அத்தியாயம் 3
வெளியே வந்தவனுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது...."ரொம்ப படுத்துறா" என்று முணுமுணுத்துக் கொண்டே, வெளியே சென்றான்.
அங்கே மாமர நிழலில் அமர்ந்து இருந்து, அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தான் அஸ்வந்த்.
அவன் அருகே வந்து அமர்ந்த ராவந்த்தோ, "டேய் சீக்கிரம் ஊருக்கு கிளம்பனும்" என்று சலிக்க, அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து விட்டு மீண்டும் அலைபேசியை பார்த்தான்.
"இப்போ எதுக்கு சிரிக்கிற?" என்று ராவந்த் கேட்க, அலைபேசியை பாக்கெட்டில் வைத்து விட்டு, சாய்ந்து அமர்ந்தவன், "நான் கூட நேத்து நீ பேசுன பேச்சுக்கு முறுக்கிட்டு இருப்பேன்னு நினச்சேன், ஆனா என்னென்னவோ பேசிக்கிறாங்களே" என்று சொல்ல, அவனை முறைத்தவன், "என்னடா பேசிக்கிறாங்க?" என்று கேட்க, "நீ ரொம்ப முரடாம்" என்று ஆரம்பிக்க, "சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்றான்.
"நான் சொல்லல்ல ஊர் சொல்லுது" என்றவனிடம், "செருப்பு பிஞ்சிடும்" என்றான்.
அஸ்வந்த்தோ, "வாய் தான் அப்படி சொல்லு, கழுத்து என்னென்னவோ சொல்லுதே" என்று சொல்ல, சட்டென கழுத்தை வருடியவன், "கடிச்சு வச்சு இருக்கா" என்றான்.
இப்போது அஸ்வந்த் வாய்க்குள் சிரித்துக் கொள்ள, "டேய் நீ நினைக்கிற போல இல்லடா" என்றான் ராவந்த்.
"நான் எதுவும் நினைக்கலையே" என்று அவன் சொல்ல, "ஆளை விடு சாமி" என்று அவனுக்கு திட்டி விட்டு எழுந்து கொண்டவன், அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
எப்போது இங்கே இருந்து கிளம்புவோம் என்கின்ற எண்ணம் தான்...
இதே சமயம் திலகவதியோ மாதுரியை இழுத்து வைத்து பேசிக் கொண்டு இருந்தார்...
"சந்தோஷமா இருந்தீங்களா?" என்று ஆரம்பித்தாள்.
அவளும் வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே, "ம்ம்" என்றாள்.
வேறு என்ன தான் சொல்ல முடியும்...
"அவன் இத்தனை வருஷம் எந்த பொண்ண காட்டுனாலும் குறை சொல்லிட்டே இருந்தான், சாருக்கு ஐஸ்வர்யா ராய் வேணுமாம்" என்று சொல்ல, "க்கும்" என்று மனதுக்குள் நெடித்துக் கொண்ட மாதுரியோ, "ஓஹோ" என்றாள்.
"ரொம்ப பிகு பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான், இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று சொல்ல, 'நெட்டையன் ரொம்ப தான் பண்ணி இருக்கான், வச்சு செய்ய தான் வேணும்' என்று நினைத்துக் கொண்டாள்.
இதே சமயம், வடிவேலும் ராமசாமியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்...
ராமசாமியோ, "மாதுரியோட ஹாஸ்டல்ல தானே ஜீவிதா தங்கி இருந்தா?" என்று கேட்க, "ஆமா டா, இப்போ மாதுரி போனா, தனியா இருக்கணும்" என்று வடிவேல் வருந்த, "வீட்டுக்கே அனுப்பி விடு, நான் பார்த்துக்கிறேன், பெரிய வீடு தான் டா" என்று சொல்ல, "இல்ல உனக்கு எதுக்கு சிரமம்?" என்று கேட்க, "இனி என்ன சிரமம், நம்ம இனி ஒண்ணுக்குள்ள ஒன்னு" என்று சொல்லி அணைத்து விடுவித்தார்...
அங்கும் இங்கும் நகர்ந்து அந்த இரு நாட்களை அவன் கடக்கவே போதும் போதும் என்று ஆகி விட்டது...
ஒரு வழியாக வீட்டிற்கும் கிளம்பி விட்டார்கள்...
மாதுரி ராவந்த்தின் குடும்பத்துடன் கிளம்பி விட, ஜீவிதா இரு நாட்கள் கழித்து வருவதாக இருந்தது...
மாதுரியுடன் சென்று நிற்க வேண்டும் என்று நினைக்கவே ஜீவிதாவுக்கு இஷ்டம் இல்லை, அங்கே தான் அஸ்வந்த் இருப்பானே... அவளுக்கும் அஸ்வந்த்துக்கும் தான் எட்டாம் பொருத்தம் ஆயிற்றே...
ஆனால் மாதுரி விடவே இல்லை...
"என்னோட வந்து இரு, சொல்லிட்டேன்" என்று மிரட்டி விட்டு தான் கிளம்பி இருந்தாள்.
அஸ்வந்த் தான் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான்.
மாப்பிள்ளையை பெண் அருகே இருக்க வைக்கின்றார்களாம் என்று அவனையும்
மாதுரியையும் ஒன்றாக பின் சீட்டில் அமர வைத்து இருந்ததுடன் மட்டும் அல்லாமல், திலகவதியும் மாதுரியை நெருக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தார்.
ராமசாமி முன்னால் அமர்ந்து இருந்தார்...
மாதுரி நடுவில் அமர்ந்து பப்பாளி பழம் போல நசுங்கியது தான் மிச்சம்...
ராவந்த் வேண்டும் என்றே தள்ளி இருக்க மாட்டேன் என்ற தோரணையில் அவனது பரந்து விரிந்த தோள்களை இன்னும் விரித்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்.
திலகவதியை தள்ளவும் முடியாது...
அருகே இருந்த ராவந்த்திடம், "கொஞ்சம் தள்ளி இருக்கலாம் ல" என்றாள்.
அவளை திரும்பி பார்த்தவன், "இடம் இல்ல" என்றான் அலட்சியமாக தோள்களை உலுக்கி.
'ஸ்கூல் பையன் போல பிஹேவ் பண்ணுறான்' என்று வாய்க்குள் முணுமுணுத்த மாதுரியோ வேறு வழி இல்லாமல் அவனை நெருக்கிக் கொண்டே அமர்ந்து கொள்ள, அவனோ, "இப்போ எதுக்கு ஒட்டிட்டு இருக்க?" என்று அவள் காதருகே குனிந்து கேட்க, "தள்ளலன்னா மடியில கூட இருப்பேன், எனக்கு ஒன்னும் வெட்கம் இல்லை, இருந்து காட்டட்டுமா?" என்று கேட்க, 'இவளை நம்பவும் முடியாது' என்று நினைத்தவன், அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு தள்ளி இருந்தான்.
'இவனை சாஃப்ட் ஆஹ் ஹாண்டில் பண்ணவே கூடாது' என்று தான் அவள் இறுதியாக நினைத்துக் கொண்டது...
இடையில் நிறுத்தி சாப்பிட்டார்கள்.
அவள் அனைவருடனும் இலகுவாக பழக ஆரம்பித்து விட்டாள்.
ராவந்த் என்றால் மட்டும் ஒரு விலகல்...
அவனுடையே அதி மெத்தன போக்கும் திமிரும் அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை...
இந்த திடீர் கல்யாணமே அவளுக்கு அதிர்ச்சி...
அதுவும் இவனுடன் என்பது பேரதிர்ச்சி...
அவன் அலுவலகத்தில் அவளை நடத்தும் விதம் அவளுக்கும் தெரியும் தானே...
'மைனர் ஸ்டாஃப்' என்கின்ற அலட்சியம் அவனுக்கு இருக்கும்...
அதனாலேயே அவன் மீது இயல்பான வெறுப்பு...
இப்போது இன்னும் அதிகரித்தது தான் மிச்சம்...
சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளிடம், "அண்ணி, காலேஜ் போகலையா நீங்க?" என்று ஆரம்பித்தான் அஸ்வந்த்.
"படிப்பு தலைக்குள்ள ஏறணுமே" என்று ராவந்த் கிண்டலாக சொல்ல, அவனை திரும்பி முறைத்தவள், "அதெல்லாம் ஏறிச்சு, ப்ளஸ் டூ படிச்ச அப்புறம், அப்பாவுக்கு ஹெல்த் இஸ்ஸு, முதல் போல வேலை பார்க்க முடியாது, அதனால் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன், அப்புறம் ஜீவிதாவை எப்படியாவது படிக்க வைக்க நினச்சேன், இந்த வேலையையே தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சுட்டேன், என் கல்யாணம் கூட ஊர்ல இருந்த நிலம் ஒண்ண வித்து தான் பண்ணி கொடுத்தாங்க, நான் படிக்கிறதுக்கு அந்த நிலத்தை விக்க சொன்னேன், கல்யாணத்துக்கு தான் அப்படின்னு அப்பா சொல்லி இருந்தார், எங்க அப்பா விட்ட பெரிய பிழை அது தான், படிச்சு இருந்தா, இன்னும் கொஞ்சம் சம்பாதிச்சு இருக்கலாம்" என்றாள் ஒரு பெருமூச்சுடன்...
அவள் குரலில் வலி இல்லை...
ஒரு ஏமாற்றமும் ஆதங்கமும் தான் இருந்தது...
ராமசாமிக்கு இந்த விஷயமே இப்போது தான் தெரியும்.
"அவனுக்கு கொஞ்ச வருஷம் முன்னாடி ஹார்ட் ஆபரேஷன்னு சொன்னான், ஆனா இத பத்தி எதுவுமே என் கிட்ட சொல்லவே இல்லையே" என்று சொல்ல, அவளோ, "அப்பா யார் கிட்டயும் அவ்ளோ சீக்கிரம் உதவி கேட்க மாட்டார் தானே மாமா" என்றாள் அவள்.
"ஆமா ரோஷக்காரன், இந்த கல்யாணம் கூட, அவனா கேட்கவே இல்லை... நானாவே கேட்டு தான் பண்ணி வச்சேன்" என்று ராமசாமி சொல்ல, இப்போது திலகவதிக்கு அவளை ரொம்பவே பிடித்து விட்டது.
எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லாமல் கணவர் சொல்லி தான் திருமணம் மகனுக்கு நடத்தி வைத்தார்.
சரியான, பொறுப்பான பெண் என்று இப்போது தோன்றியது...
அவளை மென் சிரிப்புடன் பார்த்தவர், "ரொம்ப பொறுப்பான பொண்ணும்மா நீ" என்று சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டாள்.
இதே சமயம் ராவந்த் மொத்தமாக மௌனமாகி விட்டான்...
அவள் சொன்ன விஷயம் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது...
எதுவும் பேசாமல் சாப்பிட்டவன், எல்லாருமே காரை நோக்கி நடந்து சென்ற கணம், அவள் அருகே தான் நடந்து வந்தவன், "சாரி" என்றான்.
"எதுக்கு?" என்று அவள் அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்துக் கொண்டே, "படிப்பு ஏறாதுன்னு சொன்னதுக்கு" என்றான்.
அவளோ, "நான் ஒன்னும் நீங்க என்னை பரிதாப ப்படணும்னு சொல்லவே இல்ல, ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாது" என்று சொன்னவளை முறைத்தவன், "உன் கிட்ட சாரி கேட்ட என்னை செருப்பால அடிக்கணும்" என்றான்.
"என் கிட்ட இருக்கு வேணுமா?" என்று கேட்டவளை முறைத்தவன், "தப்பு தான் டி உன் கிட்ட பாவம் பார்த்து பேச வந்தது தப்பு தான்" என்றான்.
"நான் ஒன்னும் பாவப்படுற நிலமைல இல்ல சார்" என்றபடி அவள் காரில் ஏற, அவனோ இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டிக் கொண்டே காரில் ஏறி இருந்தான்.
காரும் அவர்களது வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தது.
ஒரு வழியாக வீட்டையும் அடைந்து விட்டார்கள்...
தூக்கம் என்றால் எல்லாருக்கும் அப்படி ஒரு தூக்கம், அடித்துப் போட்ட போல...
என்ன தான் பிடிக்காத திருமணம் என்றாலும் ஒரே அறைக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் தானே மாதுரிக்கும் ராவந்த்துக்கும்...
பட்டும் படாமல் கட்டிலில் படுத்துக் கொண்டார்கள்...
அடுத்த நாள் காலையில் மாதுரி எழுந்த சமயம் டவலுடன் கண்ணாடி முன்னே நின்று இருந்தான் ராவந்த்.
'காலைலயே தரிசனம்' என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி எழுந்து அமர்ந்தவளோ, நேரத்தைப் பார்த்தாள்.
தாமதமாகி விட்டது...
சீக்கிரம் கிளம்பி அலுவலகம் செல்ல வேண்டும்...
அவளும் மூன்று நாட்கள் தான் லீவு போட்டு இருந்தாள்.
அவள் திருமணம் செய்ய இருந்த ராமும் இதே ஊர் என்பதால் இருவருமே ஒரே வீடு எடுத்து தங்குவதாக எல்லாம் பேசி இருந்தார்கள்...
இறுதியில் மாப்பிள்ளையே மாறி போய் விட்டது...
நேரத்தை பார்த்து விட்டு, "எழுப்பி இருக்கலாம் ல" என்றாள்.
"நான் என்ன எலார்ம் ஆஹ்?" என்று கேட்டபடி ஒவ்வொரு க்ரீமாக அவன் போட்டான்.
பவுடர் மட்டுமே போடும் அவளுக்கு அவன் அடுக்கி வைத்து இருந்த க்ரீம்களை பார்த்து ஆச்சரியம் தான்.
'உலக அழகியே இவ்ளோ போட மாட்டாங்க, சிக்ஸ் பேக் எல்லாம் வச்சு இருக்கான், அதான் இவ்ளோ திமிர்' என்று முணுமுணுத்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றவள், அங்கேயே குளித்து புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அப்போதும் அவன் ஜீன்ஸ் அணிந்து ஷேர்ட் போடாமல் நின்றபடி, ஷேர்ட்டை அயர்ன் செய்து கொண்டு இருந்தான்.
'ரெடி ஆகவே ஒரு மணி நேரம் எடுப்பான் போல, நானே புடவை கட்டிட்டேன், இவன் ஜீன்ஸ் மட்டும் தான் போட்டிருக்கான், பொண்ணுங்கள விட மோசமா இருப்பான்' என்று நினைத்தபடி கண்ணாடி முன்னே நின்று ஆயத்தமாக ஆரம்பித்தாள்.
அணிந்து இருந்த தாலி தொடக்கம் எல்லாமே கழட்டி வைத்து இருந்தாள்.
கண்ணாடி முன்னே நின்று ஆயத்தமாகிக் கொண்டு இருந்த மாதுரியின் பின்னே ஜீன்ஸுடன் வந்து நின்றான் ராவந்த்.
தலையை திருப்பி பார்த்தவள், "மறைக்குதா என்ன?" என்று கேட்க, "குள்ளக்கத்தரிக்கா போல இருந்துட்டு பேசுற பேச பாரு" என்றான்.
அவளோ, "க்கும்" என்றபடி நெற்றியில் கருப்பு பொட்டை வைக்க, அப்போது தான் ட்ரெஸ்ஸிங் டேபிளில் அவள் கழட்டி வைத்து இருந்த தாலி மெட்டி என்று எல்லாமே பார்த்தான்.
"என்னடி எல்லாம் கழட்டி வச்சு இருக்க?" என்று அவன் கேட்க, "கல்யாணம் நின்னுடுச்சுன்னு ஆபீஸ் ல சொல்லி , சிங்கிள் ஆஹ் மெயின்டெய்ன் பண்ண போறேன்" என்றாள்.
"இதெல்லாம் என் டயலாக் டி" என்றான் அவன்.
"நானும் பேசலாம் தப்பில்லை. எனக்கு நீங்க பொருத்தமே இல்ல" என்றாள்.
கண்ணாடியூடு அவளை முறைத்தவன், "வாட்?" என்று கேட்க , அவன் பக்கம் திரும்பியவளோ, "இவ்ளோ உயரமா இருந்தா யாருக்கு தான் பிடிக்கும்... எனக்குன்னு ஆசை கனவு இருக்கு... என் உயரத்துக்கு ஏத்த போல குட்டியா இருக்கனும்... நிறம் கம்மியா மேன்லியா இருக்கனும்..." என்றவள் அவன் மார்பை பார்த்துக் கொண்டே, "இப்படி எல்லாம் கட்டி கட்டியா வேணாம்... பார்க்கவே அருவருப்பா இருக்கு... முக்கியமா நிறைய முடி இருக்கணும்" என்றாள்.
"நான் ஃபோட்டோ ஷூட்டுக்கு ஷேவ் பண்ணுனேன்" என்றான் பற்களை கடித்துக் கொண்டே.
அவளோ, "அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது... நிறைய முடி இருந்தா தான் அந்த விஷயத்துல ஜம்முன்னு இருப்பார்களாம்" என்று அவன் தலையில் குண்டையும் சேர்த்து போட்டாள்.
"இங்க பாரு இன்னொரு வார்த்தை பேசுனா பல்ல உடைச்சிடுவேன்." என்றான்.
"உண்மைய சொன்னா கோபம் வர தான் செய்யும்" என்றாள்.
"இப்படி அஸியூம் பண்ணி பேசுனா செருப்பால அடிப்பேன் பார்த்துக்கோ... எதுன்னாலும் பீல் பண்ணிட்டு பேசு" என்றான்.
"ஐயே நான் உங்க கிட்ட பீல் பண்ணனுமா? எப்போடா டைவர்ஸ் எடுக்கலாம்னு இருக்கேன்" என்றாள்.
பொறுமை இழந்து விட்டான்.
"பிடிக்கலைன்னா எதுக்குடி வந்து பக்கத்தில இருந்து தாலி கட்டிக்கிட்ட?" என்று சீற, "எல்லாம் பாவமேன்னு தான் பண்ணுனேன். என்னை நம்பி ஒருத்தன் தாலி கட்ட வந்திருக்கான். நான் வேணாம்னா உங்களுக்கு அசிங்கமாயிடும்னு மனசாட்சியோடு நினச்சேன்" என்றான்.
"உன் மனசாட்சி ல தீய வைக்க" என்றான்.
அவளோ, "சரி நான் கிளம்புறேன், லேட் ஆகுது" என்றபடி வெளியேறியவள் இதழ்களோ, 'பெரிய மன்மத குஞ்சுன்னு நினைப்பு. நாலு நாளைக்கு தூங்காம இருடா டேய்' என்று முணுமுணுத்தபடி செல்ல கண்ணாடி முன்னே நின்று தன்னையே பார்த்து இருந்த ராவந்த்தோ, "இவ காறி துப்புற அளவுக்கா இருக்கேன் நான்" என்றபடி தனது படிக்கட்டு தேகத்தை வருடிக் கொண்டான்...