ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'விழி தீயிலொரு தவம்' - கதைத் திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 29




துப்பாக்கி முனையில் இருந்தும் லியோவின் விழிகளில் கொஞ்சமும் பயத்திற்கான சாயல் இல்லை.



"அவ எங்க?" என்று ரொனெல்ட் கேட்க, நக்கலாக சிரித்தானே தவிர பதிலே சொல்லவில்லை அவன்.



அதில் கோபத்தின் உச்சகட்டத்திற்கே சென்றவர் துப்பாக்கியின் பின்புறத்தால் அவன் தலையில் ஓங்கி அடித்து, "இந்த இடம் முழுக்க தேடுங்க, அந்த பொண்ணு எனக்கு வேணும்" என்று அடித்தொண்டையிலிருந்து உறும, அடுத்தகணம் பல அதிகாரிகள் அவளை தேடி அலைந்தனர்.



ஒவ்வொரு குடிசைகளாக நுழைந்து யாழ்மொழியைத் தேட, அவள் இருந்தால்தானே!



ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் ரொனேல்டின் முன்னே வந்து நின்றவர்கள், "அந்த பொண்ணு எங்கேயும் இல்லை சார், நாங்க எல்லா இடமும் தேடி பார்த்துட்டோம்" என்று மூச்சு வாங்கியவாறு சொல்ல, அவருக்கோ மொத்த கோபமும் லியோவின் மீதுதான் தாவியது.



"ஹவ் டேர் யூ..." என்று கோபத்தில் கத்தியவாறு மீண்டும் அவனை அடித்தவர், "இவன நம்ம ப்ரிசன்ல அடைச்சு வைங்க, இவன் வாயாலயே உண்மைய சொல்ல வைக்கிறேன்" என்று தனக்குள்ளேயே ஒரு திட்டத்தை தீட்டிக்கொண்டு வண்டியில் ஏறிக்கொண்டார்.



அடுத்த ஒருமணி நேரத்தில் அடிமைகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையில் கைகள் இரண்டும் கட்டப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தான் லியோ. அவனுடைய உடலெங்கும் அடித்த அடியில் வீங்கிப் போய் காயமாகியிருக்க, இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.



வலியைத் தாங்க முடியாமல் அவன் மெல்ல மெல்ல சுயநினைவை இழக்க ஆரம்பிக்க, "இனாஃப்..." என்று கத்திய ரொனேல்ட் கையில் தடியோடு அவன் முன்னே வந்து நின்றார்.



"ஒழுங்கா நீயே சொல்லிரு லியோ, அவ எங்க? நான் நினைச்சா உன்னை என்ன வேணா பண்ணலாம், உன் உயிர் மேல ஆசை இருந்தா அவள எனக்கு கொடுத்துட்டு நீ ராஜா மாதிரி வாழலாம். பட் நீ அக்செப்ட் பண்ண மாட்டேங்குறியே! போயும் போயும் அந்த அடிமைக்காக வில்லியம கொன்னு என் மேல கைய வைச்சுட்ட. அவ்வளவு சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் விட்டுருவேன்னு நினைச்சியா"



என்று கேட்டுக்கொண்டே அவர் கையிலிருந்த தடியால் அவனை ஓங்கி அடிக்க, வலியில் கத்த கூட உடலில் தெம்பில்லை அவனுக்கு.



"ஒழுங்கா எங்கன்னு சொல்லிரு?" என்று மீண்டும் பற்களைக் கடித்துக்கொண்டு ரொனேல்ட் கேட்க, மெல்ல விழிகளை உயர்த்திப் பார்த்த லியோ விழிகளாலேயே அருகே வரும்படி கண்ணசைத்தான்.



அவரும் கேள்வியோடு விழிகளை சுருக்கியவாறு அவனை நெருங்க, "சொல்ல முடியாது, உன்னால முடிஞ்சத பார்த்துக்க" என்று அவன் சொன்னதும், இவருக்கோ கோபம் தலைக்கேறியது.



தன் வெறி அடங்கும் மட்டும் அவனை அடித்து தன் கோபத்தை அவர் தீர்த்துக்கொள்ள, சுற்றியிருந்த மற்ற அதிகாரிகளுக்கே அடிவயிறு கலங்கியதோடு சற்று லியோவை நினைத்து பரிதாபமாகவும் இருந்தது.



ஒருகட்டத்திற்கு மேல் அவருக்கே வெறுத்துப் போக, "இவனுக்கு சாப்பாடு தண்ணி எதுவும் கொடுக்க கூடாது. வலி பசின்னு எதுவும் தாங்கிக்க முடியாம அவனே உண்மைய சொல்லணும்" என்று உத்தரவாக கத்திவிட்டு அங்கிருந்து தன் ஆட்களோடு வெளியேறி இருக்க, மொத்தமாக சுயநினைவை இழந்து தொங்கிக்கொண்டிருந்தான் லியோ.



இவன் இங்கு வலியை அனுபவித்துக்கொண்டிருக்கும் அதேநேரம் கிராமத்திற்கு பின்னால் உள்ள காட்டுக்கு நடுவே பராமரிக்கப்படாது விட்டிருந்த பழைய இடிந்த கோயிலில் கால்களை கட்டி கதறியழுதுக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



வீராவோ வெளியில் குறுக்கும் நெடுக்குமாக பதற்றமாக நடந்துக்கொண்டிருந்தவன், யாழ்மொழியின் அழுகை சத்தத்தில் அவளை பரிதாபமாகப் பார்த்தான்.



"யாழ், இப்போ அழுது எதுவும் ஆக போறதில்ல. இந்த நேரம்தான் நீ ரொம்ப தைரியமா இருக்கணும். சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடியே அந்த பெரிய கப்பல் இந்த தேசத்த விட்டு கெளம்பிரும். அதுக்குள்ள நீ அந்த கப்பல்ல ஏறியாகணும். நடுராத்திரியே நாம துறைமுகத்துக்கு போயிரலாம். யார் கண்ணுலயும் சிக்க கூடாது. அதான் முக்கியம்"



என்று அவன் தீவிர முகபாவனையோடு சொல்லிக்கொண்டே போக, இல்லையெனும் விதமாக தலையாட்டினாள் அவள்.



"இல்லை என்னால் முடியாது, அவரை விட்டு என்னால் எப்படி வர முடியும். அவரை பார்க்கும் வரை நான் எங்கும் வருவதாக இல்லை" என்று அவள் அழுதவாறு அழுத்தமாக சொல்ல, சலிப்பாக விழிகளை உருட்டினான் வீரா.



"என்ன பேசுற யாழ்மொழி! இந்த கப்பல விட்டா மறுபடியும் துறைமுகத்துல இருந்து கப்பல் எப்போ கெளம்பும்னு தெரியல. அதுவரைக்கும் நீ இங்க இருக்குறது பாதுகாப்பே இல்ல. அரசரோட ஆதரவும் உனக்கு இப்போ இல்ல. அதனாலதான் சொல்றேன். அவரோட திட்டப்படி உன்ன அந்த கப்பல்ல பாதுகாப்பா போய் சேர்க்குறது என்னோட பொறுப்பு"



என்றவனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.



யாழ்மொழிக்கு அவனை மறுத்து பேசவும் முடியவில்லை. தன்னவனுக்கு என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என்ற பயத்தில் அவள் தனக்குள்ளேயே அழுது கரைய, அதேநேரம் அரசரின் அரண்மனையில்...



"இந்திரா... மகளே..." என்ற ஆரவாரத்தோடு மகளின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றார் வேந்தன்.



"உன் விருப்பப்படியே ஏற்பாடு செய்துவிட்டேன் இந்திரா, இப்போது உனக்கு ஆனந்தமா?" என்று உற்சாகமாக பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள் வாடிய முகமாக வானத்தை வெறித்துக்கொண்டிருந்த மகளைப் பார்த்ததும் அப்படியே நின்றது.



கேள்வியாக புருவத்தை நெறித்தவர், "என்ன நடந்தது?" என்று புரியாமல் கேட்க, தந்தையை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவள், எதுவும் பேசாமல் திரும்பிக்கொண்டாள்.



வேந்தனுக்கு எதுவும் புரியவில்லை.



"உன்னிடம்தானே கேட்கிறேன். ஏன் இப்படி இருக்கிறாய் இந்திரா? யாராவது ஏதாவது கூறினார்களா. ஏன் அமைதியாக இருக்கிறாய்? வாயைத் திறந்து பதில் சொல்.."



என்று சற்று குரலை உயர்த்தி வேந்தன் கத்தியதும் அவரை நேருக்கு நேராகப் பார்த்தாள் இந்திரா.



"என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் தந்தையே? என் காதல் கைக்கூடியதை எண்ணி துள்ளிக் குதிக்க கூட முடியவில்லை என்பதையா என் உயிர் தோழியை தாங்கள் அரண்மனையை விட்டே ஒதுக்கியதை எண்ணி வேதனைப்படுவதை பற்றியா.. என்ன பதிலை சொல்ல சொல்கிறீர்கள்?" என்று இந்திரா ஆவேசமாகக் கேட்க, இப்போது அதிர்ந்து விழித்தார் வேந்தன்.



ஆனால் அந்த அதிர்ச்சி சில கணங்கள்தான்.



மகளை கோப விழிகளோடுப் பார்த்தவர், "அவள் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை அது" என்று அழுத்தமாக சொல்ல, "தவறுக்கும் மேலான தண்டனை அது தந்தையே! அவளின் நிலையை கொஞ்சமும் தாங்கள் யோசிக்கவில்லை. அவளுக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என்ற பதட்டம் மட்டுமே எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது. இதன் பிறகு எத்தனை சந்தோஷங்கள் என் வாழ்வில் நிகழ்ந்தாலும் யாழ்மொழிக்கான இடம் வெற்றிடமாக எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கும்" என்று பேசிக்கொண்டே சென்றவள் இறுதியில் வெடித்து அழுதேவிட்டாள்.



வேந்தனுக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.



விழிகளை அழுந்த மூடித் திறந்தவர், "யாழ்மொழியின் இடத்தில் நீயே இருந்திருந்தாலும் உனக்கும் அதே தண்டனைதான் இந்திரா. துரோகத்துக்கான தண்டனை இது. ஆனால்..." என்று சற்று நிறுத்த, தந்தையை அழுகையோடு நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.



"இந்த தேசத்துடைய அரசன் நான், அவ்வளவு இலகுவாக என்னிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவளும் அவனும் திருமணம் செய்துவிட்டார்கள் அதுவும் உன் காதலனின் தலைமையில். ஊரிலுள்ள என் விசுவாசிகள் மூலம் கிடைத்த தகவல் அது. அதனால் நீ இப்போது அழுவதற்கு அவசியமில்லை.



அதுமட்டுமில்லாமல் இதைப் பற்றி தெரிந்தும் நான் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் மற்றவர்களும் இதை போன்ற ஒரு செயலை தைரியமாக செய்யத் துணிவார்கள். அது சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் சென்று முடியலாம்.



ஒரு அரசனாக என் கடமையைதான் நான் செய்திருக்கிறேன். இதற்குமேல் அவளின் பெயர் இந்த அரண்மனையில் ஒலிக்கக் கூடாது. புரிகிறதா.. விரைவில் உன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும்" என்று கறாராக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தார் வேந்தன்.



போகும் தன் தந்தையைப் பார்த்திருந்த இந்திராவுக்கு இத்தனை நேரம் மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கிய உணர்வு.



அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள், "யாழ், உன்னுடன் இருக்க வேண்டிய நேரத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே" என்று ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் இன்னொரு புறம் வேதனையோடு நினைத்துக்கொள்ள, நேரம் சென்று சூரியனும் மெல்ல அஸ்தமிக்கத் தொடங்கியது.



தேசம் முழுவதும் இருள் சூழ, ஆங்கிலேய சிறைச்சாலையில் உணர்வின்றி கட்டப்பட்டிருந்த கயிற்றோடு தொங்கிக்கொண்டிருந்தான் லியோ.



திடீரென அவனின் கையை கட்டியிருந்த கயிறு அவிழ்க்கப்பட, தரையில் விழுந்தவனை வேகவேகமாக தட்டின இரு கரங்கள்.



"சார்... சார் கெட் அப்! கண்ணை திறந்து பாருங்க" என்ற ஜேம்ஸின் குரல் காதில் ஒலிக்கவும் கஷ்டப்பட்டு மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்தான் லியோ.



அவன் பார்த்ததும் சந்தோஷத்தில் விழி விரித்த மற்றவன், "சார், நமக்கு ரொம்ப நேரமில்ல, ரொனேல்ட் சார் இங்க வரதுக்குள்ள நாம இங்க இருந்து போயாகணும்" என்று அவசரமாக சொல்ல, எழ முயன்றவனுக்கு மீண்டும் மீண்டும் தோல்வியே.



உடல் முழுவதும் இரத்தத்தில் மூழ்கி அவனிருந்த நிலையைப் பார்க்க ஜேம்ஸிற்கே மனம் கனத்தது.



"சார், சீக்கிரமா இங்கயிருந்து அவர கூட்டிட்டு போங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் வந்துருவாரு. எதையாச்சும் சொல்லி நான் சமாளிச்சுக்குறேன். சீக்கிரம் சார்" என்று சிறைச்சாலைக்கு பொறுப்பான அதிகாரி டேனியல் வெளியில் எட்டிப் பார்த்தவாறு பதற்றமாக சொல்ல, லியோவின் கரத்தை தன் தோளில் போட்டுக்கொண்டு அழைத்துச் சென்றான் மற்றவன்.



அவனோடு நடக்க முடியாமல் வலியை பொறுத்துக்கொண்டு நடந்தவனுக்கு தன்னவளின் ஞாபகம் வர, "யாழ்... யாழ்மொழி.." என்று திக்கிததிணறி சொல்ல, அதைப் புரிந்துக்கொண்ட ஜேம்ஸிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.



எதுவும் பேசாமல் வேகமாக லியோவை தான் வந்த காரிலேற்றி அவன் மின்னல் வேகத்தில் பறக்க, அடுத்த ஐந்தே நிமிடத்தில் அங்கு தன் அதிகாரிகளோடு வந்தார் ரொனேல்ட்.



உள்ளே வேகமாக நுழைந்தவரைப் பார்த்த டேனியலுக்கு வயிற்றில் பயபந்து உருள, இங்கு ரொனேல்டிற்கு வெறுமையாக இருந்த சிறைச்சாலையை பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது.



கூடவே கோபமும் பன்மடங்கு அதிகரிக்க, கை முஷ்டியை இறுக்கி பற்களைக் கடித்தவாறு நின்றிருந்த ரொனெல்டின் அருகில் வந்த டேனியல், "சார் எனக்.. எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல. கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் இங்கதான் இருந்தாரு. நான் சாப்பிட போன நேரத்துலதான்..." என்று ஏதேதோ சமாளிக்க முயன்றான்.



ஆனால் அப்போது ரொனேல்ட் இருந்த கோபத்திற்கு நிதானம் எங்கோ தொலைவில் பறந்திருக்க, தன் துப்பாக்கியை சுழற்றி அவன் நெஞ்சிலேயே சுட்டிருக்க, உயிரற்ற சடலமாக தரையில் விழுந்தான் அவன்.



சுற்றியிருந்த அதிகாரிகள் கூட இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



அவர்கள் அதிர்ந்துப் போய் நின்றிருக்க, "அந்த லியோ என் முன்னாடி நிக்கணும். அதுவும் பொணமா.. அவனும் அந்த நாயும் உயிரோட இருக்க கூடாது. அவன் கண்டிப்பா ரொம்ப தூரம் போயிருக்க மாட்டான். இந்த தேசத்த விட்டு போயிருக்க வாய்ப்பில்ல, இதுக்குள்ளதான் இருக்கணும். எல்லா இடத்துலயும் தேடுங்க. ஒரு இடம் விடக் கூடாது.. சொன்னது புரிஞ்சதா.." என்று அவர் கத்த, உடனே தத்தமது துப்பாக்கியோடு ஊருக்குள் தேடத் துவங்கினர் அவரின் அதிகாரிகள்.



இங்கு இவ்வாறு இருக்க, ஜேம்ஸ் காரை வேகமாக செலுத்திக்கொண்டே, "சார், நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. இங்கிலேன்ட் கவர்மென்டுக்கு நான் நடந்தது எல்லாத்தையும் சொல்லி லெட்டர் அனுப்பிட்டேன். கண்டிப்பா அவங்க உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க. நீங்க இங்க இருந்து பாதுகாப்பா போனா மட்டும் போதும்" என்று பதற்றமாக சொல்ல, லியோவுக்கு தன்னவளின் நினைவுகள் மட்டும்தான் உள்ளுக்குள்.



"யாழ்... எங்க இருக்கம்மா! யாழ்... யா..." என்று தன்னவளின் நினைவில் வலியில் முணங்கிக்கொண்டே அவன் அப்படியே மயங்கிப் போக, ஜேம்ஸிற்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.



இதற்கு முன் நடந்தது எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. இப்போது இருக்கும் நிலையில் யாழ்மொழியை எங்கு சென்று தேடுவதென்று கூட அவனுக்குத் தெரியவில்லை.



குழப்பத்தோடு தன் தனிப்பட்ட குவாட்டஸிற்கு அவனை அழைத்து வந்த ஜேம்ஸ், தன் உயரதிகாரியை அங்கு பாதுகாப்பாக வைத்து யாருக்கும் தெரியாமல் தனக்கு விசுவாசமானவர்கள் மூலமாக வைத்தியனையும் வரவழைத்தான்.



"ஜேம்ஸ், ஊர் முழுக்க லியோ சாரதான் தேடுறாங்க. அவர் இங்கதான் இருக்காருன்னு தெரியவே கூடாது" என்று ஒரு அதிகாரி சொல்ல, "ஆமா.. ஆனா சார் காதலிக்கிற அந்த பொண்ண எப்படியாச்சும் கண்டுபிடிக்கணும். அவ இப்போ அரண்மனையில இல்ல. அந்த ஊரை சேர்ந்த வைத்தியனும் அந்த பொண்ணு அங்க இல்லன்னு சொல்றான். இந்த நேரத்துல எங்கன்னு போய் தேடுறது. ஒன்னுமே புரியல..." என்றான் மற்றவன் யோசனையோடு.



இருவரும் குழப்பத்தோடு நின்றுக்கொண்டிருக்க, "யாழ்... யாழ்மொழி... ஆஆஆ..." என்ற சத்தம் அறையிலிருந்து பலமாகக் கேட்க, வேகமாக உள்ளே ஓடினர் இருவரும்.



"ஐயா, என்னை வைத்தியம் பண்ண விடுங்க. உங்க உடம்புல காயம் ரொம்ப ஆழமா இருக்கு" என்று அந்த ஊர் வைத்தியன் பயத்தில் பதற்றமாக சொல்ல, தன் அருகிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கியெறிந்தான் லியோ.



"எனக்கு யாழ பார்க்கணும். நீ எங்க இருக்கம்மா? அய்யோ யாழ்..." என்று அவன் அரை மயக்கத்தில் எழுந்து ஆக்ரோஷமாகக் கத்த, வேகமாக அவனின் அருகே ஓடிய ஜேம்ஸ் அவனை கட்டுப்படுத்த முயன்றான்.



"சார் ப்ளீஸ் காம் டவுன்! நீங்க இங்க இருக்குறது யாருக்கும் தெரிய கூடாது. ப்ளீஸ் சத்தம் போடாதீங்க.." என்று அவன் சொல்ல, "எனக்கு அவள பார்க்கணும், யாழ்... யாழ்மொழி... என்னை அவகிட்ட கூட்டிட்டு போ ஜேம்ஸ், துறைமுகத்துல அவ எனக்காக காத்துட்டு இருப்பா" என்று கத்திக்கொண்டே மீண்டும் சுயநினைவின்றி விழுந்தவனைப் பார்த்து அதிர்ந்துப் போய்விட்டனர் மொத்தப் பேரும்.



நடக்கக் கூட முடியாமல் தன்னிலையை இழந்து லியோ படுத்த படுக்கையாக இருக்க, ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம் இடுப்பில் கைக்குற்றி யாழ்மொழியை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.



"நமக்கு நேரமில்ல யாழ், சொல்றத கேளு. இப்போவே நாம துறைமுகத்துக்கு போகணும். சொல்றது புரியுதா இல்லையா?" என்று அவன் கத்த, "இல்லை, அவர் இல்லாமல் நான் எங்கும் வர மாட்டேன். அவருக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. எனக்கு அதிகாரியை இப்போதே பார்க்க வேண்டும் அண்ணா" என்று பிடிவாதமாக சொன்னாள் அவள்.



வீராவுக்கு அவளின் செயலில் கோபத்தை அடக்குவது பெரும் பாடாகத்தான் இருந்தது.



***********

விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..

Channel name - kadhaikulla polaama

channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y


And....



Teenage and kids கான ஒரு யூடியூப் சேனல்.. பெரியவங்க கூட பார்க்கலாம் 😁.. யாருக்குதான் கார்டூன்ஸ் கதைகள பார்க்குறது பிடிக்காது... Fairy tales கதைகள்ல இருந்து பேய் கதைகள் வரைக்கும் Visuals oda பார்க்கலாம்.. 😇

Channel name - Bundle of Tales 👇

https://youtube.com/@bundle_of_tales?si=16UQTLk8uJ_ZKTVB


-Shehazaki 🙌
 
அத்தியாயம் 30





யாழ்மொழியோ பிடிவாதமாக நிற்க, இடுப்பில் கைக்குற்றி அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.



அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.



"இங்க பாரு யாழ், உன்னை எப்டியாச்சும் காப்பாத்துவேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன். ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது, அவங்க உன்ன கண்டுபிடிச்சிருவாங்க. என்னை நம்பு! நம்ம திட்டப்படிதான் எல்லாமே நடக்கும். அவர் கண்டிப்பா வருவாரு"



என்று அவன் சொல்லி புரிய வைக்க முயல, அப்போதும் அவளுடைய முகம் தெளிவடையவில்லை.



விழிகளை அழுந்த மூடித் திறந்து, "யாழ், அவர் சொன்ன வார்த்தைய நீ மீற போறியா. அவர நீ பார்க்கணும்னா அதுக்கு நீ உயிரோட இருக்கணும். எல்லா அதிகாரிகளும் உன்ன தேடிட்டு இருக்காங்க. அவங்க கையில நீ சிக்க கூடாது. நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோ" என்று அழுத்தமான குரலில் சொல்ல, சில கணங்கள் தீவிரமாக யோசித்துவிட்டு மெல்ல தலையாட்டி வைத்தாள் யாழ்மொழி.



உடனே வீரா அவளை யார் கண்ணிலும் சிக்காமல் துறைமுகத்தை நோக்கி அழைத்துச் செல்ல, சுயநினைவு இல்லாமல் கிடப்பவனை பாவமாகப் பார்த்திருந்தான் ஜேம்ஸ்.



அப்போதுதான் லியோ இறுதியாக சொன்ன வார்த்தைகள் அவனுக்கு ஞாபகத்திற்கு வர, "துறைமுகத்துல காத்துக்கிட்டு இருப்பான்னா என்ன அர்த்தம்? சார் எதை பத்தி பேசுறாரு.. ஒருவேள..." என்று ஆழமாக யோசித்தவனுக்கு ஏதோ ஒன்று புலப்படுவது போல இருந்தது.



உடனே அவனுக்கு விசுவாசமான இன்னொரு அதிகாரியை பாதுகாப்புக்கு வைத்துவிட்டு அவனும் துறைமுகத்துக்கு செல்ல, பாரதத்திலிருந்தது சுரண்டப்பட்ட வளங்கள் மற்றும் பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்கள் இன்னும் சிறிது நேரத்தில் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தன.



இந்திய அடிமைகள் சிலரும் அதிகாரிகள் சிலரும் அங்கு பரபரப்பாக இருக்க, அங்கு கட்டப்பட்டிருந்த பெரிய தூண்களுக்கு பின்னே மறைந்திருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.



"யாழ், என் பின்னாடியே இரு, இப்போதான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்" என்று அவன் சொல்லிக்கொண்டே பதுங்கியவாறு அவளை அழைத்துச் செல்ல, யாழ்மொழியின் விழிகள் தன்னவனை மட்டும்தான் தேடிக்கொண்டிருந்தது.



"எப்போது வருவீர்கள் அதிகாரி, தங்களை காணும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பது போலிருக்கிறது" என மானசீகமாக பேசிக்கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்கு அவள் செல்ல, வீராவின் விழிகளில் சிக்கியது கப்பலில் ஏற்றுவதற்காக வைத்திருந்த பெரிய பெட்டிகள்.



திடீரென அவனே எதிர்பார்க்காதது போல பின்னாலிருந்து, "வீரா..." என்ற குரல் கேட்க, இருவருமே தூக்கி வாரிப்போட்டவர்களாக திரும்பிப் பார்த்தனர்.



அங்கு அவர்களுக்கெதிரே அவனின் ஊரை சேர்ந்த, ஆங்கிலேயர்களுக்கு கீழே வேலைப் பார்க்கும் அடிமை ஒருவரே நின்றுக்கொண்டிருக்க, "ஓ.. நீங்கதான! நான் ரொம்ப பயந்துட்டேன். நான் சொன்னது இந்த பொண்ணுதான்" என்று சாதாரண குரலில் சொன்னான் அவன்.



யாழ்மொழிக்கு அப்போதுதான் நிம்மதி பெருமூச்சே வெளியேற, "தம்பி, இங்க வெள்ளைக்காரனுங்க சுத்திட்டே இருப்பானுங்க. யாரோட கண்ணுலயாச்சும் சிக்கினா அவ்வளவுதான். உடனே நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. பொட்டபுள்ள வேற, சீரழிச்சு போட்டுருவானுங்க" என்று பதற்றமாக சொல்லிக்கொண்டே வேகமாக அவர்களுக்கு அருகே வந்தார் அவர்.



உடனே சுற்றிமுற்றி பார்த்தவாறு முன்னே இருந்த பெட்டியைத் திறந்தவர் உள்ளே இருந்த பொருட்களை ஒரு ஓரமாக தூக்கியெறிய, "என்.. என்ன செய்கிறீர்கள்? யாராவது பார்த்துவிட்டால்..." என்று பதற்றமாக சொன்னாள் யாழ்மொழி.



"இல்லைம்மா யாரும் உன்னை பார்த்துர கூடாதுன்னுதான் நான் இப்படி பண்றேன். நீ இந்த பெட்டிக்குள்ள இரு, எல்லா பெட்டிகளோட சேர்த்து இதையும் கப்பல்ல ஏத்திருவாங்க அதுக்கப்பறம் கவலைப்பட தேவையில்ல. கப்பலுக்குள்ள சுத்தப்படுத்துற வேலையில இருக்குற எங்க ஆளு ஒருத்தன் உனக்கு தேவையானத பார்த்துப்பான்"



என்று அந்த மனிதர் தன் திட்டத்தை சொல்ல, அவரின் இந்த முயற்சியை வீரா சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



"நீங்க இத்தனை பெரிய சிரமத்தை எடுத்து எனக்கு உதவி பண்ணுவீங்கனு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல அண்ணே! ரொம்ப நன்றி" என்று அவன் கையெடுத்துக் கும்பிடாத குறையாக நன்றியுணர்ச்சியோடு சொல்ல, யாழ்மொழிக்குதான் இப்போது பதற்றம் மேலோங்கி இருந்தது.



"அண்ணா, இது எனக்கு பெரும் உதவிதான். ஆனால்... ஆனால் அவர் இன்னும் வரவே இல்லையே! நீங்கள்தானே சொன்னீர்கள் அவர் எனக்காக இங்கு காத்திருக்கிறார் என்று. ஒருவேளை என்னிடம் பொய் சொன்னீர்களா?"



என்று விழிகளில் பயத்தோடும் பதற்றத்தோடும் அவள் கேட்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டினான் வீரா.



"ஆமா சொன்னேன்தான். ஐயா என்கிட்ட எதை சொன்னாரோ அதை சொன்னேன். அவர் கண்டிப்பா உனக்காக வருவாரு. இப்போ தயவு செஞ்சு பிடிவாதம் பிடிக்காத! சத்தம் போட்டு கூட பேச முடியாத நிலைமையில இருக்கோம். தயவு செஞ்சு..." என்று வீரா அவளின் அருகே வர, கோபத்தோடு பின்னே நகர்ந்தாள் யாழ்மொழி.



"இல்லை, நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள். அவர் வர போவதில்லை. என்னை மீண்டும் நிர்க்கதியாக்கி விட்டாரா அவர்!" என்று தலையைத் தாங்கிய வண்ணம் அவள் ஏதேதோ பிதற்றிக்கொண்டு போக, யாழ்மொழியின் தோள்களைப் பற்றி ஆக்ரோஷமாக குலுக்கினான் அவன்.



"உனக்கென்ன பைத்தியமா! நீயும் மாட்டிக்கிட்டு எங்க எல்லாரையும் மாட்டிவிட்டு சாக போறியா? இதை அவர் ஏத்துப்பாரா சொல்லு. கண்டிப்பா துரைக்கு தெரிஞ்சா இதை மன்னிக்கவே மாட்டாரு. சொல்றத கேளு யாழ்! உன்ன பாதுகாக்க அவர் ரொம்ப முயற்சி பண்றாரு, அதை வீணாக்காத, உன் காதல் மேல உனக்குதான் நம்பிக்கை இருக்கணும். நம்பிக்கை இல்லன்னா அங்க உறவே இல்ல. நீ என்ன தொலைதூரத்துக்கு போனாலும் உன்னோட காதல் உன்னை தேடி வரும் அவர் திரும்பி வருவாங்குற நம்பிக்கை உனக்கு இருக்கா இல்லயா அதை சொல்லு..."



என்று வீரா பேசி முடித்துவிட்டு அவளை கூர்மையாகப் பார்க்க, திடீரென ஒரு குரல் கேட்டது.



"ஹேய்.. யூ ஃபாத் ஆஃப் யூ... வாட் ஆர் யெ டூயிங் ஹியர்.. டெல் மீ.." என்று துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி கத்த, வீராவும் அந்த பெரியவரும் பயத்தில் உறைந்தே போய்விட்டனர்.



பெட்டிக்கு பின்னே நின்றிருந்த யாழ்மொழி அந்த ஆங்கிலேயனின் விழிகளுக்கு தென்படாமல் போனது அவர்களின் அதிர்ஷ்டவசமாகிப் போக, "ஐயா.. நாங்க இங்க வேலை பார்க்குறவங்கதான். எங்கள எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க எந்த தப்பும் பண்ணல நம்புங்க" என்று அவர் சைகையால் தன்னையும் வீராவையும் காட்டி பதற்றமாக சொன்னார்.



ஆனால், அந்த ஆங்கிலேயன் எதை புரிந்துக்கொண்டானோ!



"வாட்... " என்று ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு அவன் அவர்களை நோக்கி வர, "மாட்டிக்கிட்டோம்..." என்று பதற்றமாக நினைத்த வீராவுக்கு இதயம் துடிக்கும் சத்தம் காதிற்கே கேட்டது.



அவளை மறைப்பது போல் அவன் மெல்ல நகர, அந்த ஆங்கிலேயனின் பார்வையோ சந்தேகத்தில் சுருங்கியது. புருவங்களை நெறித்தவாறு அவன் மெல்ல வர, "ஆஃபீசர்..." என்ற ஜேம்ஸின் குரல் பின்னாலிருந்து கேட்டது



மூன்று பேரின் பார்வையும் அவனை நோக்க, "இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க, அங்க போய் எக்ஸ்போர்ட் பண்ற ப்ரொசீஜர்ஸ பாருங்க" என்று கடுமையான குரலில் அவன் சொன்னதும், வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர்ந்தான் அந்த அதிகாரி.



உடனே அவர்களுக்கு அருகே ஜேம்ஸ் வர, மற்ற இருவருக்கும் போன பயம் மீண்டும் தொற்றிக்கொண்டது.



ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்களுக்கு பின்னே எட்டிப் பார்த்த ஜேம்ஸ் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த யாழ்மொழியைப் பார்த்து புன்னகையோடு விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.



அவன் சென்றதும் வீராவோ ஆச்சரியத்தோடு யாழ்மொழியை திரும்பிப் பார்க்க, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டவள் மரப்பலகையினாலான அந்த வெற்றுப் பெட்டியில் சுருண்டு அமர்ந்துக்கொண்டாள்.



உடனே வீராவும் புன்சிரிப்போடு அவளைப் பார்த்தவாறு பெட்டியை மூடிவிட, கண்ணீரோடு எதிர்காலத்தை நோக்கி எதிர்பார்ப்பில்லாமல் காத்திருந்தாள் யாழ்மொழி.



அடுத்த சில நிமிடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த மொத்தப் பெட்டிகளும் கப்பலில் ஏற்றப்பட, வீராவின் நண்பன் ஏற்பாடு செய்திருந்த

கணபதியோ கப்பலை சுத்தப்படுத்தியவாறு பெட்டிகளை உற்றுக் கவனித்தான்.



"அந்த பொண்ணு இங்க எங்க இருக்கான்னு தெரியலையே, கண்டிப்பா எங்கேயாவது ஒளிஞ்சிருக்கணும். அவ எந்த பெட்டிக்குள்ள இருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும்" என்று தீவிரமாக யோசித்த வண்ணம் வேலை செய்துக்கொண்டே யாழ்மொழியை தேட ஆரம்பித்தான் அவன்.



மொத்த பெட்டிகளும் கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, சாதாரணமாக பார்ப்பது போல ஒவ்வொரு பெட்டிகளாக திறந்துப் பார்த்தான் அவன்.



நான்கைந்து பெட்டிகளைக் கடந்ததும் ஒரு பெட்டியைத் திறந்த கணபதிக்கு உள்ளே பயந்தபடி சுருண்டு இருந்தவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் விழிகள் பெரிதாக விரிய, யாழ்மொழியோ அழுதபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.



உடனே சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "கவலைப்படாதம்மா! நான் வீரா தம்பியோட ஆளுதான்" என்றுவிட்டு வேகமாக மூடியவன், நிம்மதி பெருமூச்சு விட்டவனாக மீண்டும் வேலை செய்வது போல பாசாங்கு செய்ய, யாழ்மொழிக்குதான் தன்னவனை எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.



நங்கூரம் ஏற்றப்பட்டு கப்பல் மெல்ல நகர ஆரம்பிக்க, "நான் இப்போது என்ன செய்வேன், அவ.. அவர் கடைசி வரை வரவே இல்லையே! அவர் இல்லாமல் நான் எப்படி.. ஏன் ஏன் கடவுளே எனக்கு இத்தனை சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்? இப்படியே ஆழ் நீரில் குதித்து இறந்துவிட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறதே" என்று மெல்லிய விசும்பலோடு அழுது கரைந்தவளுக்கு வீராவின் வார்த்தைகள்தான் ஞாபகத்திற்கு வந்தது.



மொத்த சிந்தனையையும் கலைத்து, "அதிகாரி என்னை ஒருபோதும் கை விட மாட்டார், நிச்சயமாக என்னை தேடி கடல் கடந்தும் வருவார், எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று தனக்குத்தானே கூறிக்கொண்டவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.



தேசம் விட்டு கடல் கடந்து தன்னவனின் தேசத்தை நோக்கி அவள் பயணிக்க, இங்கு அறையில் தான் வரைந்திருந்த யாழ்மொழியின் ஓவியத்தை துப்பாக்கியால் தாறுமாறாக சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார் ரொனேல்ட்.



"ஆஆ... அவ எங்க இருக்கா. எனக்கு அவ வேணும். அவ வேணும்" என்று ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருப்பவரை படுக்கையில் சக்தியிழந்து கிடந்திருந்த அடிமைப் பெண்ணொருத்தி ஏதோ ராட்சசனை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.



தன்னை முழுதாக போர்த்தி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தவளுக்கு எங்கு இந்த கோபத்தையும் தன் உடலில் காட்டிவிடுவானோ என்ற பயம் உள்ளுக்குள் உருள, கோபத்தில் அங்கிருந்த மது போத்தல் முழுக்க வாயில் சரித்தார் ரொனேல்ட்.



வேகமாக அவளை நோக்கி வந்தவர் அவள் எதிர்பார்த்தது போல தன் மொத்த கோபத்தையும் அவளுடைய உடலில் காண்பிக்க, கதறித் துடித்த அந்த அடிமைப் பெண்ணை காப்பாற்ற அந்த கடவுளால் கூட முடியவில்லை.



அடுத்தநாள் மெல்ல கண் விழித்த லியோ கொஞ்சம் கொஞ்சமாக நடப்பை உணர ஆரம்பிக்க, அந்த கணம் அவனின் மனக்கண்ணில் விம்பமாக ஓடியது என்னவோ யாழ்மொழியின் முகம் மட்டுமே.



"யாழ்... யாழ்மொழி..." என்று அவன் முணுமுணுத்தவாறு படுக்கையிலிருந்து இறங்கப் போக, எதேர்ச்சையாக அறையை கடக்கப் போன ஜேம்ஸோ உடனே பதறிப்போனவனாக வேகமாக வந்து அவனை தாங்கிக்கொண்டான்.



"சார், ஆர் யூ ஆல்ரைட்? இப்போ உங்களுக்கு பரவாயில்லையா?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, நெற்றியை நீவி விட்டவாறு சுற்றிமுற்றி பார்த்தவனுக்கு எதுவுமே புரியவில்லை.



"இது... இது குவாட்டஸ்தானே! நா.. நான் இங்க என்ன பண்றேன்? இப்போ நேரம் என்னாச்சு? யாழ்.. யாழ் எனக்காக வெயிட் பண்ணுவா, நான் போகணும்" என்று அவன் படபடவென பேசிக்கொண்டே போக, "சார் ப்ளீஸ் காம் டவுன்! அந்த பொண்ணு சேஃபா இருக்கா" என்று சற்று குரலை உயர்த்திச் சொன்னான் ஜேம்ஸ்.



உடனே லியோ அவனை ஆச்சரியமாக நிமிர்ந்துப் பார்க்க, அவனிடம் தண்ணீர் க்ளாஸை நீட்டியவாறு "மொதல்ல இதை குடிங்க சார், உங்க உடம்பு இன்னும் முழுசா குணமாகல" என்றான் மற்றவன்.



லியோ எந்த மறுப்பும் சொல்லவில்லை. உடனே தண்ணீர் க்ளாஸை வாங்கி மடமடவென குடித்தவன், "இப்போ சொல்லு ஜேம்ஸ்" என்று கேட்டு கூர்மையாகப் பார்க்க, அவனும் துறைமுகத்தில் நடந்ததை முழுதாக சொல்லி முடித்தான்.



அதைக் கேட்ட லியோவுக்கு முதலில் அதிர்ச்சியாக இருக்க, "வூ இஸ் த கேப்டன்?" என்று கேட்டதும், ஜேம்ஸ் யோசித்துவிட்டு ஒரு பெயரை சொன்னான்.



அந்தப் பெயரை கேட்டதும்தான் ஏனென்று தெரியாத நிம்மதி அவன் மனதில் பரவியது.



"சார்.. எப்படியும் அந்த பொண்ணு லண்டனுக்கு போய் சேர ஒரு மாசம் ஆகலாம். அதுவரைக்கும் அந்த பொண்ணு எப்படி..."



என்று தயக்கமாக ஜேம்ஸ் கேட்க, லியோவின் இதழ்கள் அர்த்தப் புன்னகை புரிந்தன.



"அங்க எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சுட்டேன், யாழ்மொழிக்கு அங்க எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனா..." என்று சட்டென நிறுத்தியவனின் விழிகள் கோபத்தில் சிவப்பேற அவனுடைய நெற்றி நரம்புகள் புடைத்தன.



"ரொனேல்ட்..." என்று பற்களைக் கடித்து கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன், "நான் இங்க இருந்து போகும் போது அந்த ரொனேல்ட் உயிரோட இருக்க கூடாது. ஹேய் ஜேம்ஸ் கொஞ்சநாளா தமிழ் பேச கத்துக்குறல்ல, அதனால..." என்று தீவிரமாக முகபாவனையோடு கேட்டு தன் திட்டத்தை சொல்ல, அதைக் கேட்ட ஜேம்ஸிற்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உணர்வு.



"இதுக்கு ஒத்துப்பாங்களா சார்? ஒருவேள ஒத்துக்கலன்னா..." என்று அவன் தயக்கமாக இழுக்க, "ஜஸ்ட் டூ வாட் ஐ சே ஜேம்ஸ், ஐ நோ இட்.." என்று அழுத்தமாக சொன்ன லியோவின் இதழ்கள் கேலியாக வளைந்தன.



**********



விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..

Channel name - kadhaikulla polaama

channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama99?si=Plfa3iup2n0SPP1X

And....


காட்டுவாசிப் பொண்ணும் கடல் மாலுமியும் full video on my channel bundle of tales 👇



-Shehazaki 🙌
 
இறுதி அத்தியாயம்








கப்பலில் யாருடைய கண்ணிலும் படாமல் யாழ்மொழி மறைந்து செல்ல முயற்சிக்க, ஆனால் விதி அவளை விட்டால்தானே!



"அம்மாடி, உனக்கு தேவையான சாப்பாட்ட நான் கொண்டு வந்து தரேன்.. ராத்திரி ஆனதும் இந்த கப்பல்ல ஒரு சின்ன அறை இருக்கு தேவையில்லாத பொருட்கள வச்சிருப்பாங்க. நாம தேசத்துக்கு போய் சேருர வரைக்கும் நீ அங்கேயே தங்கிக்கலாம். புரியுதா.."



என்று கணபதி சொல்ல, தலையாட்டி வைத்தவளுக்கு வயிற்றில் பயபந்து உருளத்தான் செய்தது.



கிட்டத்தட்ட மூன்று நாட்கள் யார் கண்ணிலும் சிக்காமல் கப்பலுக்குள் மறைந்திருந்தவளால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.



"இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னால் இப்படி மறைந்திருக்க முடியும்? இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவைதானா! தங்களை எப்போது சந்திப்பேன் அதிகாரி, நீங்கள் என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும் நரகம் போல் இருக்கிறதே.."



என்று தனக்குள் பேசி அழுது கரைந்துக்கொண்டு பொருட்கள் அடங்கிய அந்த சிறிய அறைக்குள் அவள் அமர்ந்திருக்க, "ஹேய் யார் நீ?" என்று அதட்டலாக கேட்டது ஒரு குரல்.



யாழ்மொழி உடல் அதிர தூக்கி வாரிப்போட்டவளாக திரும்பிப் பார்க்க, அங்கு அவளை அதிர்ச்சி கோபம் என கலந்த உணர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான் கப்பலிலிருந்த ஒரு அதிகாரி.



யாழ்மொழி எச்சிலை விழுங்கியவாறு பின்னே நகரப் போக, அதேநேரம் இங்கு ரொனேல்டின் அரண்மனையில் வழக்கம் போல் ஏமாற்றம் கொடுத்த அடியில் கோபத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.



அந்த அடிமைப் பெண்ணோ சுவற்றோடு ஒன்றி தரையில் பயத்தோடு அமர்ந்திருக்க, அவளை திரும்பிப் பார்த்தவரோ பக்கத்திலிருந்த க்ளாஸை அவள் மேல் தூக்கியெறிந்து கோபத்தைக் காட்டினார்.



"ஆஆ..." என்று அவள் வலியில் கத்த, "நான் அடிச்சா பொறுத்துக்கணும், கத்த கூடாது. யூ டூ அன்டர்ஸ்டேன்ட்!" என்று அடித்தொண்டையிலிருந்து உறும, விம்மலோடு பயந்துப் போய் ஒடுங்கி அமர்ந்துக்கொண்டாள் அவள்.



"யூ நோ வாட், என்னோட லிஸ்ட்ல நீதான் ரொம்பநாளா என்னோட ரூம்ல இருக்க, ஆச்சரியம்தான். ஆனா அதுவும் அந்த கேர்ள் கிடைக்குற வரைக்கும்தான். அவ எனக்கு வேணும்.. ச்சே! அந்த லியோவ சாதாரணமா நினைச்சுட்டேன். எனிவேய்ஸ், நான் எப்படியும் அவன கண்டுபிடிச்சிருவேன்"



என்று ஏதேதோ புலம்பியவாறு அவன் மேசை மீதிருந்த மதுவை மடமடவென அருந்தினான்.



அவன் தொண்டைக்குழி அசைவதை திருப்தியோடு அந்த பெண் பார்த்துக்கொண்டிருக்க, மொத்த போத்தலையும் காலி செய்துவிட்டு போத்தலை உற்றுப் பார்த்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.



"என்ன இன்னைக்கு டேஸ்ட் டிஃபெரென்ட்டா இருக்கு.. பட் நொட் பேட்" என்று சொல்லிக்கொண்டே அவன் தள்ளாடியவாறு அந்த அறையிலிருந்து வெளியேறப் போக, திடீரென அவனுடைய தொண்டைக் குழியிலிருந்து நெஞ்சுப் பகுதி வயிறு என உடலுக்குள் எரிய ஆரம்பித்தது.



"ஆஆ... ஆஆ... இட்ஸ் பர்னிங்.. எனக்கு உள்ள எரியுது.. ஓ காட் எரியுதே... எரியுதே..." என்று பெரிய குரலெடுத்து ரொனேல்ட் கத்த ஆரம்பிக்க, கண்ணீரை துடைத்தெறிந்தவாறு எழுந்து நின்ற அந்த பெண்ணோ அவனை கோபத்தோடு பார்த்தாள்.



உடலுக்குள் ஒவ்வொரு பாகமும் அவனுக்கு பெரிய வலியோடு எரிந்துத் தள்ள அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.



"ஏய்.. ஏதாச்சும் பண்ணு என்னை காப்பாத்து.. ப்ளீஸ்!" என்று வலியில் துடித்துக்கொண்டு அவளை நோக்கி திரும்பியவருக்கு அவளின் பார்வையில் ஏதோ ஒன்று புரிய, "யூ..." என்று அதிர்ந்துப் போய் ஏதோ சொன்னவாறு அவளை நோக்கி ஒரு அடி வைத்தார்.



அடுத்தநொடி அவருடைய தலையில் விழுந்த பெரிய அடியிவ் அவர் அப்படியே தரையில் விழ, "ஆர் யூ ஓகே சார்?" என்று கேலிக் குரலில் கேட்ட வண்ணம் அவர் பக்கத்தில் முட்டி போட்டு அமர்ந்தான் லியோ.



ரொனேல்ட் அவனை எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாக காட்டியது.



"நீ.. நீ எப்படி.. என்னை என்ன பண்ண? என்னடா பண்ண?" என்று அவர் கத்தியவாறு அவனை நோக்கி கையை நீட்ட, அதை முழு வேகத்தோடு முறுக்கியவன், "உங்களால இப்போ எதுவுமே பண்ண முடியாது. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க சார், எல்லாமே சரியாயிடும். என்ட் அட்வான்ஸ் ரெஸ்ட் இன் பீஸ்!" என்று விழிகள் சிவக்க சொன்னான்.



"லியோ... மை பாய், நான் தப்பு பண்ணிட்டேன்தான் ஐ அம் ரியலி சாரி! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு! என்னை காப்பாத்து, இதுக்கு அப்பறம் உன் விஷயத்துலயும் அந்த பொண்ணு விஷயத்துலயும் நான் வர மாட்டேன். ட்ரஸ்ட் மீ ப்ளீஸ்!"



என்று அவன் அந்த நிலையில் வெட்கம் விட்டு கெஞ்ச ஆரம்பிக்க, அந்த அறை அதிர பயங்கரமாக சிரித்தான் லியோ.



"ரியலி! பட் இட்ஸ் டூ லேட் சார். நெக்ஸ் லைஃப்னு ஒன்னு இருந்தா பார்க்கலாம்" என்றுவிட்டு அவன் தன் ஆறடி உயரத்திற்கு எழுந்து நின்று ரொனேல்ட் துடிதுடித்து சாகுவதை வெறித்துப் பார்த்திருக்க, அவனோ வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக தன் உயிரை விட்டான்.



அவன் துடிப்பதைப் பார்க்க அந்த அடிமைப் பெண்ணிற்கு அத்தனை திருப்தி. இத்தனைநாள் அவள் அனுபவித்த கொடுமைக்கு அவனுடைய மரணம் அவளுக்கு அத்தனை நிம்மதியைக் கொடுக்க, லியோவை நன்றியுணர்ச்சியோடுப் பார்த்தாள் அவள்.



"நான்தான் உனக்கு நன்றி. சொல்லணும், தேங்க் யூ சோ மச். இனி நீ சுதந்திரமா இருக்கலாம்" என்ற லியோவின் நினைவுகள் நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்த்தது.



இங்கு விஷத்திற்காக பயன்படுத்தப்படும் மூலிகை ஒன்றினை கொடுத்து ஜேம்ஸை ரொனேல்டின் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருந்தான் லியோ. அவனுடைய திட்டப்படி அங்கு உடல் தேவைக்காக சிறைப்பிடித்திருக்கும் அடிமைப் பெண்ணின் கையில் கொடுத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த அவன் எண்ணியிருக்க, எல்லாமே அவன் எதிர்பார்த்தது போலவே நடந்தது.



ரொனேல்டிற்கு தெரியாமல் இந்த அடிமைப் பெண்ணின் கையில் கொடுத்து ஜேம்ஸ் தன் திட்டத்தை சொல்ல, ஏற்கனவே ரொனேல்டின் மேல் கொலை வெறியில் இருந்தவளோ இதை செய்யத் துணிய கொஞ்சமும் யோசிக்கவில்லை.



அத்தனையும் அவர்கள் நினைத்தது போல் நடந்திருக்க, வாயிலிருந்து இரத்தம் வடிய சடலமாகக் கிடந்தவரை திருப்தியாகப் பார்த்துவிட்டு நகரப் போனவனை மீண்டும் அழைத்து நிறுத்தினாள் அந்த அடிமைப் பெண்.



"நான் சொல்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியல. அந்த பொண்ணு விஷயத்துல தலையிட மாட்டேன்னு இவன் சொன்னான். யார் அந்த பொண்ணு, அவளும் இந்த ஊர்தானா?"



என்று அவள் கேட்க, சட்டென யாழ்மொழியின் முகம்தான் அவனுடைய மணக்கண் முன் தோன்ற, இதழில் மெல்லிய புன்னகை கீற்றாகத் தோன்றியது.



"ஷீ இஸ் மை லவ்" என்று மட்டும் சொன்னவன் அதே புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்திருக்க, இங்கு இரு பக்கமும் இரு அதிகாரிகள் பிடித்திருக்க வெடவெடத்துப் போய் நின்றிருந்தாள் யாழ்மொழி.



மாறி மாறி கையில் துப்பாக்கியோடு ஒவ்வொரு அதிகாரிகளும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, அவளுக்கு தலை சுற்றாத குறைதான். கணபதிக்கு என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.



"என்னை விட்டுவிடுங்கள், நா.. நான் தெரியாமல் வந்துவிட்டேன். என்னை விடுங்கள்... நா.. நான் இப்போதே அதிகாரியை பார்க்க வேண்டும். அதிகாரி.. அதிகாரி..." என்று கத்திக்கொண்டே அவள் அவர்களின் பிடியில் கதறித் துடிக்க, அவளைத் தள்ளிவிட்டு முட்டி போட வைத்தான் ஒரு அதிகாரி.



"யூ ப்ளடி ஷட் யூவர் மவுத்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினேன்னா ஐ வில் ஷூட் யூ" என்று ஆங்கிலத்தில் அவன் கத்த, "வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்றொரு கணீர் குரல் பின்னாலிருந்து கேட்டது.



யாழ்மொழி அழுகையோடு திரும்பிப் பார்க்க, விழிகளை கூர்மையாக்கி அவளைப் பார்த்தான் அந்த ஒருவன்.



"கேப்டன், இந்த பொண்ணு அந்த தேசத்தை சேர்ந்தவ, இவள பார்த்தாலே தெரியுது. யாருக்கும் தெரியாம எங்க கப்பல்ல ஏறியிருக்கா. இவள சும்மா விடக் கூடாது" என்று ஒரு அதிகாரி சொல்லிக்கொண்டே அவளை நோக்கி துப்பாக்கியை நீட்ட, பெண்ணவளோ நடுங்கிவிட்டாள்.



இடம், மொழி எதுவுமே அவளுக்கு புரியவில்லை. இப்படியொரு நிலையில் நிற்பதற்கு பதில் தன்னை சுற்றியுள்ள நீரிலேயே குதித்துவிடலாம் என்று கூட ஒரு நொடி தோன்றியது அவளுக்கு.



ஆனால், அடுத்து நடந்ததோ அவளே எதிர்பார்க்காத ஒன்று.



யாழ்மொழியை கூர்மையாகப் பார்த்தவன், "ஓஹோ.. அவ சொன்ன பொண்ணு நீதானா!" என்று கேலிப் புன்னகையோடு சொன்னவன், "ஹாய் ஐ அம் மைக்கேல், நைஸ் டூ மீட் யூ" என்று புன்னகையோடு சொல்ல, அவன் என்ன பேசுகிறாள் என்றே அவளுக்கு புரியவில்லை.



அவள் திருதிருவென விழிக்க, "நாம இங்கிலாந்து போய் சேருற வரைக்கும்

இவ இங்கேயே இருக்கட்டும், இவளுக்கு எதுவும் ஆகக் கூடாது புரியுதா" என்று கத்த, வேறு வழியில்லாமல் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மற்ற அதிகாரிகள்.



"அம்மாடி ஐயா உன்னை எதுவும் பண்ண வேணாம்னு சொல்லிட்டாரு, நீ போக வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பா போய் சேரலாம். இனி எந்த பிரச்சனையும் இல்ல" என்று கணபதி ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து சொல்ல, அவளால் நடப்பதை நம்பவே முடியவில்லை.



அதே அதிர்ச்சியோடு அவள் மைக்கலை திரும்பிப் பார்க்க, "என்னோட எக்ஸ் வைஃப் க்ரிஸ்டிக்காக இதை கூட பண்ண மாட்டேனா" என்று அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.



யாழ்மொழிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. காதல் அவளுடைய வாழ்க்கையையே தலை கீழாக மாற்றிவிட்டது.



அரண்மனையை விட்டு வெளியிலேயே வராத ஒருத்தி இன்று வேறொரு தேசத்துக்கு செல்லும் கப்பலில் வேறு நாட்டவர்களோடு நின்றுக்கொண்டிருக்கிறாள்.



"நடப்பவை அனைத்தும் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. காதல் என்னை இத்தனை தைரியசாலியாக மாற்றிவிட்டது. ஆனால் தங்களை மீண்டும் எப்போது பார்ப்பேன் அதிகாரி? உங்களுக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்"



என்று தன்னவனோடு மானசீகமாக பேசியவாறு கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



நாட்களும் வேகமாக ஓடியது. மைக்கலுக்கு பயந்தே மற்ற எந்த அதிகாரிகளும் அவளை சீண்டவில்லை.



அவளுக்கு தேவையானதை மைக்கல் ஏற்பாடு செய்திருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில், லண்டன் துறைமுகத்தில் வந்து நின்றது மைக்கலின் கப்பல்.



எல்லாரும் கப்பலிலிருந்து இறங்க ஏற்றுமதி பொருட்களும் வேகவேகமாக இறக்கப்பட, அந்த துறைமுகத்தையும் சுற்றியிருந்த ஆங்கிலேயர்களையும் யாழ்மொழி ஆச்சரியத்தோடும் பயத்தோடும் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தாள்.



முதல் தடவை ஒரு புதுதேசத்திற்கு வந்திருக்கிறாள். மொழி ஆட்கள் என எல்லாமே அவளுக்கு புதிது.



ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவளுக்குத் தோன்ற, பயந்து நடுங்கியபடி கப்பலிலிருந்து இறங்கி எங்கு செல்வது என்ன செய்வதென்று கூட தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான் மைக்கல்.



"உனக்காக ஒருத்தர் காத்துட்டு இருக்காங்க, போலாமா" என்று அவன் சொல்ல, யாழ்மொழியோ புரியாது விழித்தாள்.



அவனோ விழிகளை சலிப்பாக உருட்டியவன் தூரத்திலிருந்த காரைக் காட்டி சைகையால் சொல்ல, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்ட யாழ்மொழி அவன் பின்னாலேயே அமைதியாக சென்றாள்.



அவனின் மொழி புரியவில்லை கூடவே வேறு வழியும் தெரியவில்லை அவளுக்கு.



கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்திருக்க, "கம் மீன்ஸ் வா... போ... சாப்.. ஓ ஷீட் இட்ஸ் ஹார்ட் டூ லேர்ன்" என்று தமிழை கற்றுக்கொள்ள முயற்சித்தவாறு க்ரிஸ்டி புலம்பிக்கொண்டிருக்க, அவளுடைய வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.



கையிலிருந்த புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு வேகமாக வந்து கதவைத் திறந்த க்ரிஸ்டியின் முகம் முன்னே நின்ற மைக்கலைப் பார்த்ததுமே சட்டென மாறியது.



"நீயா..." என்று கோபமாகக் கேட்டவாறு அவள் மீண்டும் கதவை மூடப் போக, "ஹேய் வெயிட்! என்னை பார்த்தாலே ஏன் இப்படி நடந்துக்குற க்ரிஸ்டி. உன்கூட கொஞ்சம் பேசணும்" என்று கதவை மூட விடாமல் பிடித்தபடி பேசினான் மைக்கல்.



அவனை எரிச்சலாகப் பார்த்தவள், "ஐ அம் நொட் இன்ட்ரஸ்டட்" என்றுவிட்டு மீண்டும் முழு பலத்தையும் பயன்படுத்தி கதவை மூட முயற்சிக்க, "ஸ்டாப் இட் க்ரிஸ்டி! அங்க பாரு" என்று அவளுடைய நாடியைப் பிடித்து ஒரு திசையைக் காட்ட, அடுத்தகணம் அவளுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.



"யாழ்..." என்று அழைத்தவளின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, அங்கு கைகளைப் பிசைந்தவாறு தயக்கத்தோடு நின்றிருந்தாள் யாழ்மொழி.



அடுத்த பத்து நிமிடங்களில் தன் முன்னே சோஃபாவில் அமர்ந்திருக்கும் அந்த தமிழ் பெண்ணிடம் எப்படி பேசுவதென்று கூட க்ரிஸ்டிக்கு தெரியவில்லை.



மைக்கலோ இருக்கையில் சாய்ந்து அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க, "யூ லுக் பியூட்டிஃபுல், லியோவுக்கு உன்ன பிடிச்சதுல ஆச்சரியம் இல்ல" என்று புன்னகையோடு சொன்னாள் க்ரிஸ்டி.



யாழ்மொழி பெக்கபெக்கவென விழிக்க, "ஓ காட்! இந்த பொண்ணு என்ன ஊமையா, ஷிப்ல இவள பார்த்ததுலயிருந்து இப்படிதான் முழிச்சிட்டு இருக்கா" என்றான் அவன் பெருமூச்சோடு.



"ஷட் அப் மைக்கல், அவ ரொம்ப பயந்து போயிருக்கா" என்று சற்று கோபத்தோடு சொன்னவள் எங்கிருந்தோ தேடி எடுத்த புகைப்படமொன்றை கொண்டு வந்து அவளிடம் நீட்ட, அதை வாங்கிப் பார்த்த யாழ்மொழிக்கு ஆச்சரியமாக இருந்தது.



அவளுடைய கண்கள் அந்த புகைப்படத்தில் விறைப்பாக நின்றிருந்த லியோவைப் பார்த்ததும் கலங்கிப் போக, அவளையே பார்த்திருந்த க்ரிஸ்டிக்கு ஏனோ அந்த சின்னப்பெண் மீது ஏனென்று தெரியாத ஒரு பரிதாபம் உருவானது.



அவளுடைய கரத்தை ஆறுதலாகப் பற்றி அழுத்தம் கொடுத்தவள், "கண்டிப்பா அவன் உன்னை தேடி வருவான், ட்ரஸ்ட் மீ!" என்று உறுதியான குரலில் சொல்ல, அவளின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த வார்த்தைகளிலிருந்த அழுத்தமும் க்ரிஸ்டியின் விழிகள் வெளிப்படுத்திய நம்பிக்கையுமே அவள் சொல்ல வருவதை யாழ்மொழிக்கு உணர்த்தியது.



அடுத்து வந்த நாட்கள் க்ரிஸ்டியோடு தன் நாட்களை கழித்தாள் அவள். இருவரும் இருவேறு தேசத்தை சேர்ந்தவர்கள், இருவேறு மொழிகள். ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வது புரியாவிட்டாலும் ஏதோ ஒரு நல்ல தொடர்பு இருவருக்குமிடையில் தானாகவே உருவானது.



யாழ்மொழிக்கு தேவையான அனைத்தையும் அவள் சொல்ல வருவதற்கு முன்னரே ஏற்படுத்திக் கொடுத்தாள் மற்றவள். கிட்டத்தட்ட அவள் க்ரிஸ்டியின் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன..



அன்று, அந்த நகரத்திலுள்ள அழகிய பூங்காவில்,



"எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்க போற, அதான் மன்னிப்பு கேக்குறேன்ல.." என்று மைக்கல் கேட்க, க்ரிஸ்டியோ தன்னை சுற்றியிருந்த பூக்களை வெறித்துப் பார்த்திருந்தாளே தவிர எதுவுமே பேசவில்லை.



"நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன், ஐ ரியலைஸ்ட் தட்.. மறுபடியும் ஒரு வாய்ப்பு..." என்று அவன் தயக்கமாக இழுக்க, சில கணங்கள் யோசித்துவிட்டு அவன் பக்கம் திரும்பியவள், "பார்க்கலாம்..." என்றுவிட்டு எதேர்ச்சையாகத் திரும்ப, அடுத்தகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.



"மைக்கல்..." என்று அழைத்து அவள் ஒரு திசையைக் காட்ட, வேகமாகத் திரும்பிப் பார்த்தவன் முதலில் அதிர்ச்சியில் விழித்தாலும் பின் கேலியாகப் புன்னகைத்தான்.



அதேநேரம் இவர்களை விட்டு சற்று தள்ளி அந்த அழகிய பூங்காவின் அழகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



அந்த வண்ணப் பூக்கள் அவளுடைய மனதை மயக்கியிருக்க வேண்டும்,

ஆனால் அதற்கு மாறாக அந்த பூக்கள் அவளவனையே அவளுக்கு ஞாபகப்படுத்த, "எப்போதுதான் என்னை சந்திக்க வருவீர்கள் அதிகாரி? இன்னும் எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும்?" என்று வாய்விட்டே கேட்டவாறு தன் மாங்கல்யத்தை மெல்ல வருடினாள்.



"யாழ்..." என்று லியோ அழைப்பது போல் அவளுக்குக் கேட்க, உடனே சுற்றி முற்றி தேட ஆரம்பித்தாள் யாழ்மொழி.



கண்ணிற்கு எட்டும் தூரம் வரை அவன் எங்கும் இல்லை. விழிகள் சட்டென கலங்கி கண்ணீர் கன்னத்தின் வழியே வழிந்தோட, தொண்டையை அடைத்த அழுகையை அடக்கிக்கொண்டாள் அவள்.



"கடவுளுக்கு நான் பிடித்த குழந்தை போல, என்னை சற்று அதிகமாகவே சோதிக்கிறார்" என்று விரக்தியோடு நினைத்துக்கொண்டவள், உணர்வுகளை அடக்கிக்கொண்டவாறு தளர்ந்த நடையாக அந்த பூங்காவில் நடந்தாள்.



திடீரென ஏனென்று தெரியாத ஒரு உணர்வு. அவளின் உள்மனம் ஒரு திசையைப் பார்க்க சொல்லி உந்த, வேகமாக திரும்பிப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.



அப்படியே அசையக் கூட செய்யாது தன்னெதிரே நின்றிருந்தவனை அவள் சிலை போல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். இது கனவா நிஜமா என்ற சந்தேகம் வேறு அவளுக்குள்.



ஆனால் அவளெதிரே நின்றிருந்த லியோவின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருக்க, முதல் தடவை அவனுடைய கலங்கிய விழிகள் அத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.



"யாழ்.. என்னை ரொம்ப மிஸ் பண்ணியா என்ன?" என்று அவன் குறும்புப் புன்னகையோடு இரு புருவங்களை ஏற்றி இறக்கிக் கேட்க, நடப்புக்கு வந்த மறுநொடி அவனை நோக்கி ஓடினாள் அவள்.



அதற்குமேல் லியோவாலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் வருவதற்கு முன்னரே வேக அடிகளை வைத்து அவளை நெருங்கியிருந்தவன் தன் காதல் மனைவியை இறுக அணைத்துக்கொள்ள, யாழ்மொழியோ இத்தனை நாட்கள் பிரிவின் வலியை தன் அணைப்பில் வெளிப்படுத்தி கதறியழுதாள்.



"அதிகாரி என்னிடமே வந்துவிட்டீர்களா, இந்த ஒன்றே போதும் எனக்கு, இதுவே போதும். இப்போது நான் இறந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்" என்ற அவளின் வார்த்தைகளைக் கேட்டவன் மேலும் அவளை தன்னோடு நெருக்கியவாறு, "ஷட் அப்! இதுக்கப்பறம் நீ என்னை விட்டு போகவே கூடாது. போக விடவும் மாட்டேன்" என்றான் அதட்டலாக.



பெண்ணவளோ அவனின் இரு கன்னங்களைத் தாங்கிக்கொண்டவள் அவனின் நெற்றி, கன்னம் என வேகமாக முத்தம் கொடுக்க, உடனே அவளின் இதழை கவ்விக்கொண்டான் லியோ.



அவளிடையை வளைத்து தன்னுடன் அணைத்தவாறு பிரிவின் வலிக்கான மருந்தாக அவளிதழை சுவைத்துக்கொண்டு போக, யாழ்மொழிக்கும் அந்த நொடி அந்த முத்தம் தேவைப்பட்டது போலும்!



இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கியிருக்க, இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த க்ரிஸ்டிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.



விழியோரம் கசிந்த நீரை துடைத்துக்கொண்டவள், பக்கத்திலிருந்த மைக்கலின் தோளில் சாய்ந்துக்கொள்ள, "அட இதுவும் நல்லாதான் இருக்கு" என்று நினைத்து அவள் சாய்வதற்கு வசதியாக தோளைக்

கொடுத்தான் மைக்கல்.



தன்னவளின் நெற்றியோடு நெற்றியை முட்டியவாறு, "ஐ லவ் யூ.. ஐ மீன்..." என்று லியோ அதற்கான அர்த்தத்தை சொல்ல வர, அவனின் உதட்டின் மீது விரலை வைத்து, "ஐ.. லவ்.. லவ் யூ டூ" என்று இத்தனை நாட்களில் க்ரிஸ்டியிடம் கற்றுக்கொண்டதை காதலோடு அவனின் மொழியிலேயே ஒப்பித்தாள் யாழ்மொழி.



லியோவோ ஆச்சரியமாக விழி விரிக்க, அவனின் பூனை விழிகளை பார்த்தவாறு அவனின் இதழோடு தன்னிதழை சேர்த்தாள் பெண்ணவள்.



காதல் அவர்கள் இருவருடைய வாழ்க்கையையும் அவர்கள் நினைத்துப் பார்க்காத திசைக்கு கொண்டு சென்று நிறுத்த, பல தடைகளைத் தாண்டி அந்த அழகான ஆழ்கடலில் விரும்பியே மூழ்கி முத்தெடுத்தனர் அந்த காதல் ஜோடிகள்.





****சுபம்****



கதை எப்படின்னு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க... 😍😍



விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..

Channel name - kadhaikulla polaama

channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama99?si=flwDnRCoBOf_1KIb



And....

தொலைந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மர்மமான காடும் Full video on my channel 👇

Channel name - Bundle of Tales




-Shehazaki 🙌




 
Status
Not open for further replies.
Top