ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 28

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 28

சாப்பிட்டு விட்டு அனைவரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். மித்ராவுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது நடந்ததை அறிய வேண்டிய அவா ஏற்பட எழுந்து விஷ்வா தூங்குவதை உறுதி செய்தவள் மெதுவாக அறையை விட்டு வெளியேறி பால்கனிக்கு வந்தாள்.

அவளின் அசைவில் விஷ்வாவும் விழித்துக் கொள்ள நடப்பதை கண்மூடி கேட்கலானான்.

கௌதமுக்கு அழைக்க அவனின் தொலைபேசியோ அணைக்கப்பட்டிருந்தது. இந்த கேஸை பற்றி எப்படியாவது அறிய ஆவல் கொண்டவள் நேரடியாகச் சென்று கௌதமிடம் கேட்க முடிவு செய்து மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்தவள் விஷ்வாவை எட்டி பார்க்க அவனோ தூங்குவது போல் இருந்தான்.

"அப்பாடா" என்றவள் மெதுவாக கதவை திறந்து வெளியேற விஷ்வாவின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. அவள் பின்னால் மெதுவாகச் சென்றவன் மித்ரா அக்கம் பக்கம் பார்த்துச் செல்லும் போது, 'ச்ச என்ன பொண்ணு இவ' என்று வெளிப்படையாகவே எரிச்சல் பட்டான்.

மித்ரா சென்று கெளதம் அறை கதவை தட்ட விஷ்வா தனது நெஞ்சில் யாரோ ஈட்டியால் குற்றிய வலியை அனுபவித்தவன் அதுக்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தனது அறைக்குள் சென்று கதவை சாத்தினான்.

அவனுக்கு மனம் முழுதும் வேதனை நிரம்பி இருந்தது. மித்ராவோ இதெல்லாம் அறியாமல், "சார் சார்" என்று கதவை தட்ட தூக்க கலக்கத்தில் கதவை திறந்த கெளதம் அதிர்ந்து நின்றான்.

"மித்ரா இந்த நேரத்தில் நீ எங்கே இங்கே ?" என்று கேட்க அவளோ, "சார் என்னாச்சுனு சொல்லுங்க... என் தலையே வெடிச்சிரும் போல இருக்கு" என்றாள். 'இவ அலப்பறை தாங்கல' என்று மனதுக்குள் திட்டியவன் அவளிடம், "அதுக்காக இந்த நேரத்திலயா? யாரும் பார்த்தால் என்ன நினைப்பாங்க ?" என்று அவளுக்கு கடிந்தவன், "சாணக்கியன் அந்த பிரேஸ்லெட்டை பார்த்து கொஞ்சம் அதிர்ந்தார். அப்புறம் எப்படி உங்க கிட்ட வந்ததுனு கேட்டார். நான் எதுவும் சொல்லல... அவ்வளவு தான் நடந்துச்சு. நீ இப்போ ரூமுக்கு போ" என்றான்.

"ஓகே சார்... அவ்வளவு தானா? நானும் நிறைய எதிர் பார்த்தேன்" என்றவள் மெதுவாக நடந்து அவளறைக்குள் சென்றாள். அவள் வருவதை உணர்ந்த விஷ்வா அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான்.

'உன்ன போய் நம்பினேன் பாரு' என்று மனதுக்குள் திட்டியவனுக்கு தூக்கம் வரவில்லை.

ஆனால் கீழே படுத்த மித்ரா நடந்த விஷயம் அறிந்ததில் இருந்து நன்றாக தூங்கி போனாள்.

அடுத்த நாள் விடிந்ததில் இருந்து விஷ்வாவுக்கு மட்டும் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்க நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு இருந்தான். மற்றையவர்கள் வீட்டை அலங்கரிப்பதில் ஈடு பட்டிருந்தனர்.

கயல் சித்ராவுடன் பலகாரம் சுட போக மித்ராவும் கௌதமும் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தனர். வேலையாட்கள் அலங்கரித்துக் கொண்டு இருந்தாலும் சும்மா இருக்க பிடிக்காமல் அனைவரும் மன சந்தோஷத்துக்காக அலங்காரத்தில் ஈடு பட்டிருந்தனர்.

ஏணியில் ஏறி நின்று கெளதம் பூக்களை சுவரில் கொழுவிக் கொண்டிருக்க அதை மித்ரா கீழிருந்து எடுத்து கொடுத்தாள். "சார் இந்த கலர் நல்லா இருக்கும்" என்றவளிடம் கெளதம், "இனி வீட்டுல என்னை சார் என்று கூப்பிடாதே. நீ என் தங்கச்சி போல... அதனால அண்ணா என்றே கூப்பிடு" என்று சொல்ல அவளும், "சரி அண்ணா" என்று சந்தோஷமாக தலையாட்டினாள்.

வசுந்தரா உடல் உபாதையால் கட்டிலில் படுத்து இருக்க சாணக்கியன் அவளுக்கு துணையாக கை வளைவுக்குள் அவளை வைத்திருந்தான்.

"பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் வசு?" என்று கேட்க அவளும், "நீங்களே சொல்லுங்க" என்றாள். யோசித்தவனுக்கு எந்த பெயரும் புலப்படாமல் போக, "அப்புறம் பார்க்கலாம்" என்றான்.

அன்று தாமதமாக எழுந்த விஷ்வாவுக்கு தலை வலிக்க தலையை பிடித்தவன் மாத்திரையை போட்டு விட்டு கீழிறங்க அங்கு அவன் கண்ட காட்சி அவன் தலை வலியை மிகைப்படுத்தியது.

மித்ராவும் கௌதமும் சிரித்தபடி வேலை செய்துக் கொண்டிருந்தனர். எரிச்சலடைந்தவன் இருவரையும் முறைத்தபடி சமயலறைக்குள் நுழைந்தான். "அம்மா காபி" என்று சத்தமாக கத்த, "ஏன்டா இப்படி கத்துற?" என்று கேட்ட சித்ரா அவனுக்கு காபி கலந்து கொடுத்தவர், "மித்ரா எங்கே?" என்று கேட்டார். "கண்டவளை பத்தி என் கிட்ட கேட்க வேணாம்" என்று சொல்லி விட்டு திரும்ப அங்கு அவன் குரல் கேட்டு வந்த மித்ரா வாசலில் அவன் பேசிய பேச்சை கேட்டு அதிர்ச்சியுடன் நின்றாள்.

'என்ன வார்த்தை அது?' என்று அவள் மனம் வெதும்ப அவனை முறைத்தாள்.

சித்ராவோ கோபத்தில், "என்ன வார்த்தைடா பேசுற?" என்று அவனை கடிய கயலும், "ஏன் நீ இப்படி எல்லாம் பேசுற?" என்று திட்டினாள்.

அவனோ கோபத்தின் உச்சியில் இருந்ததால் அவர்களின் வார்த்தை காதில் ஏறவில்லை. தன்னை முறைத்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன், 'தப்பெல்லாம் செஞ்சிட்டு என்ன முறைக்கிறியா?' என்று மனதுக்குள் திட்டியபடி அவளை முறைத்துக் கொண்டே தனது அறைக்குள் சென்றான்.

மற்றையவர்கள் முன்னால் விஷ்வா தன்னை தள்ளி வைத்து பேசியது பொறுக்காமல் அவனை தேடி அவன் அறைக்குள் பின்னாலேயே சென்றாள் மித்ரா.

உள்ளே காபி குடித்துக் கொண்டிருந்தவனிடம், "எதுக்கு என்ன பார்த்து அந்த வார்த்தை சொன்ன??" என்று கோபத்தில் எகிற அவனோ, "நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே" என்றான் சர்வ சாதாரணமாக.

"நான் என்ன கண்டவளா விஷ்வா?" என்று கேட்க அவனோ, "இதோட விடுறேன்னு சந்தோஷப்படு" என்றான். "அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்?" என்று அவள் ஆற்றாமையுடன் அலுத்துக் கொண்டே கேட்க அவளை இளக்காரமாக பார்த்தவன் காபியை குடிக்க தொடங்கினான்.

தன்னை கவனிக்காமல் அவன் உதாசீனத்தை பார்த்து மித்ராவுக்கு கோபம் வர அவன் கையில் இருந்த காபியை தட்டி விட்டாள்.

அவளது மூர்க்கத்தனமான செயலால் பொறுமை இழந்த விஷ்வா அவள் கன்னத்தில் அறைய அவள் நிலை குலைந்து போய் கன்னத்தை பொத்தியபடி அவனை பார்த்தாள்.

அவளை எரித்து விடுவது போல பார்த்துக்கொண்டே, "நானும் போனா போகுதுனு பொறுமையா இருக்கேன். ரொம்ப ஓவரா தான் போற... என்ன செஞ்சேன் என்று கேட்ட தானே? சொல்றேன் கேளு... நேற்று நான் தூங்கின பிறகு கெளதம் ரூமுக்கு போனது எனக்கு தெரியாதுனு நினைச்சியா?" என்று கேட்க அவன் கன்னத்தை அவள் கை மீண்டும் பதம் பார்த்தது.

அவன் கன்னத்தை பொத்தியபடி அதிர்ந்து அவளை நோக்க, "உண்மை தெரியாம பேசாதே... நான் எதுக்கு போனேன்னு தெரியுமா? உன் அண்ணன் தான் உன் அப்பாவை கொன்று இருக்கார். உங்கப்பா கையில உன் அண்ணனோட பிரேஸ்லெட் கிடைச்சது... அத கெளதம் சார் கிட்ட கண்டுபிடிக்க சொல்லி கொடுத்தேன்... ஆனா அவர் உன் அண்ணாவிடம் திருப்பி கொடுத்திருக்கார். அத பற்றி தான் கேட்க போனேன்." என்றவள் விம்மி விம்மி அழ அவளை சமாதானப் படுத்த முடியாதளவுக்கு விஷ்வா தலையில் இடி விழுந்திருந்தது. 'அண்ணா நீயா இப்படி ?' என்று அதுக்கு மேல் யோசிக்க முடியாமல் தடுமாறியவன், "நீ சொல்றது உண்மையா? இத நீ ஏன் என் கிட்ட சொல்லல?" என்று கேட்க, "சொன்னா அப்படியே நம்பிருவ பாரு. அதோட அன்று கூட என்னை நீ தப்பா தானே பேசுன?" என்றாள்.

விஷ்வாவுக்கு ஆயிரம் சந்தேகம் இருந்தாலும் முதலில் அவளுடனான பிரச்சனையை தீர்க்க வேண்டி இருந்தது.

"நான் எங்கடி உன்ன தப்பா பேசினேன்?" என்று கேட்க, "அன்று நீ என்ன அணைக்க வந்த நேரம் என் மனசுல இது தான் ஓடிக் கொண்டிருந்தது. என்னால அந்த நினைப்போடு உன்னோட இருக்க முடியாது என்று தான் உன்ன தள்ளி விட்டேன் அதுக்கு நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன் கூட இருந்தது சாதாரண விஷயமா என்று கேட்டியே?" என்று சொல்ல விஷ்வா குழம்பி போனான்.

"அப்படி நான் கேட்டதாக எனக்கு நினைவில்லையே" என்றவனுக்கு அப்போது தான் கூறிய வசனம் நினைவு வர, "லூசா நீ? உன்ன ஏமாத்தாம கல்யாணம் பண்றது சாதாரண விஷயமா தெரியுதா? என்று தான் கேட்டேன்" என்றான். அவள் அவனை நம்பாமல் பார்க்க, "உன் மேல சத்தியம் டி" என்று சொன்னான்.

"அத விடு ஆனா உனக்கு இப்போ என் மேல சந்தேகம் தானே?" என்றதும், "ஐயோ மன்னிச்சுக்கோடி...நீ வேற நான் தொட்டா அருவருப்பு அது இது என்று பேசிட்டு அவன் கூட சைகையில் பேசுறதும் இரவில எனக்கு தெரியாம பதுங்கி பதுங்கி அவன் ரூமுக்கு போறதும்னு... இப்படி இருந்தா சந்தேகம் வராம இருக்குமா?? முதலில உன் புருஷன் கிட்ட சொல்லு." என்றவனிடம், "சொன்னா நீ நம்புவியா?" என்று கேட்டாள்.

"கண்டிப்பா நம்பி இருப்பேன். அப்பா கைல ஊசி போட்ட தடம் இருந்திச்சு. எயார் இஞ்செக்ட் பண்ணி ஹார்ட் ஸ்ட்ரோக் வர வச்சு இருக்காங்க" என்றான் இறுகிய முகத்துடன். "இத நீ ஏன் என்கிட்டே சொல்லல ?" என்று அவள் மாறி கேட்க அவன் தடுமாறி போனான்.

அவளை சமாளிக்கும் பொருட்டு, "சரி சரி...இப்போ என்ன நடந்திச்சு என்று கண்டு பிடிக்கணும்." என்றபடி அவளை நெருங்கி அவள் கன்னத்தை தடவ அவன் கையை தட்டி விட்டவள், "சந்தேகபட்டுட்டு இப்போ காதலா ? கையை எடுடா" என்று திட்டியவள், "இந்த பிரச்சனைய கண்டு பிடிக்கும் வரைக்கும் என் பக்கத்தில வராதே" என்றபடி வெளியேற அவனோ மன வலியுடன் அறைக்குள் இருந்தான். சாணக்கியன் பல கொலைகள் செய்து பார்த்தவனாக இருந்தாலும் தனது தந்தையை அவன் கொன்றதை விஷ்வாவால் மன்னிக்க முடியவில்லை.அவனறிந்த வரையில் மகாலிங்கம் நல்லவராகவே இருந்தார். 'ஏன் அண்ணா இப்படி செஞ்ச?' என்று மனதுக்குள் புலம்பியவன் கீழே வர விரும்பாமல் அறைக்குள்ளேயே முடங்கினான்.

மித்ரா கௌதமை ரகசியமாக தனியா அழைத்துச் சென்றவள், "அண்ணா எனக்கு ஒரு விஷயம் கன்பார்ம் ஆச்சு... இந்த கொலை பண்ணியது சாணக்கியன் அத்தான் தான். விஷ்வாவும் ஊசி மூடி கண்டு பிடிச்சிருக்கான். ஊசி போட்டு ஹார்ட் ஸ்ட்ரோக் வர வச்சு இருக்கார்." என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், "அப்போ அரெஸ்ட் பண்ணிரலாமா?" என்று கேட்டான்.

"அது வந்து... அக்காவை நினைச்சா பாவமா இருக்கு.ஆனா நமக்கு கடமை தான் முக்கியம்... அரெஸ்ட் பண்ணுங்க" என்றாள்.

'அடிப்பாவி ... உனக்கு கொஞ்சமும் மூளை இல்லையா? எந்த ஆதாரத்தை வச்சு இப்போ அரெஸ்ட் பண்றதுனு கூட யோசிக்க மாட்டாயா? அது தான் எல்லா ஆதாரமும் அவன் கிட்ட இருக்குனு நினைப்பு கூட இல்லாத பச்சை புள்ளையா இருக்கியே..!' என்று மனதுக்குள் மித்ராவை பற்றி நினைத்தவன், "பண்ணிரலாம் பண்ணிரலாம் நீ போய் வேலையை பாரு" என்றவன் அவளை அனுப்பி விட்டு நிமிர அங்கு கயல் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

'இவ வேற' என்று யோசித்தவன் அவளை தாண்டிச் செல்ல முற்பட அவன் முன்னே தடுக்க கையை நீட்டியவள், "உங்க கூட பேசணும்" என்றாள்.

பெருமுச்சு விட்டவன் கைகளை கட்டியபடி பேசு என்று சைகை செய்தான்.

"அவ கூட என்ன பேச்சு?" என்று கயல் கேட்க கௌதமுக்கோ அப்போ இருக்கும் மனநிலையில் அவள் கேள்வி எரிச்சலாய் இருந்தது.

"நான் எவ கூட பேசுனா உனக்கென்ன? உன் வேலைய மட்டும் பாரு" என்று கண்டிப்பாக சொன்னவன் அவள் கையை தட்டிவிட்டு அவளை தாண்டிச் சென்றான்.

அவன் உதாசீனம் அவளை ஈட்டிக் கொண்டு கிழிக்க கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்தியப்படி அவன் முதுகை வெறித்து பார்த்தாள்.

அன்று மதியம் சாப்பிட கூட விஷ்வா கீழிறங்கவில்லை. மித்ரா சமாளித்தும் அவன் வராதது நெருடலாக இருக்க சித்ரா போய் அவனை வலுக்கட்டாயமாக கீழே அழைத்து வந்தார். சாணக்கியனின் சந்தோஷமான மன நிலையை கெடுக்க விரும்பாத கெளதம் மித்ராவின் சந்தேகத்தை பற்றி அவனிடம் எதுவும் கூறவில்லை.

விஷ்வா அழுதழுது கண்கள் சிவந்து சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான்.

"என்னாச்சு விஷ்வா கண் சிவந்திருக்கு?" என்று சாணக்கியன் கேட்க அவனை பார்க்காமல் முகத்தை திருப்பினான். அவன் நடவடிக்கை யாருக்கும் உவப்பாக இல்லை.

"டேய் விஷ்வா அவன் தான் கேட்கிறானே பதில் சொல்லாமல் என்னடா இது புது பழக்கம்?" என்று சித்ரா கேட்க அவரை பார்த்து முறைத்தவன், "எனக்கு பசிக்கல" என்று எழுந்துச் செல்ல முயன்றான். கௌதமோ மனதுக்குள், 'வசூல்ராஜா பிரச்சனையை தொடங்க போறான்... இப்போ யார் யார் தல உருள போகுதோ?' என்று நினைத்தவன் அவனின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்தான். மித்ராவுக்கும் விஷ்வாவை நினைத்து பட படப்பாக இருந்தது.

சாப்பாட்டு மேசையிலிருந்து எழும்பி போக போனவனின் தோளில் எழும்பி வந்து கை வைத்த சாணக்கியன், "என்ன ஆச்சு?" என்று கேட்க சாணக்கியனை திரும்பி பார்த்து முறைத்தவன் அவன் கையை தட்டி விட்டுச் செல்ல போக சித்ரா விஷ்வா முன்னாடி வந்து நின்றார்.

"நானும் பார்க்கிறேன் ரொம்ப ஓவரா தான் போற... காலைல மித்ராவை மோசமா பேசின. இப்போ இந்த மாதிரி நடந்துக்கிற... என்னடா இதெல்லாம்? அவன் அக்கறையில தானே கேட்கிறான். சொல்லி தொலையேன்..." என்று கேட்க விஷ்வாவின் பொறுமை காற்றில் பறந்தது.

"பொல்லாத அக்கறை... அடுத்து அவன் என்னையும் கொல்லுவான் நீங்க கை கட்டி அத பார்த்துட்டு நில்லுங்க" என்று சாணக்கியனுக்கு மரியாதை இல்லாமல் ஆக்ரோஷமாக பேச அனைவரும் அதிர்ந்தனர்.

ராமர் லட்சுமணனாக இருந்தவர்கள் இப்பொது முறுக்கிகொண்டு நிற்பது சித்ராவுக்கு அதிர்ச்சியாக இருக்க அவர் கண்களில் கண்ணீருடன், "ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?" என்று விஷ்வாவை பார்த்து கேட்டார்.

அவன் பேச்சில் அதிர்ந்த சாணக்கியனும், "டேய் என்னடா ஆச்சு உனக்கு?" என்று அவன் முன்னே வந்து கேட்க, "இன்னும் என்னடா ஆகணும்? ஏன்டா அப்பாவை சாகடிச்ச ?" என்று சாணக்கியன் சட்டையை பிடித்து விஷ்வா கேட்க இதனை ஏற்கனவே எதிர்பார்த்த கௌதமை தவிர மீதி அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

உடனே கயல், "அண்ணா என்ன பேச்சு பேசுறீங்க?" என்று எகிற சாணக்கியன் சட்டையில் இருந்து கையை எடுத்தவன், "ஆமா என்னையே எல்லாரும் குறை சொல்லுவீங்க... அப்பாக்கு ஹார்ட் ஸ்ட்ரோக் வந்திச்சு அது இயற்கையா வரல, அத ஊசி போட்டு உருவாக்கி இருக்காங்க... அந்த காரியத்தை செய்தது இதோ நிக்கிறார் இவர் தான்." என்று சாணக்கியனை காட்டியவனிடம், "அதுக்கு உன்னிடம் ஆதாரம் இருக்கா?" என்று சாணக்கியன் கேட்டான்.

"அது தான் உன் நண்பன் ஆதாரத்தை உன் கிட்டயே கொடுத்துட்டானே... ஆனா உன் மனசுக்கு தெரியும் அது நீ தான் என்று. இனியும் நடிக்காத." என்று விஷ்வா சீறினான். சித்ராவோ அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைத்தையும் அதிர்ந்து போய் பார்த்தார். சாணக்கியனுக்கு கொலை செய்வது சாதாரணம் என்று அறிந்தவருக்கு விஷ்வா சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து சாணக்கியனை நோக்கிச் சென்றவர், "இவன் சொல்றது உண்மையா ப்பா? சொல்லுப்பா உண்மையா?" என்று கேட்க அவன், "அது வந்தும்மா..." என்று தொடங்க போனவனின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்தவர், "இப்போ சொல்லு" என்று கண்ணீருடன் கேட்டார். அவனுக்கோ வார்த்தை வராமல் தொண்டை அடைக்க ஆம் என்று தலை ஆட்டினான்.

அவன் பதில் எல்லாருக்கும் தலையில் இடியை இறக்கியது போல இருக்க, "டேய் ..." என்று தொடங்க போன கௌதமை ஒற்றை பார்வையில் அடக்கியவன், "என்னை மன்னிச்சிருங்கம்மா" என்று சொல்ல அவனை பார்த்து, "யாருக்குடா உன் மன்னிப்பு வேணும்?? தயவு செய்து என் கண் முன்னே நிற்காதே... வெளிய போ" என்று ஆக்ரோஷமாக கத்தினார். கத்தியவர் நிலையில்லாமல் விழ போக அவரை ஓடி வந்து அணைத்துக் கொண்ட கயலும் மித்ராவும் சாணக்கியனை கேவலமாக நோக்க அவனும், "சரி நான் போறேன்" என்றவன் வெளியேற பின்னால் வந்த கெளதம் அவன் தோள் மேல் கை போட்டு, "வாடா போகலாம்" என்றவன் சித்ராவை நோக்கி திரும்பி, "உங்க கணவர் சாக நானும் ஒரு காரணம்" என்றவன் அவனுடன் சேர்ந்து நடந்தான். இருவரும் மகாலிங்கம் பற்றிய உண்மையை சொல்லி அவர்களை இன்னும் கூனி குறுகி போக வைக்காமல் வீட்டை விட்டு வெளியேறினர். கௌதமின் செயல் அனைவர்க்கும் அடுத்த அதிர்ச்சி என்றால் மித்ராவுக்கோ பேரதிர்ச்சியாக இருந்தது.

வசுந்தரா இதுவரை நடந்த அதிர்ச்சியில் நிலை கொள்ள முடியாமல் மயங்க உடனே விஷ்வா அவளுக்கு முதலுதவி செய்து ஆசுவாசப் படுத்தினான். அதனை திரும்பி பார்த்த சாணக்கியன், 'அவன் பார்த்துக்கொள்வான்' என்று மனதுக்குள் நினைத்தபடியே வெளியேறி தனது கெஸ்ட் ஹவுஸுக்கு கௌதமுடன் வந்து தங்கினான். இந்த கலவரத்தினால் அடுத்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வளைகாப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

யாருக்கும் ரத்து செய்த காரணத்தை தெரிவிக்காமல் குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்குள் மருகிக் கொண்டிருந்தனர்.

இருவரையும் தண்டிக்க யாரும் விரும்பவும் இல்லை, அதுக்கு அவர்களிடம் ஆதாரமும் இருக்க வில்லை. அதே நேரம் மன்னிக்கும் நிலையிலும் யாரும் இல்லை. மகாலிங்கம் இழப்பில் உடைந்து போனவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

அடுத்தநாள் எழுந்த சாணக்கியனிடம் கௌதம், "பேசாம உண்மையை சொல்லிருவோம்டா" என்றான். அதுக்கு அவன், "இல்லடா...அப்பா மேல அம்மா நல்ல மரியாதை வச்சு இருக்காங்க... இப்போ நான் சொன்னா அத கண்டிப்பா அவங்களால தாங்க முடியாது. குற்ற உணர்விலேயே செத்துருவாங்கடா...இப்போ நான் செத்துக் கொண்டிருக்கிற போல..." என்றவனை அணைத்த கெளதம், "நீ ஏன்டா கவலை படணும்? நீங்க யாரும் எந்த தப்பும் பண்ணலையே" என்றான்.

இருவரும் வெளியில் இருந்த கதிரையில் இவ்வாறே பேசிக் கொண்டிருந்த போது ஒரு அரசாங்க ஜீப் அவர்கள் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வசுந்தரா முறைத்தபடி சாணக்கியனை நோக்கி வந்தாள். 'ஐயோ இப்போ என்ன நடக்க போகுதோ?' என்று பயந்த கெளதம் வலுக்கட்டாயமாக அவளை பார்த்து சிரிக்க அவனையும் முறைத்தவள் சாணக்கியன் முன்னால் கை கட்டி நின்று அவனை மேலிருந்து கீழ் பார்த்தாள்.

கௌதமோ சாணக்கியன் காதுக்குள், "உன் பாடு சரி..." என்று சொல்ல, "சும்மா இருடா" என்றவன் வசுந்தராவை அசராமல் பார்த்தான்.

"நான் யார் என்று தெரியுதா எம்.பி சார்?" என்று வசுந்தரா கேட்க "நல்லாவே தெரியுது... கலெக்டர் வசுந்தரா சாணக்கியவர்மன் தானே!" என்றான் அழுத்தமாக. "டேய், உனக்கு ரொம்ப தான் தைரியம்டா" என்ற கௌதமை வசுந்தரா முறைத்து பார்க்க, "எனக்கு வேலை இருக்கு மச்சி நான் வரேன்" என்றபடி அங்கிருந்து நழுவியவன் தள்ளி போய் ஒரு கதிரையில் இருந்தான்.

"கர்ப்பமான பொண்டாட்டிய இப்படி தனியா தவிக்க விட்டு வர்றது தான் உங்க பழக்கமா சார் ?" என்று நேரடியாக கேட்க புருவம் உயர்த்தி அவளை ஆச்சரியமாக பார்த்தவன், "வேற்று ஆட்களை கொலை பண்ணினாலே என் பொண்டாட்டிக்கு அருவருப்பா இருக்கும்,அப்பாவை கொலை பண்ணின மகனை கண்டிப்பா என் பொண்டாட்டி ஏற்றுக் கொள்ள மாட்டா." என்று தழு தழுத்த குரலில் கூறியவனிடம், "தப்பு பண்ணினவங்கள தானே கொலை பண்ணி இருக்கீங்க... அப்போ உங்கப்பா கண்டிப்பா மன்னிக்க முடியாத தப்பு பண்ணி இருப்பார். அது என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியல...ஆனா என் புருஷன் தப்பு பண்ண மாட்டார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கு" என்றவளை அடுத்த வார்த்தை கூற விடாது இழுத்து அணைத்தவன் அவள் நெற்றி கன்னம் மூக்கு இதழ்கள் என தொடர்ச்சியாக முத்த மழை பொழிந்தான்.

தாய்,தம்பி, தங்கை என யாரும் தன் மேல் வைக்காத நம்பிக்கையை தனது மனைவி வைத்திருந்தது கர்வமாகவும் அதே சமயம் இன்பமாகவும் இருந்தது.

இருவரினதும் நெருக்கத்தை தொலைவில் இருந்து பார்த்த கௌதமுக்கோ சங்கடமாக போக எழுந்து உள்ளே போக ஆயத்தமானவனை, "டேய் இங்கே வாடா" என்று சாணக்கியன் அழைக்க அவ்விடத்தில் வெட்கப்பட்டபடி தலையை கோதிக் கொண்டே வந்து சேர்ந்தான் கெளதம். "உங்க நண்பன் தான் என்னை தனியா விட்டு வந்தா நீங்க கூட சொல்ல மாட்டீங்களா?" என்று சாணக்கியன் அணைவிலேயே நின்றபடி வசுந்தரா கேட்க கௌதமோ தடுமாற தொடங்கினான்.

"விடுடி அவன் பாவம்" என்ற சாணக்கியன், "வேலைக்கு போகலயா?" என்று கேட்க தனது கைப்பையிலிருந்த காப்பை எடுத்து கொடுத்தவள், "போட்டு விடுங்க" என்றாள்.

அவள் செயலில் எப்படி நடக்க வேண்டிய வளைகாப்பு என்று கவலை கொண்டவன் அதை வாங்கி ஒவ்வொன்றாக அவள் கைகளில் அவள் கண்களை பார்த்தபடி அணிவிக்க அதை போனில் அழகாக படம் பிடித்த கெளதம், "ஷூட்டிங் முடிஞ்சு" என்றான். அதை கேட்டு இருவரும் சிரிக்க அதையும் போட்டோ எடுத்துக் கொண்டான். சாணக்கியன் வசுந்தராவிடம், "ரொம்ப தூரம் இங்கே ட்ராவல் பண்ணாதே... ஏதும் என்றா கால் பண்ணு. நான் வரேன்" என்றான். உடனே அவள், "நானும் இங்கேயே தங்கட்டுமா?" என்று கணவன் கூட இருக்க ஆசைப்படும் கர்ப்பிணியாய் கேட்க, "இல்ல வசு ... உனக்கு அங்க நிறைய பேர் இருக்காங்க... இந்த நிலமையில உன்ன நல்லா பார்த்துக்கணும். நான் வேலை விஷயமா போனா நைட் லேட்டா தான் வருவேன்...கௌதமும் வேலைக்கு போயிருவான். அப்போ யார் உன்ன இங்க பார்த்துக்கிறது? அதனால அங்கேயே இரு... ஏதும் வேணும்னா கூப்பிடு நான் வருவேன்." என்றான்.

அவளும் அரை குறை மனதுடன் கணவன் சொல்லை மதித்து அங்கிருந்து சென்றாள்.


இப்படியே நாட்களும் உருண்டோட ஒரு நாள் கயல் மருத்துவமனை அதிகாரியாக வார்டுகளை சுற்றி பார்க்க வந்தவள் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளியை கண்டு அதிர்ந்தாள்.
 
Top