அத்தியாயம் - 2
சென்னையின் மத்தியில் அமைந்துள்ள ஐந்தடுக்கு வளாகம். "வி.கே.என் கிராஃபிக் & டிசைன் டெவலப்மென்ட்" என்ற எழுத்துக்கள் தான் இவர்களின் மூன்று வருட உழைப்பிற்கு கிடைத்த பலன்.
கூண்டில் அடைப்பட்ட பறவைகளாய் இரண்டு ஆண்டுகள் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்தவர்களின் சிந்தனைகளும் கற்பனைகளும் அங்கே மதிக்கப்படாமல் போக... யாருடைய துணையின்றி தன் சொந்த சிறகுகளில், பரந்த உலகை வலம்வர துடித்த மூவரும்,அந்த கூட்டைவிட்டு பறந்து வந்து தங்களுக்கே தங்களுக்கென உருவாக்கிய சின்ன கூடு தான் இந்த வி.கே.என்.
இதில் சுமைகள் அதிகமாக தெரிந்தாலும்... சுயமிழக்காமல்.... சுதந்திரமாய்... சுயமாய்...சுழலாம் என்ற தன்னம்பிக்கை அதிகமிருக்க...அதை மட்டுமே தாரக மந்திரமாக பற்றிக்கொண்டு வந்து கரை சேர்ந்த அவர்களின் கனவு இல்லம்.
நண்பர்கள் மூவரும் இணைந்து தேர்ந்தெடுத்த தனி உலகம் தான் கிராஃபிக்ஸ்.
அது ஒரு மாய உலகம்....அங்கே முடியாது என்பதற்கு வாய்ப்பே இல்லை.
சாத்தியம் அல்லாத அனைத்தையும் தங்கள் கற்பனைகள் மூலம் சாத்தியமாக்கும் ஆசையும் வெறியும் இந்த மூவருக்குமே அதிகம். அதுவே அவர்களை இந்த துறையை தேர்ந்தெடுக்க வைத்தது.
பள்ளியை தொடர்ந்து கல்லூரியிலும் ஒன்றாகவே பயின்று...இதோ இப்போது தொழிலும் இணைந்த அவர்களின் உயிரான நட்பிற்கும் இந்த உயிரற்ற கட்டிடமும் ஒரு சான்று.
மீட்டிங் தொடங்க.... இதுவரை சிறிய அளவிலான கிராஃபிக்ஸ் வொர்க் செய்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தான் தங்களின் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கின்றனர்.
புதிதாக ஒரு கேம் புரோகிராமை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருக்க...அதற்காக தான் இந்த மீட்டிங்.
மீட்டிங்கை கவின் தொடங்க...அதனை தொடர்ந்து வரு , தங்களின் அடுத்தடுத்த திட்டங்களையும்,யார்யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதனையும் எடுத்துரைக்க...அதனை முடித்துவைத்தான் விஷ்ணு.
"ஹாய் பிரெண்ட்ஸ்... என்னென்ன பண்ணனும்னு ஆல்ரெடி சொல்லிட்டாங்க. நானும் அதையே சொல்லி உங்களை பிரஷர் பண்ண விரும்பலை. பீ கூல் அண்ட் காம், எதையும் நினைக்காம ஹப்பியா வொர்க் பண்ணுங்க...அப்போ தான் வேலை நல்லபடியா முடியும்.
உங்களை நீங்க ஹேப்பியா வெச்சுக்கோங்க....புதுப்புது ஐடியா தானா உங்களை தேடிவரும்" என்றவன் உறைந்த புன்னகையோடே மேலும் சில நிமிடங்கள் பேசி முடித்தான்.
அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை எதிரில் இருந்த அனைவரின் முகத்திற்கும் இடம் மாற...அனைவருக்கும் இந்த ஃப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் யாரும் சொல்லாமலேயே பிறந்தது.
அதுதான் அவன்,யாரையும் கட்டாயப்படுத்தியோ... கஷ்டப்படுத்தியோ வேலை வாங்க அவனுக்கு பிடிக்காது. செய்யும் வேலையில் தானாய் ஒரு ஆர்வமும் விருப்பமும் வரவேண்டும் என்று விரும்புபவன். அதனை அவன் பேச்சினால் வரவும் வைத்துவிடுவான். அதனால் அவர்களுக்கும் வேலையின் பளு பெரிதாக இருந்தாலும் விரும்பியே செய்தனர்.
அவனின் அந்த பண்பு தான் அவர்களின் இந்த வளர்ச்சிக்கு மிக பெரிய காரணமும் கூட.
ஒருவாறு மீட்டிங் முடிய அனைவரும் கலைந்து சென்றனர். விஷ்ணு தனது மொபைலுக்கு வந்த அழைப்பினை ஏற்று, பேசிவிட்டு திரும்பி பார்க்க...கவின் வரு இருவரும் அங்கு இல்லை.
"அதுகுள்ள எஸ்கேப் ஆகிட்டாங்களா" என சலித்தபடி அவர்கள் கேபின் நோக்கி சென்றான்.
"நீ மட்டும் இன்னும் கொஞ்சநேரம் லேட்டா வந்திருந்தாலும் உன் புருஷனை உயிரோடவே பார்த்திருக்க முடியாது பொண்டாட்டி. அவன் வந்த கோபத்துக்கு என்னை அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பான், ஜஸ்ட் மிஸ்" என விஷ்ணு கத்திய கத்தை மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கவின்.
அவள் இருக்கையில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் இருந்த மேஜையில் சாய்ந்து கொண்டு மனையாளின் கை விரல்களுக்கு சொடக்கிட்டு கொண்டிருந்தான் கவின்.
அவர்களின் அறைக்குள் நுழைந்த விஷ்ணு... "ஏண்டா கையோட நிறுத்திட்ட, அப்படியே மேடம் காலையும் அமுக்கிவிட வேண்டியது தான" என பல்லை கடித்தவன்,
"இது என்ன ஆபீஸ்ன்னு நினைச்சீங்களா இல்ல உங்க வீடுண்ணு நினைச்சீங்களா" என எரிந்து விழுந்தான்.
"இப்போ என்னடா...அதுதான் லேட் ஆனாலும் மீட்டிங் முடிஞ்சிடுச்சு இல்ல.அப்பறம் எதுக்கு கத்துற" என்று விஷ்ணுவை கண்டு கத்தியவள், கணவனிடம் தன் அடுத்த கரத்தை கொடுக்க...அவனும் அதனை அழுத்திவிட தொடங்கினான்.
" நீ பேசாத...ஏன் மேடம்க்கு லேட்டானா ஒரு ஃபோன் பண்ணி சொல்ல தெரியாதா" என கடுப்புடன் கேட்க,
"ஏண்டா நீயும் தான லேட்டா வந்த, என்னமோ என்னை மட்டும் குறை சொல்ற" என அவளும் பதிலுக்கு பதில் பேசினாள்.
"ஏன் நான் லேட்டா வந்தா நீயும் அப்படியே வரணுமா. நான் தான் ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்...உனக்கென்ன வரதுக்கு" என காய்ந்தான் தோழியை.
"உனக்கு ரோட்ல ட்ராஃபிக் எனக்கு வீட்ல ட்ராஃபிக். நான் என்ன பண்றது. என் கூட பிறந்தது இன்னைக்கு ஒரு டிராமா பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டா" என காலையில் நடந்தத அனைத்தையும் சொல்ல.
"யாரு?..உன் தங்கச்சியை ஒருத்தன் கடத்திட்டானமா, செம்ம ஜோக்" என வாய்விட்டு சிரித்த விஷ்ணு. அவளை இல்ல, அவ யாரையாவது கடத்தாம இருந்தா போதாது. வாயாடி கனவு கூட வருது பார் அவளுக்கு ஏத்த மாதிரியே" என முணுமுணுத்தான்.
"இதெல்லாம் ஒரு காரணம்னு இனி லேட்டா வா, அப்பறம் இருக்கு உனக்கு" என வருவை பார்த்து சொன்னவன்,
"டேய் எரும, எழுந்து வாடா நிறைய வேலையிருக்கு, அப்பறம் வந்து அவளுக்கு சேவகம் செய்" என கவினயும் பிடித்து இழுத்தவன், "உனக்கு வேற தனியா சொல்லனுமா போ....போய் எல்லா வேலை ஒழுங்கா நடக்குதான்னு பாரு. சோம்பேறி மாதிரி உட்கார்ந்தே இருக்காம" என்றவன் அவள் திட்டும் முன் வெளியே சென்றுவிட்டான்.
நண்பனின் இழுப்பிற்கு சென்றாலும் "டேய் அவளே பாவம்டா,அவளுக்கு போய் இந்த வேலையெல்லாம் விட்டா என்ன பண்ணுவா. அவள் உட்கார்ந்து பார்க்குற வேலையை மட்டும் பார்க்கட்டும் இதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என கவின் பாவமாய் நண்பன் முகம் பார்க்க,
"அவ நடக்கட்டும்னு தான் இந்த வேலையே...மேடம் அம்மா வீட்டுக்கு போனதிலிருந்து ஓவரா ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டா.அவங்களும் தாங்கு தாங்குன்னு தாங்குறாங்களே தவிர அவளோட ஹேல்தை பத்தி யோசிக்கவே மாற்றாங்க. இதுல நீயும் இப்படி தாங்குனா அவ்ளோதான்.
இப்போவே கொஞ்சம் வெயிட் அதிகமா இருக்குன்னு டாக்டர் சொன்னது மறந்துடுச்சா. அவளை இயல்பா இருக்க விடுங்க. பாசத்தை பொழியிரேன்னு அவகிட்ட யாராவது போங்க அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்றான், அக்கறையையும் கோபமாகவே.
அவன் சொல்வதும் சரி தான் என மனதை சமாதானப் படுத்திய கவின் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.
கேபினில் அமர்ந்திருந்த நித்யா, நண்பனை திட்டிக்கொண்டே தன் மேடிட்ட வயிருடன் எழுந்து நடந்தாள். அவளுக்கும் தெரியும் தன் நலனுக்காக மட்டுமே அவன் சொல்லி சென்றான் என்று. இருந்தும் அவனை திட்டுவதை நிறுத்தவில்லை நித்யவர்ஷினி...விஷ்ணுவிற்கு மட்டும் வரு.
முதன்முதல் பள்ளியில் முதல் சந்திப்பிலேயே... அவள் பெயரை கேட்டவுடன் அவன் வைத்த பெயர் தான் வரு.
"டேய் என் தங்கச்சியை தான் வீட்ல வருன்னு சொல்லுவாங்க" என அவள் தடுத்த போதும்.
"நீங்க அவளை அப்படி கூப்பிடுங்க. ஆனா நான் உன்னை இப்படி தான் கூப்பிடுவேன்" என்று சொல்லிவிட....அவளும் அதனை மாற்றிட முயலவில்லை.
காலையில் கண்ட கனவின் மிச்சங்கள் இன்னும் நீங்காமல் மனதை அரித்துக்கொண்டே இருந்தாலும், அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் வேலைக்கு கிளம்பினாள் வர்ணிகா.
வீட்டில் அனைவரும் அவள் கனவை கேட்டு சிரிக்க மட்டுமே செய்தனர். யாருக்கும் அது பெரிதாக படவில்லை. இவள்தான் அதை மிகைப்படுத்தி சொல்வதாக வேறு சொல்லிவிட...அதற்கு மேல் அவர்களிடம் அதனை பற்றி பேசவில்லை அவள்.
தன்னை கேலி செய்வதாகவே அவளுக்கு தோன்றியது. அதனால் தன் பிரச்சனைகளை இனிமேல் யாரிடமும் சொல்லவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் சித்ரவர்ணிகா.
இத்தனைக்கும் அவள் தன் பிரச்சனைகளை தானே பார்த்துக்கொள்ள கூடியவள் தான், நித்யாவாவது பெற்றோர்கள் அல்லது நண்பர்களின் துணையை தேடுவாள்.ஆனால் வர்ணிகா யாரிடமும் எதையும் கேட்டு நிற்காத ரகம்.
அதுவும் அவளின் அனைத்து முடிவுகளையும் அவள் மட்டுமே எடுப்பாள்...அதில் யாரின் தலையீட்டையும் விரும்பாதவள்,யாரின் அறிவுரைகளையும் கேட்கவும் தயாராக இருந்ததில்லை.
அனைத்தும் அவளின் விருப்பத்தின் படியே இன்று வரை,அது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை பற்றியெல்லாம் பெரிதாய் அலட்டிக் கொண்டதில்லை.
அப்படிப்பட்டவள் குடும்பத்தினரிடம் பகிரும் முதல் விஷயம் இந்த கனவு ஒன்று தான். அதையும் கூட கேட்க ஆளில்லை என்ற கோபம்... "போங்களேன் எனக்கு யாரும் வேண்டாம்" என்ற எண்ணம் தோன்ற,கோபத்தில் சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டாள்.
சித்ரவர்ணிகா ... சுதாகரன் தேவகி தம்பதியினரின் இளைய மகள். மூத்தவள் நித்யவர்ஷினி.
வர்ணிகாவும் கிராஃபிக் டிசைனிங் முடித்தவள் தான். ஆனாலும் தமைக்கையுடன் வேலை செய்ய விருப்பமில்லை. எந்த வேலையாக இருந்தாலும் அது தனக்காக... தன் திறமைக்காக கிடைத்ததாக இருக்கவேண்டும்,சொந்தம் என்ற காரணத்திற்காக இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தாள். அதேபோல் அவளின் சொந்த முயற்சியில் ஒரு வேலையையும் தேடிக்கொண்டாள்.
கோபமாக தனது ஸ்கூட்டியை கிளப்பியவள், அதனை ஆபீஸை நோக்கி சாலையில் செலுத்தினாள்.
போகும் வழியில் சிக்னலில் சிவப்பு நிற விளக்கு ஒளிவிட...ஒற்றை காலை ஊன்றி நின்றவளுக்கு மிக அருகில் வந்து நின்றது ஒரு பைக். ட்ராஃபிக்கில் இதெல்லாம் சகஜம் என்பதால் அவளும் அதை பெரிதாய் கண்டுகொள்ள வில்லை.
சில நிமிடங்களில்,அதுவரை சாலையில் கவனமாக இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவள் நாசி தீண்டிய பெர்ஃப்யூமின் நறுமணம்.
இது...இது என யோசித்தவளுக்கு சட்டென்று எதுவும் நியாபத்தில் வரவில்லை. அதே குழப்பத்தில் பக்கத்தில் பார்வையை திருப்பினாள்.
தலையில் ஹெல்மெட்டுடன் லேட்டஸ்ட் மாடல் பைக்கில் நின்றுகொண்டிருந்தவனின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தாலும் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவன்தான் அவள் கனவில் வந்த...தனக்கு உயிர் பயத்தை காட்ட போகின்ற அந்த ராட்சசன் என்று.
அவள் பார்க்கும் போதே பைக்கில் இருந்தவனும் அவளை பார்த்தான். ஒரு வினாடிக்கு குறைவான பார்வை மட்டுமே...மீண்டும் அவன் பார்வையை சாலைக்கு திரும்பிவிட... அவளும் திரும்பிக் கொண்டாள்.
எந்தவித காரணமுமின்றி... மூளை தன் இயக்கத்தை நிறுத்தியது போன்ற நிலையில் இருந்தாள் அவள். மூளை எதையும் யோசிக்க மறுக்க...வெறுமையான காகிதம் போல் இருந்தது அவளின் மனம்.
அதற்குள் பச்சை விளக்கை கண்டவுடன் அனைத்து வாகனமும் நகர்ந்துவிட...அவள் அருகில் நின்றிருந்த அந்நியன் கூட சென்றுவிட்டான். ஆனால் அவள் தான் அசையாமல் நின்றிருந்தாள்.
அவளுக்கு பின்னால் பலவித ஹாரன் ஒலி காதை கிழிக்க.... அதில் திடுக்கிட்டு தன்னிலையடைந்தவள் தனது ஸ்கூட்டியை எடுத்தாள். அதே குழம்பிய மனநிலையில் வண்டியை எடுத்தவள் இடதுபக்கம் திரும்ப வேண்டிய இடத்தில் வலப்பக்கம் திரும்பிவிட,
அவள் அப்படி திரும்புவாள் என்பதை அறியாமல் பின்னால் வந்த ஆட்டோ வேகத்தை குறைத்தாலும், அவள் ஸ்கூட்டியை இடித்துவிட...சரிந்து விழுந்தாள் வண்டியோடு.
இனி அவள் வாழ்வில் நடக்க இருக்கும்....நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வின் முடிவும் அந்த கனவை நோக்கியே. அதற்கு தொடக்கமே இந்த விபத்து என்பதை அறியாதவள், விழுந்த அதிர்வில் "அம்மா...ஆ" என்று கத்தினாள்.
காலில் பலமாக அடி...அதில் வண்டியும் முழுவதுமாக அவள் மீது விழுந்து விட்டிருந்தது. ஆட்டோவில் வந்தவன் திட்டுவதற்காக வாய் திறக்க...அவள் இருந்த நிலையை கண்டு அவசரமாக வண்டியை விட்டு இறங்கிய டிரைவர் அவளுக்கு உதவினான்.
ஸ்கூட்டியை அவள் மேலிருந்து எடுத்தவர், அவள் எழுவதற்கு உதவ, அவளால் வலது காலை தரையில் ஊன்ற முடியவில்லை, வலி உயிர் போனது.
அவளின் நிலையை கண்டு...அவரே ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தியவர், தனது ஆட்டோவிலேயே அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போதுதான் விஷ்ணுவின் கத்தலுக்கு இணங்கி, இரண்டு ப்ளோர் ரவுண்ட்ஸ்ஸை முடித்துவிட்டு களைத்துப் போய் அமர்ந்திருந்தாள் நித்யா.
"பாவி ரொம்பதான் வேலை வாங்குறான்" என அவனை மனதுக்குள் திட்டும் போதே... மாதுளை ஜூஸ் நிரம்பிய கோப்பையுடன் உள்ளே நுழைந்தார் ஆபீஸ் பியூன்.
அதை பார்த்ததும் "யாரு கொடுத்துவிட சொன்னது" என கோபமாக கேட்க,
"விஷ்ணு சார் மேம். குடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாரு, லஞ்ச்க்கு அப்பறம் மத்த வேலையை பார்க்க சொன்னார் " என்றவர் அதனை வைத்துவிட்டு சென்றுவிட...
அவளோ "அடப்பாவி அப்போ திரும்பவும் அலையனுமா...அதுக்கு தான் இந்த ஜூஸ்ஸா" என சலித்துக் கொண்டவள், தன் எதிரில் இருந்த பழச்சாறை கண்டு "இதுக்கு ஒரு குறைச்சலும் இல்ல" என திட்டியவளின் மனம் நண்பனின் அன்பில் கனிந்தது.
அவள் அதை குடித்து முடிக்கவும்...அவள் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
'யாரிந்த நேரத்தில் ' என்ற கடுப்புடன் ஃபோனை எடுக்க...திரையில் தங்கையின் எண்ணை கண்டு ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் நித்யா. கடைசியாக அவள் அழைத்தது என்றைக்கு என நினைவு கூற...அது பல ஆண்டுகள் என்று தான் பதில் சொன்னது.
"அட என்னடா இது அதிசயமா ஃபோன் எல்லாம் பண்றா. காலையில இருந்து அவ பண்றது எல்லாமே வித்தியாசமா இருக்கே. இன்னும் அந்த கனவையே நினைச்சிட்டு இருக்களா" என்ற சந்தேகத்தோடு இணைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
"வரு...என்ன திடீர்னு ஃபோன்" என நித்யா கேட்க,
"ஏன் நான் ஃபோன் பண்ண கூடாதா" என்றாள் எடுத்தயெடுப்பில்.
"அச்சோ...அப்படி சொல்ல வரலைடி,இந்த நேரத்துல ஃபோன் பண்ணியிருக்கியேன்னு கேட்டேன். தெரியாம அப்படி கேட்டுட்டேன் சாரிடி" என சமாதானமாக சொன்னவள், "சரி என்ன விஷயம் சொல்லு" என்றாள் நிதானமாக.
அழைக்காதவள் அழைத்திருப்பதே ஏதோ முக்கியமான விஷயம் என்பது புரிந்துவிட...எதையும் சொல்லி அவளை கோபமாக்க விருப்பாமல் நிதானத்தை கடைப்பிடித்தாள்.
"அது...கொஞ்சம் கே.எஸ் ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரியா" என கெட்டவள் முடிக்கும் முன்பே...
"என்னது ஹாஸ்பிட்டலுக்கா...யாருக்கு என்னாச்சு" என பதறியவளை,
"பச்...எதுக்கு சும்மா இப்படி பதறுற,யாருக்கும் ஒன்னுமில்ல எனக்கு தான் சின்ன ஆக்சிடென்ட். பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல...நீ வா, மத்ததை அப்பறம் சொல்றேன்" என்றவள் இணைப்பை துண்டிக்க,
நித்யாவிற்கு ஆக்சிடென்ட் என்ற வார்த்தையை கேட்டதுமே உடல் நடுங்க தொடங்கிவிட்டது. தங்கைக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்ற பயம் நெஞ்சை கவ்வ,
தடுமாறி எழுந்தவள், விஷ்ணு மற்றும் கவினை தேடி சென்றாள்.
வொர்கிங் ரூமில் புதிதாக உருவாக இருக்கும் கேம்மிற்கு ஏற்றவாறு...கார்ட்டூன் உருவங்களை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர் நண்பர்கள் இருவரும்.
"மச்சி... புதுசா இருக்கணும்...எல்லாரும் பண்ற மாதிரி இருக்க கூடாது. பார்த்தவுடன் நம்ம வொர்க் தனியா தெரியணும்" என்றவன் பென்சிலை கையில் எடுத்தான்.
"கண்டிப்பா டா" என்ற கவின் கணினியில் எதையோ தேடிக்கொண்டிருக்க...விஷ்ணு மேஜையில் இருந்த காகிதத்தில் எதையோ மும்முரமாக வரைந்துக் கொண்டிருந்தான்.
நித்யா பதட்டமாக உள்ளே நுழைய..."உனக்கு சொல் பேச்சை கேட்குற பழக்கமே இல்லையா. இப்போ எதுக்கு இங்க வந்த,உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பினேனே" என்ற விஷ்ணு அவள் முகத்தில் பதட்டத்தை கண்டு,
"வரு... இட்ஸ் எவ்ரிதிங் ஓகே. என்னாச்சு...உடம்புக்கு ஏதாவது பண்ணுதா" என பதட்டத்துடன் எழுந்து அருகில் வர,
அதற்குள் கவினும் மனைவியை நெருங்கி இருந்தான்.
"நித்து...என்ன பண்ணது?.. ஏன் இப்படி இருக்க" என விட்டால் அழுதுவிடுபவன் போல் கவின் கேட்க,
"அது... வருக்கு ஆக்சிடென்ட்" என்று திக்கிதிக்கி சொல்ல...அதனை கேட்டு இருவரும் அதிர்ந்துதான் போனார்கள்.
"ஏய்...என்ன சொல்ற?..யார் உனக்கு சொன்னது" என்ற விஷ்ணுவின் கேள்விக்கு,
"அவளே தான் ஃபோன் பண்ணா... சின்ன ஆக்சிடென்ட், பெருசா ஒன்னுமில்லன்னு தான் சொன்னா. ஆனா எனக்கு தான் ரொம்ப பயமா இருக்கு. வாங்க சீக்கிரம் போலாம்" என சொன்னவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் கசிய,
"அவளே தகவல் சொல்ற அளவுக்கு ஸ்டேபிளா தான் இருந்திருக்கா. அதுவே சொல்லுது அவளுக்கு எதுவும் பெருசா இல்லைன்னு. அப்பறம் என்ன? முதல்ல அழுகையை நிறுத்து" என்றவன் இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
மூவரும் அவள் இருக்கும் அறைக்குள் நுழைய...காலில் கட்டுடன், ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்க...மற்றொரு கரத்தில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருந்தாள் வர்ணிகா.
அதை பார்த்தும் விஷ்ணுவிற்கு கோபம் ஏகத்திற்கும் அதிகரிக்க..முயன்று தன்னை கட்டுப்படுத்தினான்.
"வரு...உனக்கு ஒன்னுமில்லையே. ஏண்டி வண்டியை பார்த்து ஒட்ட தெரியாதா. ஏதோ சின்னதா போனதால பரவாயில்ல,இதுவே பெருசா ஆகியிருந்தா என்னாகுறது" என கலங்கிய விழிகளுடன், தங்கையை முழுதாய் கண்களால் ஆராய்ந்தாள், வேறு எங்காவது அடிப்படிருக்கா என்று.
"இப்போ எதுக்கு தேவையில்லாம அழற. கால்ல பிராக்ச்சர், தனியா வண்டியை ஓட்டுட்டு போக முடியாது,அதுதான் உண்மை வர சொன்னேன். மத்தபடி ஐயம் குட்" என சிடுசிடுத்தவளை பரர்த்து பல்லை கடித்தான் விஷ்ணு.
"ஆமா...உன்னை மட்டும் தான வர சொன்னேன், எதுக்கு இத்தனை பேரை இழுத்துட்டு வந்திருக்க" என தமக்கையை பார்த்து கத்த,
"நீ ஆக்சிடென்ட்ன்னு சொன்னதும் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே ஓடல. அதான்" என்றவளை கண்டு தலையிலேயே அடித்துக்கொண்டாள் வர்ணிகா.
"ம்ஹும்... உன்கிட்ட சொன்னேன் இல்ல, அது என் தப்புதான்" என்றவள், மீண்டும் தனது மொபைலை பார்க்க தொடங்கிவிட்டாள். அறையில் நிற்கும் மற்ற இருவரையும் கண்டுக் கொள்ளவே இல்லை.
"டாக்டர் என்ன சொன்னாங்க..? எப்போ சரியாகுமாம், இன்னைக்கே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்களா" என தவிப்புடன் நித்யா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
"ஜஸ்ட் ஹெர் லைன் பிராக்ச்சர் தான், சோ இன்னைக்கே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க" என்றவள், பதிலை கூட தமைக்கையின் முகத்தை பார்த்து சொல்லவில்லை.
அதுவரை பொறுமை காத்தவனால் அதற்கு மேல் முடியாமல் போக...வர்ணிகா அருகில் சென்றவன், அவள் கையில் இருந்த ஃபோனை பிடுங்கி எறிந்திருந்தான்.
அதில் அவள் ஆத்திரமாக அவனை முறைக்க....அவளுக்கு சளைக்காத பார்வையை அவனும் அவளில் செலுத்தினான்.