,



“ லைப்ரரிக்கு வெளியவே ரெஸ்ட் ரூம் இருக்கே ?” என்றதும் மீண்டும் அவளுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாததால்,



“ அது ரெஸ்ட் ரூம் அங்க போயிட்டு தண்ணி குடிப்பதற்காக மேல வந்தேன் சார்” என்றவளை சலிப்பாக பார்த்தவன்,



“ என்னவோ பண்ணுங்க.. ஆனா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க நறுமுகை.. ஒரு வேலையும் பண்ணாம எப்படித்தான் இப்படி வெட்டி முண்டமா இருக்க முடியும் தெரியல.. என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது ஈவினிங் குள்ள எனக்கு அந்த அஞ்சு கொஸ்டின்ஸ்கும் ஆன்சர் கொண்டு வரணும் புரிஞ்சுதா ?” என்று விட்டு படி இறங்கி சென்றவனை தளர்ந்து போய் பார்த்த நறுமுகைக்கு தலையை வெடித்து விடும் உணர்வு தான்...



அவளும் எவ்வளவு தான் தாங்குவாள்.. ஏற்கனவே அவன் திட்டி விட்டானே என்கிற எண்ணத்தில் இருந்தாள் ..



இப்போது சாமுவேல் அவ்வாறு நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இப்போது மீண்டும் சுபாஷ் அவளிடம் பதில்களை எழுதிக் கொண்டு வருமாறு கூறியதும் மனம் நொந்து போய்விட்டாள் நறுமுகை..



தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் லைப்ரரிக்கு செல்ல அங்க நல்ல வேலை சாமுவேல் கிடையாது..


பின் மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து பார்த்திட அவள் எழுதிய பேப்பர் அங்கு இல்லை... அங்கும் இங்கும் தேடியவளை பார்த்த அங்கிருந்த நூலக
காப்பாளர்,



“ என்னம்மா எதை தேடுற?” என கேட்டதும்,



“ அது இங்க நான் ஒரு பேப்பர் கொண்டு வந்த.. நான் கொஸ்டின்ஸ் எழுதி இங்க தான் வச்சிருந்தேன் காணோம் “ என்றதும்



"அப்படியாம்மா.. இங்க ஏதும் பேப்பர் நானும் பாக்கலையே.. ஏதாவது இருந்தா கண்டிப்பா எடுத்து வச்சிருப்பாங்க பசங்க... ஆனால் ஏதும் இல்லையே..”



“இல்ல.. இங்க தான் வச்சிருந்தேன் சார்.. கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்..’ என்றவளின் பேச்சுக்கு அவரும் ஒருமுறை தேடிப் பார்த்தவர்,



“ இல்லம்மா எங்குமே இல்லை .. சப்போஸ் யாராவது எடுத்து இருக்காங்களானு கேட்டுட்டு சொல்றேன் “ என்றதும் தலையில் கை வைக்காத குறையாய் வெளிவந்தவளுக்கு வேறு வழியே இல்லை சாமுவேலிடம் தான் கேட்டாக வேண்டும்..



பேப்பர் மட்டும் கிடைக்கவில்லை என்றால் இன்னும் அதிக திட்டுகளை விக்ரமிடம் வாங்க வேண்டியதாக இருக்கும் என்பதால் மனமே இல்லாது சாமுவேலை தேடிச் சென்றாள் நறுமுகை..



கவிதா அவனுடன் இருப்பதை கண்டவள் சற்று ஆசுவாசமடைந்தவளாய் வேகமாக
சென்று,


“ அண்ணா “ என்றதும் கவிதாவும் சாமுவேலும் ஒருசேர திரும்பி பார்த்தனர்..


‘லைப்ரரில.. ‘ என பேச்சினை எடுத்ததும் சாமுவேலின் விழிகள் அவளை அழுத்தமாய் பார்த்திட, அதை அலட்சியம் செய்த நறுமுகை,



“ கொஸ்டின் எழுதி இருந்தேனே அந்த பேப்பர் பார்த்தீர்களா?” என்றதும் அவளை முறைத்து விட்டு,



“ அதெல்லாம் நான் பார்க்கல.. கவிதா அதை எடுங்க..” என குரலிலேயே அத்தனை கோபம் கொப்பளித்தது சாமுவேலிற்க்கு.. அதற்காக விட்டு சென்றிட முடியாது அல்லவா ..!



“அண்ணா நீங்களும் பக்கத்துல தான் இருந்தீங்க, நீங்க சொல்ல சொல்ல தான் நான் ஆன்சர் எழுதினேன் அந்த பேப்பரை பார்த்தீர்களா?” என்றதும் அவளை சலிப்பாக பார்த்தவன்,



“ நீ எடுத்துட்டு வந்த பேப்பரை நீ தான் பத்திரமா வச்சுக்கணும் நீ பாட்டுக்கு தூக்கி போட்டு எழுந்து போய்கிட்டே இருந்தனா நான் அந்த பேப்பரை பொறுக்கி வைக்கணுமா என்ன?” என முகத்தில் அடித்தாற் போல பேசிடவும் நறுமுகையின் முகம் கருத்து விட்டது..



கவிதாவோ ஒன்றும் புரியாதவளாய் இருவரையும் மாறி மாறி பார்த்தவள் ,



“ என்னாச்சுடி முகை?”| என்றதும் சாமுவேல் அவளிடம் திரும்பி,




“ கவிதா உங்களுக்கு இங்க வேலை நடந்துட்டு இருக்கு வெட்டியா அவ கிட்ட பேசணும்னு நினைச்சீங்கன்னா நீங்க போய் பேசிட்டு வரலாம்.. “ என்றதும் அதில் பயந்து போன கவிதா,



“ இல்லண்ணா .. அதெல்லாம் ஒன்னும் இல்ல..” என நறுமுகை பார்வையாலே போவென கூறிவிட்டு தன் வேலையை பார்க்கலானாள்.. நிச்சயம் சாமுவேல் தான் அந்த பேப்பரை எடுத்து இருக்க வேண்டும் என அறிவாள் நறுமுகை..



ஆனால் அதை எப்படி விக்ரமிடம் கூற முடியும்?



கூறி தானே ஆகவேண்டும்..




விக்ரமை தேடி அவனிடம் எப்படியேனும் தன் நிலையை புரிய வைத்துவிடலாம் என்கிற நப்பாசையில் அவனைத் தேடிச் சென்றாள்.. அருகில் இருக்கும் அறையில் அவன் இருக்கிறானா என பார்த்திட , அங்கு இல்லை என்றானதும் , மீண்டும் கீழ் இறங்கி ஒவ்வொரு தளமாக தேடினாள் ..



கிட்டத்தட்ட அந்த நான்கு மாடியையும் இன்று ஒரு நாள் மட்டும் அத்தனை முறை ஏறி இறங்கி இருப்பாள் நறுமுகை..
சோர்ந்து போய் கீழே இறங்கி வந்தவள் அங்கு சென்றிருந்த ஒருத்தரிடம்,



“ விக்ரம் சாரை பாத்தீங்களா ?”



“அவர் கேண்டின்ல இருக்காரு” என்றதும் அப்பாடா என வேக வேகமாக கேண்டினை நோக்கி சென்றாள் .. கேண்டீன் எனக் கூறிவிட்டான். ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் தான் மூலைக்கு கேண்டின் இருக்கிறது..




அதனால் வழக்கமாய் செல்லும் கேண்டீன் பக்கம் சென்று பார்த்திட அங்கு அவன் இல்லை..
கடவுளே என எண்ணியவாறு அருகே இருக்கும் மற்ற கேண்டினுக்கு சென்றிட அங்கு தன் சகாக்களுடன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தான் விக்ரம்..



அவனைப் பார்த்ததும் கைகளை பிசைந்தபடி நின்று விட்டாள் நறுமுகை.. செல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கதுடன் அவள் விக்ரமையே பார்த்தவாறு இருப்பதை கண்ட அவனது நண்பர்கள்,



“ என்ன வேணும்?” என நறுமுகையை பார்த்து கேட்டதும் பக் என்று ஆனவள் இல்லை என தலையசைத்து விட்டு விக்ரமை பார்க்க, அவனும் தலை திருப்பி பார்த்தவன் நறுமுகையே அங்கே எதிர்பார்க்கவே இல்லை..



அங்கேயே நின்று இருந்தவாறு என்ன என கேட்டதும் நறுமுகை மற்றவர்களை பார்த்தவள் விக்ரமை பார்த்து,



“ அது.. சார்.. “ என்றதும் சற்று அவளை நெருங்கி வந்த விக்ரம்,



“ எதுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்க வெட்டியா தான் இருக்கியா என்ன?” என அதற்கும் அவளை கொட்டு வைத்திட,



“ இல்ல சார்.. நீங்க எழுதி தந்த பேப்பரை மிஸ் பண்ணிட்டேன்..” என அப்பாவியாய் கூறியவளை கண்டு பல்லை கடித்தவன் கண்களை மூடி தன் நெற்றியை அழுத்த தேய்த்துக்கொண்டு ,



“அது எப்படி ஒருவேளையும் உன்னால உருப்படியா செய்யவே முடியாதுனு நிமிஷத்துக்கு நிமிஷம் நிரூபிச்சுக்கிட்டே இருக்க?” என நறுக்கென்று கேட்டதும் நறுமுகைக்கு அழுகையே வந்து விடும் போலானது..



விக்ரமின் நண்பர்கள் வேறு அவர்கள் இருவரை தான் பார்த்தவாறு இருந்தனர்..



“இல்ல சார் நான் லைப்ரரில எடுத்துட்டு போய் எழுதலாம்னு தான் போன சாமுவேல் தான்..” என அவள் மேற்கொண்டு என்ன பேச வருகிறாள் என்பதை கூட கேட்டுடாது ,



“என்ன சாமுவேலா?.. ஏன் உனக்கு எதையும் சர்ச் பண்ணி எழுத கூடவா தெரியாது? அதுக்கும் ஒரு ஆள் வேணுமா உனக்கு?” என கேட்டதும் நறுமுகையின் மொத்த தெம்பும் உறிஞ்சி விட்டது போல் உணர்ந்தவள் தலை தொங்க நின்று விட்டாள்.. இதற்கு மேல் அவளிடம் விளக்கம் கொடுத்து போராட மனதிலும் சரி உடம்பிலும் சரி தெம்பே இல்லை ...



ஒரு கரத்தை பேண்டில் நுழைத்திருந்தவன் மற்றொரு கரத்தை அவள் முன்பு விரல் நீட்டி எச்சரித்து,



“ லுக் நறுமுகை.. உங்களுக்கு இங்க ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்லனா தாராளமா நீங்க போய்க்கிட்டே இருக்கலாம்.. ஸ்ட்ரைட்டா நாகராஜன் சார் கிட்ட போய் சொல்லிடுங்க.. நான் இங்க ஆட்டம் போட மட்டும் தான் வந்து இருக்கேன்.. எனக்கு ப்ராஜெக்ட் பண்ண இஷ்டம் இல்ல அப்படின்னு.. பணம் ஏதாவது கொடுத்துக் கூட பாஸ் பண்ணிக்கோங்க.. என் தாலியை வந்த அறுக்காதீங்க..!” என வார்த்தைகளை கடித்து துப்பவியன்,



“ போய் வீட்டுக்கு கிளம்பி போங்க” என்று விட்டு சென்று விட்டான்..



செல்பவனது முதுகை கூட நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாதவளாய் தடுமாறி நடந்து சென்றாள் நறுமுகை..
அவன் நண்பர்களும்,



“ என்னடா அந்த பொண்ணை புடிச்சு திட்டிக்கொண்டு இருக்க?” என கேட்டதும் கடுப்பாய் நண்பன் கையில் இருந்த டீயை வாங்கி குடித்தவன் ,



“எரிச்சல் ம** இருக்குடா.. ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது அந்த பொண்ணுக்கு.. எம்எஸ்சி பைனல் ப்ராஜெக்ட் ஒழுங்கா பண்ணனும்ங்குற எண்ணமே கிடையாது.. வெட்டியா நல்லா அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்குது.. அந்த பொண்ணுலாம் எதுக்கு தான் காலேஜ் வருதுனே தெரியலமா.. பெத்ததுங்க ஒழுங்கா வளர்க்கணும் அவங்க ஒழுங்கா வளக்காம விட்டுட்டு இப்படி அனுப்பி விட்டுட்டு நம்ம உயிரை தான் வாங்குதுங்க..’
என நண்பனது கோப முகத்தை கண்டவர்கள்,



“ டேய் விடுடா .. அந்த பொண்ண பார்த்தாலே பாவமா இருக்கு அதை போய் புடிச்சுட்டு திட்டிட்டே இருக்க? எல்லாரும் இன்டலிஜெண்ட்டாவே இருப்பாங்களா என்ன.. ?” என்றதும் சலிப்பாக தலையாட்டியவன் ,



“ என்னமோ சரியான கழுத்தறுக்கிற கேசா இருக்குது.. தீசஸ் முடிச்சோமா போனமானு இருக்கலாம் பார்த்தா.. எல்லாம் இந்த நாகராஜன் சார் சொல்லணும்.. அவருக்காக தான் எதுவும் பண்ண முடியாம இருக்கேன் ..”என்றவனை நண்பர்கள் தான் திசை திருப்பி இருந்தனர்..



படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் .. நன்றி !




கருத்துத் திரி
 
அத்தியாயம் 6




மறுநாள் முற்றிலும் ஒரு முடிவுடன் வந்திருந்தாள் நறுமுகை..



அவள் லேபிற்கு செல்லவில்லை, வெளியே யாரோ ஒருத்தற்காக காத்துக் கொண்டிருந்தாள்..



அந்நேரம் படியில் ஏறி வந்த விக்ரமை பார்த்ததும் சட்டென பரபரப்பானவள் இரண்டடி எடுத்து வைத்து,



“ சார்..” என அழைத்ததும் அந்த நிசப்தமான இடத்தில் அவளது மெல்லிய அழைப்பு அவனது செவியை அடைந்திருந்தது..
விழிகள் சுருக்கி தலை திருப்பி பார்த்த விக்ரம்,



“ லேப்புக்கு போகல? இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என கேட்டதும் தலைகுனிந்த நறுமுகை,



“ நான் ப்ராஜெக்ட் பண்ணல சார்” என ஒரு வழியாய் கூறியதும் விக்ரமின் விழிகள் இரண்டும் கூர்மையாய் அவளை அளவிட்டது..




அவன் ஏதேனும் கூறுவான் என எதிர்பார்த்த நறுமுகை அவன் பதில் ஏதும் கூறாததால் மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை தயக்கமாக பார்த்தவள்,



“ நான் நாகராஜன் சார் கிட்ட சொல்லிக்கிறேன் சார்.. எனக்கு எதுவும் வராது.. தேவையில்லாம உங்க டைமும் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு சொல்லிடுறேன்..” என பேசும் போதே அவளது கண்கள் சிவந்து கலங்க ஆரம்பித்தது..



தலையாட்டிபடி ஒரு கரத்தை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து தலை சாய்த்து அவளைப் பார்த்த விக்ரம்,



“ ப்ராஜெக்ட் பண்ணாம என்ன பண்ண போறீங்க?” என்றதும் விரக்தியாய் இதழ் வளைத்து சிரித்து தலை குனிந்தவள்,



“ காலேஜ் விட்டு நின்னுடலாம்னு இருக்கேன்” என முட்டாள்தனமான முடிவை எடுத்தவளை பார்த்து பெருமூச்சுடன் முகத்தை திருப்பிக் கொண்டவன்,



“ம்ம்ம்.. அப்புறம்?”




“எனக்கு எதுவுமே தெரியல சார்.. கண்டிப்பா எனக்கு ப்ராஜெக்ட் எல்லாம் பண்ண முடியாது, எனக்காக நீங்களும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு.. வீட்லயும் எனக்கு அலையன்ஸ் பாத்துட்டு இருக்காங்க.. அதனால நான் பாதியிலேயே போயிடலாம்னு இருக்கேன் “ என்றதும் விக்ரம் இப்போது மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்,



“ சோ .. நீ ப்ராஜெக்ட் பண்ணாததுக்கு இது ஒரு காரணம் இல்ல?” என்றதும்,



“ சார்..” என இழுத்தவள் முன்பு கைநீட்டி தடுத்த விக்ரம்,




“ கல்யாணம் பண்ண போறதால தான் ப்ராஜெக்ட் பண்ண மாட்டேன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாமே நறுமுகை “ என்றதும் வேகமாக மறுப்பாய் தலையசைத்தவள் ,



“அப்படி இல்ல சார்.. எனக்கு தான் எதுவுமே வரமாட்டேங்குதே சார்.. அதான் .. எதுக்குனு ..” என மென்று முழுங்கியவளை சலிப்பாக பார்த்த விக்ரம்,



“ யுனிவர்சிட்டில உனக்கு படிக்கறதுக்கான சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதை எப்படி யூஸ் பண்ணிக்கனும்னு நினைக்கறதை விட்டுட்டு பாதியிலேயே போயிட்டா எல்லாம் சரியாயிடுமா சொல்லு?... இப்படி பாதிலேயே போறதுக்கு எதுக்கு நீ படிக்கணும்? அதுக்கு பதிலா படிக்கணும்னு ஆசைப்படுறவங்க யாருக்காவது ஒருத்தருக்கு கிடைத்திருக்கும்ல உன்னோட சீட்.. அது எதை பத்தியும் கவலை கிடையாது உனக்கு.. ஒன்னு தெரியலனா அவ்வளவு தான் விட்டுட்டு போயிடனும்ல..? உன் கூட படிக்கிறவங்களை போய் எல்லாரையும் கேட்டு பாரேன்.. ஒரு ப்ராஜெக்ட் பண்றாங்கன்னா அவங்களுக்கு ஸ்டார்டிங்ல இருந்து எண்டிங் வரையும் எல்லாமே தெரியுமானு ?”



“தெரியாது தான் சார்.. ஆனா எனக்கு பேசிக் கூட தெரியாதே அதுக்கு நான் என்ன பண்றது? நேத்து நீங்க கொஸ்டின் எழுத சொல்லி பேப்பர் கொடுத்தீங்க ஆனா அதை கூட என்னால பண்ண முடியல “ என சிறு தேம்பலுடன் கூறியதும் விக்ரம் ,




“அதெல்லாம் விடுங்க.. இன்னைக்கு என்ன ஒர்க்? அதை மட்டும் பாருங்க.. தேவை இல்லாம இதெல்லாம் நெனச்சுக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதீங்க.. ஒரு விஷயம் தெரியலனா அதை எப்படி கத்துக்கலாம்னு தான் பார்க்கணுமே தவிர நம்மளுக்கு தெரியல அதனால விட்டுட்டு வந்துடலாம்னு நினைக்க கூடாது புரிஞ்சுதா..?

இப்ப நீங்க இந்த படிப்பை வேண்டாம் என்று பாதில விட்டுட்டு போறீங்க.. சப்போஸ் பியூச்சர்ல நம்ம படிச்சிருந்தா அட்லீஸ்ட் ஒரு பத்து பேருக்காது சொல்லிக் கொடுக்கலாமே ஒரு டியூஷன் எடுக்கலாமேனு உங்களுக்கு தோணூம் அதனால பல்ல கடிச்சுக்கிட்டு இந்த ப்ராஜெக்ட் டை பண்ண பாருங்க..” என்றதும் நறுமுகைக்கு ஐயோடா என்றானது..




இவனிடம் கூறிவிட்ட பின்னர் நாகராஜன் இடமும் பேசிவிட்டு கல்லூரியை விட்டு சென்ற சென்று விட்டுவிடலாம் என எண்ணி இருந்தவள் துத்தி செடியை கொண்டு வரவே இல்லை..
இப்போது இவன் இவ்வாறு பேசிடவும் பக் என்று ஆனது அவளுக்கு.. நாகராஜன் இடம் கூட பேச வேண்டாம் விக்ரமிடம் பேசினால் போதும் போல அத்தனை எளிதாக மனதை மாற்றி விட்டானே!..



அவன் கூறிய பின்னர் கூட கைகளை பிசைந்து கொண்டு நின்றவளை கேள்வியாக பார்த்தவன்,



“ இன்னும் என்ன நின்னுட்டு இருக்கீங்க?.. வாங்க லேபுக்கு” என்றதும் அவள் ஏதோ கூற வர அதை எதையும் கவனிக்காது முன்னே சென்றவன் பின்னாடியே சென்ற நறுமுகைக்கு பயம் அடிவயிற்றில் கலக்கியது ..



உள்ளே நுழைந்தவன் தன்னுடைய லேப்டாப் பையையும் அருகே மற்றொரு கவரையும் மேடையில் எடுத்து வைத்தான்..



நறுமுகையும்,



“ சார் அது வந்து..”



“துத்தி எடுத்துட்டு வந்தீங்களா?” என அவள் எதிர்பார்த்த கேள்வியை கேட்டதும், நறுமுகைக்கு அழுகை வராத குறையாய்,



“ உங்ககிட்டையும் சார் கிட்டயும் சொல்லிட்டு காலேஜ் விட்டு நிக்க போறேன்னு நெனச்சு.. “



“ நெனச்சு..? சொல்லுங்க.. “




“ அதனால எடுத்துட்டு வரல சார்..’ என்றவளை அழுத்தமாக பார்த்தவன் கொண்டு வந்த கவரை எடுத்து நீட்டி,



“ இதுல துத்தி தான் இருக்கு..புடிங்க’ என்றதும் நறுமுகையின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..



“நிஜமாவா..?” என்றவள் கவரை பிரித்திட அனைத்தும் அத்தனை பிரஷ்ஷாக இருந்தது..
ஒரு இலையிலும் கூட சிறு ஓட்டை இல்லாது நன்றாக இருந்தது..




நறுமுகையே ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து,




“ நீங்களா சார் கொண்டு வந்தீங்க?” என்றதும் அவனும் லேப்டாப்பை திறந்தவாறு,



“ம்ம்.. ஆமா .. “




“தேங்க்யூ சார்.. தேங்க்யூ சோ மச்..திரும்ப அந்த இடத்துக்கு போயிருந்தாலும் இந்த அளவு நல்லா இருக்க துத்தி மாதிரி கிடைச்சிருக்காது.. தேங்க்யூ சார்” என்றதும் அவளை தலை திருப்பி அழுத்தமாக பார்த்தவன்,



“ அதில் இருக்கிற இலை தனித்தனியா பிரிச்சு முதல்ல கழுவி காய வையுங்க..” என்றதும் வேகமாக தலையாட்டியவள் அதற்கான வேலைகளை துவங்கினாள் ..




இலைகளை பதமாய் உருவி எடுத்தவள் பின் அவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி ஈரம் போக வைத்தவள் பின்பு அதை நிழலில் உலர்த்தி வைத்தாள் ..



அவள் செய்வதை ஒரு கணம் பார்த்த விக்ரம் தன் கை கடிகாரத்தை ஒரு முறை பார்த்து விட்டு பின் நறுமுகையிடம் வந்து,




“ நல்லா காயனும்.. அடிக்கடி திருப்பி திருப்பி போடுங்க சீக்கிரம் காஞ்சிடும்.. சன்லைட்ல மட்டும் வைக்கக்கூடாது புரிஞ்சுதா?”



“ ஓகே சார்..”



“அப்புறம் என்னென்ன பண்றீங்களோ அதெல்லாம் அப்பப்போ நோட்ஸ் எடுத்து வச்சுக்கணும்.. என்ன இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் யூஸ் பண்றீங்க? இப்ப நம்ம ஏதாவது கெமிக்கல் ஆட் பண்றோம் அப்படினா எவ்வளவு எம்எல் அந்த குவான்டிட்டி எல்லாமே எழுதி வைக்கணும்.. புரிஞ்சுதா?”



“ஓகே சார் .. நான் தெளிவா நோட்
பண்றேன்.. “



“ம்ம்.. அதுக்காக ஒரு நோட்டை ஃபாலோ பண்ணிக்கோங்க..’



“ ஓகே சார்..” என அவன் கூறுவதை கவனமாக உள்வாங்கிக் கொண்டவள் தன் வேலையை தொடர்ந்தாள் ..



கவிதாவும் நறுமுகையிடம் வந்தவள் ,



‘ என்னடி இலை கிடைச்சிருச்சா?’



“ஆமாடி.. சாரே எடுத்துட்டு வந்து கொடுத்தார் கவிதா.. நல்ல வேலை நான் கூட பயந்துக்கிட்டே இருந்தேன்..’



“ நான்தான் சொன்னேன்ல.. லூசு இதுக்கு தான் பயந்துகிட்டு இருந்தியா?” என்றதும் கவிதாவை பார்த்து அழகாய் புன்னகைத்து வைத்தாள்..




அக்கணம் சாமுவேலின் எண்ணம் வந்திட சட்டென கவிதாவின் கைப்பிடித்தவள்,



“ அது.. சாமுவேல் அண்ணா உன்கிட்ட எப்படி நடந்துக்குறாரு?” என்றதும் விழிகள் சுருக்கி தன் தோழியை பார்த்த கவிதா,



“ ஏன்டி அப்படி கேக்குற.. ? நல்லா தான் நடந்துக்குறாரு ஒன்னு ஒன்னையும் நல்லா தெளிவா சொல்லி தராருடி” என்றதும் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கம் இருந்தாலும் தோழியை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும் என்பதால்,



“ சரி டி கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..” என்றதும்,


“ ஏன்டி..?”



“ சும்மாதான் அந்த அண்ணன் பார்வையே ஒரு மாதிரி இருக்கு அதுக்கு தான்.. “




“அவர் எப்படியோ இருந்துட்டு போறாரு .. நம்ம ஒழுங்கா இருக்கணும் அவ்வளவுதான் ஏதாவது ஒன்னுனா அப்படியே நாகராஜன் சார் கிட்ட சொல்லிக்க வேண்டியது தான் விடு பாத்துக்கலாம்..” என்று கூறிய பின்னர் தான் நிம்மதியே வந்தது நறுமுகைக்கு..




தன் வேலையை மிக கவனமாக செய்பவளை தலை திருப்பி பார்த்த விக்ரம் என் தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.. அவனது நினைவில் நேற்று நடந்த நிகழ்வு தான் ஞாபகத்திற்கு வந்தது..




நண்பர்களிடம் பேசி விட்டு அவன் வந்து கொண்டிருந்த சமயம் ஜான் எதிரே வந்தான்..



“ஹாய் டா..” என விக்ரம் கூறியதும் ஜானும் முதலில் பொதுப்படையாக பேசியவன் பின்பு சிறு தயக்கத்திற்கு பின்னர்,



“ அண்ணா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. “ என்றதும் விக்ரமும்,


“ சொல்லுடா.. “



“ நறுமுகை கூட ஏதாவது பிரச்சனையா அண்ணா திட்டிட்டீங்களா?” என தயக்கமாக தான் கேட்டான் ..
அதில் அதிர்ந்து போன விக்ரம்,



“ ஏன் கேட்கிற?” என அதிர்ச்சியுடன் கேட்டு வைத்தான்..



ஏனெனில் சிறிது நேரத்திற்கு முன்பு தானே அவளை திட்டி அனுப்பி இருந்தோம்.. அதற்குள் விஷயம் கசிந்து விட்டதா என்று எண்ணியிருந்தான் விக்ரம்..
ஜான்,



“இல்லண்ணா அவ இப்ப போன் பண்ணி இருந்தா.. ஒரே அழுகை..”
என்றதும் சலிப்பாக ஜானை பார்த்தவன்,



“ பின்ன என்னடா பேசிக்கே தெரியல அந்த பொண்ணுக்கு.. ஒரு செடியை எப்படி கலெக்ட் பண்றதுன்னு தெரியல ரொம்பவே கஷ்டம்.. அந்த கோவத்துல திட்டினேன் அதுக்கு அந்த அம்மாக்கு அழுகை வந்துருச்சாமா..?” என நக்கலாக கேட்டதும், ஜானும்,



“ அப்படி இல்லண்ணா நிஜமாகவே அந்த பொண்ணு நல்லா படிக்கும்..”




“ஜான் நல்லா படிக்கிறது வேற.. அனுபவம் வேற.. டிச்சு மார்க் மட்டும் எடுத்தா பத்தாது நம்ம அதுல என்ன தெரிஞ்சுகிட்டோம்னு தான் முக்கியம்” என்றதும் ஜானும் விடாது,



“ புரியுதுண்ணா ஆனா அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் சாஃப்ட்டா சொல்லுங்களேன்.. கண்டிப்பா செய்வா..”




“டேய்.. அவ கூட ஒரு பொண்ணு இருக்காளே கவிதா.. ஜஸ்ட் சாமுவேல் சொல்றான் அந்த பொண்ணு செய்து.. அண்டர்ஸ்டாண்டிங் தான் ஜான் .. அது இந்த பொண்ணு கிட்ட இல்ல” என்றதும்,



“ அண்ணா அவங்க எல்லாமே பிரண்ட்ஸ் தான் அண்ணா .. அவளை ஒதுக்கி வச்சுட்டாங்கண்ணா .. அதிலேயே அவளுக்கு ஒரு மாதிரி டிப்ரஷன்ல இருக்கா..” என்றதும் விக்ரம் அவனை புரியாது பார்த்து,



“ என்னது பிரண்ட்ஸ்ங்க ஒதுக்கி வச்சுட்டாங்களா..?ஏன்?”
எனக்கேட்டதும் நறுமுகையை பற்றி கூற துவங்கினான் ஜான்....




 
Status
Not open for further replies.
Top