அத்தியாயம் 20
அடுத்த நாள் காலையில் எழுந்த தேன்மொழி தனக்கு அருகே கிடந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.அவனிடம் இருந்து பதில் இல்லை...
மனம் சோர்ந்து போனால் உடலில் பலம் ஏது?
எழுந்து நடக்கவே அவளுக்கு சலிப்பாக இருந்தது...
ஆனால் வேலைக்கு செல்ல வேண்டும்...
முக்கியமாக பணத்தை தாயிடம் கொடுக்க வேண்டும்...
அனைத்தையும் கட்டிலில் படுத்தபடி யோசித்தவள், பெருமூச்சுடன் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து விட்டு வந்தவளுக்கு மனம் கேட்கவில்லை...
ஓடிச் சென்று அலைபேசியை பார்த்தாள்.
அவன் பதில் அனுப்ப மாட்டானோ என்கின்ற ஏக்கம் அவளுக்கு...
அவன் பதில் அனுப்பவே இல்லை...
கண்களை மூடி திறந்தவள், அலைபேசியை கைப்பையில் வைத்து விட்டு அதற்குள் இருந்த பணத்தையும் சரி பார்த்தாள்.
அதில் ஐம்பதாயிரம் வசந்திக்கு கொடுக்க வேண்டும்...
ஐம்பதாயிரத்தை எடுத்து அலுமாரிக்குள் வைத்து விட்டு, இரண்டரை லட்சத்துடன் கீழிறங்கி சென்றாள்.
யாதவ் கிருஷ்ணாவோ ஸ்கூலுக்கு கிளம்பி விட்டான்...
வசந்தியோ, "நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேனுங்க" என்று ஹாலில் நண்பர் ஒருத்தருடன் பேசிக் கொண்டு இருந்த குருமூர்த்தியிடம் சொல்லி விட்டு கோவிலுக்கு அப்போது தான் கிளம்பி இருந்தார்...
குருமூர்த்தியும் அவர் நண்பரும் பேசிக் கொண்டு இருக்க, சற்று தள்ளி இருந்த வேதவல்லியும் கல்யாணியும் ரகசியம் பேசிக் கொண்டு இருந்தார்கள்...
கல்யாணியோ, "பாட்டி, அவ பணத்துக்கு கஷ்டப்பட்டவ, சோ அத வச்சு தான் அவளை கவுக்கணும்" என்றாள்.
வேதவல்லியோ, "நாம நேற்று ப்லான் போட்ட போல, என்னோட தங்க வளையலை அவ ஹாண்ட் பேக் ல வச்சிடுவோம்... அப்புறம் வளையலை காணோம்னு நான் சத்தம் போட்டு அவ ஹாண்ட் பேக்கை செக் பண்ண வைச்சுடலாம்... இந்த நேரம் தான் சரியான நேரம்... குருமூர்த்தியை தவிர யாரும் இல்லை... அவ சார்பா பேசுற எல்லாருமே போய்ட்டாங்க... சோ இன்னைக்கே இத பண்ணிடலாம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவ்விடத்தில் வந்த தேன்மொழியோ தனது கைப்பையை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு சாப்பிடுவதற்காக சமயலறைக்குள் நுழைந்தாள்.
வழக்கமாக ஹாலுடன் ஒட்டி இருக்கும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள்...
இன்று குருமூர்த்தியின் நண்பர் அங்கே இருக்கும் போது அது அவளுக்கு சரியாக படவில்லை...
உள்ளே நுழைந்து விட்டாள்.
கைப்பையை வழக்கமாக ஹாலில் இருக்கும் மேசையில் தான் வைத்து செல்வாள்... அதே போல வைத்து விட்டு சென்று விட்டாள்.
இந்த நேரத்தை தான் வேதவல்லியும் கல்யாணியும் எதிர்பார்த்து இருந்தார்கள்...
அவள் கைப்பையை வைத்து விட்டு உணவை எடுத்து வர உள்ளே செல்லும் கணத்தில் இதனை செய்யலாம் என்று நினைத்து இருக்க, அவர்கள் அதிஷ்டமோ என்னவோ, அவள் உள்ளேயே அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலை...
அதனால் அவர்களுக்கு நேரம் நிறையவே கிடைத்தது...
வேதவல்லியோ தனது காப்பை கழட்டிக் கொண்டே, கல்யாணியை பார்க்க, அவளோ, "ஐயோ பாட்டி, மாமா இங்க தான் இருக்கார்... இப்போ எப்படி வைக்க முடியும்? அவர் போகட்டும்" என்று சொன்னாள்.
"அதுக்குள்ள அவ சாப்பாட்டு தட்டை தூக்கிட்டு வந்திடுவாடி" என்று சொன்னவரிடம், "சாப்பிட்டு முடிய கழுவ போவா தானே, அப்போ பார்த்துக்கலாம்" என்று சொன்னாள் கல்யாணி.
இதே சமயம் குருமூர்த்தியிடம் பேசிக் கொண்டு இருந்த அவர் நண்பரோ, "இதுல ரெண்டரை லட்சம் இருக்கு மூர்த்தி... அன்னைக்கு அவசரத்துக்கு பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி" என்று சொல்லி பணத்தை அவர் முன்னே இருந்த டீ பாயில் வைக்க, குருமூர்த்தியோ, "எதுக்கு நன்றி எல்லாம், நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்?" என்று கேட்டார்...
அவர் நண்பரும், "அப்போ நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவர், "புது பேர்ட்ஸ் எல்லாம் வாங்கி இருக்கேன்னு சொன்ன தானே... அத பார்க்கலாமா?" என்று கேட்க, அவரோ, "ம்ம் கார்டின் ல இருக்கு... உனக்கு பேர்ட்ஸ் பிடிக்கும்ல" என்று சொல்லிக் கொண்டே, அவர் தோளில் கையை போட்டுக் கொண்டே நடந்து செல்ல, அங்கே டீபாயில் பணம் அப்படியே இருந்தது...
இரண்டரை லட்சம் எல்லாம் அவருக்கு பெரிய பணம் அல்ல, வீட்டில் இருப்பவர்கள் மேல் நம்பிக்கையும் இருந்தது... மேசையில் வைத்து விட்டு சென்று இருந்தார்...
அவர் கிளம்பியதும் தான் கல்யாணிக்கும் வேதவல்லிக்கும் நிம்மதியாக இருந்தது...
"அவ என்ன பண்ணுறான்னு போய் பாருடி... இன்னும் சாப்பாட்டை எடுத்துட்டு வெளியே வரல" என்றார் வேதவல்லி...
கல்யாணியும் நீரை அருந்த செல்வது போல சமையலறைக்குள் செல்ல, அங்கே சமையல் கட்டில் சாய்ந்து நின்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் தேன்மொழி...
கல்யாணியும் நீரை அருந்தி விட்டு வெளியேறியவள், வேதவல்லி அருகே வந்து, "அவ சாப்பிட்டுட்டு இருக்கா, நமக்கு டைம் இருக்கு, சீக்கிரம் காப்பை கொடுங்க, அவ ஹாண்ட் பேக் ல வச்சுடலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவரிடம் இருந்து காப்பை வாங்கியவள் வேகமாக சென்று கைப்பையை திறந்தாள்.
அதனுள் பணக் கட்டை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட, "பாட்டி இங்க வாங்க" என்று அழைத்தாள்...
அவரும் வேகமாக அவள் அருகே செல்ல, "இங்க பாருங்க பணம்" என்று காட்டினாள்.
வேதவல்லி அதிர்ந்து வாயில் கையை வைத்தவர், "எதுக்குடி இவ்ளோ பணம் வச்சு இருக்கா?" என்று யோசித்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்தவர் விழிகள் அங்கே டீபாயில் இருந்த பணத்தில் படிந்தது...
சட்டென அவருக்கு யோசனை தோன்ற, கல்யாணியின் கையில் இருந்த காப்பை பறித்து எடுத்து தனது கையில் போட்டுக் கொண்டார்...
"பாட்டி" என்றாள் அவள் அதிர்ச்சியாக...
"இத விட சூப்பர் ஐடியா சொல்றேன் கேளு, இந்த காப்பை வச்சா, எப்போ தொலைஞ்சுது, அவ எடுக்கும் வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தன்னு ஆயிரத்து எட்டு கேள்வி வரும்... ஆனா இந்த பணம் தான், அந்த பணம்னு சொல்லிட்டோம்னா, கேள்வியே வராது" என்று விழிகளால் டீபாயில் இருந்த பணத்தை காட்டி சொல்ல, "பாட்டி செம்ம ஐடியா" என்றாள் அவள்...
மேலும் தொடர்ந்த வேதவல்லியோ, "அவ பணம் எடுத்த நேரம் பார்த்துட்டோம்னு நாம சாட்சி சொல்லிடலாம்..." என்று கண் சிமிட்டி சொல்ல, கல்யாணியோ, "செம ஐடியா" என்று சொன்னாள். உடனே டீப்பாயை நோக்கி சென்ற வேதவல்லி, டீபாயில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டே, கல்யாணியையும் அழைத்துக் கொண்டே வேகமாக தனது அறைக்குள் செல்ல, அந்த காட்சி, அப்போது அங்கே வந்த பாக்கியாவின் கண்ணில் பட்டது...
அவர்கள் வீட்டு பணம் என்பதால் அவள் அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வீட்டை பெருக்க ஆரம்பித்து விட்டாள்.
சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வர, தேன்மொழியும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தாள்.
அவர்களோ ஓரமாக நின்று அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, தேன்மொழி தனது கைப்பையை எடுத்து தோளில் போட்டாள்.
அதே கணம், குருமூர்த்தியும் தனது நண்பனை அனுப்பி விட்டு வீட்டினுள் நுழைய, இது தான் சந்தர்ப்பம் என்று அறிந்த வேதவல்லியோ, "நீ பணத்தை எடுத்ததை நான் பார்த்துட்டேன் தேன்மொழி" என்றார்...
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
'பணமா?' என்று நினைத்துக் கொண்டே அவரை புருவம் சுருக்கி பார்க்க, குருமூர்த்தியோ அவர்களை பார்த்து விட்டு சட்டென திரும்பி டீப்பாயில் வைத்து விட்டு போன பணம் இருக்கின்றதா? என்று பார்த்தார்...
பணம் அங்கே இல்லை...
அவருக்கும் அதிர்ச்சி தான்...
"இங்க இருந்த பணம் எங்க?" என்றார் அடுத்த கணமே...
சட்டென தேன்மொழி அதிர்ந்து குருமூர்த்தியை பார்த்தாள்.
வேதவல்லியோ, "இவ தான் எடுத்து தன்னோட ஹாண்ட் பேக் ல வச்சுக்கிட்டா, நானும் கல்யாணியும் பார்த்தோம்... சொல்லு கல்யாணி" என்று சொல்ல, அவளும், "ஆமா மாமா, நாங்க ரெண்டு பேரும் ரூமுக்கு போயிட்டு வர்ற நேரம் பார்த்துட்டோம்" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே...
இதனிடையே அனைத்தையும் அறிந்த பாக்கியாவோ அவர்கள் முன்னே வாயை திறக்க பயந்து கொண்டே ஓரமாக நின்று இருக்க, தேன்மொழியோ குருமூர்த்தியை பார்த்து அழுத்தமாக இல்லை என்று தலையாட்டினாள்...
குருமூர்த்தி அவளை புருவம் சுருக்கி பார்க்க, வேதவல்லியோ, "அப்போ உன் ஹாண்ட் பேக் ஐ காட்டு" என்றார்...
தேன்மொழிக்கோ அதிர்ச்சி...
அவள் பையில் பணம் இருக்கின்றது தான்...
ஆனால் கைப்பையை திறந்து காட்டினால் அது குருமூர்த்தியின் பணம் என்று சொல்லி விடுவார்கள் என்று அவளுக்கு தெரியும்...
இல்லை என்று தலையாட்டினாள்...
"தப்பு பண்ணாதவன்னா திறந்து காட்ட வேண்டியது தானே" என்றாள் கல்யாணி...
குருமூர்த்தியோ தேன்மொழியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நிற்க, தேன்மொழிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...
"நான் பணம் எடுக்கல" என்று சைகையில் குருமூர்த்தியிடம் சொன்னாள்.
அவருக்கு பெரிதாக சைகை மொழி தெரியாது... வேலை வேலை என்று அலைபவர் வீட்டில் நேரம் செலவு செய்தால் தானே...
ஆனால் யூகிக்கும் அளவுக்கு தெரியும்...
அவள் அசைவை வைத்து யூகித்துக் கொண்டவர், "எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... அடுத்தவங்க வாயை அடைக்கணும்னா ஹாண்ட் பேக்கை திறந்து காட்டிட்டு போய்கிட்டே இரும்மா, இல்லன்னா வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டே இருப்பாங்க" என்றார் வேதவல்லியை பார்த்துக் கொண்டே...
"நான் எதுக்குடா பொய் சொல்ல போறேன்?" என்று அவர் இதழ்களை சுளித்துக் கொள்ள, தேன்மொழி அருகே வந்த கல்யாணியோ, "பையை திறந்து காட்டு" என்றாள்.
தேன்மொழி பையை இறுக பற்றிக் கொண்டே இல்லை என்றாள்.
பாக்கியாவுக்கு தேன்மொழியின் பையில் பணம் இருப்பது தெரியாது...
அதனால், 'பையை இவங்க திறந்து காட்டுனா பிரச்சனை முடிஞ்சிடுமே' என்று தான் நினைத்து இருந்தாள்.
கல்யாணியோ பொறுமை இழந்து தேன்மொழியின் பையை இழுத்து எடுக்க, தேன்மொழியும் அதனை இறுக பற்றிக் கொண்டாள்.
குருமூர்த்தியோ, "எதுக்கு இவ்ளோ பிரச்சனை? உன் மேல விழுந்த பழியை துடைக்கணும்ன்னா பையை திறந்து காட்டிடும்மா" என்றார்...
அவரை பார்த்துக் கொண்டு முகத்தை கலவரமாக வைத்தபடி நின்ற தேன்மொழி அசந்த நேரமாக பார்த்து, அவளிடம் இருந்து பையை பறித்து எடுத்தாள் கல்யாணி... அவள் இழுத்து வேகமாக கைப்பையின் சிப்பை திறக்க, அதற்குள் இருந்த கட்டுப் பணம் கீழே விழுந்தது...
குருமூர்த்திக்கோ அதிர்ச்சி...
தேன்மொழியை அதிர்ந்து பார்த்தார்... உடனே தேன்மொழி, "அது என் பணம்" என்று சைகையில் சொல்லும் போதே பொய்யான பழியை நினைத்து இதயம் கனத்தது... கண்களில் கண்ணீர்...
'இங்கயும் பணம் இருக்கே... என்ன தான் ஆச்சு?' என்று நினைத்த பாக்கியாவுக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை...
'நமக்கெதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு' என்று எண்ணியபடியே சமையலறைக்குள் நுழைந்து விட்டாள்.
வேதவல்லியின் வாய் சும்மா இருக்குமா என்ன?
"நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா அது வால கிளப்பிட்டு எதையோ தின்ன போகுமாம்... அப்படி தான் இருக்கு இங்கயும்... பிச்சைக்காரியை கூட்டி வந்தா என்ன பண்ணுவா? பணத்தை பார்த்ததும் ஆசை வந்து இருக்கும்... அதான் கை வச்சுட்டா" என்றார்...
அவர் பேசிய பேச்சில் தேன்மொழிக்கு மூச்செடுக்க கஷ்டமாக இருந்தது... ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டே, குருமூர்த்தியை பார்த்தவள், "அது என் பணம்" என்று மீண்டும் சைகையில் சொன்னார்...
குருமூர்த்தியின் பார்வையோ அவள் மீது நம்பிக்கை இல்லாமல் படிந்தது...
ஒரே பார்வை... உடைந்தே விட்டாள்.
அவள் கைப்பையை திறந்து காட்ட மறுத்ததினால் அந்த சந்தர்ப்பமே அவளுக்கு எதிராக மொத்தமாக திரும்பி இருந்தது...
"பார்த்தீங்களா மாமா, நாங்க சொன்னோம்ல" என்றாள் கல்யாணி...
குருமூர்த்தியோ, "அது அவ பணம்னு சொல்றா" என்று சொல்ல, "அவ்வா அவ்வா அவ்வா" என்று தனது வாயில் அடித்த வேதவல்லியோ, "கேக்கிறவன் கேனயனா இருந்தா எலி கூட ஏரோபிளேன் ஓட்டுமாம்... ரெண்டு கண்ணால பார்த்தோம்டா, இப்போ எப்படி பொய் சொல்றா பாரேன், இப்போ அழுது ட்ராமா வேற பண்ணுறா" என்றார் அவர்...
அவளுக்கோ மனதில் அழுத்தமான வலி...
அவள் என்ன சொன்னாலும் யாரும் நம்ப போவது இல்லை...
கீழே கிடந்த பணத்தையும் அதன் அருகே கல்யாணி தூக்கிப் போட்டு இருந்த கைப்பையையும் பார்த்தவளோ குனிந்து இரண்டையும் எடுத்துக் கொண்டே, அந்த பணத்தை தூக்கி காட்டியவள், "சத்தியமா இது என் பணம் தான்... உங்க பணத்தை நான் எடுக்கவே இல்லை" என்றாள் சைகையில்...
குருமூர்த்தியோ அவளை அழுந்த பார்த்துக் கொண்டே, "பணம் வேணும்னா கேட்டு இருக்கலாமேம்மா" என்றார்...
ஒரே கேள்வி தான்...
மொத்தமாக நொறுங்கி விட்டாள்...
அவரை விழி விரித்து பார்த்தவளுக்கு கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்...
வேதவல்லியும் கல்யாணியும் அத்தனை வார்த்தைகள் பேசியும் அவள் அதனை பொருட்படுத்தவே இல்லை...
ஆனால் குருமூர்த்தி இப்படி சொன்னதுமே அவளால் நிலை கொள்ள முடியவில்லை...
கால்கள் நடுங்கியது...
பாவம் ஒரு பக்கம், பழி இன்னொரு பக்கம் என்பது போல, அவளும் செய்யாத தப்புக்கு பழியை சுமந்து கொண்டே நின்றாள்.
அதுவும் பண விஷயத்தில் அவள் மீது பழியை தூக்கி போட்டு இருக்கின்றார்கள்...
வம்சி கிருஷ்ணாவிடம் கூட அவள் பணம் கேட்காமல் வெளியே பணம் வாங்கியவள் அவள்...
அப்படி பட்ட தன்மானம் உள்ளவளுக்கு திருட்டுப் பட்டம்...
ஜீரணிக்கவே முடியவில்லை அவளால்...
அவளால் அந்த வீட்டில் இன்னும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று தான் தோன்றியது...
செய்யாத தப்புக்கு பழியை சுமந்து கொண்டே, அவளால் எப்படி அவர்கள் முன்னால் நடமாட முடியும்?
இதே சமயம் கல்யாணியோ, "அது தான் கையும் களவுமா பிடிபட்டாச்சே... இனிமேல் இந்த வீட்ல இருக்க தானா வேணும்?" என்று கேட்டாள்.
வேதவல்லியோ, "க்கும், அவ போய்ட்டாலும், வம்சியை மயக்கி இங்க வந்ததே இந்த சொத்துக்காக தானே... இந்த கொஞ்ச பணம் மேலயே ஆசைப்பட்டவ, கோடிக்கணக்கான பணத்தை விட்டுட்டு போவாளா? இங்கயே இருந்து மொத்த சொத்தையும் தன்னோட பேருக்கு மாத்தி எடுப்பா... நான் என் வாழ்க்கைல இப்படி ஒரு நன்றி இல்லாத பணத்தாசை பிடிச்சவள பார்த்ததே இல்ல" என்று ஆரம்பித்து வாய்க்கு வந்தது எல்லாம் பேசினார்...
அவளால் என்ன பதில் சொல்லி விட முடியும்... அவளுக்காக பேச அங்கே யாரும் இல்லை...
குருமூர்த்தி வேறு அவளை சந்தேகமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்...
கூசிப் போனாள்.
அவரை நோக்கி அடி மேல் அடி வைத்து வந்தவளோ, அவரிடம் கையில் இருந்த பணத்தை நீட்ட, அவரோ அதனை வாங்கிக் கொண்டே, "உனக்கு பணம் தேவைன்னா சொல்லு, நான் கொடுக்கிறேன்... ஆனா இப்படி பண்ணுறது அசிங்கமா இருக்கு" என்றார்.
ஒற்றை கையை நீட்டி, பேச வேண்டாம் என்று சொன்னவளோ, இப்போதும், "அது என்னோட பணம், உங்களுக்கு நான் கொடுத்து இருக்கேன்" என்று சைகையில் சொன்னவள் விறு விறுவென கைப்பையுடன் வெளியேறி இருந்தாள்.
அவரோ அவள் முதுகை வெறித்துப் பார்த்தார்...
வெளியேறியவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை...
புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டே நடந்தவளுக்கு ஸ்கூலுக்கு செல்லும் மனநிலையே இல்லை...
பெருமூச்சுடன் அவள் இப்போது நடந்து சென்றது என்னவோ அவள் வீட்டுக்கு தான்...
மகாலக்ஷ்மியை அணைத்து அழ வேண்டும் போல இருந்தது...
ஆனால் நடந்ததை சொல்ல அவள் தயாராக இல்லை... அப்படி சொன்னால் அவர் மனம் என்ன பாடு படும் என்று அவளுக்கும் தெரியும்...
ஏற்கனவே வம்சி கிருஷ்ணாவின் பாராமுகத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தவளுக்கு இப்போது பணமும் கையை விட்டு சென்று, திருட்டு பட்டமும் வந்து சேர்ந்து விட்டது...
அவள் சென்றதுமே வேதவல்லியோ, "திரும்பி வருவாளா அவ?" என்று கல்யாணியிடம் கேட்க, "தெரியலையே, அவ ட்ரெஸ் எதுவும் எடுத்து போகலேயே" என்றாள்.
"அவ வீட்ல இருக்கும் தானே, அப்படியே போனா சனியன் தொலைஞ்சுதுன்னு நிம்மதியா இருக்கலாம்" என்று சொல்லிக் கொண்டார்...
குருமூர்த்தியோ பதில் ஒன்றும் பேசவில்லை, கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து விட்டார்...
அவர் சென்றதுமே, "அவ வரலைன்னா தான் நம்ம மிஷன் சக்ஸஸ்" என்று கல்யாணி சொல்ல, "வந்தா பார்த்துக்கலாம், வார்த்தைக்கு வார்த்தை திருடின்னு சொன்னா அவளாலேயே தாங்க முடியாம கிளம்பிடுவா" என்று திட்டம் வேறு போட்டார்...
இதே சமயம் தன்னுடைய வாசலுக்கு வந்த தேன்மொழியோ மீண்டும் அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
அவனிடம் இருந்து பதில் இல்லை...
இந்த நேரத்தில் அவனிடம் இதனை சொல்லவும் அவளுக்கும் விருப்பம் இல்லை...
அது அவனை தொந்தரவு செய்வது போல இருக்கும் என்று அவளும் உணர்ந்தாள்.
அதனை தொடர்ந்து வீட்டினுள் நுழைய, தையல் மெஷினில் இருந்து உடைகளை தைத்துக் கொண்டு இருந்த மகாலக்ஷ்மியோ அவளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "நீ இன்னைக்கு ஸ்கூல் போகலையா?" என்று கேட்டார்...
"இல்லை" என்கின்ற ரீதியில் தலையாட்டிக் கொண்டே, அவரை நோக்கி வந்தாள் பெண்ணவள்...
அவரும் அவளை புருவம் சுருக்கி பார்க்க, "அவர் வெளியூர் போய்ட்டார்... ஒரு வாரம் அப்புறம் தான் வருவார்... நான் அது வரைக்கும் இங்கயே இருக்கவா?" என்று சைகையில் கேட்க, சட்டென அதிர்ந்து போன மகாலக்ஷ்மி...
தேன்மொழிக்கு வம்சி கிருஷ்ணா வந்த பிறகும் கூட அந்த வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லை... ஆனால் அதனை மகாலக்ஷ்மியிடம் சொல்ல முடியாது என்று தான் தற்காலிகமாக நிற்க போவதாக கூறினாள்.
அவள் சொன்னதில் பயந்த மகாலக்ஷ்மியோ, "ஏன் என்னாச்சு? அங்க ஏதும் பிரச்சனையா?" என்று கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டினாள்...
"பொய் சொல்லாதே தேன்மொழி, கண்ணெல்லாம் ஏன் அப்போ சிவந்து போய் இருக்கு, வேதவல்லியம்மா ஏதும் சொன்னாங்களா?" என்று கேட்டார்...
அதற்கும் இல்லை என்று அழுத்தமாக தலையாட்டும் போது அவள் கண்கள் கலங்கி போனது...
"நான் உங்கள அணைச்சுக்கட்டுமா?" என்று சைகையால் கேட்டாள்.
அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று அவருக்கு அப்பட்டமாக தெரிந்தது...
"தேன்மொழி" என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவர் சொல்லி முடிக்கவில்லை...
அவரை இறுக அணைத்த பெண்ணவளின் மேனி அழுகையில் குலுங்கியது...
அவள் வேதனைக்கு அந்த அணைப்பு மட்டுமே இப்போது ஆறுதலாக இருந்தது...
"என்னாச்சும்மா?" என்று கேட்டார் மகாலக்ஷ்மி...
சொல்வதற்கு வாயை திறக்க மாட்டாள் என்று அவருக்கு நன்றாக தெரிந்தாலும், சொல்லி விட மாட்டாளா? என்கின்ற நப்பாசையில் தாயுள்ளம் அவளிடம் கேள்வியை கேட்டது...
அவளது மௌனமாக அழுகை மட்டுமே அவர் கேள்விகளுக்கு பதிலாகி போனது...