அந்த குறுநிலத்தில் வாழும் மக்களின் மனதில் ஆங்கிலேயரின் அடிமைத் தனத்தால் பயமும் வலியும் போட்டி போட, மக்களுக்கு ஆதரவாக அரண்மனையில் ஆங்கிலேய அதிகாரிகளின் முன் கோபத்தோடு நின்றிருந்தார் அரசர் வேந்தன்.
"இதை என்னால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தங்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களின் நிலையை யோசித்து பேசுங்கள்!" என்று அவர் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு பேச, அவரை கேலிப் புன்னகையோடு பார்த்தான் ஆங்கிலேய அதிகாரி ரொனேல்ட்.
"நாங்க இந்த ஊர்ல நிறைய நல்ல திட்டங்கள செய்துக்கொண்டு வரோம். அதுக்காக நீங்களும் உங்க மக்களும் டேக்ஸ் ஐ மீன் வரிப்பணத்தை செலுத்துறது கடமை அரசர் வேந்தன்" என்று அவன் சொல்ல, வேந்தனின் விழிகள் சிவந்தன.
ஒரு அடி முன்னே வைத்தவர் அப்போதுதான் அவர்களின் படைப்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் யோசித்துப் பார்த்தார். போர் தொடங்கினால் கண்டிப்பாக ராஜ்ஜியம் வீழ்வது உறுதி.
கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு அவர் கையாலாகாத தனத்தோடு நின்றிருக்க, மாடியில் ஒளிந்திருந்து நடப்பதை விழிகளை சுருக்கி பார்த்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"என்ன இது, நம் நாட்டில் இருந்துக்கொண்டு அரசரையே எதிர்த்து பேசுகிறார்கள். ச்சே! ஒருநாள் இல்லை ஒருநாள் மொத்தப் பேரும் நாட்டை விட்டு ஓடத்தான் போகிறார்கள்" என்று மனதிற்குள் பொறுமிக்கொண்டவள், முதுகில் உணர்ந்த தொடுகையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
"நாளை இளவரசியை பெண் பார்க்க இளவரசர் வருவதாக அன்றே அரசர் சொன்னதை மறந்து விட்டாயா என்ன! இன்று அவர்களை தயார்படுத்த வேண்டும் யாழ்.. சீக்கிரம் வா! அத்தனை பேர் அவர்களுக்கு சேவை செய்ய காத்திருந்தாலும் இளவரசி இந்திரசேனாவின் விழிகள் உன்னைத் தான் தேடும்" என்று பணிப்பெண் தோழிகளில் ஒருத்தி சிரிப்போடு சொல்லிவிட்டு முன்னே வேகமாக செல்ல, அவளுக்கு குறையாத வேகத்தோடு அந்த பெரிய அறையை நோக்கிச் சென்றாள் யாழ்மொழி.
அரசர் வேந்தனின் அமைச்சர் ஒருவரின் மகள்தான் யாழ்மொழி. பிறக்கும் போதே தாய் இறந்திருக்க, தந்தையும் இறந்ததும் அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டாள். அதனாலேயே இந்திரசேனாவுக்கு அவள் மேல் ஒரு பணிப்பெண் என்பதையும் தாண்டி தோழியாக அத்தனை பிரியம்.
அங்கு இளவரசி இந்திரசேனாவுக்கான அலங்கார ஏற்பாடுகள் வேகமாக நடைபெற, சந்தனத்தை பன்னீரில் கலக்கி அவளுடைய கைக்கால்களில் தேய்த்துவிட்டாள் யாழ்.
"நாளைதானே பெண் பார்க்கும் படலம், இன்றே அலங்காரத்தை ஆரம்பித்து விட்டீர்கள்" என்று இந்திரசேனா கேலியாகக் கேட்க, "நாளை தேவதை போல் மின்னதான் இந்த ஏற்பாடுகள் இளவரசி" என்ற யாழை உதட்டைப் பிதுக்கிக்கொண்டு பார்த்தாள் மற்றவள்.
"ஆனால் யாழ், அலங்காரம் இல்லாமலேயே தேவதை போல் மின்னுகிறாய் நீ. பத்திரமாக இருந்துக்கொள்! நாளை வரும் இளவரசன் நீதான் மணப்பெண் என்று நினைத்துவிடப் போகிறான்" என்று இந்திரசேனா சொல்லி சிரிக்க, வெட்கப் புன்னகையோடு தலை குனிந்துக்கொண்டாள் அவள்.
அடுத்தநாள், தேவதைப் போல் இளவரசன் நந்தனின் முன் நின்றிருந்தாள் இந்திரசேனா. தடல்புடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பணிப்பெண்களோடு பணிப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தவளின் சிந்தனை எங்கோ இருந்தது.
"என்னை தேடியும் எனக்காக பிறந்த ராஜகுமாரன் வருவானோ?" என்று அவள் வாய்விட்டு கேட்டுவிட, "ச்சே ச்சே! ராஜகுமாரன் அல்ல யாழ், அவனும் ஏதாவது ஒரு அரண்மனையில் பணியாளாக வேலை செய்பவனாக இருக்கலாம்" என்று கேலியாக சொல்லி சிரித்தாள் அவளோடு இருக்கும் ராதா.
தோழியை முறைத்துப் பார்த்தவள் அன்றைய நாளை தன் இளவரசனை பற்றிய யோசனையோடு கழிக்க, அன்றிரவு கூட அவளுக்கு தூங்கா இரவாகித்தான் போனது.
அடுத்தநாள், அந்த குறுநிலத்திலிருந்த ஆங்கிலேய அரண்மனையே பரபரப்பாக இருந்தது.
"இஸ் ஹீ அர்ரைவ்ட் ஆர் நாட்? வீ ஆர் வெயிட்டிங் சோ லாங்..." என்று வில்லியம் மற்ற அதிகாரிகளிடம் சொல்லிக்கொண்டிருக்க, வெளியில் மக்களின் கதறல் சத்தம் கேட்ட வண்ணமாய் இருந்தது.
விறுவிறுவென்று வெளியில் வந்தவன், "இன்னும் டென் மினிட்ஸ்ல சார் இங்க வந்துடுவாரு. எந்த சத்தமும் கேக்க கூடாது. ஃபினிஷ் தெம்!" என்று உரக்கக் கத்த, வரிப்பணத்தை செலுத்தாத அந்த மக்களை கதறக் கதற அடித்தனர் அந்த அதிகாரிகள்.
அதை திருப்தியாகப் பார்த்தவன் விஷம புன்னகையோடு உள்ளே செல்ல, அரண்மனையில் இந்திரசேனாவின் அறையில் இருந்த யாழ்மொழியோ இளவரசியிடம் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டிருந்தாள்.
இந்திரசேனாவும் அதை கவனிக்காமல் இல்லை.
"யாழ், நீ ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாய் என்று மட்டும் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டு கேட்டு விடு! என்னிடம் சொல்வதற்கு என்ன தயக்கம்?" என்று அவள் கேட்டதும், அசடுவழிந்தவாறு அவளை ஒரு பார்வைப் பார்த்தாள் யாழ்.
"இளவரசி... ராஜகுமாரன் ராஜகுமாரிகளுக்கு மட்டும்தானா? எங்களை போன்ற பணிப்பெண்களுக்கு இல்லையா?" என்று கேட்ட யாழ்மொழியின் குரலில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துக்கொண்டிருக்கும் ஏக்கம் தெரிய, அதைப் பார்த்த இளவரசி இந்திரசேனாவுக்கு லேசாக இதழ்கள் விரிந்துக்கொண்டன.
"ஏன் கிடையாது யாழ்? உன் உலகில் நீயும் இளவரசி தான். எந்த ராஜகுமாரன் உன் அழகை கொத்திச் செல்ல காத்துக்கொண்டு இருக்கின்றானோ? எனக்கே உன் அழகை கண்டு சற்று பொறாமையாகத் தான் இருக்கின்றது" என்று இந்திரசேனா ஒரு பெருமூச்சை விட்டுக்கொள்ள, விரக்தியாகப் புன்னகைத்தாள் அந்த அரண்மனையின் பணிப்பெண்.
"என்னைப் பார்த்து பொறாமையா? ஹாஹாஹா... வேண்டாம் இளவரசி, என்னைப் போன்ற பணிப்பெண்ணுக்கு ஆசைகள் வேண்டாம்" என்று சொன்னவளின் விழிகளிலிருந்து விழிநீர் கசிந்து தரையில் பட்டுத் தெறித்தது.
அதைப் பார்த்த இந்திரசேனாவுக்கு மனம் கனக்க, தரையில் அமர்ந்திருந்தவளின் கரத்தைப் பற்றி இழுத்து தான் அமர்ந்திருந்த மெத்தையின் மீது அமர வைத்தாள்.
"அய்யோ இளவரசி, என்ன காரியம் செய்கிறீர்கள்! எவராவது பார்த்தால் என் கால்களை வெட்டினாலும் வெட்டி விடுவார்கள்" என்று பதறிக்கொண்டு அவள் எழப் போக, "கொஞ்சம் பொறு! எதற்கு இந்த பதற்றம்?" என்று சிரித்தவாறுக் கேட்டாள் இந்திரசேனா.
அவளோ விழிகளில் சங்கடத்தோடு நோக்க, "உன் சங்கடத்திற்கு அர்த்தமே இல்லை, என்னை பொருத்தவரை அனைவரும் சமம்தான். ஆனால் என்ன, அதிகார பதவி அடிப்படையில் இந்த ஏற்றத் தாழ்வுகள். இருந்தாலும் நீ கவலைப்பட தேவையில்லை, நீ இங்கு வேண்டுமானால் பணிப்பெண்ணாக இருக்கலாம், ஆனால் உனக்காக வரும் ராஜகுமாரன் உன்னை ராணி போல் வைத்துக்கொள்ள போகிறான்" என்று அவளுக்கு புரிய வைத்தாள் இந்திரா.
"அப்படியென்றால், அவன் எனக்காக எப்போது வருவான்?" என்று கேட்டபடி யாழ்மொழியோ கன்னத்தில் கை வைத்தவாறு தன் ராஜகுமாரனை பற்றிய கனவில் மிதக்க, அதேநேரம், அந்த ஆங்கிலேய அரண்மனையின் முன்னே அந்த வெள்ளை நிற கார் நிறுத்தப்பட்டது.
அங்கு சுற்றியிருந்த அதிகாரிகள் அனைவரும் அந்த காரிற்கு முன் நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நிற்க, காரிலிருந்து தன் முதல் அடியை வைத்து அந்த ஊருக்குள் நுழைந்தான் லியோ ஜார்ஜ்.
பாறை போன்ற இறுகிய முகமும் அவனுடைய சீருடையும் விறைப்பான தோற்றமும் முன்னே நின்றிருந்தவர்களின் வயிற்றில் பயபந்தை உருள வைக்க, "சார்..." என்று மரியாதை நிமித்தமாக செல்யூட் அடித்தனர் மற்ற அதிகாரிகள்.
"வெல்கம் சார்" என்று வில்லியம் கரத்தை நீட்டியவாறு சொல்ல, அதை கண்டுகொள்ளாதது போல் வேக நடையிட்டு உள்ளே சென்றான் அவன்.
அவனின் உதாசீனத்தால் வில்லியமின் முகம் கறுக்க, சரியாக அவனுடைய பார்வையில் ஏகப்பட்ட அந்த கிராமத்தை சேர்ந்த இந்தியர்கள் உடலில் காயங்களோடு உணர்வற்று தரையில் கிடக்கும் காட்சி தெரிந்தது.
ஆனால், அந்த ஆங்கிலேயனோ அதை அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் ஆஃபீஸ் அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
'உயரதிகாரி லியோ ஜார்ஜ்' என்ற அவனுடைய பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க, அதை தன் அக்மார்க் புன்னகையோடு தடவி விட்டுக்கொண்டவன் தன் இருக்கையில் அமர்ந்த அடுத்தகணம், அவன் முன்னே வேகமாக வந்து நின்றனர் இரு ஆங்கிலேய அதிகாரிகள்.
"சார்..." என்ற அவர்களின் குரலிலேயே லேசான பயம் எட்டிப் பார்க்க, "நோ மோர் எக்ஸ்கியூஸஸ் மிஸ்டர் ஜேம்ஸ், டெக்ஸ் இனிமே கரெக்ட்டா வசூலிக்கப்படணும். கொடுக்க முடியலன்னா தண்டனை கடுமையா இருக்கணும். திஸ் இஸ் மை ஆர்டர்" என்றவனின் குரலில் அதிகாரமும் கட்டளையும் ஓங்கி ஒலித்தது.
"நாங்க எங்க கடமைய சரியாதான் பண்றோம். ஆனா, சில மக்கள் எங்கள எதிர்க்குறாங்க, இல்லன்னா புரட்சி பண்றாங்க. வீ கான்ட் ஹேன்டல் தட் சிட்டுவேஷன்" என்று பக்கத்திலிருந்த வில்லியம் சொல்ல, புருவ முடிச்சுகளோடு அவனைப் பார்த்தான் லியோ.
"டெக்ஸ் அவங்க நமக்கு கொடுத்தே ஆகணும், ஒருவேள நமக்கு எதிரா புரட்சி பண்றாங்கன்னா, யோசிக்க தேவையில்ல ஷூட் தெம். நம்மள பார்க்குறப்போ அவங்க கண்ணுல பயம் மட்டும்தான் தெரியணும். கொட் இட்!" என்றான் அவன் அழுத்தமாக.
"பட் சார்.. ஏற்கனவே இந்த ப்ளேஸ்ஸோட கிங் நம்ம மேல கோபத்துல இருக்காரு. இந்த மாதிரி பண்ணா அவங்க கோபத்தை ட்ரிக்கர் பண்ணுற மாதிரி இருக்காதா?" என்று ஜேம்ஸ் தயக்கத்தோடுக் கேட்க, இருக்கையிலிருந்து எழுந்து அந்த அதிகாரியின் எதிரே வந்து நின்றான் லியோ.
ஒற்றைக் காலை மடக்கி மேசையில் சாய்ந்துக்கொண்டவன், "இந்த நாட்டுக்குள்ள நாம வரதுக்கு முன்னாடி இதை எல்லாம் நாம யோசிச்சுதான் வந்தோமா மிஸ்டர் ஜேம்ஸ்? இவங்களால நம்ம கன்ட்ரிக்கு நிறைய அட்வான்டேஜஸ் இருக்கு, வீ டோன்ட் நீட் எனிவன்ஸ் பர்மிஷன்ஸ் டூ இம்போஸ் அவர் ரூல்ஸ்" என்று சொல்லி இதழை கேலியாக வளைத்தான்.
வில்லியமும் ஜேம்ஸும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "கோ அஹெட்!" என்றுவிட்டு மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்தவன் கையிலிருந்த ஃபைலில் முகத்தை புதைத்துக்கொள்ள, அந்த அதிகாரிகளும் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.
அடுத்தநாளே, மொத்த ஊருக்கும் புதிய ஆங்கிலேய உயரதிகாரி வந்த விடயம் காட்டுத் தீ போல் பரவ, அரண்மனையிலிருந்த யாழ்மொழியின் காதிற்கும் அந்த தகவல் சென்றது.
பணிப்பெண்களோடு தங்களுக்கான அறையில் அமர்ந்திருந்தவள், "வரிப்பணத்தை அதிகரிக்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது, இவர்கள் அட்டூழியங்கள் அளவிற்கு மீறி சென்றுக்கொண்டிருக்கிறது. பேசாமல் நானும் புரட்சி குழுவில் இணையலாம் என்று நினைக்கிறேன்" என்று கோபமாகச் சொல்ல, மற்ற தோழிகளோ வாய்விட்டு சிரித்தனர்.
"யார் நீயா! சாதாரண பல்லியை பார்த்தாலே விழுந்தடித்துக்கொண்டு ஓடுவாய். நீ புரட்சி குழுவில் இணையப் போகிறாயா? நகைச்சுவை வேண்டாம் யாழ்" என்று ராதா கேலியாக சொல்ல, "கொஞ்சம் அமைதியாக இருங்கள், இப்போது ஆங்கிலேய அரண்மனைக்கு வந்திருக்கும் புதிய உயரதிகாரியை யாராவது பார்த்திருக்கின்றீர்களா? அந்த வெள்ளையனின் அழகை மெச்ச வார்த்தைகளே இல்லை என்று பேசிக்கொள்கிறார்களே! அதைப் பற்றி யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டாள் அவர்களில் ஒருத்தியான சீதா.
யாழ்மொழியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
"என்ன, நிஜமாகவா! நான் இப்படி எல்லாம் கேள்விப்படவே இல்லையே! எங்களின் தேச மக்களின் அழகை விட அழகா அவன்? வெறும் நிறத்தை வைத்து சொல்கிறார்கள் போலும் ஹாஹாஹா..." என்று யாழ் அலட்சியமாக சொல்லி சிரிக்க, "என் உழவுத்துறை அமைச்சின் படி அந்த ஆங்கிலேயனை பார்த்தால் எந்த பெண்ணும் மயங்காமல் இருக்க மாட்டார்களாம்! எனக்கு இப்போதே பார்க்க வேண்டும் போல இருக்கிறது" என்றாள் சீதா விழிகளில் ஆசை மிதக்க.
மற்ற பெண்கள் ஆச்சரியமாக அவளை பார்த்துக்கொண்டிருக்க, "ஆசையா! பிடித்து சிறையில் போட்டால்தான் உனக்கு புத்தி வரும் போல. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தென்று சொல்வார்கள். அவன் நம் நாட்டை கைப்பற்றி இருக்கும் ஆங்கிலேய அதிகாரி, அதை மறந்து விடாதீர்கள். அவன் மேல் ஆசைப்படுவது நம் நாட்டிற்கு செய்யும் துரோகம்" என்ற யாழ்மொழியின் வார்த்தைகள் அழுத்தமாக ஒலித்தன.
"அது யாழ்.. அவள் விளையாட்டுக்காக தானே..." என்று பேச வந்த ராதாவின் பேச்சைக் கேட்க அவள் அங்கு இருக்கவே இல்லை.
அறையிலிருந்து வெளியேறி வராண்டாவில் நடந்துச் சென்றவள் அங்கிருந்த ஜன்னல் வழியே தெரிந்த நிலவை வெறிக்கத் தொடங்க, அதேநேரம் தன் அறையிலிருந்து அதே நிலவைதான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.
"க்ரிஸ்டி..." என்ற பெயரை விழிகள் சிவக்க முணுமுணுத்தான்.
நடந்த கசப்பான சம்பவங்களின் விம்பங்கள் அவனுடைய நினைவடுக்கில் தோன்றி மறைய, விழிகளை அழுந்த மூடித் திறந்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான் லியோ ஜார்ஜ்.
'அவள மறந்துரு லியோ.. இனி அவ உன் லைஃப்ல இல்ல. துரோகி!' என்று மட்டும் தனக்குள் சொல்லிக்கொண்டவன் கட்டிலில் சென்று விழுந்தும் தூக்கம்தான் வந்தபாடில்லை.
அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிய, வழக்கமான தன் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
"இளவரசி, அசையாமல் இருங்கள், இல்லையென்றால் விரல்களை வெட்டி விடப் போகிறேன்" என்று மெல்ல இளவரசியின் நகங்களை அழகாக வெட்டி விட்டவாறு அவள் சொல்ல, இந்திரசேனாவோ ஏதோ ஒரு தீவிர யோசனையில் இருந்தாள்.
நிமிர்ந்துப் பார்த்த யாழ்மொழி, "எதற்கு இந்த தீவிர யோசனை?" என்று புன்னகையோடுக் கேட்க, "அது...நகரை ரகசியமாக வலம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன, அதனால்.." என்று இந்திரசேனா குறும்புச் சிரிப்போடு இழுக்க, அவளை அதிர்ச்சியோடுப் பார்த்தாள் மற்றவள்.
"இளவரசி, அரசருக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான்" என்று யாழ் பயந்த குரலில் சொல்ல, மற்றவளோ தோழியை அழுத்தமாகப் பார்த்தாள்.
"இளவரசியின் பிடிவாதத்தை வெல்ல முடியுமா என்ன?" என்று விழிகளை உருட்டியவள் யாருக்கும் தெரியாமல் இந்திரசேனாவை சந்தைக்கு அழைத்துச் செல்ல, அதேநேரம் சாதாரண உடையில் ஜேம்ஸ்ஸோடு அதே சந்தைக்குள் நுழைந்தான் லியோ.
*************
மையவிழிப் பார்வை நாவல் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு...
"சார், வரிப் பணத்தை அதிகரிச்சதுலயிருந்து மக்களுக்கு நம்ம மேல ரொம்ப கோபம். எப்போடா நம்மள தாக்கலாம்னு இருக்காங்க. இதுல நாம மார்கெட்க்கு தனியா வந்திருக்கோம், எதுக்கும் நம்ம ஆஃபீசர்ஸ்ஸ..." என்று தயக்கமாக ஆரம்பித்த ஜேம்ஸின் வார்த்தைகள் லியோவின் பார்வையில் சட்டென நின்றன.
"வாட் ஹேப்பன்ட் சார்?" என்று அவன் சிறு பயத்தோடுக் கேட்க, "இப்போ நாம தனியா இருக்கோம், இந்த மக்கள்ல யாரு வேணா நம்மள அட்டேக் பண்ணலாம். நூறு பேரா இருந்தாலும் தனி ஆளா உயிர் போற அந்த நிமிஷம் வரைக்கும் சமாளிக்கணும். அதுதான் ஒரு ஆஃபீசரோட செல்ஃப் கான்ஃபிடன்ட். பட், பயப்பட தேவையில்ல. மக்களோட கண்ணுல எங்க மேல இருக்குற பயத்தைதான் நான் பார்க்குறேன்..." என்றான் லியோ அழுத்தமாக.
அதற்குமேல் மற்றவன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவனோடு சேர்ந்து நடக்க, அங்கிருந்த ஒரு பழக்கடைக்கு முன் நின்றான் லியோ.
"ஹவ் மச் இஸ் திஸ்?" என்று ஜேம்ஸ் கேட்க, ஆங்கிலேயர்களை பார்த்ததும் அந்த வியாபாரியோ நடுங்க ஆரம்பித்து விட்டார்.
"ஐயா.. என்ன வேணும். அய்யோ! இவங்க பாஷை கூட எனக்கு தெரியாதே..." என்று அந்த பழ வியாபாரி தோளிலிருந்த துண்டை கையில் வைத்து தடுமாற ஆரம்பிக்க, அதேநேரம் இந்திரசேனாவோடு சந்தைக்குள் நுழைந்திருந்தாள் யாழ்மொழி.
"இளவரசி, அரசரின் ஆட்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை காணலாம். முகத்தை மறைத்துள்ள துணியை மட்டும் விலக்கி விட வேண்டாம்! ஆமாம்... எதற்காக சந்தைக்கு வந்தீர்கள்?" என்று பேசிக்கொண்டே அவள் செல்ல, மற்றவளிடமோ பதிலே இல்லை.
"இளவரசி..." பதில் வராததில் திரும்பி இந்திரசேனாவை அவள் கேள்வியாக நோக்க, சுற்றி முற்றி யாரையோ தீவிரமாக தேடிய வண்ணம் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.
"யாரைத் தேடுகிறீர்கள்?" என்று யாழ் புரியாமல் கேட்க, திடீரென யாரோ அவளை அழைப்பது போல் ஒரு உணர்வு!
"அய்யோ யாரோ நம்மை கண்டுவிட்டார்கள் போல! இளவரசி ஒளிந்துக்கொள்ளுங்கள்" என்று பதற்றமாக சொல்லிக்கொண்டு யாழ் இந்திரசேனாவின் புறம் திரும்ப, அவள் அங்கு இருந்தால்தானே!
'கடவுளே! இது என்ன சோதனை? இளவரசி எங்கே சென்றுவிட்டார்கள்? இப்போ.. இப்போது நான் என்ன செய்வேன்? முடிந்து விட்டது, அரசர் என்னை தூக்கிலிடப் போகிறார். அவ்வளவுதான்' என்று கத்தக் கூட முடியாமல் மானசீகமாக புலம்பிக்கொண்டு அங்குமிங்கும் இந்திரசேனாவை தேடியவாறு நடந்தாள் யாழ்மொழி.
ஆனால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை அவளைக் காணாததில் இவளுக்குதான் உடல் உதறத் தொடங்கியது.
"யாரும்மா நீ? மூஞ்ச மறைச்சுக்கிட்டு இங்க தடுமாறிக்கிட்டு இருக்க, ஒருவேள திருடியா நீ... எல்லோரும் இங்க வாங்க, இந்த பொண்ணு இங்க எதையோ திருட முயற்சி பண்றா, எல்லாரும் வாங்க..." என்று ஒருவன் கத்த, "என்ன, நான் திருடியா! இல்லை இல்லை. கடவுளே என்னை காப்பாற்று" என்று அங்கிருந்து ஓடியவள் அப்போதுதான் பழ வியாபாரியின் அருகே சென்று மூச்சு வாங்கியவாறு நின்றுக்கொண்டாள்.
"அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்" என்றுக்கொண்டே திரும்பியவள், அவர் நடுங்குவதைப் பார்த்து "ஏதாவது உதவி வேண்டுமா ஐயா?" என்று கேட்டு வம்பை தானாக முன் சென்று விலைக்கு வாங்கினால் என்றுதான் சொல்ல வேண்டும்.
"அம்மா, நீங்க யாரு என்னன்னு தெரியல. தயவு செஞ்சு இவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்கம்மா. ஏதோ கேக்குறாரு, எனக்கு புரியவே இல்ல. என.. எனக்கு பயமா இருக்கு" என்று அவர் நடுங்கியபடி சொல்ல, "அவ்வளவுதானே, இதோ நான் உதவி செய்கிறேன்" என்று அங்கு நின்றிருந்த லியோவின் புறம் வேகமாகத் திரும்பினாள் யாழ்மொழி.
'ஆங்கிலேயர்களா! இவர்கள் பேசும் மொழியின் பெயர் கூட எனக்கு தெரியாதே! அய்யோ... மானமே போய்விட்டது. ஏற்கனவே திருடி பட்டத்தை வாங்கி விட்டாயிற்று. இப்போது இது வேறா... நம் கதை முடிந்துவிட்டது' என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அவள் நின்றுக்கொண்டிருக்க, முதல் தடவை விழிகள் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தான் லியோ.
'கண்கள் கூட பேசுமா?' என்ற கேள்வி அவனுக்குள் எழ, ஒரு அடி அவளை நோக்கி வைத்ததும்தான் தாமதம் அங்கிருந்து தப்பித்து ஓடப் போனாள் யாழ்.
"ஹேய் ஸ்டாப்!" என்று கத்திக்கொண்டு தன்னை மீறி அவளை நோக்கி அவன் வேக நடையிட்டு செல்ல, அவளோ பக்கத்தில் கொட்டுவதற்காக எச்சில் நீரை கொண்டு சென்றுக்கொண்டிருந்த ஒருவரின் கரத்தை ஓடும் வேகத்தில் தட்டிவிட்டாள்.
அவ்வளவுதான்!
அந்த மொத்த எச்சில் நீரும் லியோவின் சட்டையை நனைத்து விட, "கடவுளே!" என்று தலையில் கை வைத்துக்கொண்டவள் கால் பிடறியில் பட சந்தைக்குள் ஓட ஆரம்பித்தாள்.
"சார்..." என்ற ஜேம்ஸின் கத்தல்கள் எதுவும் அவன் காதில் கேட்கவில்லை.
"யூ ப்ளடி..." என்று கத்திக்கொண்டு உச்சகட்ட கோபத்தில் லியோ அவளை துரத்த ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு சுவற்றுக்கு பின் மறைந்துக் கொண்டவளுக்கு மூச்சு விடக் கூட சிரமமாக இருந்தது.
"ஊஃப்ப்...." என்று பெருமூச்சு விட்டவள், "எப்படியோ அந்த வெள்ளைக்கார துரையின் கண்ணிலிருந்து மறைந்து விட்டோம். ஆனால்... ஆனால் எப்படி இளவரசியை தேடுவது" என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு திரும்ப, அவளிடமிருந்து சற்று தள்ளி பதற்றமாக கைகளைப் பிசைந்த வண்ணம் நின்றிருந்தாள் இந்திரசேனா.
"இளவரசி, எங்கே சென்றீர்கள்? உங்களை காணாமல் பயந்தே போய்விட்டேன். எனக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விட மாட்டீர்கள் போல, முதலில் வாருங்கள், இங்கிருந்து போகலாம்" என்று படபடவென பொரிந்துக்கொண்டே சென்றவள், முகத்தை மறைத்திருந்த முந்தானையை தூர வீசிவிட்டு அங்கு கொடியில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முந்தானையை யாருக்கும் தெரியாமல் எடுத்து முக்காடு போல் போட்டுக்கொண்டாள்.
இந்திரசேனாவோ பின்னால் யாரையோ திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் செல்ல, அவளை இழுக்காத குறையாக வேகமாகச் சென்றாள் யாழ்மொழி.
ஆனால் அந்த ஒருவன் குடிசைக்கு பின்னே மறைந்திருந்து இந்திராவையே பார்த்துக்கொண்டிருக்க, அவனுடைய விழிகளில் ஏனென்று தெரியாத வலி அப்பட்டமாகத் தெரிந்தது.
இங்கு சுற்றி முற்றி மூச்சு வாங்கியவாறு தேடிக்கொண்டிருந்த லியோவின் விழிகளுக்கு தரையில் கிடந்த முந்தானை தென்பட, அதை கையிலெடுத்துக்கொண்டவன் காலை கோபமாக தரையில் உதைக்க, ஜேம்ஸிற்கு பயத்தில் அடி வயிறு கலங்கியது.
"என்னாச்சு சார்? அந்த பொண்ணு..." என்று அவன் மெல்ல ஆரம்பிக்க, "ஷட் அப்!" என்று அந்த இடமே அதிர கத்தியவன் தன்னை குனிந்துப் பார்த்துவிட்டு விழிகள் சிவக்க நின்றிருந்தான்.
***********
இந்திரசேனாவும் யாழ்மொழியும் அரண்மனைக்குள் மெல்ல நுழைந்து யாரும் பார்க்காதவாறு அறைக்குள் நுழையப் போக, 'ஹ்ர்ம் ஹ்ர்ம்..' என்ற செருமல் சத்தம் பின்னாலிருந்து கேட்டது.
இரு பெண்களும் அதிர்ந்துப் போய் எச்சிலை விழுங்கியவாறு மெல்ல திரும்பிப் பார்க்க, அவர்களை முறைத்தவாறு நின்றிருந்தார் அரசர் வேந்தன்.
"தந்தையே, தாங்கள் இங்கு..." என்று இந்திரசேனா ஏதோ பேச வர, "எதுவும் பேசாதே இந்திரா! உனக்கு எச்சரித்தும் என்னை மதியாமல் மீண்டும் எந்த பாதுகாப்பும் இன்றி அரண்மனையை விட்டு வெளியே சென்றிருக்கிறாய். இதற்கு நீதான் காரணமா யாழ்?" என்று மகளை திட்டிவிட்டு யாழ்மொழியின் புறம் திரும்பிக் கேட்டார்.
அவரின் சிவந்த விழிகளைப் பார்த்தவளுக்கு நா எழவில்லை.
"அது... அரசே, நா.. நான் இளவரசியிடம்..." என்று அவள் திக்கித்திணறி பேச, "அவளுக்கு எதுவும் தெரியாது, நான்தான் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றேன்" என்று அவளைக் குறுக்கிட்டு சொன்னாள் இந்திரசேனா.
அரசர் வேந்தனுக்கு மகளை முறைப்பதைத் தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.
"காவலர்களே..." என்று கத்தியவர் அவர் பக்கத்தில் வந்து நின்ற ஒரு காவலனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.
"இரு பெண்கள் வெளியே செல்வதைக் கூட அறியாமல் இருக்கும் அளவிற்கு சொன்ன வேலையில் கவனம் இல்லை. அப்படிதானே! இதற்குப் பிறகு இளவரசி அரண்மனையை விட்டு வெளியேறினால், உங்களின் தலைகள் என் வாலுக்கு இரையாகி விடும்" என்று கடுங்கோபத்தில் வேந்தன் பேச, அந்த காவலர்களோ உடல் நடுங்க அங்கிருந்து சென்றனர்.
"தந்தை..." என்று மீண்டும் இந்திரசேனா ஏதோ பேச வர, "எதுவும் பேசாதே! உன் அறைக்குச் செல்" என்றவர் யாழ்மொழியின் புறம் திரும்பி, "நீ... உன் தகுதி என்னவோ அதை புரிந்து நடந்துக்கொள்" என்றுவிட்டு செல்ல, யாழ்மொழியின் முகமோ அவமானத்தில் கறுத்துவிட்டது.
"தந்தை பேசியதை மனதில் வைத்துக்கொள்ளதே யாழ்" என்று ஆறுதலாக சொல்லிவிட்டு இந்திரசேனா சென்றுவிட, தன் அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தவளுக்கு இப்போது அந்த ஆங்கிலேய அதிகாரியின் நினைவுதான்.
"என்ன கண்கள் அது! விட்டால் கண்ணாலேயே எரித்து விடுவான் போல, இருந்தாலும் இவள் சொன்னதில் குத்தமே இல்லை, பெண்களை மயக்கும் அழகுதான். ஆனால், நீ மட்டும் மயங்கிவிடாதே யாழ்! அதன் பிறகு ஆங்கிலேய சிறையோ அரண்மை சிறையோ ஏதோ ஒன்று உறுதி, அது மட்டும் புரிகிறது"
என்று வாய்விட்டு சொல்லி சிரித்துக்கொண்டவள் அப்படியே நடந்ததை நினைத்தவாறு உறங்கிப் போக, சந்தையில் விட்டுச் சென்ற யாழ்மொழியின் முந்தானையை கையில் வைத்துக்கொண்டு யோசனையோடு அமர்ந்திருந்தான் லியோ ஜார்ஜ்.
"ஹவ் டேர் இஷ் ஷீ... என் மேல அதை கொட்டி விட்டது மட்டுமில்லாம என்கிட்ட இருந்து தப்பிச்சு போயிட்டா. ஐ கான்ட் டோலரேட் திஸ்" என்று பற்களைக் கடித்துக்கொண்டான் அவன்.
ஆனால், அந்த கண்கள்!
அவனுடைய நினைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் வர, தலையை உலுக்கி சிந்தனையை கலைத்தவன் முயன்று தூக்கத்தை வரவழைத்துத் தூங்கினான்.
சில நிமிடங்கள் கழிந்திருக்கும். அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, சரியாக வெளியில் கத்தி கூச்சலிடும் சத்தம் மற்றும் துப்பாக்கி சத்தம் பலமாகக் கேட்க, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் லியோ.
மூச்சு வாங்கியவாறு சுற்றிமுற்றி பார்த்தவன் வேகமாக பால்கெனிக்கு சென்று பார்க்க, அங்கு புரட்சியாளர்கள் சிலர் முகத்தை மறைத்துக்கொண்டு ஆங்கிலேய அதிகாரிகளை தாக்கிக்கொண்டிருந்தனர்.
உடனே டீபாயிற்கு மேலிருந்த தன் துப்பாக்கியை எடுத்து வந்தவன், தன் பயிற்சி வீண் போகவில்லை என்பது போல கிட்டத்தட்ட இரு இந்திய புரட்சியாளர்களை சுட்டு அங்கேயே வீழ்த்தியிருக்க, மற்றவர்களோ பயந்து காட்டு வழியாக ஓடிவிட்டனர்.
"ஆஃபீசர்ஸ், சுத்தி எல்லா இடமும் தேடுங்க, புரட்சி பண்றவங்க தெரிஞ்சா யோசிக்காம சுட்டுருங்க. கொட் இட்!" என்று அடித் தொண்டையிலிருந்து அவன் கத்த, வேகமாக துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சிலர் நுழைய அரண்மனையை சுற்றி தேடினர் இன்னும் சிலர்.
"லூசர்ஸ்..." என்று இறந்துக் கிடந்தவர்களைப் பார்த்து லியோ கேலியாக இதழை வளைக்க, அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.
அப்போதுதான் எழுந்து குளித்து முடித்து தயாராகிக்கொண்டிருந்த யாழ்மொழியோ நேற்று நடந்ததை ராதாவிடம் விழிகளை உருட்டிய வண்ணம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
"நிஜமாகத்தான் சொல்கிறாயா யாழ், அந்த ஆங்கிலேயனிடமிருந்து தப்பித்தாயா?" என்று ராதா விழிகளை பெரிதாக விரித்து ஆச்சரியத்தோடுக் கேட்க, "என்னை என்னவென்று நினைத்து விட்டாய் ராதா, அவன் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு சொடக்கு போடும் நேரத்தில் தப்பித்து விட்டேன் என்றால் பார்.. பாவம்! சாக்கடை நீரில் முங்கி எழுந்தது போல் நின்றிருந்தான். ஆனால்... அவள் சொன்ன அளவுக்கு அப்படி ஒன்றும் அழகில்லையே!" என்றாள் அவள் வேண்டுமென்று.
"என்ன சொல்கிறாய்! நிஜமாகவா..." என்று சிறு அதிர்ச்சியோடு வந்தன மற்றவளின் வார்த்தைகள்.
"ஆம் ராதா, கண்களை வேண்டுமானால் சொல்லலாம். அப்பப்பா! வாள் போன்ற அவனுடைய விழிகள் சற்று என்னை மயக்கத்தான் செய்தது. அடுத்து உதடுகள், சரியாக கவனிக்கவில்லை ஆனால் நம் உதடுகளை விட சிவப்பாக அழகாக..." என்று யாழ் இழுக்க, "சரியாக கவனிக்கவில்லை என்று சொன்னாய்?" என்று சந்தேகமாகக் கேட்டாள் ராதா.
"ஹிஹிஹி... கவனிக்கவில்லை தான். அட இளவரசியை அலங்காரம் செய்வதற்கான நேரம் நெருங்கி விட்டது. விட்டால் ஒரு நாள் முழுதும் பேசிக்கொண்டே இருப்பாய். வா வா.. ஆக வேண்டிய வேலைகளை பார்" என்று பேச்சை திசை திருப்பிவிட்டு அவள் அங்கிருந்து இந்திரசேனாவின் அறைக்குச் செல்ல, இளவரசியோ அறை ஜன்னல் வழியே தோட்டத்தில் நடக்கும் குதிரைப் பயிற்சிகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய பார்வைதான் அங்கு இருந்ததே தவிர சிந்தனை முழுவதும் அந்த ஒருவனைப் பற்றிதான்.
"வீரா... வீரா..." என்ற அவனுடைய பெயரை அவள் மெல்ல முணுமுணுக்க, "யார் அது?" என்று பின்னாலிருந்து வந்த யாழ்மொழியின் குரலில் பதற்றமாக திரும்பிப் பார்த்தாள் அவள்.
"அது... யாரைப் பற்றி கேட்கிறாய் யாழ்?" என்று இந்திரசேனா வார்த்தைகளில் தடுமாற்றத்தோடு கேட்க, "நீங்கள்தான் வீரா வீரா என்று யாரையோ அழைத்தீர்கள், அதைதான் யார் என்று கேட்டேன்" என்றுக்கொண்டே அவளுக்கான ஆடைகளையும் அணிகலன்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் மற்றவள்.
இந்திரசேனாவுக்கு இவளை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.
யாழ்மொழியோ அவளை சந்தேகமாகப் பார்க்க, சட்டென மற்றவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
"அய்யோ யாழ்! கீழே தோட்டத்தில் குதிரைப் பயிற்சி நடக்கின்றதல்லவா! அந்த வீரர்களை பார்த்துதான் வீரா வீரா என்றேன். அவ்வளவுதான்" என்று வாயிற்கு வந்த பொய்யை சொல்லி அவள் சமாளித்து விட, அடுத்து எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த குதிரை பயிற்சியை ஆர்வமாகப் பார்த்தாள் யாழ்மொழி
"பணிப்பெண்கள் குதிரைகளை தொடக் கூடாதென்பது அரசர் கட்டளை. ஆனால்... குதிரை சவாரி போக வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இளவரசி, எப்போதுதான் நிறைவேறுமோ?" என்று குதிரைகளை ஏக்கமாகப் பார்த்தபடி அவள் சொல்ல, தோழியை குறும்பாகப் பார்த்தாள் இந்திரசேனா.
"நீ இந்த அரண்மனையின் பணிப்பெண் என்பதையும் தாண்டி என் தோழி யாழ்மொழி, உன் ஆசையை நான் எப்படி நிறைவேற்றாமல் போவேன்?" என்று இளவரசி இரு புருவங்களையும் ஏற்றி இறக்க, அதிர்ச்சியாக விழி விரித்தவளுக்கு தானாக கிடைக்கும் வாய்ப்பை விடத் தோன்றவில்லை.
அடுத்த அரைமணி நேரத்தில் இளவரசியின் உத்தரவோடு வழக்கம் போல் விழிகள் மட்டும் தெரியும் வண்ணம் முகத்தை மறைத்துக்கொண்ட யாழ்மொழி, குதிரையில் ஏறிச் செல்ல, அதேநேரம் ஆங்கிலேய அரண்மனையிலிருந்து காரில் வெளியேறினான் லியோ ஜார்ஜ்.
***********
நானும் என் பெஸ்ட் ஃப்ரென்டும் சேர்ந்து அமேசன் கிண்டிலுக்காக மித்ரயாழினி அப்படிங்குற பேருல டிரெக்ட் புக்ஸ் எழுதுறோம்.. எங்க புது முயற்சின்னு கூட இதை சொல்லலாம்..
"எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன், குதிரையில் இது போல் பயணிக்க வேண்டும் என்று. இன்று நம் இளவரசியால் நிறைவேறி விட்டது. இப்படி பயணிக்கும் போது ஏதோ வீராங்கனை போல் என்னை நானே உணர்கிறேனே, இந்த உணர்வு மிகவும் பிடித்திருக்கிறது"
என்று வெட்கப்பட்டவாறு யாழ்மொழி தனக்குத்தானே பேசிக்கொண்டு குதிரையில் மிக வேகமாக செல்ல, லியோவோ கையிலிருந்த ஃபைலில் முகத்தைப் புதைத்தவாறு வந்துக்கொண்டிருந்தான்.
திடீரென அவன் வந்துக்கொண்டிருந்த காரோ ஒரு இடத்தில் சட்டென நின்று விட, ஜேம்ஸுக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது.
'அய்யோ என்னாச்சு, நேரத்துக்கு போகலன்னா சும்மா விட மாட்டாரே, இன்னைக்கு நாம செத்தோம்...' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டே ஜேம்ஸ் லியோவை திரும்பிப் பார்த்தான்.
அதேநேரம், குதிரையை ஓட்டிக்கொண்டு வந்த யாழ்மொழிக்கு அதை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை.
"ஏய் நில்! உனக்கு நான் கட்டளை இடுகிறேன், குதிரையே நில்!" என்று அவள் கையிலிருந்த கயிற்றையும் இழுத்துக்கொண்டு கத்த, அதுவோ இவளின் பேச்சை எல்லாம் கேட்பதாக இல்லை.
"என் வார்த்தைகளை மதிக்கவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறாயா? தயவு செய்து நின்று விடு, உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். இனி வாழ்க்கையில் குதிரை சவாரிக்கு ஆசைப்படவே மாட்டேன். கடவுளே என்னை காப்பாற்று!" என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு வந்தவளின் விழிகள் தான் போகும் வழியில் நின்றுக்கொண்டிருந்த காரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டன.
அதேநேரம் இங்கு, "சார்..." என்று அழைத்த ஜேம்ஸின் குரலில் அத்தனை பயம் தெரிய, லியோவோ விழிகளை மட்டும் உயர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்தான்.
"வாட்?" என்று அவன் கேட்ட விதமே சற்று கடுமையாக இருக்க, "அது... வண்டி சட்டுன்னு நின்னுருச்சு. நா.. நான் என்னன்னு பார்க்குறேன் சார்" என்று அவன் திட்டுவதற்கு முன் அடித்துப் பிடித்து காரிலிருந்து இறங்கி வண்டியை ஆராய ஆரம்பித்தான் அவன்.
லியோவோ எரிச்சலாக விழிகளை சுழற்றியவன் காரிலிருந்து இறங்கப் போக, அதேநேரம் அவனை மோதுவது போல் வேகமாக வந்தது யாழ்மொழியின் குதிரை.
அவனோ விழி விரித்துப் பார்த்தவன், "வாட் த ஹெல்..." என்று கத்திக்கொண்டு உடனே கதவை சாற்றிக்கொள்ள, அந்த குதிரையோ கிட்டத்தட்ட அவனை நெருங்கிவிட்டு வேறு திசையை நோக்கித் திரும்பி ஓடியது.
"சார், ஆர் யூ ஓகே? தேங்க் காட் அது நம்மள மோதல" என்று மற்றவன் பெருமூச்சு விட, லியோவுக்கு கோபம் எக்குத்தப்பாக எகிறியது.
அவன் பற்களை கோபத்தில் கடித்துக்கொள்ள, சரியாக "சார், வண்டி ரெடி போகலாம்" என்று குரல் கொடுத்தான் ஜேம்ஸ்.
"அந்த குதிரைய ஃபாலோவ் பண்ணு!" என்றவனின் கட்டளைக்கு அவனிடம் மறுபேச்சு இல்லை.
ஜேம்ஸோ வேகமாக அந்த குதிரையை பின்தொடர்ந்து சென்று அதன் முன்னால் வண்டியை நிறுத்த, பெரிய சத்தத்தோடு காலைத் தூக்கிக்கொண்டு கனைத்தவாறு அந்த குதிரையும் நின்றது.
லியோவோ கார் ஜன்னல் வழியே அந்த குதிரைக்கு சொந்தமானவளை எட்டிப் பார்க்க, விழிகள் மட்டும் தெரிந்தவாறு முகத்தை மறைத்திருந்த யாழ்மொழிக்கு ஜன்னல் வழியே தெரிந்த அவன் முகத்தைப் பார்த்ததும் சர்வமும் அடங்கி விட்டது.
'இவன்... அவன் அல்லவா! அவ்வளவுதான், வசமாக சிக்கிக்கொண்டோம்' என்று இதயம் படபடக்க யாழ் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளை சுருக்கி அவளை உற்றுப் பார்த்த லியோவுக்கும் அந்த முகத்தை மறைத்திருப்பவள் யாரென்று நன்றாகவே புரிந்துப் போனது.
"யூ..." என்று அதிர்ச்சியும் கோபமும் கலந்து கத்தியவனுக்கு அன்று சந்தையில் நடந்தது அனைத்தும் ஞாபகத்திற்கு வர, விழிகளோடு சேர்த்து முகமும் கோபத்தில் சிவந்தது.
அடுத்த நிமிடம் அவன் காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தவள், உடனே குதிரையிலிருந்து பாய்ந்து இறங்கி ஓடப் போக, மின்னல் வேகத்தில் அவளை நெருங்கி அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் லியோ ஜார்ஜ்.
"என் கரத்தை விடு..." என்று கத்தியவாறு யாழ்மொழியோ அவனின் மார்பிலேயே மோதி நிற்க, அவளின் காந்த விழிகளை கோபம் கொப்பளிக்க பார்த்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
"அன்னைக்கு நீ தானே என்கிட்ட வம்பு பண்ண?" என்று அவன் கேட்ட விதத்தில், 'இவனுக்கு நம் மொழி தெரியுமா?' என்று அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள் பெண்ணவள்.
"உன்கிட்டதான் கேக்குறேன், டெல் மீ!" என்று லியோ கத்தி அவளைப் பிடித்திருந்த தன் கரத்தில் அழுத்தம் கொடுக்க, அப்போதுதான் நடப்புக்கு வந்தவளாக அவனின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தாள் யாழ்.
ஆனால் அந்த ஆறடி ஆண்மகனின் பிடியிலிருந்து அந்த சிறு பெண்ணால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை.
"நீ பண்ண காரியத்துக்கு ஐ வோன்ட் டூ ப்ரேக் யூவர் ஃபேஸ்" என்று பற்களைக் கடித்துக் கொண்டு சிவந்த விழிகளோடு சொன்னவன், அவள் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கப் போக, அவள் விட்டால்தானே!
"இல்லை... என்னை விடுங்கள்! என்னை காப்பாற்ற யாரும் இல்லையா? கடவுளே!" என்று திமிறிக்கொண்டு அவள் கத்த, ஆடவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரே நொடியில் அவள் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி தூர எறிந்தான்.
ஆனால் அடுத்தகணம் அவள் மேலிருந்த மொத்த கோபமும் அவள் முகத்தை மறைத்திருந்த துணி விலகியதுமே மாயமாக, அவளுடைய அழகில் சொக்கிப்போய் விட்டான் லியோ.
தன்னை மறந்து அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளைப் பற்றியிருந்த அவனுடைய கரமும் தளர்ந்தது.
மிரட்சியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்த யாழ்மொழிக்கு அதுவே சரியான சந்தர்ப்பமாகத் தோன்ற, உடனே பற்றியிருந்த கரத்தை உதறிவிட்டவள் அவனிடமிருந்து தப்பித்து ஓட, அப்போதுதான் நடப்புக்கு வந்தான் லியோ.
"ஸ்டாப் யூ இடியட்!" என்று அவன் கத்திக்கொண்டு துரத்தப் போக, "சார், இட்ஸ் கெட்டிங் லேட்" என்ற ஜேம்ஸ் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு காரை நோக்கிச் சென்றான்.
யாழ்மொழியோ திரும்பித் திரும்பி அவனையே பார்த்துக்கொண்டு ஓட, தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்திருந்தவனுக்கு ஏனோ அவளுடைய முகம் மனதிற்குள் ஆழமாக பதிந்துப் போனது.
இங்கு சந்தைக்குள் மூச்சிரைக்க ஓடிச் சென்றவள், அங்கிருந்த ஒரு குடிசையில் மூச்சு வாங்கியவாறு சாய்ந்து நிற்க, அவளுடைய உடலோ வெடவெடத்தது.
அந்த நடுக்கமும் பதற்றமும் குறையவே சில நிமிடங்கள் எடுக்க, பயத்தில் உடல் முழுக்க வியர்வையால் நனைந்துப் போயிருந்தது அவளுக்கு.
'ஊஃப்ப்... விட்டால் கண்களாலேயே என்னை எரித்து விடுவான் போல, என்ன பார்வை அது! இன்னும் சிறிது நேரம் அவனின் பிடியில் இருந்திருந்தால் அவன் மீதே மயங்கி சரிந்திருப்பேன், எங்கேயிருந்து வந்த தைரியமோ? எப்படியாவது அரண்மனைக்கு சென்று விட வேண்டும்'
என்று தனக்குள்ளேயே யோசித்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவள், அந்த இடத்திலிருந்து நகர்வதற்காக ஒரு அடி முன்னே வைக்க, அவளின் எதிரே வந்து நின்றது ஒரு அரவம்.
விழிகளை சுருக்கி யோசித்தவள் மெல்ல நிமிர்ந்துப் பார்க்க, அவளெதிரே நின்றிருந்தான் அந்த ஒருவன்.
கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருக்கும். முரட்டு மீசையும் தலையில் ஒரு தலைபாகையோடு யாழையே குறுகுறுவென்று பார்த்த வண்ணம் அவன் நின்றிருக்க, அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் யாழ்மொழி.
"யார் நீ?" என்று அவள் சிறு பயத்தோடுக் கேட்க, "நான் யாரா இருந்தா உனக்கென்ன? உன்னை பார்த்தா சந்தையில வேலை பார்க்குற பொண்ணு மாதிரி தெரியல்லையே, அரண்மனை பணிப்பெண்ணோ?" என்று நாடியை நீவி விட்டவாறுக் கேட்டான் அவன்.
"ஆம் பணிப்பெண்தான். எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமா? என்னை அரண்மனைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும், சில ஆங்கிலேயர்களின் விழிகளுக்கு சிக்கவே கூடாது. இந்த உதவியை மட்டும் செய், நீ என்ன கேட்டாலும் நான் கொடுக்கிறேன்" என்று அவள் தானே முன் வந்து சொல்ல, "என்ன கேட்டாலுமா?" என்று அந்த வார்த்தையை அழுத்தமாகக் கேட்டான் அவன்.
"ஆம், இந்த யாழ் கொடுத்த வாக்கை மீற மாட்டாள். என்னை ஆங்கிலேயர்களின் விழிகளில் சிக்காமல் அரண்மனைக்கு பக்கத்தில் அழைத்துச் சென்றால் மட்டும் போதும். முடியுமா?" என்று யாழ்மொழி விழிகளில் எதிர்பார்ப்போடுக் கேட்க, 'நான் கேட்டதுக்கு அப்பறம் ஏன் தான் என்கிட்ட உதவி கேட்டேன்னு நினைக்க போற!' என்று உள்ளுக்குள் நினைத்தவாறு அவளை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.
"இந்த கோனி பைய தலையில போட்டுக்கோ! யாராச்சும் உன்னை என் கூட பார்த்தாங்கன்னா தப்பா பேசுவாங்க" என்று அவன் சொல்ல, அவன் சொன்னது போல் தலையில் போட்டுக்கொண்டவள், சுற்றி முற்றி லியோ வருகிறானா என பார்த்தவாறு அவன் பின்னாலேயே சென்றாள்.
"இந்த வெள்ளைகாரனுங்களுக்கு இவ்வளவு பயமா நீ! அரண்மனையில அரசர் பக்கத்துல வேலை பார்க்குற, எங்க சந்தையில வேலை பார்க்குற பொண்ணுங்களே அவனுங்கள தைரியமா எதிர்த்து நிப்பாங்க" என்று அவன் கேலியாக சொல்லி சிரிக்க, "நான் என்ன அரசரோடு சேர்ந்து போருக்கா செல்கிறேன், சாதாரண பணிப்பெண் நான். இருந்தாலும், என்னை குறைத்து மதிப்பிடாதே! வாள் பயிற்சிகளையும் போர் பயிற்சிகளையும் பார்த்து வளர்ந்தவள் நான். என்னிடம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கொள்!" என்றாள் இல்லாத தைரியத்தை வரவழைத்தபடி.
அவளின் வார்த்தைகளைக் கேட்டு சட்டென நின்றவன், திரும்பி அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்க்க, "ஹிஹிஹி..." என்று அசடுவழிய சிரித்து வைத்தாள் யாழ்மொழி.
சந்தையிலிருந்து அரண்மனை வாயிலுக்கு அழைத்து வந்தவன், "அப்பாடா! மிக்க நன்றி..." என்றுவிட்டு நகரப் போனவளை அழைத்து நிறுத்தினான்.
"என்ன உன் பாட்டுக்கு போற, என்ன கேட்டாலும் தருவேன்னு சொன்ன" என்று அவன் சொல்ல, "அரண்மனையை பார்த்ததும் மறந்தே விட்டேன். என்ன வேண்டும், சீக்கிரம் கேள்!" என்று ஏதோ பெரிய கொடை வள்ளல் போல் கேட்டாள் அவள்.
"கேட்கத்தானே போகிறேன்" என்று நிறுத்தியவன் சில கணங்களின் பின், "இளவரசி" என்று சொல்ல, "இல்லை.. புரியவில்லை" என்று தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகத்தோடு கேட்டாள் யாழ்.
"எனக்கு இந்த ராஜ்ஜியத்தின் இளவரசி வேண்டும்" என்று அவளுக்கு புரியும்படி சொன்னவன், அங்கிருந்து அவன் பாட்டிற்கு செல்ல, யாழ்மொழிக்குதான் அவன் கேட்டதில் சர்வமும் அடங்கிவிட்டது.
"என்ன! இளவரசியா... ஏய் விளையாடுகிறாயா நீ, எதைக் கேட்கிறாய் என்று உனக்கு புரிகிறதா இல்லையா? அதை யாரிடம் வந்து கேட்கிறாய் என்று தெரிகிறதா? அதுவும் சந்தையிலிருந்து அரண்மனைக்கு அழைத்து வந்த உதவிக்கு பரிகாரமாக தங்களை கேட்கிறான் என நான் சென்று இளவரசியிடம் சொன்னால் அவர்கள் வந்துவிடுவார்களா என்ன! அரசர் என்னை தூக்கிலிடுவது உறுதி" என்று யாழ்மொழி படபடவென பொரிந்துக்கொண்டே போக, "என் பேர உன் இளவரசிகிட்ட சொல்லு, அவங்களே வருவாங்க" என்று சிரிப்போடு சொன்னவனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
"நீர் என்ன பக்கத்து ராஜ்ஜியத்தின் இளவரசரோ, நீ அழைத்ததும் அவர்கள் ஓடி வருவதற்கு? முதலில் உன் பெயரை சொல்!" என்று யாழ்மொழி கோபமாகக் கேட்க, சற்று நின்று திரும்பிப் பார்த்தவன், "வீரா" என்றான் புன்னகையோடு.
யாழ்மொழியின் விழிகள் சந்தேகத்தோடு சுருங்க, மின்னல் வேகத்தில் அந்த இடத்திலிருந்து சென்று மறைந்திருந்தான் வீரா.
அதேநேரம், இங்கு மீட்டிங்காக ஆங்கிலேயர்களின் இன்னொரு மாளிகைக்கு சென்றுக்கொண்டிருந்த லியோவின் நினைவு முழுவதும் யாழ்மொழியின் முகம்தான் விம்பங்களாக ஓடிக்கொண்டிருந்தன.
"சார் அந்த பொண்ணு உங்ககிட்ட இருந்து ரெண்டு தடவை தப்பிச்சிருக்கா. ஷீ இஸ் சோ க்ளெவர்" என்று ஜேம்ஸ் சொல்ல, "ம்ம்" என்று மட்டும் சொன்னவன் முயன்று அவளுடைய நினைவுகளிலிருந்து தன் சிந்தனையை திருப்பிக்கொண்டான்.
சரியாக ஜேம்ஸின் கார் அந்த மாளிகையின் வாயிலில் நிற்க, முகத்தில் கடுமை குடிகொள்ள விறைப்பாக நின்றவன் வேக நடையோடு உள்ளே சென்றான்.
"குட் மோர்னிங் சார்" என்ற அங்கிருந்த இரண்டு அதிகாரிகள் அவனை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு மதுக்குவளையை கையில் வைத்து சுழற்றியவாறு அமர்ந்திருந்தார் ரொனேல்ட்.
"ஹெலோ மை பாய், இந்தியா வந்ததுக்கு அப்பறம் என்னை பார்க்க இப்போ தான் வர தோனுச்சா? ஹவ் இஸ் இந்தியா? கம், கம் என்ட் ஹேவ் யூவர் சீட்" என்று அவர் சொல்ல, இறுகிய இதழ்களுக்கிடையில் பூத்த சிறு புன்னகையோடு அவரெதிரே அமர்ந்துக்கொண்டான் லியோ.
"என்ன விஷயமா என்னை வர சொன்னீங்க சார்?" என்று அவன் வேறு பேச்சில்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வர, "தட் இஸ் லியோ! ஐ நோ அபௌட் யூ. பட் இருந்தாலும் கொஞ்சம் என்ஜாய் பண்ணணும்" என்றுக்கொண்டு அவன் பக்கமிருந்த குவளையில் மதுவை ஊற்றினார் அவர்.
அதை அவன் எடுக்கப் போக, சட்டென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.
அங்கு இரண்டு அதிகாரிகள் இந்தியப் பெண்ணொருத்தியை கதறக் கதற இழுத்துக்கொண்டு செல்ல, அதை அதிர்ச்சியாகப் பார்த்தவனோ அதே அதிர்ச்சியோடு திரும்பி ரொனேல்டை பார்த்தான்.
"வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர், வூ இஷ் ஷீ?" என்று அவன் விழிகளை சுருக்கி சந்தேகத்தோடுக் கேட்க, "ஷீ இஸ் ஜஸ்ட் அன் இந்தியன் கேர்ள். என்னை திருப்திபடுத்த அழைச்சுட்டு வந்திருக்காங்க. நீ அதை கண்டுக்காத! இட்ஸ் ஆல் ஃபன் லியோ, லெட்ஸ் ஸ்டார்ட் த டிஸ்கஷன்" என்றார் அவர் சாதாரணமாக.
ஏனோ ஒரு தடவை திரும்பிப் பார்த்த லியோ விழிகளை அழுந்த மூடித் திறந்து விட்டு, "ஓகே சார்" என்று பேச்சை ஆரம்பிக்க, சில சட்டதிட்டங்கள் பற்றியும் வரி தொடர்பாகவும் அவர்களுக்கிடையில் உரையாடல் சென்றது.
"டெக்ஸ்ஸ நாம இன்னும் இன்க்ரீஸ் பண்ணணும் லியோ, ஐ திங் பொண்ணுங்களுக்கான டெக்ஸ் அதிகமா இருக்கணும் ஹாஹாஹா..." என்று அவர் சொல்லி சிரிக்க, "நான் இங்க வந்ததுமே டெக்ஸ்ஸதான் இன்க்ரீஸ் பண்ணேன். பட் இந்த புவர் இந்திய பீபளுக்கு அதை கொடுக்க முடியல. வாட் டு டூ? டெக்ஸ் இஸ் தெயார் ரெஸ்பான்சிபிளிட்டி" என்றான் அவன் அழுத்தமாக.
"தட்ஸ் மை பாய் லியோ.. ஆமா, இங்க வந்ததுலயிருந்து நீ எதையும் என்ஜாய் பண்ண மாதிரி எனக்கு தெரியல. நீ வேணா அந்த இந்தியன் கேர்ள டேஸ்ட் பண்ணிக்கோ, ஐ டோன்ட் மைன்ட் இட்" என்று வெட்கமே இல்லாமல் அவர் சொல்ல, "நோ நீட் சார்" என்றவனுக்கு யாழ்மொழியின் முகம்தான் மீண்டும் மனக்கண் முன் வந்தது.
கூடவே அவள் செய்த சேட்டைகளும் ஞாபகத்துக்கு வர, "இடியட்!" என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான் லியோ.