நானே வருவேன் - அத்தியாயம் 3
அதன் பிறகு குளிக்கச் சென்ற ஜனனி, சமயலறைக்குள் நுழைய அங்கு மதனின் தாய் சமைத்துக் கொண்டு இருந்தார். அவரிடம் "குட் மார்னிங் அத்தை" என்க, அவரோ "வாம்மா, காபி போடவா?" என்று கேட்க அவளும் "ம்ம்" என்றபடி அங்கு அமர்ந்தாள். அவளுக்கு காபி போட்டுக் கொண்டே "நல்லா சமைப்பியாம்மா?" என்று கேட்க அவளோ "ம்ம் சமைப்பேன் அத்தை, நூடில்ஸ் போடுவேன், சாண்ட்விச் செய்வேன், அப்புறம் முட்டை பொரிப்பேன் " என்று சொல்ல அவர் முகமோ சுருங்கிப் போனது. கஷ்டப்பட்டு தன் முகபாவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர் "இந்த சோறு கறி எல்லாம்" என்று கேட்க , அவளோ திரு திருவென முழித்தவள் "இதுவரைக்கும் பழக்கம் இல்ல, இனி பழகிக்கலாம்" என்றாள்.
மதனின் தாயோ அதைக் கேட்டு மயங்கி விழாத குறையாக "என் பையன நீ தான் காப்பாத்தணும் முருகா" என்று வேண்டிக் கொண்டவர். இரு காபி கப்புகளை அவளிடம் நீட்ட அவளோ அதை வாங்கியபடி "உங்களுக்கு ஈவினிங் நான் ஒரு ஸ்பெஷல் காபி போட்டு தரேன் அத்தை" என்றபடி அதை மதனிடம் கொண்டு சென்றாள். மதனோ குளியலறைக்குள் இருக்க, அங்கே அமர்ந்து காபியை அருந்தியவள் "எதுக்கும் அந்த காபி போடுறதுக்கு இன்னொரு தடவை யூடியூப் பார்த்துடனும், இன்னைக்கு காபி போடுறோம் அத்தையை கைக்குள்ள போடுறோம்" என்று நினைத்தவள் வீடியோ பார்க்க தொடங்கினாள்.
குளித்து விட்டு இடையில் டவலுடன் வந்த மதனைப் பார்த்து வெட்கப்பட்ட ஜனனி "காபி இங்க இருக்கு மதன்" என்று சென்றுவிட , அவனோ அவள் முதுகை மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டே தலையை துவட்டினான். உடனே "க்கும் க்கும் நான் இங்க தான் இருக்கேன்" என்று வான்மதி குரல் கொடுக்க, "ஒரு ரொமான்ஸ் கூட பண்ண முடில" என்று நினைத்த மதனுக்கு உணர்வெல்லாம் வடிந்து போக, "ஹையோ ஹையோ " என்று வெளிப்படையாகவே நெற்றியில் அடித்தான். வான்மதியோ "மதன், வலிக்க போகுது," என்று சொல்ல "ரொம்ப தான் அக்கறை " என்று முணுமுணுத்தவன் காப்பியை கடுப்பாகவே அருந்த தொடங்கினான்.
அன்றைய சமையல் மதனின் அம்மாவே முடித்து விட, ஜனனியோ ஒன்றும் தெரியாத டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் ஆக இருந்த போதிலும் அவள் கொஞ்சும் பேச்சினால் மதனின் தந்தையையும் தாயையும் கவர்ந்தது என்னவோ உண்மை தான். அன்று மதியம் சாப்பிட்டு விட்டு மதன் உள்ளே நுழைய, பின்னால் வந்த ஜனனி, கதவை தாளிட்டு விட்டு அவனை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டாள். அவனுக்கும் அவள் ஸ்பரிசத்தில் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓட, வயிற்றில் இருந்த அவள் கைகளை பிரித்தெடுத்து அவள் பக்கம் திரும்பியவன் அவள் முகத்தை தாங்கி நெற்றியில் இதழ் பதித்தான். உடனே வான்மதி "மதன் என்ன பண்ண போற?" என்று ராகமாக கேட்க "ஐயோ கடவுளே, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்னு இத தான் சொல்வார்களா?" என்று முணு முணுத்தவன் ஜனனியின் முகத்தை பார்த்தான். அவள் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு, ஆனால் அதனை பூர்த்தி செய்ய முடியாத அளவில் அல்லவா அவன் இருக்கிறான் ?
பெருமூச்சுடன் "கொஞ்சம் தூங்கலாமா ?" என்று கேட்க அவள் முகமோ வெளிப்படையாகவே ஏமாற்றத்தைக் காட்டியது. வாய்க்குள் வான்மதிக்கு திட்டியவன் அப்படியே வந்து தூங்கி விட ஜனனியும் சோகமாக அவன் அருகே படுத்துக் கொண்டாள்.
இருவரும் தூங்கி எழுந்ததும் , முதலில் எழுந்து வெளியே சென்ற ஜனனி நேரத்தை பார்த்தாள் , மணி மாலை நான்கரையை காட்ட "அத்தை மாமாக்கு காபி போட்டு கொடுக்கலாம்" என்று நினைத்தபடி சமயலறைக்குள் நுழைந்தவள் காபி போட ஆயத்தமானாள். அவள் போட ஆயத்தமானது உங்க ஊர் எங்க ஊர் காபி அல்ல உலகமே வியந்து பார்த்த டல்கோனா காபி.
காபி தூள் சீனி, சுடுநீர் என்று அனைத்தையும் எடுத்து பாத்திரத்தில் போட்டவள், அவள் பார்த்த வீடியோ போல அடி அடி என்று கலந்து அடிக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் பேஸ்ட் போல அந்த மிக்ஷர் வந்து சேர குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து க்ளாசில் ஊற்றி அந்த பேஸ்டை மேலே போட்டு விட்டு "டல்கோனா காபி ரெடி" என்று கூறியபடி வெளியே வந்தாள். அங்கு அப்போது தான் தூங்கி எழுந்த மதனின் தாயும் தந்தையும் இருக்க, சற்று தள்ளி இருந்த மதன் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். அவளோ "எல்லாருக்கும் ஸ்பெஷல் காபி கொண்டு வந்து இருக்கேன்., மதன் போட்டோ எடுங்க, டல்கோனா காபி வித் அத்தை என்று ஸ்டேட்டஸ் ஆஹ் போடணும்" என்று சொல்ல அவனும் "இந்த சமைக்க தெரியாத டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் உடைய தொல்லை தாங்கல " என்று நினைத்தாலும் மனைவி சொன்னதை செய்து விட்டே தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.
அதே சமயம் , அவள் கொண்டு வந்த கப்புகளை பார்த்த மதனின் தாய் "காபி சூப்பரா போடுவா போலவே, பார்க்கவே செமயா இருக்கே" என்று நினைத்தபடி அவள் கொடுத்ததை எடுத்துக் கொண்டார்.
உடனே அவள் "எல்லாரும் ஸ்டேட்டஸ் ஆஹ் போடுறாங்க அத்தை, இன்னைக்கு தான் நான் செய்தேன். குடிச்சு பார்த்து சொல்லுங்க" என்க, அதை வாயில் வைத்த மதனின் தாயின் முகம் கசப்பு தாங்க முடியாமல் சுருங்கி போனது. கண நேரத்தில் முகத்தின் உணர்வுகளை மறைத்தவர் பக்கத்தில் இருந்த கணவனை பார்க்க அவரோ வரும் வாந்தியை அடக்கியபடி உட்கார்ந்து இருந்தார். அவர் மனமோ "இந்த பேஸ்டை பார்த்தா மைண்ட் எங்கேயோ போகுதே" என்று நினைத்துக் கொண்டது.
மதனோ தாய் தந்தையை பார்த்துவிட்டு தனது கையில் இருந்த காபியையும் யோசனையுடன் பார்த்தான். உடனே ஜனனி "அத்தை எப்படி இருக்கு?" என்க "ம்ம்,சூப்பர்" என்று தழு தழுத்த குரலில் சொன்னவர் தனது மகனின் எதிர்காலத்தை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார். கொடுத்த காபியை குடிக்காமல் உட்கார்ந்து இருந்த மதனைப் பார்த்த ஜனனி "நீங்க குடிக்கலையா மதன்?" என்று கேட்க அவனோ "கொஞ்ச நேரம் போகட்டுமே" என்றான் வலுக்கட்டாயமாக சிரித்தபடி.
"ஓகே.. இன்னைக்கு நைட் நான் தான் சமையல் " என்ற ஜனனி சமயலறைக்குள் சென்று விட, மதனின் தாயோ அவள் போகும் வரை காத்து இருந்தவர் "ஒரு வேலைக்காரி வைடா, முடில" என்றார் அழும் குரலில். மதனின் தந்தையோ ஒரு படி மேலே போய் "இன்னைக்கே ஊருக்கு கிளம்பலாம், நமக்கு உசிரு முக்கியம் " என்க, மதனோ "காபி அவ்ளோ கேவலமாவா இருக்கு?" என்று நினைத்துக் கொண்டான். அடுத்த கணமே குளியலறைக்குள் அடுத்தடுத்து நுழைந்த மதனின் தாயும் தந்தையும் காபியை ஊற்றி விட்டு வெளியே வந்தவர்கள் அறைக்குள் நுழைந்து ஊருக்கு போக ஆயத்தமானார்கள்.
மதனோ கையில் இருந்த காபியை பார்த்தவன் "இந்த விஷ பரீட்சை வேணாம்" என்றபடி காபியை குளியலறைக்குள் ஊற்றி விட்டு வெளியே வர, அங்கு ஊருக்கு போக பெட்டியுடன் ஹாலுக்குள் வந்து அமர்ந்து
இருந்தார்கள் அவன் பெற்றோர்.
"இவ்வளவு சீக்கிரமவா?." என்று அவன் நினைத்தவன் "ஜனனி" என்று அழைக்க "வரேன் மதன்" என்றபடி சமயலறையில் இருந்து வெளியே வந்தாள் ஜனனி.
பெட்டிகளுடன் ஆயத்தமாகி இருந்த மதனின் பெற்றோரை பார்த்தவள் "எங்க போக போறீங்க?"என்று கேட்க மதனின் தந்தையோ "ஊருல முக்கியமான ஒரு வேலை இருக்கு, நாங்க அவசரமா கிளம்புறோம்மா" என்றார். அவளோ சோகமாக "சரி மாமா, என்ன ஒரு வருத்தம் என் சமையலை சாப்பிடாம கிளம்புறீங்க" என்று சொல்ல மதனின் தாயோ "அதுக்கென்னம்மா இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்" என்க, அவர் கணவனோ "உனக்கு தைரியம் ஜாஸ்திடி" என்று நினைத்துக் கொண்டார். இருவரும் கிளம்பியதும் அறைக்குள் வந்த மதனிடம் "ஹா ஹா, காபி கொடுத்தே விரட்டி விட்டுட்டா"என்று வான்மதி சிரிக்க, "உன்னை கொல்ல போறேன் பாரு, இப்போ எதுக்கு கேக்க பெக்கன்னு சிரிக்கிற? வெளியே போ" என்று சீற அப்போது தான் அறைக்குள் நுழைந்த ஜனனியோ தனியே சுவரைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்த மதனை பார்த்து கொஞ்சம் அதிர்ந்து போய் விட்டாள்.
"இவர் ஏன் அடிக்கடி தனியா பேசுறார்? ஒரு வேளை ?" என்று நினைத்தவள் "கடவுளே அப்படி மட்டும் இருக்க கூடாது" என்று வேண்டிக் கொண்டபடி "மதன்" என்று அழைக்க, "ஐயோ பார்த்துட்டாளா?" என்று நினைத்தவன் "சொல்லு ஜனனி" என்றான் பதட்டத்தை முகத்தில் காட்டாது. அவளோ "இப்போ யார் கூட பேசிட்டு இருந்தீங்க?" என்று கேட்க "அது, " என்று தடுமாறியவன் "சும்மா, டிக்டாக் செய்ய ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன்"என்றான். அவனை ஜனனி மேலிருந்து கீழ் பார்த்த சந்தேகப்பார்வையே அவன் அவளை நம்பவில்லை என்று உரைத்தது.