ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் -1

pommu

Administrator
Staff member
அத்தியாயம் -1

"ஆ... விட்டுருங்க சார் இனி பொண்ணுங்க மேல நான் கை வைக்கவே மாட்டேன்" என்று கதறியவனை இளக்காரமாக பார்த்தவாறு அவன் முன்னாலிருந்த ஒற்றை கதிரையில் கால் மேல் கால் போட்டு வெள்ளை வேட்டி சட்டையில் கருப்பு நிற சன் கிளாசுடன் உட்காந்திருந்தான் சாணக்கியவர்மன்…

30 வயதேயான வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி... பாராளுமன்ற உறுப்பினர் ஆன அவன் அனைத்து குற்றங்களுக்கும் மறைமுகமாக தண்டனை வழங்கும் புரட்சி வீரன். ஆறடி உயரமும் பரந்து விரிந்த மார்பும் என வாட்ட சட்டமான இளைஞன்.

அவன் தம்பி விஷ்வவர்மன் அடிதடி கட்டப்பஞ்சாயத்து என சிட்டியையே ஒரு கலக்கு கலக்குபவன், அவன் சாயலிலேயே அண்ணனுக்கு பக்கத்தில் கம்பீரமாக நின்றிருந்தான்.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று ராமர் லட்சுமணராக வாழ்ந்து வரும் சகோதரர்கள் இருவரும் சுகாதார அமைச்சர் திரு. மகாலிங்கத்தின் சீமந்த புத்திரர்கள்.

கதிரையில் கட்டி வைக்கப்பட்டிருந்தவனை சற்று நேரம் அழுத்தமாக பார்த்த சாணக்கியன் வேட்டியை மடித்து கட்டியபடி வேகமாக அவனருகில் நடந்து வந்து காலால் கீழே கிடந்த கத்தியை எத்தி கையில் எடுத்தவன் ஒரே வீச்சில் கட்டியிருந்த அவன் இரு கைகளையும் துண்டாக்கினான். ரத்த வெள்ளத்தில் வலியில் முனகியவனை பார்த்து சிரித்தவன், கத்தியை கீழே போட்டபடி வேட்டியை இறக்கி விட்டு அடியாட்களிடம் தன் கழுத்தில் கையை வைத்து அவனை முடித்து விடும் படி சைகை செய்தவன் விறு விறுவென முன்னோக்கி நடக்க பின்னால் விஷ்வா நடந்தான்.

வண்டியை அடைய போனவனுக்கு அவன் தாயிடமிருந்து அழைப்பு வந்தது. "சீக்கிரம் வீட்டுக்கு வாடா... உங்கப்பா நம்ம கயல்விழிக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறார்" என்று மறுமுனையில் அவன் அன்னை பதறினார்.

"நல்ல விஷயம் தானே அம்மா... அதுக்கெதுக்கு பதட்டம்?" என்று கேட்டவனிடம், "நீ வந்து மாப்பிள்ளையை பாரு... உனக்கே புரியும்... புத்தி கெட்ட மனுஷன்" என்று அழுதவாறே தொலைபேசியை வைத்தார். அன்னையின் பதட்டத்தில் தானும் பதட்டமடைந்தவன் தொலைபேசியை அணைத்துவிட்டு தம்பியுடன் வீட்டுக்கு விரைந்தான்.

வீட்டுக்குள் நுழையும் போது அவன் செல்ல தங்கை மனோ தத்துவ நிபுணரான கயல்விழி வீட்டில் இல்லாத சமயம், "நாளைக்கே கல்யாணம் வைக்கலாம்" என்று இனம் தெரியாத ஒரு குரல் ஒன்று அவன் காதில் விழுந்தது.

பதறியபடி உள்ளே நுழைந்தவன் மாப்பிள்ளையை கண்டு அருவருத்து போனான். உடலை விட பெரிய ஜீன்ஸ் உம் தொய்வான ஷர்ட் உம் போட்டு தோள் வரை வளர்ந்திருந்த பரட்டை தலையுடன் முகம் தெரியாதளவுக்கு முழுதும் தாடியுடன் வாயிலிருந்து ஜொல்லு வடிய பற்கள் அனைத்தையும் வெளியில், "அப்பா பொண்ணு எங்கப்பா?" என்று பல் தெரிய சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தான் அந்த மன நலம் பாதிக்கப்பட்டவன்.

அந்த சந்தர்ப்பத்தில் மகாலிங்கத்தை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை... சாணக்கியனுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கில் இரு மடங்கு உடையவர் அவன் தந்தை. அவருடன் தனிப்பட்ட பகையால் பேசுவதை அந்த சந்தர்ப்பத்தில் நிறுத்தி இருந்தான்.

அவன் வருவதை பார்த்த மகாலிங்கம், அவனை சட்டை செய்யாமல் தனது பேச்சை தொடர்ந்தார். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மகாலிங்கத்தின் பெருவிரலை கூட புது அரசியல் ரத்தம் ஓடும் சாணக்கியனால் ஒன்றும் செய்ய முடியாது என்று அனைவரும் அறிந்ததே. அவரை முறைத்தபடி வேட்டியின் நுனியை தூக்கியவாறே தனது அறைக்குள் நுழைய பின்னால் விஷ்வாவும் அவனின் தாய் சித்ராவும் உள்ளே நுழைந்தனர்.

"அண்ணா அப்பாக்கு என்னாச்சு??? இந்த பைத்தியக்காரன் தான் மாப்பிள்ளையா? அவருக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு" என்று தந்தைக்கு திட்டிய தமையனை ஒற்றை பார்வையால் அடக்கியவன் தாயிடம் திரும்பி, "அம்மா அப்பாவோட இத பத்தி பேசலையா?" என்று சித்ராவை கேட்டான்.

"உங்கப்பா நாம சொல்றத கேக்கிற மனுஷனாடா ? என்னால முடியல. என் பொண்ணு வாழ்க்கை நாசமா போக போகுதே" என்று அழ தொடங்க குரலை செறுமியபடி அங்கு மகாலிங்கம் வந்து சேர்ந்தார். மகனுக்கு குறைவில்லாத உயரமும் கம்பீரமும் என இந்த வயதிலும் துறு துறு என இருப்பவர்.

அழுத சித்ராவும் மகாலிங்கத்துக்கு பயந்து அழுகையை கட்டுப்படுத்தும் பொருட்டு வாயை புடவை முந்தானையால் மூடியபடி நிற்க அனைவரையும் இறுகிய முகத்துடன் பார்த்தவர், "இந்த பையன் காத்தமுத்து தான் நம்ம கயல்விழியை கட்டிக்க போற பையன்...என் அரசியல் வாழ்க்கைக்கும் இது முக்கியமான திருமணம்... இதுக்கு மேல யாரும் எதுவும் பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று கர்ஜித்தபடி சாணக்கியனை முறைத்தவாறு வெளியேறினார்.

'என்னது??? காத்தமுத்துவா??? பெயராவது நல்லா இருக்க வேணாமா??' என்று மனதில் வெறுப்புடன் யோசித்த சாணக்கியன், வெளியில் வேட்டையாடும் சிங்கமாக இருந்தாலும் வீட்டுக்குள் அப்பாவை மீறி பேச முடியாத மகன் தான். அவன் இதுவரை தனது வாழ்க்கையில் அப்பாவை மீறி செய்த ஒரே ஒரு காரியம் தான் தற்போது இருவரையும் பிரித்து வைத்திருந்தது.

அது அவன் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் மகாலிங்கம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவனது மறைமுக வாழ்க்கை அரசல் புரசலாக தெரிந்தாலும் அதில் தலையிடாத மகாலிங்கத்தின் மேல் தனி மரியாதை அவனுக்கு உண்டு, நிதானமாக ஆட்களை வீழ்த்துவது சாணக்கியனின் தந்திரமென்றால், அதிரடியாக அனைத்தையும் துவம்சம் செய்வது விஷ்வாவின் வீரம். இரண்டையும் கலந்த கலவை தான் மகாலிங்கம்.

மகாலிங்கம் கூறியதை கேட்டு, "என்ன அண்ணா இது?" என்று கொதித்தெழுந்த விஷ்வாவை பார்வையாலேயே அடக்கியவன், தந்தை மேல் எழுந்த கோபத்தை கட்டுப்படுத்தியபடி தாயையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்குள் மூவரும் வந்த சமயம் அழகிய நிலவை போல சந்தோஷமாக கயல்விழி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அவளை அடியாட்கள், பாதுகாவலர்கள் தொடக்கம் எல்லாரும் பரிதாப பார்வை பார்ப்பதை அறிந்தவள் ஏனென்று புரியாமல் உள்ளுக்குள் வந்தாள். ஹாலின் நடுவில் மகாலிங்கமும் அவருக்கு நேர் எதிரில் ஓரளவு வயசானவரும் பக்கத்தில் மன நிலை பாதிக்கபட்ட காத்தமுத்துவும் இருந்தனர்.

அவர்கள் தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர் என்று தப்பாக நினைத்தவள், "நீங்க எதுக்கு வீட்டுக்கு வந்திருக்கீங்க??ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கலாமே" என்று வெகுளியாகவும் அதே சமயம் அக்கறையாகவும் கேட்டாள்.

'உண்மை தெரிஞ்சா என்னாகுமோ?' என்று சாணக்யனும் விஷ்வாவும் தள்ளி இருந்த கதிரையில் இருந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சித்ராவோ பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளேச் சென்று விட்டார்.

உடனே கயலை பார்த்த மகாலிங்கம், "அம்மா கயல், மாப்பிள்ளை பெயர் காத்தமுத்து உன்னை கட்டிக்க போறவர், நாளைக்கு கல்யாணம்" என்றார்.

இருவரையும் புருவம் சுருக்கி பார்த்தவள், "இதுல யாரை பார்த்தாலும் மாப்பிள்ளை போல தெரியலயேப்பா" என்றாள். அவள் சொன்னதை கேட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சாணக்கியன் சத்தமாக சிரித்து விட்டான். அவனை பார்த்து மகாலிங்கம் முறைக்க அதனை சட்டை செய்யாமல் கால் மேல் கால் போட்டு வெண்ணிற ஷர்ட் காலரை பின்னால் இழுத்துவிட்டபடி கயல்விழியை சுவாரசியமாக பார்த்தான்.

"இவர் தானம்மா மாப்பிள்ளை" என்று மகாலிங்கம் காத்தமுத்துவை சுட்டிக் காட்ட அதிர்ந்தவள், "அப்பா என்னால முடியாது. உங்களுக்கு என்னாச்சு?" என்று கோபத்தில் எகிற தொடங்கினாள். அன்றிருந்த நிலையில் அவரை எதிர்த்து பேச கூடிய ஒரே ஜீவன் கயல் மட்டும் தான். அவள் சம்மதிக்க மாட்டாள் என்ற தைரியத்தில் தான் சாணக்கியன் அதுவரை வாயை மூடி அமர்ந்து இருந்தான்.

அவள் கூறியதை கேட்ட சாணக்கியன் கொடுப்புக்குள் சிரித்தபடி தம்பியை பார்க்க அவனுக்கு அப்போது தான் புரிந்தது வீறு கொண்டெழும் சிங்கம் பதுங்கியதன் நோக்கம்.

அவனும் சிரித்தபடி கண்ணடித்து விட்டு நடப்பதை சுவாரசியமாக அண்ணனுடன் சேர்ந்து பார்க்க தொடங்கினான். இது மகாலிங்கம் எதிர் பார்த்த விடயம் தான்.

தன் அதிகாரத்தால் மனைவி மகன்களை அடக்கியவருக்கு மகளை அடக்க முடியாது என்று தெரியும்... அவளை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவது என்றும் அவருக்கு தெரியும்.

உடனே, "உள்ளே வாம்மா...பேசலாம்..." என்று தனது அறைக்குள் அழைத்துச் செல்ல அவளும் கேள்வியாக அவரை பார்த்தபடி பின்னால் சென்றாள். அறையில் இருந்து சிறிது நேரம் கழித்து வெளியேவந்தவர் முகத்தில் வெற்றி பூரிப்பு.

அவர் பின்னால் மெதுவாக வெளியே வந்த கயல்விழி கண்ணில் கோர்த்திருந்த கண்ணீரை உள்ளிழுத்தபடி, "நாளைக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா" என்று சொல்லி விட்டு விறு விறுவென மாடியேறி விட்டாள்.

இதனை கேட்டு அதிர்ச்சியுடன் கதிரையில் இருந்து எழுந்தவர்கள் மனதுக்குள், 'இவளுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ???' என்று நினைத்தபடி நிற்க அவர்களை பெருமிதமாக பார்த்து விட்டு நக்கல் சிரிப்புடன் கடந்துச் சென்றார் மகாலிங்கம். 'மகள் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் இவருக்கு இந்த சிரிப்பு தான் ஒரு கேடு' என்று சாணக்கியனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மாடியேறி வந்து அறைக்குள் அடைந்துக் கொண்ட கயல்விழிக்கு அழுகை மட்டும் நிற்கவில்லை. தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்தவள், அவள் அண்ணன்மார் இருவர் தொடர்ச்சியாக தட்டியும் கதவை திறக்க முடியாது என்று கறாராக கூறி விட்டாள்.

அவள் நடவடிக்கையில் நிதானமான சாணக்கியனுக்கே ஒரு கணம் ஆத்திரம் வந்தது. அவள் அறைக்கு வெளியே நின்றபடி, "உனக்கென்ன பைத்தியமா கயல்? அவனை கட்டிட்டு என்ன பண்ண போற? முடியாதுனு சொல்லு ப்ளீஸ்" என்று தங்கையின் வாழ்க்கைக்காக அவளிடமே இறைஞ்சினான்.

அவன் இறைஞ்சலில் மேலும் அழுகை முட்டிக் கொண்டு வர, "நான் முடிவெடுத்து விட்டேன் அண்ணா, இது என் வாழ்க்கை... நான் உங்க வாழ்க்கையில தலையிட நீங்க விரும்புறது இல்லையே... அது போல் நீங்களும் என் வாழ்க்கையில தலையிட வேண்டாம்" என்று தன்னை தள்ளி வைத்து தங்கை பேசிய பேச்சில் மனசு உடைந்தவன், "ச்ச" என்றபடி தன்னறைக்குள் நுழைந்தான்.

விஷ்வாவோ தனக்கு வந்த கோபத்தை அடக்க முடியாமல் தவித்தவன், மன நிம்மதிக்காக தனது நண்பர்களுடன் குடிக்கச் சென்று விட்டான்.

தனது அறையிலிருந்து வாசலை பார்த்த சாணக்கியன் கண்களுக்கு காத்தமுத்துவும் அவனுக்கு பாதுகாப்பாக செல்லும் நான்கு வீரர்களும் தெரிந்தனர். மகனை பற்றி அறிந்த மகாலிங்கம் இந்த ஏற்பாட்டை செய்திருந்தார். 'இவன் கிட்ட நான் என் வீரத்தை காட்டுவேன் என்று நினைச்சிட்டீங்களே!' என்று மனதுக்குள் நினைத்த சாணக்கியன் கனத்த மனதுடன் படுக்கையில் சாய்ந்தான்.

அடுத்த நாள் கல்யாணம்...

வானிலிருந்து தேவதையே இறங்கி வந்ததோ என்று எண்ணுமளவுக்கு இளம் சிவப்பு நிற கூரை புடவையில் முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அட்டியல், ஒட்டியாணம், ஜிமிக்கி தோடு என தங்க தாம்பாளமாய் நடந்து வந்தவள், சிவந்திருந்த கூரான நாசியில் வைர மூக்குத்தி மின்ன செம்பவள இதழ்களை பற்களுக்கிடையில் கடித்தவாறு கண்களில் கண்ணீர் வழிய தனது தந்தையான அமைச்சர் மகாலிங்கத்தை இறைஞ்சிய பார்வை பார்த்தவாறு மண மேடையில் வந்து உட்கார்ந்தாள் கயல்விழி.

மகாலிங்கம் பக்கத்தில் சித்ரா மகளின் வாழ்வை எண்ணி புடவை முந்தானையால் வாயை மூடி அழுகையை கட்டுப்படுத்தியவாறு நிற்க, கண்களில் மறைக்கப்பட்ட வருத்தத்துடன் மணமகனை பார்த்துக் கொண்டு இருந்தார் மகாலிங்கம். சாணக்கியனும் விஷ்வாவும் மாப்பிள்ளையை தான் அனல் பறக்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மணமகள் அருகில் மாப்பிள்ளையோ வேட்டி சட்டையில், "ஹி ஹி ஹி" என்று சிரித்தவாறு, "அப்பா பொண்ணுப்பா" என்று சொல்லியவாறு உட்காந்திருந்தான். அவன் பொது நிறமாக இருப்பான் என்று கணிக்க தான் முடியும். அவன் முகத்தை மூடி இருந்த மீசையும் தாடியும் அவன் உருவத்தையே மறைத்திருந்தது. உடலை கூனி குறுக்கி அமர்ந்து இருந்தான்.

ஐயருக்கே இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க தான் வேண்டுமா என்று தோன்றினாலும், மகாலிங்கத்துக்கு பயந்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்கியதும், "கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்றபடி ஐயர் தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் நீட்ட ஐயர் கொடுத்த தாலியையும் கயல்விழியையும் மாறி மாறி பார்த்த காத்தமுத்து, "ஹி ஹி ஹி" என்று சிரித்தபடி அவள் கழுத்தில் தாலியை கட்டினான். அவன் தோற்றமே கயலுக்கு அருவருப்பை கொடுத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக தலையை குனிந்தபடி அமர்ந்து இருந்தாள்.

சித்ராவுக்கு கவலை தாளாமல் தாலி கட்டும் சமயத்தில், கோவிலுக்கு வெளியில் சென்று நின்றுக் கொண்டார். கல்யாணம் முடிந்ததும் மாப்பிள்ளையின் தந்தை, "என் பையன நல்லா பாத்துக்கம்மா... உன் கிட்ட ஒப்படைச்சிட்டு போறேன்" என்றார்.

'என்னது வீட்டோட மாப்பிள்ளையா ???' என்று யோசித்தாலும் தங்கை தனியே போய் கஷ்டப்பட தேவையில்லை என்று நிம்மதியாக இருந்தது சாணக்கியனுக்கு.

சரி என்று தலையை ஆட்டியவள் தனது தந்தையை பார்த்தாள். அவள் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் அவர் நிலை குலைந்து போனார். 'இனி எதுவும் மாற போறதில்லை' என்று நினைத்தபடி கண் மூடி திறந்த இளகிய மனம் கொண்ட அந்த பெண் அவனை கணவனாக பார்க்காமல் மன நோயாளியாக பார்க்க வேண்டுமென முடிவெடுத்தாள். புது மாங்கல்யம் கழுத்தில் மின்ன, தனது ஆசை,கனவு அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு பக்கத்தில் நின்ற கணவனின் கையை அவளாகவே பிடித்தவள் அவனை அழைத்துக் கொண்டு கோயிலிலிருந்து வெளியேறி தங்களது வண்டியை நோக்கிச் சென்றாள்.

"ஐ... என் பொண்டாட்டி பொண்டாட்டி" என்றபடி பின்னால் சிரித்தபடி வந்தவனை விரக்தியாக பார்த்து சிரித்தவள், "உள்ளே போங்க" என்று கார் கதவை திறந்து விட்டவள் தானும் ஏறிக் கொண்டாள். கணவன் செய்ய வேண்டிய கடமை எல்லாம் மனைவி செய்வதை பார்த்து மனம் வெதும்ப மட்டுமே அவளின் தாயாலும் தமையன்களாலும் முடிந்தது. ஆனால் அவள் வீட்டோடு இருப்பது நிம்மதியை தர அவள் பின்னால் அனைவரும் தத்தமது வண்டிகளில் புறப்பட்டனர்.

வீட்டுக்கு வந்ததும் சித்ரா ஆரத்தி எடுக்க அவன் கையை பிடித்து அவனை தனது அறைக்குள் அழைத்துச் சென்றாள் கயல்விழி.

மனோ தத்துவ நிபுணரான அவளுக்கு அவனை கையாளுவது கஷ்டமாக இருக்கவில்லை. அவள் சொல்லுவதை அவனும் அடம்பிடிக்காமல் கேட்டு நடப்பான்.

இப்படியே நாட்கள் மெதுவாக நகர, அன்று கயல்விழி வேலைக்கு போய் விட்டாள். காத்தமுத்துவும் கயல்விழியை தவிர யாருடனும் அதிகமாக பேச மாட்டான். முன்னறையில் சப்பணம் கொட்டி இருந்தபடி அவள் வீட்டு நாய்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான் காத்தமுத்து. அந்நேரம் பார்த்து அங்கு வந்த அடியாள் ஒருவன், "ஏய் பைத்தியம் உள்ளே போ" என்று சொல்ல கோபமடைந்தவன், பக்கத்தில் கழுவி வைத்திருந்த அழுக்கு வாளியை எடுத்து அவன் மேலே கவிழ்த்து விட்டு முழுதாக நனைந்து இருந்த அவனை பார்த்து கை கொட்டி சிரித்தான்.

அவன் செய்கையில் ஆத்திரமடைந்த அந்த அடியாள் இடுப்பிலிருந்த பெல்ட்டை கழட்டி அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினான்.

யாரும் அந்நேரம் அங்கே இல்லாத சமயத்தில் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து புரண்டு அழுதவனை அப்போது அங்கு அதிஷ்டவசமாக வந்து சேர்ந்த சாணக்கியன் கண்டுக் கொண்டான். ஓடிச் சென்று பெல்ட்டை பறித்து எறிந்து விட்டு ஓங்கி அடியாளுக்கு அறை விட்டவன், கீழே அழுதுக் கொண்டிருந்த அவனை தூக்கி எழுப்பியவன் அவனை அழைத்துக் கொண்டு போய் கயல் அறையில் இருக்க சொல்லி விட்டு மறுபடியும் கீழே வந்தான்.

நேரே அந்த அடியாளிடம் வந்தவன், "என்ன இருந்தாலும் அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை அவர் மேல் ஒரு தூசு விழுந்தா கூட நான் மனுஷனா இருக்க மாட்டேன்" என்று உறுமியவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். வீட்டுக்கு வந்த கயலிடம் காத்தமுத்து நடந்ததை அழுதபடி ஒப்புவிக்க அதை கேட்டவள் அந்த அடியாளை உண்டு இல்லை என்று பண்ணி விட்டாள்.

வெகுளியாகவும் அதே நேரம் குழந்தை போலவும் இருந்த காத்தமுத்துவை எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்து இருந்தது. கயல் சொல்லும் எல்லாத்தையும் கேட்கும் காத்தமுத்து, தனது உடை மற்றும் தலைமுடியை மட்டும் அவளை தொட அனுமதிக்க மாட்டான். சாணக்கியனுடன் நன்கு ஒட்டிக் கொண்டவன், விஷ்வாவின் அதிரடிக்கு பயந்து அவனை விட்டு தள்ளியே நின்றான்.

இவ்வாறே நாட்கள் கிழமைகளாக கிழமைகள் மாதங்களாகின.

அன்றுடன் அந்த நகரத்தில் நான்காவது பெண் காணாமல் போயிருந்தாள்.

கமிஷனர் அலுவலகத்தில்...

"மித்ரா நோ மோர் எக்ஸ்கியூஸஸ்....எத்தனை மிஸ்ஸிங் கேஸ்???எதுக்கும் அக்ஷன் இல்ல...எவிடென்ஸ் இல்ல. எல்லாம் நடந்தது உங்க ஸ்டேஷன் ஏரியாவுலதான்... இர்ரெஸ்பான்சிபள் இடியட்ஸ்." என்று தன் முன்னால் அவரை அழுத்தமாக பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்த போலீஸ் பெண்ணை திட்டிக் கொண்டிருந்தார் கமிஷனர் விருத்தாச்சலம்.

மேலும் தொடர்ந்தவர், "இனி உங்களால இத கண்டு பிடிக்க முடியும் என்று எனக்கு தோணல... எல்லாம் சி. ஐ.டி. ப்ராஞ்சுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சு. இனி உங்க வேலை மினிஸ்டர் மகாலிங்கம் வீட்டுக்கு செக்யூரிட்டியா போறது தான்" என்றதும் மித்ரா அதிர்ச்சியுடன் அவரை பார்த்தவள் மனதுக்குள், 'அவர் வீட்டுக்கா?' என்று தடுமாறியபடி, "சார்" என்று அழைக்க அவள் பார்வையை தவிர்த்த விருத்தாச்சலம், "நோ மோர் எக்ஸ்கியூஸஸ்...ஜஸ்ட் லீவ்" என்றபடி தனது வேலையை தொடர்ந்தார்.

தொப்பியை கழட்டியபடி சோர்வாக வெளிய வந்த மித்ரா, "ஷீட்" என்று காலை உதைத்தவள் ஒரு பெரு மூச்சுடன் தனது கடமையை ஏற்றுக் கொள்ள மந்திரி வீட்டுக்குச் சென்றாள்.

வீட்டின் உள்ளே வந்தவளை அங்கிருந்த அனைவரும் விழி விரித்து பார்க்க, சோபாவில் உட்கார்ந்திருந்த மகாலிங்கத்திடம் சலியூட் அடித்து விட்டு தனது கையில் இருந்த கடிதத்தை நீட்டினாள். அவளின் கம்பீரத்தை பார்த்து ஒரு கணம் அசந்தவர் அவள் நீட்டிய கடிதத்தை பிரித்து பார்த்ததும் அவருக்கு விளங்கி விட்டது அவளை இங்கு வரவழைத்தது தனது மகனது வேலை என்று.

கடிதத்தை படித்து முடிய மடித்து உறைக்குள் போட்டபடி, "எப்படியம்மா இருக்க?" என்று அக்கறையாக விசாரிக்க அவளோ, "நல்லா இருக்கேன் மாமா" என்று இளகிய குரலில் சொன்னாள். சற்று முன் அவளிடமிருந்த இறுக்கம் அவர் அக்கறையால் கொஞ்சம் குறைந்திருந்தது.

அதை கேட்டு பெரு மூச்சு விட்டவர், "இன்று டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமான பிரஸ் மீட் இருக்கு. அதுவரை இங்கே உட்காரும்மா" என்று கூற, "இல்ல சார் நான் உங்க பாதுகாப்புக்கு தான் வந்திருக்கிறேன் வெளியவே நிற்கிறேன்" என்றபடி கம்பீரமாக வெளியேச் சென்று நின்றுக் கொண்டாள்.

அவள் கடமை உணர்ச்சியை பார்த்தவர் அவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். கூட்டத்துக்கு போக ஆயத்தமாக அவர் அறையினுள்ளே செல்லும் போது சாணக்யனும் விஷ்வாவும் ஆயத்தமாகி வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.

வெள்ளை வேட்டி சட்டையும் அரும்பிய தாடியும் என கம்பீரமாக அவன் முன்னே வர பின்னால் ஜீன்ஸ் உம் முழங்கை வரை மடித்து இன் பண்ணி விட்ட ஷர்ட்டும் என விஷ்வா வந்தான். இருவரும் அவளையே கூர்ந்து பார்த்தபடி இதழ்களுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் வெளியே வந்தனர். அவர்கள் நக்கல் சிரிப்பை கண்டுக் கொண்டவள், 'இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லை' என்று மனதுக்குள் நினைத்தபடி கண்களை அசைக்காமல் நேரே பார்த்தபடி நின்றாள்.

வெளியே வந்த சாணக்கியன் கண்கள் ஒரு கணம் மித்ராவின் கண்களை சந்தித்து மீண்டது. அவனை கண நேரத்தில் அனல் தெறிக்க பார்த்தவள் மீண்டும் நேராக நிமிர்ந்து நின்றுக் கொண்டாள்.

அவள் பார்வையை கடந்துச் சென்றவன் சிறிது யோசித்துவிட்டு, 'ரொம்ப தான் பண்ணுறா, இவளை சும்மா விட கூடாதே' என்று நினைத்தபடி திரும்பி வந்து அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு, "எம்.பி வரும் போது சலியூட் அடிக்க சொல்லி தரவில்லையா டிபார்ட்மெண்ட்ல?" என்று கேட்டான்.

அவன் கேட்டதும் அவனை பார்க்காமலே சலியூட் அடித்தாள். அவளடிப்பதை கொடுப்புக்குள் சிரித்தபடி விஷ்வா சாணக்கியனுக்கு பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அடித்து முடிய, "தட்ஸ் மை கேர்ள்" என்றபடி முன்னே வாசலை நோக்கி நடந்த சாணக்கியன் கூட்டத்துக்குச் செல்லும் பொருட்டு தந்தை வரும் வரை முன்னாலிருந்த கதிரையில் தம்பியுடன் காத்திருந்தான்.


மகாலிங்கம் வரும் வரை சிலை போல் நின்றவளுக்கு அலுப்பாக இருக்க வீட்டை சுற்றி பார்க்கலாம் என்று நினைத்தவள் வீட்டின் சுவரை ஒன்றி நடந்தாள். திடீரென சுவர் அருகிலிருந்து அவளை இழுத்த ஒரு கை அவள் தொப்பியை கண நேரத்தில் கழட்டி திமிறிய அவளை அணைத்து அவள் இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்திருந்தது.
 
Top