அத்தியாயம் 2
தாலி கட்டி முடித்தவனுக்கு ஆத்திரம், கோபம் என்று என்னென்னவோ உணர்வுகள்...நினைக்க நினைக்க வெறி ஏறியது...
அவளுக்குமே அவன் மீது பெரிய ஈடுபாடு இல்லை...
திமிர் பிடித்தவன் என்கின்ற விம்பம் எப்போதுமே இருக்கும்.
அதன் பிறகு சம்பிரதாயங்கள் நடந்தன.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கூட இல்லை...
திலகவதி மற்றும் ராமசாமியை முறைத்தபடி அவர்களது காலில் விழுந்து எழும்பினான்.
அதனை தொடர்ந்து, வடிவேல் மற்றும் பார்வதியின் காலிலும் விழுந்து எழும்பினான்.
வடிவேலோ ராமசாமியிடம், "ஒரு வாரம் நின்னு போங்க" என்று சொல்ல, அவரும், "சரிடா" என்று சொன்னார்.
"அப்பா நான் லீவு போடல" என்றான் ராவந்த்.
"கால் பண்ணி சொல்லுடா, வேணும்னா மூணு நாள் நின்னு போகலாம்" என்று சொன்னார்,
அங்கே ராவந்த்துக்கு பேசவும் முடியவில்லை...
பெருமூச்சுடன் அமைதியாகி விட்டான்.
இதே சமயம் அஸ்வந்த்தின் விழிகள் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை...
அவன் அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தது அங்கே நின்ற ஜீவிதா என்றால் அவளும் அவனை கண்டும் காணாமல் தான் வேலை செய்து கொண்டு இருந்தாள்.
அவள் மனமோ, 'இவன் தான் மாப்பிளையோட தம்பி போல' என்று பதற, அவனுக்கும் அதே எண்ணம் தான்.
இருவரும் ஒன்றாக தான் காலேஜ்ஜில் படித்துக் கொண்டு இருப்பவர்கள்...
எலியும் பூனையும் தான் இருவரும்...
அஸ்வந்த்துக்கு இவ்வளவு நேரமும் அவள் கண்ணில் படவில்லை...
மாதுரியை அழைத்து வரும் போது தான் கண்ணில் பட்டாள்.
இன்னுமே அந்த அதிர்ச்சி போகவில்லை...
அவர்கள் நிலை இப்படி இருக்க, மாதுரி ராவந்த்தை திரும்பி கூட பார்க்கவில்லை...
பேயறைந்த போலவே நின்று இருந்தாள்.
அதனை தொடர்ந்து, அவர்களை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்...
ராமசாமி, திலகவதி மற்றும் அஸ்வத்துக்கு ஒரே அறையினை கொடுத்து விட்டு, "மாப்பிள்ளை இது தான் உங்க ரூம்" என்றார் வடிவேல்.
"எனக்கு தனி ரூம் எல்லாம் வேணாம்" என்று அவன் சொல்ல, "மாப்பிள்ளைக்கு ஒரே குசும்பு" என்று அவன் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றார் வடிவேல்.
'ஐயே' என்று அவன் கன்னத்தை துடைத்து விட்டு, "அம்மா, எனக்கு எதுக்கு தனி ரூம்?" என்று கேட்க, "போடா வெட்கமா இருக்கு" என்று அவர் அறைக்குள் செல்ல, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் அருகே வந்த ராமசாமி, "ஒரு அப்பாவா கேட்க சங்கடமா தான் இருக்கு, கல்யாணம் நடந்ததும் என்ன ஆகும்னு உனக்கு தெரியாதா?" என்று கேட்டார்.
"என்ன ஆகும்?" என்று கேட்டான்.
"டேய், நீ படம் பார்க்க மாட்டியா?" என்று கேட்டார்.
"ம்ம் பார்ப்பேன், நேத்து கூட பஞ்ச தந்திரம் பார்த்தேன்" என்று சொல்ல, "டேய் அந்த படம் இல்ல" என்று சொல்லிக் கொண்டே, உச்சந்தலையை சொரிந்தவர், "இதெல்லாம் சம்பிரதாயம்" என்றார்.
"என்ன சம்பிரதாயம்?" என்று அவன் கேட்க, அவனை மேலிருந்து கீழ் பார்த்தவர், "முதலிரவு டா முதலிரவு" என்றார் வாய்க்குள்.
"எத?" என்று அவன் அதிர, "அதான் தனி ரூம்" என்றார்.
"ஐயே. எனக்கு இன்னைக்கு முடியாது, முதல் ஊருக்கு கிளம்பலாம் வாங்க" என்றான்.
"என்ன விளையாடுறியா? அப்புறம் வடிவேல் என்ன நினைப்பான், எல்லாம் நடந்து தான் ஆகணும்" என்றார்.
"அப்பா" என்று அவன் ஏதோ பேச வர முதல், அவன் முதுகை பிடித்து அறைக்குள் தள்ளி தாழிட்டு விட்டார்.
"இவரெல்லாம் ஒரு அப்பாவா? ச்சீ" என்று திட்டிக் கொண்டே, கட்டிலில் அமர்ந்து இருக்க, மாதுரிக்கு அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது...
கண்ணாடி முன்னே அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
"சாப்பிடுட்டுட்டே இருக்காத டி" என்று அவள் கையில் இருந்த தட்டை பறித்து எடுத்தார் பார்வதி.
"அம்மா" என்று அவள் சிணுங்கிக் கொள்ள, "என்ன நடக்கும்னு தெரியுமா அக்கா" என்று ஜீவிதா கேட்டாள்.
"அதெல்லாம் நீ எதுக்கு கேக்கிற, படிக்கிற பிள்ளை, வெளிய போ" என்று அவளை துரத்திய பார்வதியோ, "மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ, என்ன சொன்னாலும் செஞ்சிடு" என்றார்.
"விஷம் குடிக்க சொன்னாலும் குடிக்கணுமா என்ன? அதெல்லாம் முடியாது" என்று அவள் சொல்ல, "அவர் ஏன் டி முதலிரவு ல விஷம் குடிக்க சொல்ல போறார்" என்று கேட்க, "அது சொல்லும்" என்றாள்.
"மாப்பிள்ளையை அது இதுன்னு பேசாதே, மரியாதையா பேசு" என்று சொல்ல, "க்கும்" என்று சொல்லிக் கொண்டே, எழுந்து கொண்டவள் கையில் பாலை கொடுத்தவர், "பாதி பாதி குடிங்க, அவர் காலுல ஆசீர்வாதம் வாங்கணும், அப்புறம் காப்பு உடைஞ்சு இருக்கணும் புரியுதா?" என்று சொல்ல, 'அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல' என்று முணுமுணுத்தபடி அவன் அறையை தேடி சென்றாள்.
அறைக்குள் பால் செம்புடன் வந்த மாதுரியை எரித்து விடுவது போல பார்த்தான் ராவந்த்.
அவளோ, 'இவன் வேற முறைக்கிறானே' என்று நினைத்துக் கொண்டே அவன் முன்னே வந்து நின்று பால் செம்பை நீட்ட, "மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?" என்று கேட்டான்.
"பாலுக்குள்ள நிறைய பாதாம் போட்டு இருக்காங்க, எல்லாமே நீங்க குடிச்சிடுவீங்களோன்னு நினச்சுட்டு இருக்கேன்" என்றாள்.
"அடிங்" என்று சொல்லிக் கொண்டே, வேஷ்டியை மடித்துக் கட்டியபடி அவன் எழுந்து கொள்ள, அவளோ, "ஐயோ" என்றபடி அவனை மிரட்சியாக பார்த்துக் கொண்டே பின்னே சென்றாள்.
"மாப்பிள்ளை ஓடி போனா நீயும் ஓடி போக வேண்டியது தானே" என்றான்.
"இது என்ன அநியாயமா இருக்கு" என்று கேட்டாள்.
"எனக்கு தான் டி அநியாயம் நடந்து இருக்கு, கல்யாணத்துக்கு வந்தவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கீங்க எல்லாரும்" என்று சீற, "நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டாள்.
"எல்லாம் உன்னால தான்" என்றான்.
அவளோ, "சரி பாலை குடிங்க" என்று நீட்ட, "எனக்கு வேணாம்" என்றபடி திரும்பி நின்றான்.
சற்று நேரம் சத்தம் கேட்கவில்லை...
சட்டென திரும்பி பார்த்தான்.
அவளோ பாலை தனியாக குடித்துக் கொண்டு இருந்தாள்.
"கொஞ்சமாவது சொரணை இருக்கா? இப்படியா பாலை குடிக்கிறது?" என்று சீற, "நீங்க தானே வேணாம்னு சொன்னீங்க, கவலைப்படாதீங்க, அடில கொஞ்சம் இருக்கு, குடிங்க" என்று நீட்ட, "ச்சீ, உன் எச்சியை நான் குடிக்கணுமா?" என்றான்.
"சரி தான்" என்று அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே சொன்னவள், "நானும் ஒன்னும் இஷ்டப்பட்டு உங்கள கல்யாணம் பண்ணல, இப்படி ஒரு சிடு மூஞ்சியை யாருக்கு தான் பிடிக்கும்... இந்த முதலிரவு எல்லாம் எனக்கு இஷ்டம் இல்லை... அப்புறம் ஆஃபீஸ் ல நான் தான் உங்க பொண்டாட்டின்னு சொன்னா நடக்கிறது வேற" என்று கேட்டு விட்டு சென்று படுத்து விட, "இதெல்லாம் நான் பேச வேண்டிய டயலாக், நீ எதுக்கு பேசிட்டு இருக்க?" என்று கேட்டான்.
"யார் பேசுனா என்ன? ஒரே டயலாக் தான், அப்படியே கீழ படுங்க." என்று சொன்னவள், தலையணையை கீழே போட்டு விட்டு, அடுத்த கணமே தூங்க ஆரம்பித்து விட்டு, "ஏய் எந்திரி, இதெல்லாம் நான் பண்ண வேண்டியது, நீ பண்ணிட்டு இருக்க" என்று அவளை உசுப்பியும் அவள் எழுந்தபாடு இல்லை...
அவனோ நாடியில் கையை வைத்துக் கொண்டே, கட்டிலில் அமர்ந்து கொண்டது தான் மிச்சம்...
அதனை தொடர்ந்து தூக்கம் வேறு வந்தது...
வேறு வழி இல்லாமல் இடைவெளி விட்டு அவள் அருகே படுத்துக் கொண்டான்.
காலையில் அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்டு தான் இருவரும் விழித்துக் கொண்டார்கள்...
சட்டென எழுந்து அமர்ந்த ராவந்த்தோ மாதுரியை பார்க்க, அவளோ, அங்கே இருந்த டீப்பாயில் கையை போட்டு அடித்துக் கொண்டு இருந்தாள்.
'ஐயோ இது லூசு போல, இப்படி ஒண்ண கட்டி வச்சு இருக்காங்க' என்று அவன் நினைத்துக் கொண்டே, "என்னடி செய்யுற?" என்று சீறினான்.
"அப்பாடா காப்பெல்லாம் உடைஞ்சிடுச்சு" என்றாள்.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், "பைத்தியமா நீ?" என்று கேட்க, அவனை முறைத்தவளோ, "காப்பு உடைஞ்சு இருக்கனும், அப்போ தான் முதலிரவு நடந்திருக்குன்னு நம்புவாங்க" என்று சொன்னவளோ, தலையில் இருந்த பூக்களையும் கலைத்து விட்டுக் கொண்டே எழுந்து கொண்டாள்.
கண்ணாடி முன்னே நின்று குங்குமத்தையும் அழித்து விட்டு, அப்படியே தலையை தாழ்த்தி வெட்கப்பட்டுக் கொண்டே நடந்து செல்ல, அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனோ, 'இவ என்ன இந்த நடி நடிக்குறா?' என்று யோசித்துக் கொண்டான்.
அதே வெட்கத்துடன் கதவை திறந்தாள் மாதுரி.
வாசலில் நின்ற பார்வதியோ, "ம்ம் காப்பெல்லாம் உடைஞ்சு இருக்கு, ம்ம் ம்ம்" என்று சொல்லிக் கொண்டே செல்ல, அவளும், வெட்கபட்டுக் கொண்டே குளிக்க சென்றாள்.
'என்ன கொடுமைடா சாமி' என்று நினைத்துக் கொண்டே எழுந்தவனோ வெளியே வர, "திடீர் கல்யாணமாச்சே ஒன்னும் நடக்காதுன்னு நினச்சேன், மாப்பிள்ளை ரொம்ப முரடு தான் போல" என்று அங்கே இருந்த வெற்றிலை பாக்கை சாப்பிட்டுக் கொண்டே வயதான பாட்டி வள்ளி சொல்லிக் கொண்டார்.
'என்னோட பொறுமையை சோதிக்கிறாங்க' என்று நினைத்தவனோ, "எங்க குளிக்கணும்" என்று கேட்க, குளியலறை இருக்கும் திசையை காட்டினார்கள்...
குளித்து விட்டு வேஷ்டி சட்டை என்று அவன் வெளியே வர, மாதுரியும் நீல நிற புடவையுடன் வெளியே வந்தாள்.
"ரெண்டு பேரும் சாப்பிட வாங்க" என்று ஜீவிதா அழைக்க, அவர்களும் சமையலறைக்குள் சென்றார்கள்...
அங்கே ஏற்கனவே எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, "மாப்பிள்ளை பொண்ணு உட்காருங்க, நிறைய சாப்பிடணும்" என்று வடிவேல் சொல்ல, இருவரும் சலிப்பாக அருகருகே அமர்ந்து இருந்தார்கள்.
அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது...
அவன் பெரிதாக சாப்பிட மாட்டான்.
ஆனால் மாதுரியோ நெய் தோசையை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருக்க, அவளை பார்த்து விழிகளை ஏற்றி இறக்கி விட்டு அவனும் சாப்பிட்டான்.
அதனை தொடர்ந்து ஹாலுக்குள் வந்து அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்த ராவந்த்துக்கு சலிப்பாக இருந்தது...
இதே சமயம் மாதுரியின் ஸ்கூல் நண்பிகள் வந்து சேர்ந்து இருந்தார்கள்...
அவளும் அவர்களுடன் அங்கே தான் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, "என்னடி பேசுன மாப்பிள்ளையை இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை செம்ம அழகு" என்று சொன்னார்கள்.
"ம்ம்" என்றாள் கடுப்பாக.
"எல்லாம் ஆச்சா?" என்று கேட்க, சற்று எரிச்சலாக இருந்தாலும், "ம்ம்" என்றாள்.
"கடிச்சாரா?" என்று கேட்க, "அவர் என்ன நாயா?" என்று கேட்டாள்.
"என் புருஷன் எல்லாம் என்ன கடி தெரியுமா? நானும் கடிச்சேன்" என்றாள் அவள்...
'சரியான நாய் கூட்டம்' என்று முணுமுணுத்தவள், "எங்க கடிச்ச?" என்று கேட்க, "அவர் எங்கெங்கயோ கடிச்சார், நான் கழுத்துல கடிச்சேன், கடிச்சா தான் முதலிரவுன்னு அர்த்தம்" என்றாள்.
தலையை யோசனையாக சொறிந்து கொண்டே, "ம்ம் ஓகே" என்று சொல்லிக் கொண்டாள்.
அவர்களும் கிளம்பி விட, "ரா" என்றாள்.
ராவந்த் அவளை அதிர்ந்து பார்க்க, "உங்கள அப்படியே இனி கூப்பிடுறேன், வீட்ல வச்சு சார்ன்னு லாம் கூப்பிட முடியாது" என்றாள்.
அபலை மேலிருந்து கீழ் பார்த்தவன், "ஓகே" என்று சொல்ல, "உள்ளே வாங்க" என்றபடி எழுந்து கொண்டாள்.
அவனும் யோசனையாக அவளை பின் தொடர, கதவை தாழிட்டவள், அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "உட்காருங்க" என்றாள்.
அவனும், "எதுக்கு?" என்று கேட்டபடி கட்டிலில் உட்கார, அவன் அருகே வந்தவள், கொஞ்சமும் யோசிக்காமல், குனிந்து, அவன் கழுத்தில் ஊன்றி கடித்து விட, அவனோ, "ஆஹ்" என்று அலற, எட்டி வாயை மூடிக் கொண்டே, "இப்போ எதுக்கு கத்துறீங்க?" என்று கேட்டாள்.
அவள் தோளை பற்றி தள்ளி விட்டபடி எழுந்து நின்றவன், "நீ என்ன லூசா, நாய் போல கடிக்கிற?" என்று கேட்டுக் கொண்டே கழுத்தில் இருந்த காயத்தை ஆராய, "அப்போ தான் முதலிரவுன்னு நடந்திச்சுன்னு நம்புவாங்க, நீங்களும் கடிங்க" என்று கழுத்தை நீட்டினாள்.
"இல்ல என்னால முடியாது" என்றாள்.
"கடிங்கன்னு சொல்றேன் ல" என்று அவள் சொல்ல, "முடியாது போடி" என்று திட்டி விட்டு, அவன் வெளியேறி இருந்தான்.