ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 23

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 23

அவனை கண்டு அதிர்ந்த கயல்விழி, 'நான் நேற்று சும்மா தானே சொன்னேன்... உண்மையாவே வந்து விட்டானே..!' என்று யோசிக்க கௌதமோ, 'இவன் யாரு புது பீசா இருக்கானே?' என்று யோசித்தான். சாணக்கியனோ அவனை புருவம் சுருக்கி பார்க்க மகாலிங்கத்துக்கோ நெஞ்சு வலிப்பது போல் உணர்ந்தார். 'இவன் இன்னும் சாகவில்லையா?' என்று யோசித்தார். விஷ்வாவோ, 'நம்ம வீட்ல இப்போ இருக்கிற பிரச்சனை பத்தாது என்று இவன் வேற எக்ஸ்ட்ரா பிட்டிங்' என்று நினைத்துக் கொண்டான்.

கிருஷ்ணாவை அணைத்த சித்ரா, "மலர் எங்கப்பா? குழந்தை பிறந்திடுச்சா?" என்று கேட்க புதிதாக வந்தவன் முகம் வேதனையை பூசிக் கொண்டது.

"இல்ல ஆன்ட்டி அவங்க உயிரோட இல்லை... இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க..." என்று தேம்பி தேம்பி அழ, 'உலகமாக நடிப்புடா சாமி' என்று கௌதமும் சாணக்கியனும் நினைத்துக் கொண்டனர்.

அதை கேட்டு மகாலிங்கத்தின் ரத்த அழுத்தம் பயத்தில் தாறுமாறாக எகிற தொடங்கியது. சித்ராவோ அதை கேட்டு, "மலர்..." என்று கூக்குரலிட்டபடி மயங்கி சரிய அவரை நோக்கி ஓடி வந்த சாணக்கியன் சித்ராவை பிடிக்க முதல் அருகில் நின்ற கிருஷ்ணா ( புதிதாக வந்தவனை அப்படியே அழைப்போம் ) பிடித்திருந்தான்.

கயல் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்துவர அவரை தண்ணீர் தெளித்து கிருஷ்ணா எழுப்பியதும் அவர் விம்மி விம்மி அழ தொடங்கினார். மகாலிங்கத்துக்கு கால்கள் உதற பயத்தில் மெதுவாக நழுவி தனது அறைக்குள் போய் தஞ்சமடைந்தார்.

அவரை கவனித்த கெளதம் மனதுக்குள், 'ஷ்...இதுவும் நல்லா தான் இருக்கு.' என்று நினைத்துக் கொண்டான். சித்ரா ஆசுவாசமடைந்ததும் மெதுவாக எழுந்த கிருஷ்ணா அருகில் நின்ற சாணக்கியனை இறுக அணைத்து, "எப்படிடா இருக்க?" என்றும் கேட்க அவன் அணைப்பில் சாணக்கியனுக்கே மூச்சு முட்டியது. கஷ்டப்பட்டு அவனை தன்னிலிருந்து பிரித்து எடுத்தவன் அவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, "நல்லா இருக்கேன் நீங்க?" என்றான்.

"என்னடா புதுசா நீங்க என்று சொல்ற? உன் கிருஷ்ணாடா" என்று சொல்ல அவ்வளவு நேரமும் சாணக்கியன் அனுப்பிய ஆளாக இருக்குமோ என்று சந்தேகப்பட்ட கௌதமுக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது.

அதை கேட்டு கிருஷ்ணாவை நோக்கி மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தினான் சாணக்கியன். அடுத்தது கிருஷ்ணா இறுக்கி அணைத்தது விஷ்வாவை அவன் அணைப்பில் விஷ்வாவும் மூச்சு திணறினான். எலும்புகள் நொறுங்குமளவுக்கு அணைத்தவன், "எப்படிடா இருக்க?" என்று கேட்க, "நல்லா இருக்கேன்." என்று மட்டும் பதிலுரைத்தான்.

அவனை அணைத்தபடியே, "கல்யாணமாமே ?" என்று கிருஷ்ணா கேட்க, 'இவனுகெப்படி தெரியும்?' என்று யோசித்த விஷ்வா, ஆம் என்று தலையாட்ட. அவனை மெதுவாக விட்டபடி, "உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு கிழமை இங்கே தான். அதுக்கு பிறகு அமெரிக்கா போயிருவேன்" என்றபடி மேலும் விஷ்வாவிடம், "எங்கே என் கயல்? கயலை காலேஜ்ல மீட் பண்ணினேனே சொல்லலையா?" என்று கேட்க அங்கிருந்த அனைவர்க்கும் தூக்கிவாரி போட அனைவரும் கயல் நின்ற திசையை திரும்பி பார்த்தனர்.

விஷ்வாவின் பார்வையின் திசையில் கிருஷ்ணாவும் திரும்ப கயலுக்கு இதயம் நின்று துடித்தது. 'நான் சொன்னதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்?' என்று அதிர்ச்சியுடன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, "வாவ்...கயல்..." என்றவன் கைகள் இரண்டையும் அணைப்பது போல் விரித்துக் கொண்டே அவளை நோக்கி சிரித்தபடி நடக்க தொடங்கினான். எங்கே தன்னை அணைத்து விடுவானோ என்று பயந்தவள் அதிர்ந்து அவனை பார்க்க... அவன் அவளை நெருங்கிய சமயம் கெளதம் வந்து அவனை முறைத்து பார்த்தவாறு அவள் முன்னால் அவளை மறைத்தபடி நின்றான் .

உடனே கிருஷ்ணா கோபத்துடன், "யாரு சார் நீங்க? என் கயலை பார்க்க விடாம மறைச்சிட்டு நிக்கிறீங்க?" என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் கிருஷ்ணாவை கூர்ந்து பார்த்து கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்றான். கிருஷ்ணாவும் விடாமல் கௌதமின் இரு பக்கமும் எட்டி எட்டி பார்க்க கயலோ அவன் பின்னால் நின்று தன்னை மறைத்துக் கொள்ள வெகுவாக போராடினாள்.

கயலோ கௌதமை பின்னாலிருந்து நெருங்கி, "ஐயோ என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச கௌதமுக்கு கயலை சீண்ட ஒரு வழி கிடைத்தது. கொடுப்புக்குள் சிரித்தவன் அவனை திடீரென்று அணைத்து, "ஹாய் கிருஷ்ணா" என்றான்.

அவன் அணைப்பில் புதிதாக வந்த கிருஷ்ணாவே ஒரு கணம் அதிர்ந்து போனான்.

"நீங்க?" என்று தடுமாறியபடி கிருஷ்ணா கேட்க, "நான் சாணக்கியனோட நண்பன்" என்று சொல்ல கடுப்பான கயல் அவன் இடுப்பில் கிள்ள, "வலிக்குதுடி" என்றபடி கெளதம் விலகி, "இது தான் உங்க கயல்" என்று மேல் நாட்டு பாணியில் கைகளை நீட்டி காட்டினான். கயலோ கௌதமை முறைத்தபடி நின்றிருக்க கௌதமை பார்த்து சினேகமாக புன்னகைத்த கிருஷ்ணா கயலின் தாலியையும் நெற்றி வகிட்டில் குங்குமத்தையும் பார்த்து அதிர்ந்தவன், "கயல் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்டான்.

ஆமா என்று தலையாட்டியவளிடம், "ஏன் கயல் என்ன மறந்த? அன்னைக்கு காலேஜ்ல பார்த்தப்போ கூட உன் வீட்ல வந்து பேச சொன்னியே" என்று கேட்க கயலுக்கோ தர்ம சங்கடமாகவும் அதிர்ச்சியாகவும் போனது.

'நான் சொன்ன பொய் இவனுக்கு எப்படி தெரியும்?' என்று மீண்டும் மீண்டும் யோசித்தவள் மெதுவாக கௌதமை பார்க்க அவனோ கிருஷ்ணாவின் கூற்றில் வந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு நெற்றியில் புருவ முடிச்சுடன் நின்று இருந்தான்.

'பொண்டாட்டி கூட இன்னொருத்தன் இப்படி பேசுறான். இவன் அத ரசிச்சிட்டு நிற்கிறான்' என்று மனதுக்குள் கௌதமுக்கு திட்டியவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், "அம்மா" என்று சித்ராவை அழைக்க அவர் நிலைமை உணர்ந்து அவ்விடம் விரைந்தவர், "கிருஷ்ணா அவ கல்யாணம் ஏதோ எதிர் பார்க்காம நடந்திடுச்சு... உனக்கு நல்ல பொண்ணா பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று சமாளிக்க, "உங்களுக்கே தெரியும் ஆன்ட்டி எனக்கு கயல்னா எவ்வளவு உயிர் என்று" என கண்ணீர் வடித்தான்.

மேலும், "எனக்கு கயல் தான் வேணும்" என்று குழந்தை போல் அழுதவனை பார்த்து அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

'யாரடா நீ? இப்படி பெர்போம் பண்ற? உன் நடிப்பை பார்த்து எனக்கு என் மேலயே நான் உண்மையாவே கிருஷ்ணா தானா என்று சந்தேகமா இருக்குடா...' என்று நினைத்த கெளதம், "அத்தை நீங்க போங்க. களைப்பா இருக்கும் ரெஸ்ட் எடுங்க... நான் இவரை பார்த்துக்கிறேன்" என்று அவரை அனுப்ப விஷ்வாவும் கல்யாணதுக்காக முடி வெட்ட கிளம்பி விட்டான்.

"வாங்க கிருஷ்ணா நாம இருந்து பேசலாம்" என்று அவன் தோளில் கை போட்டு அங்கிருந்த சோபாவில் அமரும் பொருட்டு சோபாவை நோக்கி நடந்தவன் மற்றைய கையால் கயலை இழுத்துக் கொண்டு அவ்விடத்தை அடைந்தான். சாணக்கியன் அனைத்தையும் பார்த்து தோளை உலுக்கி விட்டு தன் அறைக்குள் தஞ்சம் புகுந்து விட தன் ஒரு பக்கத்தில் கிருஷ்ணாவை இருப்பாட்டியவன் மற்றைய பக்கத்தில் கயலை இருக்க சொல்ல அவளோ கையை உதறி திமிறினாள். "இரு" என்று கர்ஜிக்க அவளோ அவன் கோபத்தில் பயந்தபடி கெளதம் அருகே உட்கார்ந்தாள்.

"கிருஷ்ணா, நான் தான் இவங்க புருஷன் கெளதம்" என்று கூறியவனை சட்டை செய்யாமல் கயலை ஏக்கமாக பார்த்து, "என்ன மறந்துட்டியா கயல்?" என்று கிருஷ்ணா கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள். கெளதம் இல்லாவிட்டால் கிருஷ்ணாவை இரு உதை உதைத்திருப்பாள். ஆனால் கௌதமிடம் கிருஷ்ணாவை பிடிக்கும் என்று சொல்லியதை தொடரும் பொருட்டு அமைதியாகவே இருந்தாள்.

அவள் அமைதியை கூர்ந்து கவனித்த கௌதமோ கேலியாக புன்னகைத்தபடி, "ச்சீ இல்ல சார் அவளுக்கு உங்க நினைவு தான் எப்போதும்... என்னை விவாகரத்து பண்ணிட்டு உங்கள கல்யாணம் பண்ணனும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பா..." என்றவன் தன்னை முறைத்தவாறு கைகளை பிசைந்துக் கொண்டிருந்த கயலின் கையை உள்ளங்கையை எடுத்து காட்டி , "இங்கே பாருங்க இதுல கூட உங்க பெயரை தான் நேற்று மருதாணி போட்டா" என்று சொல்ல அவளுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

அவளை பார்த்தபடி அவள் கையிலிருந்த மருதாணியில் தனது விரல்களால் கோலம் போட்டு, "கிருஷ்ணா" என்ற பெயரை எழுதி காட்டினான். அவன் மென்மையான தொடுகை கூட அவளை பித்தம் கொள்ள வைக்க அந்த உணர்ச்சிகளை அடக்கியப்படி பல்லை கடித்துக் கொண்டு இருந்தாள். அவன் காட்டிய வழியில் பார்த்தவள்,

அதில் இலகுவில் கண்டு பிடிக்க முடியாத வகையில் கிருஷ்ணா என்ற பெயர் ஒளிந்திருந்ததை அப்போது தான் கண்டுக் கொண்டாள்.

'அடப்பாவி இது தான் நேற்று அந்த பொண்ணு கிட்ட ரகசியமா சொன்ன விஷயமா?' என்று மனதுக்குள் கேட்டு அவனை முறைக்க அவனோ சிரித்தபடி கிருஷ்ணாவை பார்த்தான்.

உடனே கிருஷ்ணா கௌதமை தாண்டி அவள் கையை பற்றி, "கயல் உனக்கு என் மேல அவ்வளவு காதலா?" என்று கேட்க அதில் அதிர்ந்தவள் கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்.

கயல் கையை கிருஷ்ணா பிடித்ததில் கௌதமுக்கு எழுந்த கோபம் அவள் அவனிடம் இருந்து கையை உருவியதில் தானாக அணைந்தது.

உடனே அவளை கிண்டல் பண்ண கௌதமுக்கு எண்ணம் துளிர்க்க அவளிடத்தில் குனிந்து, "உன் ஆள் தானேடி ஏன் டி உருவி எடுத்த?" என்று கேட்க அவனை முறைத்தவள் அவள் கையை உருவியதால் அவளை சோகமாக பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம், "இதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கப்புறம்" என்றாள் கௌதமை வெறுப்பேத்த, கிருஷ்ணாவின் சோக விழிகள் அவள் கூறியதை கேட்டு சந்தோஷத்தை பூசிக் கொள்ள கௌதமின் விழிகள் ரௌத்திரத்தை ஏந்திக் கொண்டது.

'என்னையே வெறுப்பேத்துறியாடி? இவனை வச்சே உன்ன என்ன பண்ண போறேன்னு பாரு' என மனதுக்குள் கருவிய கெளதம், அவளுக்கு சளைக்காமல், "ஆம் கிருஷ்ணா நாங்க விவாகரத்து பண்ண முடிவெடுத்திருக்கிறோம்" என்று சொல்ல அவன் பேச்சில் வந்த வலியை மறைத்தபடி அவள் சிரித்துக் கொண்டிருந்தாள் .

"அப்படியா கயல்? கேட்க சந்தோஷமா இருக்கு..." என்றவனை கௌதமுக்கு அடிப்பதா உதைப்பதா என்று தெரியவில்லை.

"எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது" என்று கயல் சொல்லி விட்டு அறையை நோக்கி விறு விறு என்று ஓடிச் சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்தவன் பெரு மூச்செடுத்தபடி கிருஷ்ணாவை பார்க்க அவனோ, "நான் எங்க தங்கட்டும்?" என்று கேட்க கெளதம் தான் அவனை அழைத்துச் சென்று ஒரு அறையை காட்ட வேண்டியதாகி போனது. "இங்க ஒருத்தனும் ஒழுங்கில்லை... நானே வீட்டு காரன் போல எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்கு..." என்று சலித்தவன் சாணக்கியன் அறைக்குள் வந்து கட்டிலில் படுத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தவனை முறைத்து பார்த்தான்.

அவனோ நிதானமாக பார்த்து, "என்னடா முறைப்பு?" என்று சாணக்கியன் கேட்க, "உன் ஆளுக்கு ரூம் கூட காட்ட மாட்டியா?" என்று கெளதம் கேட்டான். "எது? என் ஆளா ? வசு வந்திருக்காளா ?" என்று கேட்க "நடிக்காதடா" என்று சீறிய கெளதம், "அந்த கிருஷ்ணா என்ற பெயரிலே ஒருத்தன் வந்திருக்கானே அவன் நீ செட் பண்ணின ஆள் தானே?" என்று கேட்க.

"நானா? எதுக்கு செட் பண்ணனும்? அது உன் ஆள் என்று நான் நினைச்சேன்" என்று அதிர்ச்சியுடன் சொல்ல, "என்னடா சொல்லுற?" என்று கௌதமும் சேர்ந்து அதிர்ந்தான். "இரு அவனை ரெண்டு தட்டு தட்டி என்ன விளக்கம் என்று கேட்டு வர்றேன்" என்று வெளியேற முயற்சித்த கௌதமை தடுத்த சாணக்கியன், "அவசரப்படாத... எதுக்கு வந்திருக்கான்னு கண்டு பிடிக்கணும்... கொஞ்ச நாள் விட்டு பிடிப்போம்" என்றதும் சாணக்கியனின் விட்டு பிடிக்கும் யுக்தி பற்றி அறிந்தவனுக்கு அவன் மேல் கொஞ்சமும் சந்தேகம் வரவில்லை.

அறைக்குள் சென்ற மகாலிங்கம் தன் இரு அடியாட்களையும் தொடர்பு கொள்ள போன போது தான் நினைவுக்கு வந்தது அவர்கள் இருவரையும் நான்கு மாதங்களாக காணவில்லை என்று.

"எங்கடா போய் தொலைஞ்சீங்க?" என்று எரிச்சல் பட்டவர் பதட்டத்துடன் பூனை போல அங்கும் இங்கும் அறைக்குள் நடந்தார்.

சாப்பிட கூப்பிட்ட சித்ராவிடம், "பசிக்கல" என்றவரை சித்ரா பலவந்தமாக அழைத்து சாப்பிட இருத்தினார்.

அப்போது தான் குளித்து வந்த கிருஷ்ணா அவர் முன் அமர அவருக்கு தூக்கி வாரி போட்டது. குனிந்தபடி சாப்பிட்டவரிடம், "ஏன் அங்கிள் என்ன பார்த்து வெட்கப்பட்டு குனிஞ்சிட்டே இருக்கீங்க?" என்று அவன் கேட்க பயத்துடன் நிமிர்ந்தவர் சிரிப்பு வராமலே சிரித்து விட்டு மீண்டும் குனிந்துக் கொண்டார். அவர் நிமிரும் வரை அவரை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவரின் செய்கையால் சத்தமாக சிரித்து விட்டு சித்ராவிடம், "சாப்பாட்டை போடுங்க ஆன்ட்டி" என்றான்.

மகாலிங்கத்துக்கு சாப்பாடு நெருப்பை விழுங்குவது போல் இருந்தது. பகட்டுக்காக நான்கு வாய் சாப்பிட்டவர் கையை கழுவி விட்டு விறு விறுவென எழுந்து உள்ளேச் சென்றார். கிருஷ்ணாவோ சித்ராவுடன் பேசியபடி சாப்பிட்டவன் அவருடனேயே சமையலறையில் இருந்து அரட்டை அடிக்க தொடங்கினான்.

சமையலறைக்குள் வந்த கயல் அங்கு கிருஷ்ணா அமர்ந்திருப்பதை பார்த்து, 'ஐயோ இது இங்கேயா இருக்குது?' என்று யோசித்தவள், அப்படியே யு டர்ன் அடித்து வெளியேற கிருஷ்ணாவோ, "கயல் ...கயல்" என்றபடி வந்தவன் கையிலிருந்த பூந்தி லட்டை அவளிடம் நீட்டினான்.

அவனை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்தவள், "வேணாம் கிருஷ்ணா நீங்க சாப்பிடுங்க" என்று சமாளிக்க கிருஷ்ணாவோ, "இதுக்கு தானே என் கூட சின்ன வயசுல சண்டை போட்ட... மறந்துட்டியா?" என்று ஏக்கமாக கேட்டான்.

'இவன் எதையும் மறக்கல போல' என்று நினைத்தவள், "மறந்துட்டேன்" என்று பதிலளித்தாள்.

அந்நேரம் அங்கு வந்த கௌதமிடம், "இந்தாங்க நீங்க எடுத்துக்கோங்க" என்று சொல்ல அவனும் கயலை பார்த்தபடி எடுத்தான். "உங்க ரெண்டு பேரிடமும் கொஞ்சம் ரகசியம் பேசணும் அங்கே வர்றீங்களா?" என்று யாருமில்லாத தனிமையான மரத்தின் கீழ் வெளியே இருவரையும் அழைத்துச் சென்றான் கிருஷ்ணா.

அங்கிருந்த கதிரையில் அவன் அமர முன்னால் இருந்த கதிரைகளில் இருவரும் அமர்ந்தனர்.

"கேட்க சங்கோஜமா இருக்கு. என்றாலும் கயலை கட்டிக்க போறேன் என்ற முறையில கேட்காமலும் இருக்க முடியல" என்றவனை இருவரும் கூர்ந்து பார்க்க அவனோ மெதுவாக, "உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு டிவோர்ஸ் பண்ண போறீங்க... அப்படி இப்படி ஏதும் நடந்துச்சா?" என்று கேட்க இருவருக்கும் சங்கடமாக இருந்தது.

'விவஸ்தை இல்லாம என்ன கேக்கிறான் பாரு' என்று மனதுக்குள் கயல் கிருஷ்ணாவுக்கு திட்ட கௌதமோ மனதுக்குள், 'அந்தளவுக்கு நான் குடுத்து வைக்கல' என்று பெருமூச்சு விட்டவன் அவன் கேட்டது தனக்கு விளங்கியதை காட்ட விரும்பாமல், "எப்படி எப்படி ?" என்று கேட்டான்.

கயலோ, 'விளங்காத போல கேக்கிற கேள்வியை பாரு... இத அவன் விளக்கமா வேற கேட்கணுமா?' என்று மனதுக்குள் திட்டியபடி அதிர்ச்சியுடன் கௌதமை பார்க்க அவள் பார்ப்பது தெரிந்தே கொடுப்புக்குள் சிரித்தவன் கிருஷ்ணாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"அதாங்க முதலிரவு" என்றான் கிருஷ்ணா ரகசியமாக... அதுக்கு கெளதம் உதட்டை பிதுக்கி இல்லை என்று தலையாட்ட, "அப்பாடா ... இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்றான் கிருஷ்ணா தனது நெஞ்சில் கையை வைத்து.

உடனே கெளதம், "ஆனா..." என்று இழுக்க, "என்ன ஆனா?" என்று பதறினான் கிருஷ்ணா.

கெளதம் திரும்பி கயலை பார்க்க, 'இவன் என்ன சொல்ல போறானோ?' என்று யோசித்தவள் அவனை நெற்றியில் புருவ முடிச்சுடன் பார்த்தாள்.

"சொல்லுங்க சார் ஆனால் என்ன?" என்று கேட்க... கௌதமோ மனதுக்குள், 'டூப்ளிகேட் நீ ஏன்டா இப்படி பதறுற?' என்று நினைத்தவன், "ரெண்டு மூணு தடவை கிஸ் பண்ணி இருக்கேன்" என்றான்.

கயலோ அவனை முறைக்க கயலை பார்த்து கிருஷ்ணா பார்க்காத நேரம் ரகசியமாக கண் சிமிட்டி சிரித்தவன் கிருஷ்ணாவை பார்த்து முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

"கன்னத்துல தானே?" என்று அவன் கேட்க இல்லை என்று தலையாட்டியவன், "அப்போ உதட்டுலயா?" என்று கேட்க ஆம் என்று சோகமாக தலையாட்டினான்.

அதிர்ந்தவன், "என்ன பண்ணி வச்சு இருக்க கயல்? மனசுல என்ன வச்சிட்டு உன்னால எப்படி இப்படியெல்லாம் நடக்க முடியுது? சொல்லு கயல் சொல்லு..." என்று கேட்க, 'நல்லா கோர்த்து விடுறாங்கப்பா' என்று நினைத்தவள் அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், "அவர் தான்" என்றாள்.

அவள் பதிலில் அதிர்ந்த கெளதம் அவளை முறைக்க அவன் பார்வை வீச்சு தாங்காமல் தலையை குனிந்துக் கொண்டாள். கௌதமோ மனதுக்குள், 'அடிப்பாவி..! நீ ஏதோ கொடுக்காத போல பேசுறியே' என்று நினைத்தவன் பெருமூச்சுடன் கிருஷ்ணாவை பார்க்க, கிருஷ்ணாவோ, "அதானே பார்த்தேன்... என் கயல் என்ன தவிர யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டா... இப்போ சொல்லு கயல் ஒரு போலீஸ் கம்பளைண்ட் போதும் எனக்கு இன்ஸ்பெக்டரை தெரியும் உன்ன பலவந்தமா முத்தம் கொடுத்தான் என்று கேஸ் போட்டு உள்ள தள்ளிரலாம்... என்ன சொல்ற?" என்று கேட்டான்.


கௌதமோ, 'நானே போலீஸ்டா... என்கிட்டயேவா??? நானே SP டா உனக்கு இன்ஸ்பெக்டரை தெரியுமா? உன்ன யாரு அனுப்புனா என்று பிடிச்சன்னா அவனையும் போடுவேன் உன்னயும் போடுவேன்...' என்று வன்மமாக நினைத்தவன் வெளியில், "ஐயோ பயமா இருக்கு சார் போலீஸ் எல்லாம் வேணாம்... இனி இவங்க பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்" என்று நடித்தான். அவன் நடிப்பில் குழம்பியவளாக கயல் அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
Top