ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 29

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 29

அது வேற யாருமல்ல சாணக்கியன் அனுப்பிய ஆள் கிருஷ்ணா தான். கிருஷ்ணா கயல்விழியை கண்டு அதிர்ந்தவன் அங்கிருந்த புத்தகத்தை எடுத்து அதை படிப்பது போல முகத்தை மறைத்துக் கொண்டான். 'அப்போவும் சாணக்கியன் சார் கண் காணாத இடத்துக்கு போக சொன்னாரே... இப்படி வந்து மாட்டிக் கிட்டேனே... பக்கத்துல பொண்டாட்டி வேற இருக்காளே... எப்படி சமாளிப்பேன்?' என்று மனதுக்குள் அவன் பட்டிமன்றம் நடத்தினான்.

கயல்விழியோ, 'இவன் கிருஷ்ணா தானே? அமெரிக்கா போகாமல் இங்க என்ன பண்ணுறான்?' என்று யோசித்தவள் அவனருகில் வர அவனோ நன்றாக புத்தகத்தால் தனது முகத்தை மறைத்தான்.

கயல்விழி இரு பக்கமும் எட்டி பார்க்க அதுக்கு இசைவாக புத்தகத்தை அசைத்து அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தான்.

"என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க? டாக்டரம்மா உங்கள பார்க்க தானே வந்திருக்காங்க அந்த புத்தகத்தை எடுங்க" என்று அவன் மனைவி புத்தகத்தை பறிக்க அவனோ, "ஹி ஹி" என்று தன்னை பார்த்துக் கொண்டிருந்த கயல்விழியை பார்த்து சிரித்தான்.

அவனை புருவ முடிச்சுடன் பார்த்தவள், "கிருஷ்ணா நீங்க எங்க இங்க?" என்று கேட்க உடனே அவன் மனைவி, "இவர் பெயர் கிருஷ்ணா இல்ல டாக்டர், இவர் பெயர் ராம்ராஜ்" என்று சொல்ல அதை கேட்டு அதிர்ந்தவள், "என்ன ராம்ராஜா ? இவர் அமெரிக்கா போகலையா?" என்று கேட்க கல கல என சிரித்த அவன் மனைவி, "அமெரிக்காவா? அத இவர் படத்துல கூட பார்த்ததில்லை" என்றாள்.

உடனே அவனும், " நீங்க வேற யாரையோ சொல்றீங்க டாக்டர்... நான் ராம்ராஜ் இவளோட மனைவி...ச்ச ச்ச கணவன்" என்று உளற அவனை நம்ப முடியாமல் பார்த்தவள், 'வேற ஆளா இருக்கிற அளவுக்கு சாதாரண உருவம் இல்லையே கிருஷ்ணாவுக்கு ... குரல் கூட ஒரே போல இருக்குமா?' என்று நினைத்தவள், 'ஏதோ தப்பு நடந்திருக்கு' என்று யோசித்தபடி, "ஓகே ராம்ராஜ் நான் தான் தப்பா நினைச்சுட்டேன் போல, உடம்புக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டாள்.

அவள் பதிலில் நிம்மதி அடைந்த ராம்ராஜ் ( இனி அவ்வாறே அழைப்போம் ). "ஒண்ணுமில்ல டாக்டர் கீழே விழுந்து காலில அடிபட்டிருக்கு." என்று காலை காட்ட அதில் காயத்துக்கு மருந்து கட்டப்பட்டு இருந்தது.

அதை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அவனை பார்த்து தலையசைத்துவிட்டு வெளியில் சென்று விஷ்வாவுக்கு அழைக்க அவன் ஒரு முக்கிய மீட்டிங்குக்கு போய் இருந்தவன் அப்போது தான் வைத்தியசாலையை அடைந்திருந்தான்.

கயல்விழியின் எண்ணை பார்த்துவிட்டு புருவ முடிச்சுடன் போனை எடுத்து காதில் அவன் வைக்க மறுமுனையில் இருந்து, "அண்ணா நம்ம கிருஷ்ணா இங்க அட்மிட் ஆகி இருக்கான்... அவன் சொல்ற கதை எல்லாம் தப்பா தெரியுது. சீக்கிரம் ** நம்பர் வார்டுக்கு வாங்க" என்று கயல் கூற, "கிருஷ்ணாவா? வாசலுக்கு வந்துட்டேன் இதோ வரேன்" என்றபடி உள்ளே நுழைந்தான் விஷ்வா.

ராம்ராஜ் மனமோ பட படப்பாக இருக்க மனைவியிடம், "வா போகலாம்" என்று கூறியபடி அவன் எழ உடனே அவன் மனைவி, "இப்படியேயா? ஹாஸ்பிடல் பீஸ் கூட கட்டல" என்றவளிடம், "உனக்கு எல்லாம் விளக்கமா சொல்லணுமா? வாடி" என்றபடி காயம் பட்ட காலை கெந்தி கெந்தி கயல்விழி நின்ற கதவுக்கு அடுத்த கதவால் வெளியேறியவன் அவளுக்கு தெரியாமல் அங்கிருந்து பதுங்கியபடி வெளியேற எத்தனிக்க அவன் முன் முறைத்தபடி விஷ்வா கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்று அவனை கூர்ந்து பார்த்தான்.

அவனை பார்த்ததும், 'சரி...போச்சு... எல்லாம் போச்சு...' என்று நினைத்த ராம்ராஜ் அவனை பயத்துடன் பார்க்க, "என்ன சார் காசு கட்டாம ஓட போறீங்களா ?" என்று புருவம் உயர்த்தி விஷ்வா கேட்டான். உடனே ராம்ராஜின் மனைவி, "அத தான் டாக்டர் நானும் கேட்டேன்... கை நிறைய காசு இருக்கு... ஒரு கிழமை வெளியூர் போய் உழைச்சு காசு கொண்டு வந்தார். இப்போ ஏன் இப்படி கள்ளத்தனமா ஓட பார்க்கிறார் என்று விளங்கல" என்று கூற, "இவருக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்" என்ற விஷ்வா அவன் தோளில் கை போட, "எனக்கு ஒரு ட்ரீட்மெண்டும் வேண்டாம்" என்றான் ராம்ராஜ் பதட்டமாக. உடனே விஷ்வா, "இப்போ பீஸ் கட்டாம ஓடுனதுக்காக என் மனைவி மித்ராவை கூப்பிட்டு உங்கள விசாரிக்க சொல்லவா ?" என்று கேட்க இல்லை என்று பயந்து தலை ஆட்டினான். "அப்போ என் கூட வாங்க" என்றவன் அவன் மனைவியிடம் திரும்பி, "நீங்க வெயிட் பண்ணுங்கம்மா" என்று கூறியபடி தனது அறைக்குள் அழைத்து போனவன் கயலையும் அவன் அறைக்கு வர சொல்லி மெசேஜ் போட்டான்.

உள்ளேச் சென்றதும் அங்கிருந்த தாதியரை வெளியேற்றியவன், "இருங்க" என்று அவன் தோளை பிடித்து இருக்க வைத்தான்.

அவனும் பயந்தபடி இருக்க உள்ளே வந்த கயலிடம் கதவை சாத்த சொல்லி சைகை செய்தவன், "சொல்லுங்க... கிருஷ்ணா" என்று கூறினான். "இல்லண்ணா இவர் பெயர் ராம்ராஜ்" என்று சொல்ல புருவம் உயர்த்திய விஷ்வா, "ஓ அது வேறயா?" என்றவன். "சொல்லுங்க ராம்ராஜ்" என்றான்.

"சொல்றதுக்கு ஒண்ணுமில்ல டாக்டர் நான் போகணும்" என்றவனின் தோளை இரு கைகளாலும் விஷ்வா அழுத்தி பிடிக்க எழும்ப முடியாமல் அவன் திண்டாடினான்.

பரிதாபமாக விஷ்வாவை ராம்ராஜ் பார்க்க, "போகலாம்... உண்மைய சொன்னா உயிரோட போகலாம். பொய்ய சொன்னா கை கால் இல்லாம போகலாம். நான் முதல் ரவுடிடா அப்புறம் தான் இந்த டாக்டர் எல்லாம்" என்றவனை மருண்டு பார்த்தான் ராமராஜ்.

அவன் கையை பிடித்து முறுக்கி முதுகோடு வைத்து அழுத்த அவன் கதற தொடங்கினான். அடைத்த அறையில் இருந்து சத்தம் வெளியேறவே இல்லை.

அவன் கையை முறுக்கியபடியே, "இப்போ நீ உண்மைய சொல்லலன்னா... இந்த கை இப்போ உடையும். பார்க்கிறியா?" என்றதும் பயந்த ராம்ராஜ், "சொல்றேன் சார் விடுங்க ப்ளீஸ்" என்று அலற தொடங்கினான்.

விஷ்வா அவனை விட்டு விட்டு அவன் தன்னை ஆசுவாசபடுத்த அவனுக்கு தண்ணீரை கொடுத்தவன் அவன் குடித்து முடித்ததும் அவனிடம் கதையை கேட்க கயலும் விஷ்வாவும் அவன் முன்னால் உட்கார்ந்தனர்.

"என் பெயர் ராம்ராஜ் சார்... இங்க தான் கவர்மெண்ட் டிபார்ட்மென்ட்ல வேலை செய்றேன். சாணக்கியன் சார் கிட்ட சில கிழமைகளுக்கு முதல் ட்ரான்ஸ்பர் விஷயமா போய் இருந்தேன்... அப்போது என்னை கூர்ந்து பார்த்தவர் எனக்கு ஒரு தொகை பணம் தருவதாக கூறி வீட்டுக்கு வந்து ஒரு கிழமை நடிக்க சொன்னார். முதலில் தயங்கினேன்... பிறகு வீட்டு கஷ்டத்தால் சரி என்று சொல்ல சாணக்கியன் சாரும் நான் கேட்டு வந்த ட்ரான்பரை வாங்கி கொடுத்துட்டார். அதுக்கு பிறகு என்னோட நட்பாகவே பழகினார் சாணக்கியன் சார். மனைவிக்கு கொஞ்சம் ஓட்டை வாய். அதனால தற்காலிகமாக ஒரு இடத்தில ஒரு கிழமைக்கு வேலை என்று பொய் சொல்லி உங்க வீட்டுக்கு வந்தேன் சார். வீட்டில் உள்ள எல்லார் பற்றியும் சொன்னார். எப்படி நடிக்கணும் என்றும் சொல்லி தந்தார். மகாலிங்கம் சார் என்னை கண்டா பயப்படுவார் என்று சாணக்கியன் சார் சொன்னது போலவே அவரும் பயந்தார்." என்றதும் இருவரும் அதிர்ந்து ஒரே நேரத்தில், "என்ன உன்னை கண்டு பயந்தாரா ?" என்று கேட்டனர்.

ஆம் என்று தலையாட்டியவன், "சாணக்கியன் சார் கிட்ட நானும் ஒரு தடவை கேட்டிருக்கேன் ஏன் சார் அப்பாவை மிரட்டுறீங்க என்று. அதுக்கு அவர் தப்பு செஞ்சவன் அப்பனா இருந்தாலும் நான் விட மாட்டேன் என்றார். அதுல இருந்து மகாலிங்கம் சார் எதோ தப்பு பண்ணி இருக்கார் என்று மட்டும் எனக்கு விளங்கிச்சு." என்றவன் அவர்களை பார்க்க இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

மேலும் தொடர்ந்தவன், "அப்புறம் கெளதம் சார்க்கு கொஞ்சம் பொறாமை வர போல கயல்விழியோட பழக சொன்னார்" என்று கயல்விழியை சங்கடத்துடன் பார்த்தான். கயல்விழி அதை கேட்டு மீண்டும் அதிர்ச்சியாக மேலும் தொடர்ந்தவன்,

"உங்க வீட்ல இருந்து வந்ததும் நான் ட்ரான்ஸ்பர் வாங்கி கொடுத்த இடத்துக்கு உடனே போக யோசிச்சேன். என் சொந்தமெல்லாம் அங்க இருக்கிறதால இனி வாழ்நாள் முழுக்க இங்கே வர தேவை இல்ல என்று நினைச்சேன். சாணக்கியன் சாரும் அத தான் சொன்னார். ஆனா என் கஷ்டகாலம் மனைவிக்கு உடம்பு முடியாம இருந்து இப்போ தான் குணமாச்சு. குணமானதும் போகலாம் என்று ஒளிந்து திரிந்தேன். நேற்று போக ஆயத்தமாகும் போது தான் படியில் தவறி விழுந்து காயம் ஆகி என் கஷ்டகாலத்துக்கு இங்கேயே அட்மிட் ஆயிட்டேன். சாணக்கியன் சார் உங்க ஹாஸ்பிடல் பெயர் மட்டும் சொல்லாம விட்டு விட்டார். சொல்லி இருந்தா எனக்கு இந்த சங்கடம் வந்திருக்காது." என்றான்.

கதையை கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டனர்.

ராம்ராஜை விஷ்வா அறையில் இருந்து அனுப்பியவர்கள் அவனை வெளியில் காத்திருக்க சொல்லி விட்டு உள்ளே இருந்து

சாணக்கியனை பற்றி பேச தொடங்கினர். "அப்போ நம்ம அப்பா ஏதோ தப்பு பண்ணி இருக்கார் அண்ணா... அதுவும் மன்னிக்க முடியாத தப்பு." என்ற கயலிடம், "ஆமாம் கயல்... அதை முதலில் கண்டு பிடிக்கணும்...ச்ச் அண்ணாவை புரிஞ்சுக்காம அவரை போய் மரியாதை இல்லாம..." என்றவனுக்கு அதுக்கு மேல் பேச வராமல் கவலையில் தொண்டை அடைத்தது. பேச முடியாமல் முடியாமல் தவித்தவனை இயலாமையுடன் பார்த்தாள் கயல்விழி.

அன்று வரை சாணக்கியனை நினைத்து மறுகிய இருவருக்கும் மகாலிங்கம் ஏதோ தப்பு பண்ணி இருக்கார், அதனால் தான் சாணக்கியன் தண்டனை கொடுத்து இருக்கிறான் என்று அறிந்ததும் மனது லேசானது போல இருக்க தங்களை நினைத்து அவர்களுக்கே ஆச்சரியமாக போனது.

மகாலிங்கத்தின் புத்திரர்கள் மூவருக்கும் ஓடும் நேர்மையான ரத்தம், "நெற்றி கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே" என்றே அவர்களுக்கு போதித்து இருந்தது.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு, "முதலில் அப்பா கிருஷ்ணா விஷயத்தில என்ன தப்பு பண்ணினார் என்று கண்டு பிடிக்கணும் கயல்... அண்ணா கண்டிப்பா சொல்ல மாட்டார். அது கௌதமுக்கு தெரியும். கெளதம் கிட்ட இருந்து விஷயத்தை எடுக்க முடியுமா என்று பார்க்கணும்" என்ற விஷ்வா ராம்ராஜின் மனைவியை வைத்தியசாலையிலேயே காத்திருக்க சொல்லிவிட்டு ராம்ராஜையும் கயலையும் அழைத்துக் கொண்டு கௌதமின் அலுவலகத்துக்குச் சென்றான்.

சுழல் நாற்காலியில் இருந்த கெளதம் தனது அறைக்குள் வந்த கயலையும் விஷ்வாவையும் ஆச்சரியத்துடன் பார்த்தவன் மனதுக்குள், 'ஐயோ நம்ம தலையை உருட்ட போறாங்களே... சாணக்கியா உன் நண்பன் நிலைமையை பாருடா.' என்றவன் வெளியில் விறைப்பாக, "வாங்க" என்றான்.

உள்ளே வந்த விஷ்வா, பின்னால் ராம்ராஜ் வராததை கவனித்து வெளியில் எட்டி பார்த்தவன், "சார், ஏன் அங்கேயே நிற்கிறீங்க? உள்ளே வாங்க" என்று அழைக்க, 'இவன் யாரை கூட்டி வந்திருக்கிறான்?' என்று யோசித்த கெளதம் வாசலை எட்டி பார்த்தான். அங்கே ராம்ராஜ் தயங்கி தயங்கி உள்ளே வர அதை பார்த்து ஏற்பட்ட அதிர்ச்சியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவன் 'இவன் எங்கே இங்கே? இவன் வெளியிடத்துக்கு போய் இருப்பான் என்று சாணக்கியன் சொன்னானே' என்று நினைத்தவன் அதை வெளிக்காட்டாமல், "என்ன கிருஷ்ணா அமெரிக்கா போகலையா? கயல்விழியை விட்டு போக முடியலையா?" என்று கேட்க கயல்விழியும் விஷ்வாவும் அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தனர். ராம்ராஜோ கேட்க வேண்டாம் என்ற தோரணையில் தலையை இரு பக்கமும் ஆட்டி சைகை செய்ய அதை விஷ்வா கண்டுக் கொண்டான்.

உடனே ராம்ராஜை விஷ்வா முறைக்க அவன் அடங்கி போய் தலையை குனிந்துக் கொண்டு நின்றான். இதை கவனித்த கெளதம், 'இன்னைக்கு ஏதோ பெரிய சம்பவம் இருக்கு' என்று நினைத்தபடி அவர்களை பார்த்து இருக்க சொல்லி சைகை செய்ய அவர்களும் அங்கிருந்த கதிரையில் இருந்தனர்.

விஷ்வா கௌதமிடம், "நேரடியாவே கேட்கிறேன் ஏன் எங்களை ஏமாத்துனீங்க?" என்று கேட்க, "யாரு யாரை ஏமாத்துனது?" என்று தெரியாத போல கேட்டான் கெளதம். விஷ்வாவுக்கு எரிச்சல் வந்தாலும் அதை அடக்கியவன், "இவர் பெயர் ராம்ராஜ்... இவரை எதுக்கு கிருஷ்ணா என்று நடிக்க வச்சீங்க ?" என்று கேட்க, "நான் நடிக்க வைக்கவில்லையே... நடிக்க வச்சவங்க கிட்ட போய் கேளுங்க சார்" என்ற கௌதம் மேலும், "எனக்கு வேலை இருக்கு...சோ" என்று வாசலை கை காட்ட அவர்கள் எரிச்சலுடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.

இனி ராம்ராஜை வைத்து ஒன்றும் பண்ண முடியாது என்று அறிந்தவர்கள் அவனை அனுப்பி விட்டு எப்படியாச்சும் உண்மையை அறியும் வண்ணம் சாணக்கியனின் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து சேர அங்கிருந்த வாட்ச்மேனுக்கு விஷ்வாவை ஏற்கனவே தெரியும் என்பதால் அவர்கள் இருவரையும் அவன் உள்ளே விட்டான்.

அலுவலகத்தில் இருந்த கெளதம் நடந்ததை போன் மூலம் சாணக்கியனுக்கு சொல்ல, "அவன் இன்னும் கிளம்பாம இந்த ஊருலயா சுத்திக்கிட்டு இருக்கிறான்?" என்று எகிறியவன் ராம்ராஜுக்கு கால் எடுத்து லெப்ட் ரைட் வாங்கி விட்டு கௌதமையும் விஷ்வாவையும் எப்படி சமாளிப்பது என்று தனது அலுவலகத்தில் இருந்தவாறே யோசிக்க தொடங்கினான்.

அன்று மாலை வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு முதலில் வந்த கெளதம் முன்னால் நின்ற விஷ்வாவின் காரை பார்த்து, "ஐயோ நம்மள இதுங்க விடாதுங்க போல இருக்கே" என்று சலித்தபடி உள்ளேச் சென்றவன் அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு உடை மாற்றி அவர்கள் முன்னே வந்தமர்ந்தான். இருவரும் அவனை முறைத்த படி இருக்க அவனோ அவர்கள் முன்னே இருந்து, "என்ன சாப்பிடுறீங்க?" என்று கேட்டான்.

உடனே கயல், "ஒரு பாட்டில் விஷம்" என்றாள் எரிச்சலுடன். "சாரி டாக்டரம்மா அதெல்லாம் இங்க நாங்க வச்சுக்கிறதில்ல வேணும்னா கடைல இப்போ வாங்கி தரவா?" என்று அவன் கிண்டலடிக்க பொறுமை இழந்தவள், "எங்கப்பா கிருஷ்ணாவுக்கு என்ன பண்ணினார் ? ப்ளீஸ் சொல்லுங்க. உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு, அவர் ஏன் கிருஷ்ணாவை பார்த்து பயப்படணும்?" என்று கண்களில் கண்ணீருடன் நேரடியாகவே அவனிடம் கேட்டாள்.

அவள் திடீர் கேள்வியில் கௌதமின் மனம் ஏதேதோ எண்ணங்களில் சுழல அதை கட்டுப்படுத்தியவன், "எனக்கு புரியல" என்றான்.

அதை கேட்டு கோபத்துடன் எழுந்த கயல் அவனை நோக்கி நடந்து வர அவனோ கதிரையில் இருந்து எழுந்து நின்றான். அவனருகில் வந்தவள் அவன் கைகள் இரண்டையும் தன் கைகளுக்குள் அடக்கி கும்பிடுவது போல கேட்டவள், "எங்கண்ணா ஏன் அப்பாவை கொன்றார் என்று உங்களுக்கு தெரியும்...ப்ளீஸ் சொல்லுங்க... உங்க ஒரு வார்த்தையால சிதறி கிடக்கிற குடும்பம் ஒன்று சேரும். அப்பாவை கொன்றதுக்கு நியாயமான காரணம் இருந்தால் அதை நாங்க ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு நீதியை சொல்லி வளர்த்தது சாணக்கியன் அண்ணன் தான். தப்பு பண்ணினது ரத்த சொந்தம் என்றாலும் தண்டிக்க சொல்லி இருக்கார், அவர் இங்கேயும் நாங்க அங்கேயும் இருக்க ஆசைப்படுறீங்களா?" என்று கேட்டாள் கலங்கிய கண்களுடன்.

அவள் வார்த்தை கௌதமின் மனதையும் அசைத்து பார்த்தது. கௌதமோ வலி நிறைந்த கண்களுடன் அவளை ஏறிட்டு நோக்க இருவரையும் மௌனமாக விஷ்வா பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இப்போது உண்மை தெரிவதே முக்கிய நோக்கமாக இருந்தது.

முதலில் சங்கடப்பட்ட கெளதம் சாணக்கியன் சந்தோஷமாக வாழ மகாலிங்கத்தின் குற்றத்தை சொல்ல தயாரானான்.

"உங்கப்பா..." என்று ஆரம்பித்தவன் நடந்ததை ஒரு மூன்றாம் மனிதனாக உணர்ச்சிகளை அடக்கி சொல்ல பெரும்பாடுபட்டு போனான். அதனை கேட்ட கயல் கால்கள் நடுங்க பிடிமானம் இல்லாமல் தளர அவளின் தோள் பிடித்து கெளதம் அங்கிருந்த கதிரையில் அவளை உட்கார வைத்து விட்டு திரும்பும் போது விஷ்வா ஆக்ரோஷமாக கௌதமின் ஷர்ட்டை பிடித்து, "இதெல்லாம் உண்மையா?" என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். அவன் கைகளை மெதுவாக தனது ஷர்ட்டில் இருந்து விலக்கியவன் ஆம் என்று தலை ஆட்ட அதை கேட்டு தொய்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன், "அவனை ஏன் இப்படி சாதாரணமா சாகடிச்சீங்க? அவனை அணுவணுவா சித்ரவதை செய்துக் கொன்று இருக்கணும்." என்றான் ஆற்றாமையாக. அவன் நேர்மையில் நெகிழ்ந்த கெளதம், 'அண்ணனுக்கு தப்பாத தம்பி' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

"நடிச்சது பொய் கிருஷ்ணா என்றால் உண்மையான கிருஷ்ணா எங்கே? உங்களுக்கு எப்படி இந்த உண்மை தெரியும்?" என்று கயல் கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் கெளதம் தடுமாறினான். அப்போது, "நான் சொல்றேன்" என்று ஒரு குரல் கேட்க அனைவரும் ஒருங்கே திரும்பி பார்த்தனர்.

அங்கே வாசல் நிலையில் சாய்ந்து நின்ற சாணக்கியன் கைகளை கட்டியபடி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவரும் அவனை நோக்கி திரும்ப அவனோ நடந்து கெளதம் அருகில் வந்தவன் அவன் தோளில் கை போட்டு, "இவன் தான் உண்மையான கிருஷ்ணா. இப்போ என் நண்பன் கெளதம் கிருஷ்ணா" என்று சொல்லி அவர்களிருவரினதும் தலைக்கு மேல் இன்னொரு குண்டை சாணக்கியன் தூக்கி போட்டான். ஏற்கனவே தந்தையின் ஈன செயலால் பேசமுடியாமல் கூனி குறுகி போன கயல் இன்னும் குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்து கௌதமை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

கிருஷ்ணா எப்படி கெளதம் கிருஷ்ணா ஆனான் என்று கதையை கூறிய சாணக்கியன் தனது நண்பனை இறுக்கி அணைத்துக் கொண்டான். நண்பனின் ஆறுதலான அணைப்பில் கௌதமுக்கு எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

சிறிது நேரத்தில் கண்களை துடைத்தபடி நண்பனை விட்டு கெளதம் விலக, விஷ்வா எழுந்துச் சென்று சாணக்கியனை அணைத்தவன், "என்ன மன்னிச்சிருங்க அண்ணா. இவ்வளவு நாள் உங்க கூட இருந்தும் உங்கள புரிஞ்சுக்காம தப்பா பேசிட்டேன்.எனக்கு அவன் நம்ம அப்பா என்று சொல்ல கூட அருவருப்பா இருக்கு" என்றவன் அவன் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதான்.

அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்ட சாணக்கியன், "விடு விஷ்வா... உன் நிலையில் நான் இருந்திருந்தா உன்ன விட மோசமா நடந்திருப்பேன். அம்மா கிட்ட இத எல்லாம் சொல்லாதே தாங்கமாட்டாங்க" என்றவனிடம், "இல்ல அண்ணா அம்மாக்கு தெரியணும்.அவங்க நம்ம ரத்தம் அண்ணா" என்ற விஷ்வா மேலே நின்றால் சித்ராவிடம் சொல்ல விடாமல் தன் மனதை சாணக்கியன் மாற்றுவான் என்று அறிந்து, "வா கயல்" என்று கயலை எழுப்பியவன் வெளியேற முதல் அதனை பார்த்துக் கொண்டிருந்த கௌதமை அணைத்து, "உங்க கிட்ட மன்னிப்பை தவிர வேறு வார்த்தைகள் பேச எனக்கோ என் குடும்பத்துக்கோ தகுதி இல்லை" என்று மட்டும் கூறியவன் விறு விறுவென வெளியேறினான்.

சாணக்கியனோ, "சொல்றத கேளுடா" என்று சொல்ல விஷ்வா அதை கேட்பதாக இல்லை. அவனை தடுக்க முடியாது என்று அறிந்த சாணக்கியனும் அப்படியே விட்டு விட்டான்.

கயலுக்கோ சொல்ல முடியாத உணர்ச்சிகளில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சுய நினைவே இல்லாமல் கேட்ட கதையிலேயே லயித்த அவள் மனம் அவளை பித்து பிடித்தது போல் உட்கார வைத்திருந்தது.

வீட்டுக்கு வந்த விஷ்வா சித்ராவை நாடிச் செல்ல முதல் அங்கிருந்த ஆளுயர மகாலிங்கத்தின் படம் அருவருப்பை கொடுக்க அதை முதலில் கழட்ட போனான். அதை பார்த்த சித்ரா, "என்னடா பண்ணுற?" என்றபடி அவன் கையை பிடிக்க, "அம்மா இந்த பொறுக்கி படம் நம்ம வீட்டுல வேணாம்" என்றவனை அறைந்திருந்தார் சித்ரா. அவனை அனல் தெறிக்க பார்த்து, "ஏன் டா இப்படி எல்லாம் பேசுற?" என்று ஆக்ரோஷமாக கேட்டவரிடம், "இவன் தான் அம்மா மலர் டீச்சரை கொன்றவன்" என்று கூற அதிர்ந்தவர், "என்னடா சொல்லுற" என்று அவன் ஷர்ட்டை பிடித்து கேட்க நடந்ததை அங்கிருந்த மித்ரா, வசுந்தரா உட்பட அனைவரிடமும் ஒன்று விடாமல் கூறியவன் குலுங்கி குலுங்கி அழுதான்.

அதை கேட்ட வசுந்தரா பயத்துடன் தன் வயிற்றிலிருந்த மகவை கண்ணீருடன் தடவி கொடுத்தாள்.

சித்ரா தலையில் இடி விழாத குறையாக அதிர்ந்து நிக்க, "இப்போ சொல்லுங்கம்மா இந்த பாவியோட போட்டோ இங்கே இருக்கணுமா?" என்று விஷ்வா கேட்க இல்லை என்று தலை ஆட்டியவாறு அதை அவரே கழட்டி வெளியே எறிந்தார். இதை கண்டு உள்ளேச் சென்ற மித்ரா கோபத்துடன் எண்ணை எடுத்து அந்த படத்தில் ஊற்ற கயல்விழியோ தீப்பெட்டியை எடுத்து சித்ராவிடம் நீட்டினாள்.

உயிருடன் எரிக்க முடியாத நரகாசுரனின் பொம்மையை எரித்து வெம்மையை தீர்ப்பது போல் தீப்பெட்டியை உரசிய சித்ரா அதை கீழே விழுந்து கிடந்த மகாலிங்கத்தின் படத்தில் எறிய அது திகு திகு என பற்றி எரிந்தது. சாணக்கியனுக்கும் கௌதமுக்கும் விடயத்தை கேட்டு சித்ராவுக்கு ஏதும் நடந்து விடும் என்ற பயம் சிறிது நேரம் கழித்து உருவாக சித்ராவை பார்க்க உடனே வீட்டுக்கு வந்தவர்கள் சித்ராவின் செயலால் நெகிழ்ந்து போய் நின்றனர்.

வாசலில் நின்றபடி வழிந்த கண்ணீரை துடைத்த சித்ரா இருவரையும் பார்த்து சிரித்தபடி, "வாங்க" என்று சொல்ல சாணக்கியனும் கௌதமும் அவரை அதிர்ச்சியுடன் நோக்கியபடி வந்தனர். சித்ராவின் நடவடிக்கையை பார்த்த பிறகு தான் அவரின் புதல்வர்கள் மூவருக்கும் தமது நேர்மை தவறாத குணம் எங்கிருந்து வந்தது என்று புரிந்தது.

நெகிழ்வுடன் தாயை அணைக்க வந்த சாணக்கியன் கையை தட்டி விட்டவர் பின்னால் வந்த கௌதமை இறுக்கி அணைத்து, "எப்படிப்பா இருக்க? என்னை மன்னிச்சிருப்பா" என்று சொல்ல, "நீங்க ஒண்ணும் பண்ணலையேம்மா" என்று கூறி அவனும் அவரை அணைத்திருந்தான்.

'பாருடா பாச பிணைப்பை' என்று மனதுக்குள் சாணக்கியன் நினைத்தபடி, "அம்மா" என்றழைக்க, "நீ பேசாத ராஸ்கல்" என்று அவனுக்கு திட்டியவர் மேலும், "என் கிட்ட சொல்லி இருந்தா அவனை விஷம் வச்சு கொன்று இருப்பேன்" என்றவரை ஆச்சரியமாக பார்த்தவன் அவரை இறுக்க அணைத்துக் கொண்டான்.

அந்த சந்தர்ப்பத்தில், 'இதென்ன கொலை கார குடும்பம்டா' என்று வசுந்தராவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் கணவன் செய்தது அவளுக்கு சரியாகவே பட்டது.

உள்ளே வந்தவர்களுக்கு சாப்பாடு போட்ட சித்ரா கௌதமுக்கு பூந்தி லட்டு கொண்டு வந்து கொடுத்தார். அவனும் சிரித்தபடி, "இன்னும் நினைவிருக்கா அத்தை" என்று சொன்னபடி கயலை பார்க்க அவளோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

'இவளுக்கு என்னாச்சு?படத்தை எரிக்க தீப்பெட்டி எல்லாம் கொண்டு வந்து கொடுத்தா... இப்போ இப்படி இருக்கிறா?' என்று யோசித்தவன் சாப்பிட்டு முடித்ததும், "கயல் உன் கூட பேசலாமா?" என்று கேட்க அவளும் பெரு மூச்சுடன் அவன் பின்னே வெளியில் சென்றாள்.

"என்னாச்சு கயல்?" என்று கேட்க அவனை பார்த்து ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

"என் கூட உனக்கு வாழ விருப்பமில்லையா ? உன் அப்பாவை கொன்றதால் என்ன பிடிக்கலையா?" என்று கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், "நாம பிரிஞ்சிரலாம்" என்று மட்டும் கூறி விட்டு உள்ளேச் செல்ல கெளதம் அதிர்ச்சியாய் நின்றவன் பின் சுதாரித்துக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.

அவனை பொறுத்தவரை அவள் தந்தையை கொன்றதால் தான் அவளுக்கு தன்னுடன் வாழ விருப்பமில்லை என்று நினைத்தான். ஆனாலும் சாணக்கியனை ஏற்றுக் கொண்டவள் தன்னை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரு கேள்வி மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த கேள்வியை ஒதுக்காமல் அலசினால் விடை கண்டு பிடித்திருப்பானோ என்னவோ.

ஆனால் பாவையவளின் நெஞ்சம் குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது. சிறிது நேரம் அவன் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டவளுக்கு இறந்த அவன் தாய் மலரின் முகமே அடிக்கடி வந்து போனது. அவனை பார்க்க முடியாமல் அவனுடன் பேச முடியாமல் அவள் தந்தையின் பாவம் அவளை வந்து சேர தந்தையின் தப்புக்கு தனக்கு தானே தண்டனை கொடுப்பதாக நினைத்து பிரிவை வேண்டியவளுக்கு தெரியவில்லை அது கௌதமுக்கும் தண்டனை தான் என்று.


ஒரு ஜோடி ஒன்று சேர, ஒரு ஜோடி சேர்ந்தும் சேராமல் தவறான புரிந்துணர்வால் ஒரே அறையில் தள்ளி இருக்க ஒரு ஜோடி யாரோ செய்த பாவத்துக்கு தனக்கு தானே தண்டனை கொடுத்து பிரிவை நாடி இருந்தது.
 
Top